அல்லாஹ்வின் பேரருளால் மகத்துவம் பொருந்திய ரமலான் மாதத்தின் முதல் தராவீஹில் நாம் அமர்ந்திருக்கிறோம்.ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடுகிறது. நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்கிறது.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடுகிறது.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தருகிறது. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.மற்ற காலங்களில் எந்த நாளிலும் சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது. எதையும் குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது.ஆனால் இந்த நோன்பு காலங்களில் பசி இருக்கும், தாகம் இருக்கும், ஆனால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமோ குடிக்க வேண்டும் என்ற உணர்வோ நமக்கு வருவதில்லை. இது தான் இந்த நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்துவம்.