Friday, December 25, 2020

இஸ்லாமும் கிறித்துவமும்

 


இன்று ஆங்கில வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் 25 ம் நாள். டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள், அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து இன்று பிறந்ததாக நம்பி அதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

அவர்கள் கொண்டாடும் பண்டிகை குறித்தும் அவர்கள் கொண்டிருக்கிற கொள்கை குறித்தும் பார்ப்பதற்கு முன்பு அவர்கள் கடவுளாக நினைக்கும் ஹள்ரத் ஈஸா அலை அவர்கள் குறித்தும் அவர்களுக்கும் நம் நபிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஒரு சில செய்திகளை நாம் பார்க்கலாம்.

أَنَا أَوْلَى النَّاسِ بعِيسَى ابْنِ مَرْيَمَ في الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ، أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ

நான் மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள். அவர்களின் தாய்மார்கள் பலர். அவர்களின் மார்க்கம் ஒன்றே. (புகாரி : 3443)

          أَنَا أَوْلَى النَّاسِ بعِيسَى ابْنِ مَرْيَمَ، في الأُولَى وَالآخِرَةِ قالوا: كيفَ؟ يا رَسُولَ اللهِ، قالَ: الأنْبِيَاءُ إِخْوَةٌ مِن عَلَّاتٍ، وَأُمَّهَاتُهُمْ شَتَّى، وَدِينُهُمْ وَاحِدٌ، فليسَ بيْنَنَا نَبِيٌّ

நான் மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன் என்று நபி அவர்கள் கூறினார்கள்.அது  எப்படி என்று கேட்கப்பட்டது.  இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள். அவர்களின் தாய்மார்கள் பலர். அவர்களின் மார்க்கம் ஒன்று  தான். எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என்று கூறினார்கள்.  (முஸ்லிம் : 2385)

ஈஸா நபி அலை அவர்களுக்கும் நம் நபி அவர்களுக்கும் 600 வருட இடைவெளி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடைவெளியில் வெறொரு ஷரீஅத்தைக் கொண்டோ வேதத்தைக் கொண்டோ எந்த நபியும் வர வில்லை.

أنا دعوةُ أبي إبراهيمَ وبُشرى عيسى

நான் என் தந்தை இப்ராஹீம் நபியின் துஆவினால் வந்திருக்கிறேன். ஈஸா நபியால் சுபச்செய்தி சொல்லப்பட்டவாக இருக்கிறேன். (அல்பிதாயா வன்நிஹாயா : 2/256)

إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انْقَطَعَتْ ، فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ

நபித்துவமும் தூதுத்துவமும் முடிந்து விட்டது. எனக்குப் பிறகு நபியோ ரசூலோ இல்லை. (திர்மிதி : 2272)

இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதும் ஹதீஸ் விளக்கவுரையாளர்கள்

يَنْزِلُ حَاكِمًا بِهَذِهِ الشَّرِيعَةِ لَا نَبِيًّا بِرِسَالَةٍ مُسْتَقِلَّةٍ وَشَرِيعَةٍ نَاسِخَةٍ ؛ فَإِنَّ هَذِهِ الشَّرِيعَةَ بَاقِيَةٌ إلَى يَوْمِ الْقِيَامَةِ لَا تُنْسَخُ

நபி அவர்கள் இறுதி நபி. அவர்களுக்குப் பிறகு கியாமத் வரை வேறு நபி இல்லை. ஒரு நபியின் ஷரீஅத் அதற்கு முந்தைய நபியின் ஷரீஅத்தை மாற்றி விடும். ஆனால் நபி அவர்களின் இந்த ஷரீஅத் கியாமத் வரை மாற்றப்படாமல் நிலையாக இருக்கும். எனவே கியாமத்தின் நெருக்கத்தில் இறங்குகிற ஈஸா அலை அவர்கள் கூட நபி அவர்களின் ஷரீஅத்தைத் தான் பின்பற்றுவார்கள். அவர்களின் சமூகத்தில் ஒருவராகத் தான் இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

மிஃராஜ் பயணத்தின் போது ஏழு வானத்தில் எட்டு நபிமார்களை நபி அவர்கள் சந்திந்தார்கள். அதில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில் இரண்டாவது வானத்தில் ஈஸா அலை அவர்களைச் சந்தித்ததற்கான காரணம் ; ஈஸா அலை அவர்களுக்கு அவர்களின் சமூகம் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து இறுதியில் அவர்களைக் கொல்ல முற்பட்டார்கள். அல்லாஹ் வானத்தில் உயர்த்தி அவர்களைக் காத்தான்.  அதே போன்று தான் நபி அவர்களுக்கும் அவர்களின் சமூகம் ஏராளமான தொல்லைகளைக் கொடுத்தார்கள். பல தடவை அவர்களைக் கொல்ல முயற்சித்தார்கள். அல்லாஹ் அவர்களைக் காத்தான். அல்லாஹ்வுடன் எனக்கு உதவியாளர்கள் யாரென்று ஈஸா அலை அவர்கள் கேட்ட போது அவர்களின் தோழர்கள் நாங்கள் உதவி புரிகிறோம் என்றார்கள். அதே போன்று தான் நபி அவர்களும் கேட்ட போது அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். அந்த வகையிலும் நபி அவர்களுக்கும் ஈஸா அலை அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நபி அவர்களுக்கும் ஈஸா அலை அவர்களுக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை என்பதும் நான் ஈஸா நபியின் சுபச்செய்தி என்று சொன்னதும் அவர்கள் திரும்பி வருகிற போது நபி அவர்களின் ஷரீஅத்தையே பின்பற்றி அவர்களின் உம்மதில் ஒருவராகவே இருப்பார்கள் என்பதும் ஈஸா அலை அவர்களைப் போன்றே எண்ணற்ற துன்பங்களை நபி அவர்கள் சந்திந்ததும் அவர்களைப் போன்றே இவர்களுக்கும் மிகச்சிறந்த தோழர்கள் அமைந்ததும் நம் நபிக்கும் ஈஸா நபிக்கும் இடையில் இருக்கிற ஒரு உயர்ந்த தொடர்பையும் நெருக்கத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

அதேபோன்று நபி அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதைப் போலவே ஈஸா நபிக்கும் அல்லாஹ் ஏராளமாக அற்புதங்களை வழங்கினான்.

பிறப்பு ஒரு அற்புதம் ;

أن رهطًا من أهل نجران قدموا على محمد صلى الله عليه وسلم = وكان فيهم السيّد والعاقب = فقالوا لمحمد: ما شأنك تذكر صاحبنا؟ فقال: من هو؟ قالوا: عيسَى، تزعم أنه عبدُ الله! فقال محمد: أجل، إنه عبد الله. قالوا له: فهل رأيت مثلَ عيسى، أو أنبئت به؟ ثم خرجوا من عنده، فجاءه جبريل صلى الله عليه وسلم بأمر ربِّنا السميع العليم فقال: قل لهم إذا أتوك: " إنّ مثل عيسى عند الله كمثل آدم

நஜ்ரானிலிருந்து ஒரு கூட்டம் நபியிடத்தில் வந்து எங்கள் ஆளைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களாமே என்று கேட்டார்கள். உங்க ஆள் யார் என்று நபி அவர்கள் கேட்ட போது ஈஸாவாகும். அவர்களை நீங்கள் அல்லாஹ்வின் அடிமை என்று கூறுகிறீர்களா? இந்த கேட்டார்கள். நபி அவர்கள் ஆம் அவர்கள் அல்லாஹ்வின் அடியார் தான் என்று கூறினார்கள். அதற்கவர்கள் ஈஸாவைப் போன்று நீங்கள் உலகத்திலே வேறு யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தந்தை உண்டு. ஆனால் ஈஸாவிற்கு எந்த தந்தையும் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். அப்போது தான் இந்த வசனம் அருளப்பட்டது. (தஃப்ஸீர் தப்ரீ)

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் : 3 ; 59)

உலகில் ஆதம் அலை அவர்களைப் போலவே தந்தையின்றி இறைவனின் குன் - ஆகு என்ற நேரடி வார்த்தையின் மூலமாக பிறந்தவர்கள் ஈஸா அலை அவர்கள்.

பிறக்கும் போது அற்புதம் ;

பொதுவாக பெண்களுக்கு மிக மிக சிரமமான நேரம் என்பது குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்த நேரம். மிகப்பெரும் இன்னலை அனுபவிக்கும் அந்த நேரத்தில் பெண்கள் தனக்கு மிகப்பெரிய ஆறுதலை எதிர் பார்ப்பார்கள். உலகில் பெற்ற தாயை விட அரவணைப்பையும் ஆறுதலையும் வேறு யாரும் தர முடியாது. எனவே தான் பெரும்பாலும் பிரசவ நேரத்தில் பெண்கள் தங்கள் தாய்மார்களுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அந்த சிரமமான நேரம் மர்யம் அலை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு அருகில் தாயும் இல்லை. கணவரும் இல்லை. ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. மட்டுமல்ல ஆண் துணையின்றி குழந்தையை சுமந்திருக்கிற காரணத்தால் ஊர் உலகம் என்ன சொல்லும் என்ற கவலை வேறு.அதனால் தான்

يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنتُ نَسْياً مَّنسِيّاً

இந்த்த மாதரியான நிகழ்வை சந்திப்பதற்கு முன் நான் மரணித்திருக்கக்கூடாதா என்று கூறினார்கள்.

உலகில் யாரும் சந்திக்காத மிகப்பெரும் நெருக்கடியான ஒரு சூழலை அவர்கள் சந்தித்தார்கள். அந்த நேரத்தில் உலகில் யாருக்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது. ஆம் அல்லாஹ்வே அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதாஎன்று கூறி(அரற்றி)னார். (அல்குர்ஆன் ; 19  :  23)

فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيّا

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்என்று அழைத்து கூறினார்.   (அல்குர்ஆன் ; 19  :  24)

ஈஸா அலை அவர்களைச் சுமந்திருந்த அன்னை மர்யம் அலை அவர்களின் பிரசவ வலியை இலேசாக்கும் விதமாக ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலம் அல்லாஹ் ஆறுதல் கூறியதை ஈஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதமாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பிறந்த பிறகு அற்புதம் :

தன் தாயின் பரிசுத்தத்தை உலகிற்கு அறிவிக்க பிறந்தவுடன் ஈஸா அலை அவர்களை அல்லாஹ் பேச வைத்தான். இது ஈஸா நபிக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் அற்புதம்.

لَمْ يَتَكَلَّمْ في المَهْدِ إِلَّا ثَلَاثَةٌ: عِيسَى، وَكانَ في بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ له جُرَيْجٌ، كانَ يُصَلِّي، جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَقالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، فَقالَتْ: اللَّهُمَّ لا تُمِتْهُ حتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكانَ جُرَيْجٌ في صَوْمعتِهِ، فَتَعَرَّضَتْ له امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فأبَى، فأتَتْ رَاعِيًا فأمْكَنَتْهُ مِن نَفْسِهَا، فَوَلَدَتْ غُلَامًا، فَقالَتْ: مِن جُرَيْجٍ فأتَوْهُ فَكَسَرُوا صَوْمعتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلَامَ، فَقالَ: مَن أَبُوكَ يا غُلَامُ؟ قالَ : الرَّاعِي، قالوا: نَبْنِي صَوْمعتَكَ مِن ذَهَبٍ؟ قالَ: لَا، إِلَّا مِن طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِن بَنِي إِسْرَائِيلَ، فَمَرَّ بهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقالَتْ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ، فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ علَى الرَّاكِبِ، فَقالَ: اللَّهُمَّ لا تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أَقْبَلَ علَى ثَدْيِهَا يَمَصُّهُ، - قالَ: أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إلى النبيِّ صَلَّى اللهُ عليه وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ - ثُمَّ مُرَّ بأَمَةٍ، فَقالَتْ: اللَّهُمَّ لا تَجْعَلِ ابْنِي مِثْلَ هذِه، فَتَرَكَ ثَدْيَهَا، فَقالَ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا، فَقالَتْ: لِمَ ذَاكَ؟ فَقالَ: الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، وَهذِه الأمَةُ يقولونَ: سَرَقْتِ، زَنَيْتِ، وَلَمْ تَفْعَلْ. .

மூவரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் பேசியதில்லை (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள்.(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ஜுரைஜ்என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்த போது அவருடைய தாயார் அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா! இவனை விபச்சாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே! என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது வழிபாட்டுத்தலத்தில் இருந்த போது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபச்சாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்ததுஎன்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை இடித்து கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை, (இன்ன) இடையன் என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் வழிபாட்டுத்தலத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.

(குழந்தைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே அவள், இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்டதற்கு அக்குழந்தை, வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) நீ திருடிவிட்டாய்; விபச்சாரம் செய்து விட்டாய்என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பதிலளித்தது. (புகாரி ; 3436)

சமூகத்தாரிடம் அவர்களின் அற்புதம்  ;

﴿ وَرَسُولاً إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُم بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْراً بِإِذْنِ اللّهِ وَأُبْرِئُ الأكْمَهَ والأَبْرَصَ وَأُحْيِـي الْمَوْتَى بِإِذْنِ اللّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ].

 இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகி விடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).  (அல்குர்ஆன் ; 3 :  49)

ஈஸா  அலை அவர்கள் தன் சமூகத்தாரிடம் வெளிப்படுத்திய அற்புதங்களை விவரிக்க இந்த ஒரு இறைவசனம் போதும்.

يقول ابن كثير – رحمه الله - ﴿ وأحيي الموتى بإذن الله ﴾ قال كثير من العلماء: بعث الله كل نبي من الأنبياء بمعجزة تناسب أهل زمانه، فكان الغالب على زمان موسى، عليه السلام، السحر وتعظيم السحرة. فبعثه الله بمعجزة بهرت الأبصار وحيرت كل سحار، فلما استيقنوا أنها من عند العظيم الجبار انقادوا للإسلام، وصاروا من الأبرار. وأما عيسى، عليه السلام، فبعث في زمن الأطباء وأصحاب علم الطبيعة، فجاءهم من الآيات بما لا سبيل لأحد إليه، إلا أن يكون مؤيدا من الذي شرع الشريعة. فمن أين للطبيب قدرة على إحياء الجماد، أو على مداواة الأكمه، والأبرص، وبعث من هو في قبره رهين إلى يوم التناد؟ وكذلك محمد صلى الله عليه وسلم بعثه [الله] في زمن الفصحاء والبلغاء ونحارير الشعراء، فأتاهم بكتاب من الله، عز وجل، لو اجتمعت الإنس والجن على أن يأتوا بمثله، أو بعشر سور من مثله، أو بسورة من مثله لم يستطيعوا أبدا، ولو كان بعضهم لبعض ظهيرا، وما ذاك إلا لأن كلام الرب لا يشبهه كلام الخلق أبدا

 

பொதுவாக ஒவ்வொரு நபிமார்களுக்கும் அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு அவர்களின் சமூகத்தினரின் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முஃஜிஸாக்களை அல்லாஹுத்தஆலா வழங்குவான். அந்த வகையில் மூசா நபியின் காலத்தில் சூனியக்காரர்களும் அவர்கள் செய்கின்ற சூனியங்களும் அதிகமாக இருந்தது. எனவே அந்த சூனியத்தை மிகைக்கும் படியான ஒரு அற்புதத்தை மூசா நபிக்கு அல்லாஹ் வழங்கினான். அதேபோன்று முஹம்மது நபி அவர்களின் காலத்தில் இலக்கியவாதிகளும் கவிஞர்களும் நிறைந்திருந்தார்கள். எனவே எல்லா இலக்கியங்களையும் கவிதைகளையும் மிகைக்கும் படியான பேரற்புதமாக அல்குர்ஆனை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அந்த வகையில் ஈஸா நபியின் காலத்தில் மருத்துவர்களும் மருத்துவம் சார்ந்த துறைகளும் நிறைந்திருந்தது. எனவே தான் அந்த மருத்துவர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகின்ற உலகிலுள்ள எல்லா மருத்துவர்களும் தோற்றுப் போகின்ற குஷ்டரோகிகளை குணமாக்குகின்றன பிறவிக் குருடர்களை குணமாக்குகின்றன எல்லாவற்றுக்கும் மேலாக மரணித்தவர்களைக் கூட எழுப்புகின்ற அற்புதத்தை ஈஸா நபி அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். (இப்னு கஸீர்)

இப்படி ஏராளமான அற்புதங்களை ஈஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான். அவ்வாறிருந்தும் நபி அவர்களை  அவர்களின் சமூகம் ஏற்றுக் கொள்ள மறுத்ததைப் போன்றே ஈஸா நபியையும் அவர்களின் சமூகம் ஏற்றுக் கொள்ள வில்லை. இவ்வாறு பல விஷயங்களில் நபி அவர்களுக்கும் ஈஸா நபிக்கும் ஒற்றுமையும் நெருக்கமும் இருக்கிறது.

ஒரே ஒரு வித்தியாசம் தான் ; நபி அவர்களை அன்றைக்கு அந்த சமூகம் கவிஞர் என்றது. பைத்தியக்காரர் என்றது. இன்றைக்கு ஒரு கூட்டம் அவர்களை சாதாரண மனிதர் என்று கூறுகிறது. ஆனால் ஈஸா அலை அவர்களை இன்றைக்கு அவர்களின் சமூகம் கடவுளாக்கி விட்டது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம். அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன் இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.

لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌

நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராரித்து விட்டனர்” (அல்குர்ஆன் : 5 ;   72)

ஈஸா நபி அலை அவர்கள் உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர்கள் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப்பட்டு விட்டது. கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே. வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர். இவரின் உண்மையான பெயர் Saul of tasus. இது கிரேக்க மொழிப் பெயராகும். கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும். பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும். புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது. ஈஸா நபி அவர்கள் மீதும், அவர்களது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல். ஈஸா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈஸா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்துவதற்குத்தான்.

ஈஸா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் இறைவனை ஈஸா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார். தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது. அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள் தானே என்ற லாஜிக்கின் அடிப்படையில் மரியம் அலை அவர்களும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது. முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும்.மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. மூன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கை தான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.

திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட விஷயங்கள்.

உதாரணமாக

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய(புத்தரின் 3 உடம்பு)

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு. இந்த திரித்துவத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ‌ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ  ؕ وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.  (அல்குர்ஆன் : 5 ;   73)

ஈஸா நபி அலை அவர்களை எவ்வாறு ஈமான் கொள்ள வேண்டும் என்பதை நபி அவர்கள் ஒரு ஹதீஸில் அழகாக குறிப்பிடுகிறார்கள் ;

عن عبادة بن الصّامت -رضي الله عنه- أنّ رسول الله -صلّى الله عليه وسلّم- قال: "مَن قالَ: أشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وحْدَهُ لا شَرِيك له، وأنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسولُهُ، وأنَّ عِيسَى عبدُ اللهِ، وابنُ أمَتِهِ، وكَلِمَتُهُ ألْقاها إلى مَرْيَمَ ورُوحٌ منه، وأنَّ الجَنَّةَ حَقٌّ، وأنَّ النَّارَ حَقٌّ، أدْخَلَهُ اللَّهُ مِن أيِّ أبْوابِ الجَنَّةِ الثَّمانِيَةِ شاءَ"

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன அவனுடைய வார்த்தையாகவும் அவனிடமிருந்து உண்டான ரூஹாகவும் இருக்கிறார்கள். சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான். (முஸ்லிம் : 28)

அல்லாஹ் நம் ஈமானை காப்பதோடு தவறான கொள்கையில் இருப்பவர்களுக்கு நேரான பாதையைக் காட்டுவானாக.

 

 

 

3 comments: