Thursday, October 21, 2021

நபி நேசம் மட்டும் போதும்

 


அகிலத்தின் அருட்கொடையான அண்ணலம் பெருமான் நபிகள் நாயகம் அவர்களின் புகழை எடுத்துச் சொல்கின்ற மவ்லித் ஷரீஃபும் மீலாது ஷரீஃபும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வசந்தமான காலம் இது.

மாநபி அவர்களின் மீது நாம் எந்தளவிற்கு அன்பு வைத்திருக்கிறோம். அவர்களின் அன்பை நாம் எந்தளவு நம் உள்ளத்தில் சுமந்திருக்கிறோம் என்பதற்கான அடையாளம் தான் இந்த மீலாது விழாக்களும் மவ்லித் நிகழ்வுகளும்.நபியின் மீது கொள்ளை அன்பும் உண்மையான காதலும் உள்ளவர்கள் தான் நபியைப் புகழுவார்கள். அவ்வாறு நபியைப் புகழுபவர்களைத்தான் நபி அவர்களும் விரும்புகிறார்கள்.

فقد كان النبي صلى الله عليه وسلم يفرح لمدحه لأن المدح لا يصدر إلا من صادق محب كامل الإيمان

முழுமையான ஈமானும் உண்மையான நேசமும் உள்ளவர்களின் நாவுகள் தான் நபியைப் புகழும். அவர்களைத்தான் நபியவர்களும் விரும்புகிறார்கள் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள்.

உலகத்தில் நபியின் நேசம் மட்டும் தான் உயர்வைத் தரும். நபியின் நேசத்தைக் கொண்டு தான் நம் ஈமானுக்கும் நம் அமலுக்கும் அர்த்தம் கிடைக்கும்.

لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة واصيلا.

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு மேலும் அவர்களை கண்ணியமும் மரியாதையும் செய்து மேலும் காலையிலும் மாலையிலும் அவனை துதிப்பதற்காகத்தான். (தூதரை அனுப்பினோம்) (அல்குர்ஆன் : 48 ; 9)

இந்த வசனத்தில் கண்ணியமும் மரியாதையும் செய்ய வேண்டும் என்ற வார்த்தையில் இருக்கிற ளமீர் நபி அவர்களைக் குறிக்கிறது என்று குர்ஆன் விரிவுரையாளர்களில் இமாம் ளஹ்ஹாக் போன்ற சிலர் கூறுகிறார்கள்.அந்த அடிப்படையில் நபியே உம்மை அனுப்பினோம் என்று சொல்லி விட்டு நபியின் வருகைக்காண நோக்கங்களை சொல்லும் இறைவன் முதலில் அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொள்ள வேண்டும். ரசூலுக்கு கண்ணியம் அளிக்க வேண்டும் காலையிலும் மாலையிலும் இறைவனையும் தஸ்பீஹ் செய்ய வேண்டும் என்ன சொல்லுகிறான். ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் அல்லாஹ் நபியின் கண்ணியத்தைக் குறித்து பேசுகிறான். எனவே ஈமான் கொண்டவருக்கு அவர் செய்யக்கூடிய அமல்கள் பயன் தர வேண்டுமென்றால் அதற்கு நிபந்தனை நபியின் கண்ணியம் அவரது உள்ளத்தில் இருக்க வேண்டும். நபியின் மீது உண்மையான அன்பும் காதலும் இருப்பவர்களுக்குத்தான் நபியின் கண்ணியம் விளங்கும்.

எனவே நாம் செய்யக்கூடிய அமல்கள் நமக்கு பயன் தர வேண்டும் என்றால், நம் ஈடேற்றத்திற்கு காரணமாக அமைய வேண்டுமென்றால் ஈமானுக்கு அடுத்த படியாக நபிநேசம் நமக்கு இருக்க வேண்டும். நபியின் மீது நேசம் இல்லை என்றால் எத்தனை பெரிய அமல்கள் செய்தாலும் அது பயனற்றுப் போய் விடும் என்பதை இந்த வசனத்தின் வாசக அமைப்பிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.

بيْنَا النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ يَقْسِمُ، جَاءَ عبدُ اللَّهِ بنُ ذِي الخُوَيْصِرَةِ التَّمِيمِيُّ، فَقالَ: اعْدِلْ يا رَسولَ اللَّهِ، فَقالَ: ويْلَكَ، ومَن يَعْدِلُ إذَا لَمْ أعْدِلْ قالَ عُمَرُ بنُ الخَطَّابِ: دَعْنِي أضْرِبْ عُنُقَهُ، قالَ: دَعْهُ، فإنَّ له أصْحَابًا، يَحْقِرُ أحَدُكُمْ صَلَاتَهُ مع صَلَاتِهِ، وصِيَامَهُ مع صِيَامِهِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ

நபி அவர்கள்  போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக் கொண்டிருந்த போது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த, ‘துல்ஹுவைஸிராஎனும் மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள் என்றார். அப்போது நபி அவர்கள் நான் நீதமாக நடக்க வில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்?’ என்று கூறினார்கள். உடனே (அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், ‘இவரின் கழுத்தை துண்டிக்க என்னை அனுமதியுங்கள் (இறைத்தூதர் அவர்களே!)என்றார்கள். நபி அவர்கள், ‘இல்லை, (இவரை விட்டுவிடுங்கள்). நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றனர்.நீங்கள் அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகைகையும் அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு) அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்) வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறு பக்கம் வேகமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதை போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள் என்றார்கள். (புகாரி ; 6933)

எப்படி அமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர்களே ஸஹாபாக்கள் தான்.ஆனால் அவர்களைப் பார்த்து நபி அவர்கள், நீங்கள் உங்கள் அமலையும் அவர்களின் அமலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் அமல் குறைவாகத்தான் தெரியும் என்று சொல்கிறார்கள். இவ்வளவு உயர்வான அமல்கள் இருந்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியே போய் விடுவார்கள் என்று ஏன் சொன்னார்கள் என்றால், அவர்களிடம் நபியின் கண்ணியம் இல்லை. நபியின் பிரியம் இல்லை.நபியின் பிரியம் இல்லாதவர்களின் எத்தனை பெரிய அமலும் அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லாமல் போய் விடும் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே சமயம் அமல்களில் ஏதோ குறைவு இருந்தாலும், போதுமான அமல்கள் நம்மிடம் இல்லா விட்டாலும் நபியின் பிரியம் இருந்தால் அது ஒன்றே போதும் நாம் வெற்றி அடைவதற்கு.

أنَّ رَجُلًا سَأَلَ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: مَتَى السَّاعَةُ يا رَسولَ اللَّهِ؟ قالَ: ما أعْدَدْتَ لَهَا قالَ: ما أعْدَدْتُ لَهَا مِن كَثِيرِ صَلَاةٍ ولَا صَوْمٍ ولَا صَدَقَةٍ، ولَكِنِّي أُحِبُّ اللَّهَ ورَسولَهُ، قالَ: أنْتَ مع مَن أحْبَبْتَ

ஒரு மனிதர் நபி அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே கியாமத் எப்போது என்று கேட்டார். அதற்கு என்ன தயாரித்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்கள். தொழுகை, நோன்பு, தர்மத்திலிருந்து அதிகமாக எதையும் நான் தயாரித்து வைக்க வில்லை. என்றாலும் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்ன போது நீ யாரை நேசித்தாயோ அவருடன் இருப்பாய் என்றார்கள். (புகாரி ; 3688)

அமல்கள் குறைவாக இருந்தாலும் நபியின் பிரியத்தைக் கொண்டு ஒருவர் வெற்றி அடைவதும் பிறர் வியக்கிற அளவுக்கு அமல்கள் நிறைய இருந்தாலும் நபியின் பிரியம் இல்லையென்றால் ஒருவர் நஷ்டமடைவதும் நபியின் நேசம் எந்தளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இன்றைக்கு நபியின் பிரியத்தை நம் உள்ளத்திலிருந்து அகற்றுவதற்கு மிகப்பெரிய சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிற இந்த சூழலில் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை. குறிப்பாக நம் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே நபியின் நேசத்தை அவர்களின் உள்ளத்தில் புகுத்தி விட வேண்டும்.

أدِّبوا أولادَكم على ثلاثِ خِصالٍ حُبِّ نبيِّكم وحبِّ أَهلِ بيتِه وقراءةِ القرآنِ

உங்கள் நபியின் நேசம்,அவர்களின் குடும்பத்தார்களின் நேசம், குர்ஆன் ஓதுவது இந்த மூன்றின் மீதும் உங்கள் குழந்தைகளை பன்படுத்துங்கள். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 310)

அன்றைக்கு இருந்த ஸஹாபாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இதைத்தான் சொல்லிக் கொடுத்தார்கள். எந்தளவு என்றால் நபியின் காலத்தில் இருந்த சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மீது வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் விட நபியின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும் பாசமும் தான் அதிகம்.

أنَّ طَلْحَةَ بنَ البَراءِ لَمَّا لقِي النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم قال يا رسولَ اللهِ مُرْني بما أحبَبْتَ فلا أعصيَ لكَ أمرًا فعجِب لذلكَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم وهو غُلامٌ فقال له عندَ ذلكَ اذهَبْ فاقتُلْ أباكَ فقال فخرَج مُولِّيًا لِيفعَلَ فدعاه فقال له أقبِلْ فإنِّي لَمْ أُبعَثْ بقطيعةِ رحِمٍ

தல்ஹா பின் பர்ரா என்ற சிறு வயது நபித்தோழர் நபியிடத்தில் வந்து நீங்கள் விரும்பியதை எனக்கு ஏவுங்கள். நான் செய்கிறேன். நீங்கள் சொன்னால் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்றார். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நபியவர்கள் அவரை பரிசோதிப்பதற்காக நீ சென்று உன் தந்தையை கொலை செய்த்து விட்டு வா என்றார்கள். உடனே அவர் வாளை ஏந்திக் கொண்டு புறப்பட்டு விட்டார். உடனே நபியவர்கள் அவரை அழைத்து உறவை முறிப்பதைக் கொண்டு அல்லாஹ் என்னை அனுப்ப வில்லை என்றார்கள். (அல்முஃஜமுல் அவ்ஸத் ; 8/125)

நபி அவர்கள் சொல்லி விட்டால் அது எதுவாக இருந்தாலும் அதை செய்து விட வேண்டும் என்பது நபித்தோழர்களின் நிலைபாடு. அதில் சிறு வயது ஸஹாபாக்களும் விதிவிலக்கல்ல. சாதாரணமாவே  பிள்ளைகளுக்கு தன்னுடைய அத்தா அம்மா மேல் தனிப்பட்ட அன்பும் பாசமும் இருக்கும். தன் அத்தா அம்மாவை பிடிக்காத பிள்ளைகளாக இருந்தாலும் கூட அவர்களைப் பற்றி யாராவது எதாவது சொல்லி விட்டால்  கோபம் பயங்கரமாக வரும். ஆனால் இங்கே அந்த சிறுவனிடம் அவ்வாறு சொன்ன போது அவர் உடனே வாளை ஏந்திக் கொண்டு கிளம்புனார் என்றால் அன்றைக்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் தங்கள் மீதான பிரியத்தை விட பெருமானார் ஸல் அவர்கள் மீதான பிரியத்தைத் தான்  அதிகம் விதைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையான பிரியத்திற்கான அளவுகோலும் அது தான்.ஒருவர் தன் பெற்றோரை விட தன் பிள்ளைகளை விட தன் மனைவியை விட ஏன் தன் உயிரை விட பெருமானாரைத் தான் அதிகம் நேசிக்க வேண்டும். அது தான் உண்மையான பிரியம்.

كُنَّا مع النَّبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو آخِذٌ بيَدِ عُمَرَ بنِ الخَطَّابِ، فَقالَ له عُمَرُ: يا رَسولَ اللَّهِ، لَأَنْتَ أحَبُّ إلَيَّ مِن كُلِّ شَيْءٍ إلَّا مِن نَفْسِي، فَقالَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: لَا، والَّذي نَفْسِي بيَدِهِ، حتَّى أكُونَ أحَبَّ إلَيْكَ مِن  نَفْسِكَ، فَقالَ له عُمَرُ: فإنَّه الآنَ، واللَّهِ، لَأَنْتَ أحَبُّ إلَيَّ مِن نَفْسِي، فَقالَ النَّبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: الآنَ يا عُمَرُ

 நாங்கள் நபி அவர்களோடு இருந்தோம். நபியவர்கள் உமர் ரலி அவர்களின் கரத்தை பிடித்திருந்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே என் உயிரை தவிர்த்து எல்லா வஸ்துக்களை விட நீங்கள் தான் என்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் என்று சொன்ன போது, இல்லை, என் ஆத்மா யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உன் உயிரை விடவும் நான் உன்னிடத்தில் நேசத்திற்குரியவனாக ஆக வேண்டும் என்று சொன்னார்கள். உடனே உமர் ரலி அவர்கள் இப்போது சொல்லுகிறேன் நீங்கள் என் உயிரை விட என்னிடத்தில் நேசத்திற்குரியவர் என்று சொன்ன போது உமரே இப்போது தான் நீங்கள் உண்மையான ஈமானுக்குரிய வார்த்தையை சொல்லியிருக்கிறீர்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி ; 6632)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ حَاصَ أَهْلُ الْمَدِينَةِ حَيْصَةً وَقَالُوا: قُتِلَ مُحَمَّدٌ حَتَّى كَثُرَتِ الصَّوَارِخُ فِي نَوَاحِي الْمَدِينَةِ فَخَرَجَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ فَاسْتُقْبِلَتْ بِأَخَيهَا وَابْنِهَا وَزَوْجِهَا وَأَبِيهَا لَا أَدْرِي بِأَيِّهِمُ اسْتُقْبِلَتْ أَوَّلًا فَلَمَّا مَرَّتْ عَلَى آخِرِهِمْ قَالَتْ:  مَنْ هَذَا؟  قَالُوا: أَخُوكِ وَأَبُوكِ وَزَوْجُكِ وَابْنُكِ قَالَتْ:  مَا فَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَيَقُولُونَ: أَمَامَكَ حَتَّى ذَهَبَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَتْ بِنَاحِيَةِ ثَوْبِهِ ثُمَّ جَعَلَتْ تَقُولُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ لَا أُبَالِي إِذَا سَلِمْتَ مَنْ عَطِبَ .

உஹதுப் போர்க்களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி பரப்பப்பட்ட போது மதீனா முழுக்க கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. செய்தியைக் கேட்டு நிலை தடுமாறிப் போனார்கள். அதில் ஒரு பெண்மணி அந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து நபியைத் தேடி வந்தார்கள். அந்தப் பெண்ணிடத்தில் போர்க்களத்தில் ஷஹீதாக்கப்பட்ட அவர்களின் தந்தை மகன் கணவன் சகோதரன் ஆகியோரைப் பற்றி சொல்லப்பட்ட போது அதைக் கூட கண்டு கொள்ளாமல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நபியவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே சென்றார்கள். இறுயாக நபியைப் பார்த்த பிறகு தான் அமைதி அடைந்தார்கள் நீங்கள் நல்லவிதமாக இருந்தால் போதும். வேறு எதையும் நான் பொருட்படுத்த மாட்டேன் என்று கூறினார்கள். (தப்ரானி)

இந்த நேசம் தான் நமக்கு வர வேண்டும். இந்த உண்மையான பிரியம் தான் நமக்கு மறுமையில் வெற்றியைத் தருவதோடு நபியவர்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றுத்தரும். அல்லாஹ் அத்தகைய நஸீபை எல்லோருக்கும் தருவானாக

 

3 comments:

  1. நபி நேசமே நம் சுவாசம்

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.அருமையான கருத்துக்கள்.அல்லாஹ் பரக்கத் செய்வானாக.

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்..

    ReplyDelete