Friday, December 4, 2020

இறை இல்லங்களைப் பாதுகாப்போம்



உலகத்தில் நமக்கு அல்லாஹ் கொடுக்கிற நிஃமத்துக்கள் ஏராளம்.நாம் பிறந்தது முதல் உலகை விட்டும் மறைகின்ற வரை அல்லாஹ்வின் எண்ணற்ற நிஃமத்துக்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கணக்கில்லாமல் நிஃமத்துக்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிற இறைவன் நம்மிடம் எதிர் பார்ப்பது அந்த நிஃமத்துகளுக்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது தான்.

ஒரு நிஃமத் நம்மிடம் நிலைத்திருப்பதும் மென்மேலும் அதிகமாகுவதும் நம்மை விட்டும் சென்று விடாமல் பாதுகாக்கப்படுவதும்  நன்றி செலுத்துவதால் நமக்கு கிடைக்கும் பயன்.

لئن شكرتم لازيدنكم

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன். (அல்குர்ஆன் : 14 ; 7)

எப்படி நன்றி செலுத்துவது என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பல படித்தரங்களை கூறுகிறார்கள். அதில் முதல் படித்தரம் நிஃமத்தை நிஃமத்தாக புரிந்து கொள்வதும் அதை இறைவன் விரும்புகிற அமைப்பில் பயன்படுத்துவதும் தான்.

وحكي عن داود – عليه السلام – أنه قال : أي رب كيف أشكرك ، وشكري لك نعمة مجددة منك علي . قال : يا داود الآن شكرتني .

தாவூத் நபி அலை அவர்கள் இறைவா உனக்கு எப்படி நன்றி செலுத்துவது? ஒரு நிஃமத்துக்காக நான் உனக்கு நன்றி செலுத்துவதும் கூட எனக்கு நீ கொடுத்த இன்னொரு நிஃமத் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் இப்போது தான் நீங்கள் உண்மையில் நன்றி செலுத்தி இருக்கிறீர்கள் என்று கூறினான். (தஃப்ஸீர் குர்துபீ)

உனக்கு நன்றி செலுத்துவதும் ஒரு நிஃமத்தாக இருக்கிறது என்று உணர்ந்த போது தான் நீங்கள் உண்மையில் நன்றி செலுத்தி விட்டீர்கள் என்று அல்லாஹ் கூறினான்.

  والشُّكْرَ حَقِيقَتُهُ الِاعْتِرَافُ بِالنِّعْمَةِ لِلْمُنْعِمِ وَاسْتِعْمَالُهَا فِي طَاعَتِهِ، وَالْكُفْرَانُ اسْتِعْمَالُهَا فِي الْمَعْصِيَةِ. وَقَلِيلٌ مَنْ يَفْعَلُ ذَلِكَ، لِأَنَّ الْخَيْرَ أَقَلُّ مِنَ الشَّرِّ، وَالطَّاعَةُ أَقَلُّ مِنَ الْمَعْصِيَةِ  قرطبي

யதார்த்தத்தில் நன்றி செலுத்துதல் என்பது, அது இறைவன் கொடுத்த நிஃமத் என்று முதலில் ஏற்றுக் கொள்வது. அதை நல்ல விஷயத்தில் பயன்படுத்துவது. நன்றி மறத்தல் என்பது அந்த நிஃமத்தை பாவத்தில் பயன்படுத்துவது (தஃப்ஸீர் குர்துபி)  

 

நன்றி மறப்பதால் ஏற்படும் விளைவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கொடுக்கிற நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்த மறப்பதால் அந்த நிஃமத்துக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று குர்ஆனும் ஹதீஸும் நம்மை எச்சரிக்கிறது.

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ‏ 

ஓர் ஊரை அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது நிம்மதியுடனும், அமைதியுடனும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவு தாராளமாக வந்து சேர்ந்தது. ஆனால் அவ்வூர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் அவ்வூருக்கு அணிவித்தான். (அல்குர்ஆன் :16 ;112)

 ‏‏لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது). (அல்குர்ஆன் : 34 ; 15)

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ‏

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். (அல்குர்ஆன் : 34 ; 16)

إنَّ ثَلَاثَةً في بَنِي إِسْرَائِيلَ: أَبْرَصَ وَأَقْرَعَ وَأَعْمَى، بَدَا لِلَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فأتَى الأبْرَصَ، فَقالَ: أَيُّ شيءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ: لَوْنٌ حَسَنٌ، وَجِلْدٌ حَسَنٌ، قدْ قَذِرَنِي النَّاسُ، قالَ: فَمَسَحَهُ فَذَهَبَ عنْه، فَأُعْطِيَ لَوْنًا حَسَنًا، وَجِلْدًا حَسَنًا، فَقالَ: أَيُّ المَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ: الإبِلُ، - أَوْ قالَ: البَقَرُ، هو شَكَّ في ذلكَ: إنَّ الأبْرَصَ، وَالأقْرَعَ، قالَ أَحَدُهُما الإبِلُ، وَقالَ الآخَرُ: البَقَرُ -، فَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ، فَقالَ: يُبَارَكُ لكَ فِيهَا وَأَتَى الأقْرَعَ فَقالَ: أَيُّ شيءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ شَعَرٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي هذا، قدْ قَذِرَنِي النَّاسُ، قالَ: فَمَسَحَهُ فَذَهَبَ وَأُعْطِيَ شَعَرًا حَسَنًا، قالَ: فأيُّ المَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ: البَقَرُ، قالَ: فأعْطَاهُ بَقَرَةً حَامِلًا، وَقالَ: يُبَارَكُ لكَ فِيهَا، وَأَتَى الأعْمَى فَقالَ: أَيُّ شيءٍ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ: يَرُدُّ اللَّهُ إِلَيَّ بَصَرِي، فَأُبْصِرُ به النَّاسَ، قالَ: فَمَسَحَهُ فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ، قالَ: فأيُّ المَالِ أَحَبُّ إِلَيْكَ؟ قالَ الغَنَمُ: فأعْطَاهُ شَاةً وَالِدًا، فَأُنْتِجَ هذانِ وَوَلَّدَ هذا، فَكانَ لِهذا وَادٍ مِن إِبِلٍ، وَلِهذا وَادٍ مِن بَقَرٍ، وَلِهذا وَادٍ مِن غَنَمٍ، ثُمَّ إنَّه أَتَى الأبْرَصَ في صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقالَ رَجُلٌ مِسْكِينٌ، تَقَطَّعَتْ بيَ الحِبَالُ في سَفَرِي، فلا بَلَاغَ اليومَ إِلَّا باللَّهِ ثُمَّ بكَ، أَسْأَلُكَ بالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الحَسَنَ، وَالجِلْدَ الحَسَنَ، وَالمَالَ، بَعِيرًا أَتَبَلَّغُ عليه في سَفَرِي، فَقالَ له: إنَّ الحُقُوقَ كَثِيرَةٌ، فَقالَ له: كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ، فقِيرًا فأعْطَاكَ اللَّهُ؟ فَقالَ: لقَدْ وَرِثْتُ لِكَابِرٍ عن كَابِرٍ، فَقالَ: إنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إلى ما كُنْتَ، وَأَتَى الأقْرَعَ في صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقالَ له: مِثْلَ ما قالَ لِهذا، فَرَدَّ عليه مِثْلَ ما رَدَّ عليه هذا، فَقالَ: إنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إلى ما كُنْتَ، وَأَتَى الأعْمَى في صُورَتِهِ، فَقالَ: رَجُلٌ مِسْكِينٌ وَابنُ سَبِيلٍ وَتَقَطَّعَتْ بيَ الحِبَالُ في سَفَرِي، فلا بَلَاغَ اليومَ إِلَّا باللَّهِ ثُمَّ بكَ، أَسْأَلُكَ بالَّذِي رَدَّ عَلَيْكَ بَصَرَكَ شَاةً أَتَبَلَّغُ بهَا في سَفَرِي، فَقالَ: قدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ بَصَرِي، وَفقِيرًا فقَدْ أَغْنَانِي، فَخُذْ ما شِئْتَ، فَوَاللَّهِ لا أَجْهَدُكَ اليومَ بشيءٍ أَخَذْتَهُ لِلَّهِ، فَقالَ أَمْسِكْ مَالَكَ، فإنَّما ابْتُلِيتُمْ، فقَدْ رَضِيَ اللَّهُ عَنْكَ، وَسَخِطَ علَى صَاحِبَيْكَ. .

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர்தொழு நோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், 'எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடு தான்... (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்

; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்' என்று கூறினார். (புகாரி : 3464)

வழங்கப்பட்ட நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்தாததினால் அந்த நிஃமத்துக்களை இழந்த இதுபோன்ற வரலாறுகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் நிறைய உண்டு.

இந்த  வகையில் இறை இல்லங்களாக இருக்கிற மஸ்ஜித்கள் அல்லாஹ் இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கியிருக்கிற மாபெரும் நிஃமத். ஏனென்றால் பள்ளியின் மூலம் நாம் பெறும் பாக்கியங்கள் அளப்பெரியது

إذا رأيتم الرجلَ يعتادُ المسجدَ ، فاشْهَدُوا له بالإيمانِ

பள்ளிக்கு வருவதை வழமையாக்கிக் கொண்ட ஒருவரை நீங்கள் கண்டால் அவர் உண்மையான முஃமின் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள். (திர்மிதி : 3093)

إذا مررتم برياضِ الجنَّةِ فارتَعوا قلتُ: يا رسولَ اللَّهِ ومارياضُ الجنَّةِ ؟ قالَ: المساجِدُ

சுவனத்தின் தோட்டங்களை நீங்கள்  கடந்து சென்றால் அதில் நீங்கள்  நன்கு  மேய்ந்து கொள்ளுங்கள்  என்று நபி அவர்கள் கூறிய போது சுவனத்தின் தோட்டங்கள் எது என்று  கேட்கப்பட்டது. இறை இல்லங்கள் என்றார்கள்.  (திர்மிதி : 3509)

 

إن للمساجد أوتادا الملائكة جلساؤهم ، إن غابوا يفتقدوهم ، وإن مرضوا عادوهم ، وإن كانوا في حاجة أعانوهم } .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறையில்லத்திற்கென முளைக்கம்புகள் இருக்கின்றன. எவர்கள் இறையில்லத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றார்களோ,அவர்களுடன் வானவர்கள் அமர்கின்றனர்.  பள்ளியில் அவர்களை காணவில்லை என்றால், வானவர்கள் தேடுகின்றனர். மேலும்,அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு வானவர்கள் உதவுகின்றனர்என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் : 9424)

إن الشيطان ذئب الإنسان كذئب الغنم ، يأخذ الشاة القاصية والناحية ، فإياكم والشعاب ، وعليكم بالجماعة والعامة والمسجد }

 ஆடுகளை வேட்டையாடும் ஓநாயைப் போன்று, மனிதனை வேட்டையாடும் ஓநாய் ஷைத்தான் ஆவான். மந்தையை விட்டும் தனித்திருக்கிற ஆட்டையே ஓநாய் பிடித்துக் கொள்கின்றது. அது போன்றே ஷைத்தானும் ஆவான்.ஆகவே, தனித்து செயல்படுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்; கூட்டாக இருப்பது,பொதுமக்களுடன் சேர்ந்து இருப்பது,இறையில்லத்தில் இருப்பது ஆகியவற்றை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்என நபி  அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்   :  776)

மதீனாவிற்கு சென்று நபி அவர்கள் செய்த மிக  முக்கியமான பணி அங்கே பள்ளியை கட்டியெழுப்பியது.ஒரு ஊரில் வாழுகிற முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கும் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் பள்ளிவாசல் நிச்சயம் இருக்க வேண்டும்.அதனால் தான் மதீனா சென்றதும் முதன்முதலாக மஸ்ஜிதை கட்டியெழுப்பினார்கள்.

பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சியமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் தலமும் அல்ல. மாறாக இரவு பகல் என்று பாராமல் எந்நேரமும் செயல்படக்கூடிய செயல்பட வேண்டிய ஒரு கலங்கரை விளக்கு. பள்ளி என்பது வெறும் தொழுமிடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். அப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்கள் இருந்தன.

நபி அவர்கள் உருவாக்கிய அந்த பள்ளி வெறும் வணக்கஸ்தலமாக மட்டும் இல்லாமல் பிரச்சனைகளுக்காக நீதி வழங்கும் நீதி மன்றமாக, ஸக்காத்தை செல்வந்தர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் இடமாக, கல்வி போதிக்கும் இடமாக, பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை சொல்லப்படும் இடமாக, மார்க்கத்தின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் இடமாக, மார்க்க சட்டதிட்டங்களை மக்களுக்கு சொல்லும் இடமாக, வசந்தமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இடமாக,குறைகளை சொல்லி வரும் நபர்களுக்கு குறை தீர்க்கும் இடமாக,பசி என்று வருபவர்களுக்கு பசி போக்கும் இடமாக இப்படி பல்வேறு பரினாமங்களில் மஸ்ஜிதுன் நபவி இயங்கியிருக்கிறது.மனித வாழ்வில் அத்தனை சூழ்நிலைகளோடும் பிண்ணிப்பிணைந்திருந்தது அன்றைய பள்ளிவாசல்.

ஆனால் இன்று...?

வாரத்திற்கு ஒருமுறை ஜும்ஆ தொழுகையின் போது மட்டுமே பள்ளிவாசல்கள் நிரம்பி வழிகின்றன. ஐவேளைத் தொழுகைக்கு ஆளே இல்லாமல் இறையில்லங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  வரும் பலர் தொழுகைக்கு வருவதில்லை என்பது வேதனையான செய்தி. இன்னும் பலர் அவர்கள் இறந்து ஜனாஸா தொழுகைக்காக அவர்களை கொண்டு வரப்படும் அந்த நேரம் தான் அவர் பள்ளிக்கு வரும் முதல் தருணமாக இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அல்லாஹ் வழங்கிய மாபெரும் நிஃமத்தாக இருக்கிற பள்ளி விஷயத்தில் நாம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தினாலும் பள்ளிக்கு செய்ய வேண்டிய கண்ணியத்தில் நாம் குறை வைத்த காரணத்தினாலும் தொழுகையாளிகள் இல்லாமல் காலியாக பள்ளிகள் விடப்படுகிற காரணத்தினாலும் நமக்கு பாடம்  புகட்டுவதற்குத்தானோ என்னவோ பாபர் என்ற இறை இல்லத்தை இறைவன் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டான்.

இனிமேலாவது இஸ்லாமியச் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும். பாபர் மசூதிக்குப் பிறகு வேறு எந்த இறை இல்லமும் நம்மை விட்டும் போகாமல் பாதுகாப்பது நம் கையில் தான் இருக்கிறது. வல்லோன் அல்லாஹ் பாதுகாப்பானாக. 

3 comments:

  1. இன்றைய நிலையில் சமுதாயத்திற்கேற்ற ஜும்ஆ தலைப்பு மக்களுக்காக வேண்டிய நல்ல செய்திகள் அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  2. அருமையான பயான்

    ReplyDelete