Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 41 الا تستنصر لنا

 

فعن أبي عبد الله خباب بن الأرت -رضي الله عنه- قال: شكونا إلى رسول الله -صلى الله عليه وسلم- وهو متوسد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا؟ ألا تدعو لنا؟ فقال: ((قد كان مَن قبلكم يُؤخذ الرجل فيُحفر له في الأرض، فيُجعل فيها، ثم يؤتى بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين، ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه ما يصده ذلك عن دينه، واللهِ ليتمنّ الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضرموت لا يخاف إلا الله والذئبَ على غنمه، ولكنكم تستعجلون))[1]، رواه البخاري وفي رواية: "وهو متوسد بردة، وهو في ظل الكعبة، وقد لقينا من المشركين شدة"[2]

கஃபாவின் நிழலில் தனக்குரிய மேலாடையை தலையணையாக வைத்த நிலையில் படுத்திருந்த நபி ஸல் அவர்களிடம் நாங்கள் எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடக்கூடாதா எங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யக்கூடாதா என்று கூறியவர்களாக முறையிட்டோம். அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒருவர் பிடிக்கப்பட்டு அவருக்காக பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் போடப்பட்டார். பின்பு ரம்பத்தைக் கொண்டு வரப்பட்டு அவரது தலையில் வைக்கப்பட்டு அறுக்கப்பட்டது. இரு பாதியாக அவர் அறுக்கப்பட்டார். எஞ்சிய அவரது இறைச்சியும் எலும்பும் இரும்புச் சீப்பால் சீவப்பட்டது. இது, அவரை அவரது மார்க்கத்தை விட்டும் மாற்ற வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்துவான். சன்ஆ என்ற ஊரிலிருந்து ஹள்ர்மவ்த் என்ற ஊர் வரைக்கும் ஒரு பயணி அல்லாஹ்வைத் தவிர எவரையும் அஞ்ச மாட்டார். தன் ஆட்டுக்காக ஓநாயைக் கண்டும் பயப்பட மாட்டார். இந்த அளவிற்கு மாற்றம் ஏற்படும். என்றாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 3612)

இது நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்வு. எதிரிகளால் எண்ணற்ற கொடுமைகளும் சித்திரவதைகளும் ஏற்பட்ட போது தான் சஹாபாக்கள் இப்படி ஒரு கோரிக்கையை நபியிடத்தில் வைத்தார்கள். ஆனால் அந்தளவு கொடுமைகளும் சித்திரவதைகளும் நடந்தும் கூட நபியவர்கள் அந்த நேரத்திலே அவர்களுக்கு துஆ செய்யாமல் பொறுமையைக் கொண்டு ஏவுகிறார்கள். ஏனென்றால் பொறுமையின் மூலம் ஏற்படுகின்ற அந்தஸ்துகளும் உயர்வுகளும் எண்ணிலடங்காதவை. இந்த உயர்வான அந்தஸ்துகள் தன் தோழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் நபியவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த ஈமான் கொண்ட மக்கள் அனுபவித்த கொடுமைகளை உதாரணப் படுத்தி அவர்களைப் போன்று நீங்களும் பொறுமையாக இருங்கள் என்று உபதேசித்தார்கள்.

 இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அன்றைக்கிருந்த ஸஹாபாக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்களை தூக்கு மேடை ஏற்றினார்கள். சித்திரவதை செய்து அவர்களை கொன்றார்கள்.. மக்காவின்  கடுமையான உஷ்ணத்தில் சுடுமணலில் வெற்று உடம்போடு அவர்களைப் படுக்க வைத்து கொடுமைப் படுத்தினார்கள். அந்த சுடுமணலில் அவர்களை வெற்று உடம்போடு வீதி வீதியாக இழுத்து வந்தார்கள். அதன் மீது படுக்க வைத்து பெரும் பாறையை அவர்களது மேனியில் ஏற்றி வைத்து கொடுமைப் படுத்தினார்கள். எண்ணற்ற கொடுமைகளை சஹாபாக்கள் அனுபவித்தும் நபியவர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தினார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக முந்தைய சமூகத்தைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது அவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் கூட அது அவர்களின் தீனை விட்டும் தடுக்க வில்லை என்று சொன்னார்கள். எனவே தீனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏராளமான சோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டு தான் இருக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில் ஈமானை பாதுகாப்பது மிகவும் சவாலான ஒரு விஷயம்.. ஈமானை பிடித்திருப்பது கையில் நெருப்புக் கங்கை பிடித்திருப்பவர் போல என்பது நபி மொழியாகும். அவளோ ஆபத்தான ஒரு காலகட்டம் இது. ஆனால் எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் அவைகள் நம் தீனுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது. தீனிலிருந்து நாம் கொஞ்சமும் வழி மாறி விடக்கூடாது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

அடுத்து நபியினுடைய வார்த்தை சத்தியமானது. கடந்த காலத்தைக் குறித்து அவர்கள் சொல்லியிருந்தால் அது நிச்சயம் நடந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். வருங்காலத்தை குறித்த செய்தியாக இருந்தால் அது நிச்சயம் நடக்கும் என்று நம்ப வேண்டும். அது தான் நபியின் மீது நாம் கொண்டிருக்கிற உண்மையான ஈமான் ஆகும். நபியவர்கின் வார்த்தை என்றைக்கும் பொய்யானது இல்லை. அவர்கள் குறிப்பிட்டது போல அச்சமில்லாமல் வெகுதூரம் நிம்மதியாக பயணிக்கின்ற ஒரு வசந்தமான சூழ்நிலை இஸ்லாமியர்களுக்கு வெகு சீக்கிரமே ஏற்பட்டது குறிப்பாக உமர் ரலி அவர்களின் காலத்தில் இஸ்லாமியர்கள் அந்த வசந்தமான சூழலைப் பார்த்தார்கள்.

No comments:

Post a Comment