Thursday, September 15, 2022

இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்கு காரணம்

 

உலகில் வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்கும் தான் சார்ந்திருக்கிற துறைகளில் தடம் பதிக்க வேண்டும். தான் செய்கின்ற காரியங்களில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் உயர்வை அடைய வேண்டும். உச்சத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறைந்திருக்கும்.

படிக்கின்ற ஸ்கூலில் படிக்கின்ற வகுப்பில் தான் முதலாவதாக வர வேண்டும் என்ற ஆசை ஐந்து வயது குழந்தையின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கிறது. செய்கின்ற தொழிலில் தானே கிங்காக இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு வர்த்தகம் புரிகின்ற அனைவருக்கும் இருக்கிறது.இப்படி ஒவ்வொன்றிலும் தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்ற பொதுவான ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்குத்தான் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம். பாடுபடுகிறோம், நேரங்களைத் தருகிறோம். பல்வேறு தியாகங்களை மேற்கொள்கிறோம். அதற்கான வழியை இஸ்லாம் இலகுவாக கற்றுத் தந்திருக்கிறது. அது தான் அதிகாலைப் பொழுது.

عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِى فِى بُكُورِهَا ». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِى أَوَّلِ النَّهَارِ.

யா அல்லாஹ் என் சமூகத்திற்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.எதாவது சிறு கூட்டத்தையோ ஒரு படையையோ அனுப்புவதாக இருந்தால் முற்பகல் நேரத்தில் தான் அனுப்புவார்கள். (திர்மிதி ; 1212)

 

அதிகாலைப் பொழுது என்பது அல்லாஹ் நமக்களித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. நம் வாழ்வில் உயர்வுகளை வெற்றிகளையும் பெற்றுத் தரும் ஒன்று.பரக்கத்தான வாழ்வு அமையப் பெற வேண்டும் என விரும்புபவர்கள் அந்த நேரத்தைப் பற்றிப் பிடிக்க வேண்டும். குறிப்பாக விசாலமான ரிஜ்க் கிடைக்கப்பெற வேண்டும் என எதிர் பார்ப்பவர்கள் அந்த நேரத்தை தவற விடக்கூடாது.அந்த நேரத்தை தவற விடுபவர்கள் தங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து கிடைக்கவிருக்கும் ரிஜ்கை இழந்து விடுவார்கள்.

 

عَن فَاطِمَةَ بِنْتِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَرَّ بِيَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعَةٌ مُتَصبِّحَةٌ، فَحَرَّكَنِي بِرِجْلِهِ، ثُمَّ قَالَ: يَا بُنَيَّةُ، قَوْمِي اشْهَدِي رِزْقَ رَبِّكِ، وَلَا تَكُونِي مِنَ الْغَافِلِينَ، فَإِنَّ اللهَ يَقْسِمُ أَرْزَاقَ النَّاسِ مَا بَيْنَ طُلُوعِ الْفَجْرِ إِلَى طُلُوعِ الشَّمْسِ. قال السيوطي ـ رحمه الله ـ في جامع الأحاديث: البيهقي في شعب الإيمان 

 

ஹள்ரத் ஃபாத்திமா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் அதிகாலை வேளையில் படுத்திருந்தேன். அப்போது நபி  அவர்கள் என்னை எழுப்பி அருமை மகளே! எழுந்திரு. உனது இறைவன் உனக்களிக்கின்ற ரிஜ்கை நீ பெற்றுக் கொள். அதை அலட்சியப்படுத்தியவர்களில் நீ ஆகிவிடாதே. ஃபஜ்ருடைய நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் மத்தியில் தான் அல்லாஹ் ரிஜ்கை பங்கு வைக்கிறான் என்று கூறினார்கள்.  {ஷுஃபுல் ஈமான் 4/1708}

 

رآى بن عباس ابناً له نائما نوم الصبح فقال له قم ا تنام في الساعة التي تقسم فيها الأرزاق

ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அவருடைய மகன்களில் ஒருவர் அதிகாலைப் பொழுதில் உறங்குவதைப் பார்த்தார்கள். எழுந்திரு அல்லாஹ்வின் ரிஸ்க் பகிர்ந்தளிக்கப்படும் நேரத்தில் தூங்குகிறாயா? என்று கேட்டார்கள். (ஷிஃபா பக்கம் 49)

 

قال رسول الله - صلى الله عليه وسلم  باكِروا  طلَبَ الرِّزْقِ؛ فإنَّ الغُدُوَّ بَرَكَةٌ ونَجاحٌ

 

ரிஜ்கைத் தேடுவதற்கு விரைவாக எழுந்திருங்கள். நிச்சயமாக காலைப் பொழுது பரக்கத்தாகவும் வெற்றியைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. (பஸ்ஸார்)

இன்றைக்குள்ள அறிவியல்,ஆராய்ச்சி,மருத்துவம் சார்ந்த அறிஞர்கள் கூட இந்த அதிகாலைப் பொழுதில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

கடந்த காலங்களை விட இந்த 21 ம் நூற்றாண்டில் குழந்தையின் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதை நாம் அறிவோம்.அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த அதிகாலைப் பொழுதை தவற விடுதல் என்று கூறலாம்.

 

பெண்களின் வயிற்றில் கரு உருவாகக் காரணமான சினை முட்டை உற்பத்தி அவர்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிகாலை நேரத்தில் அவர்களின் உடம்பில் ஒழு அல்லது குளிப்பின் மூலம் தண்ணீர் படும் போது பெண்களின் உடலில் வெப்ப நிலை சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே ஒரு பெண் அதிகாலையில் எழுந்து ஒழு செய்து சுபுஹு தொழுவதால் அவர்களின் உடம்பில் வெப்ப நிலை சமச்சீராக இருக்கும், குழந்தைப் பேரும் ஏற்படும்.            

 

மற்ற நேரங்களில் வாகனங்களின் புகை,தொழிற்சாலைகளின் புகை, மனிதர்களின் புகை இப்படி பல்வேறு வகையான மாசுக்கள் காற்றில் கலந்து அசுத்தமான காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.ஆனால் அதிகாலையில் அதிகமான வாகனங்கள், மிஷின்கள் இயங்காததனால் காற்று ஆரோக்கியமாக இருக்கும் அதை சுவாசித்து, நாம் அந்த நாளை தொடங்கினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

 

உடம்பில் வெளி உறுப்புகள் இருப்பதைப் போன்று உள் உறுப்புகளும் இருக்கின்றது.அதில் ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் இயங்குகிறது. சளி பிரச்சனை மூச்சி பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்து மூச்சிப்பயிற்சி செய்தால் குணம் பெறலாம். ஏனெனில் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை தான் நுரையீரல் இயங்குகிறது.ஆனால் அந்த பயிறசி தஹஜ்ஜத்திலும் சுபுஹுவிலும் நமக்கு கிடைக்கிறது. இன்னும் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பெருங்குடல் இயங்குகிறது.அந்த நேரத்தில் பாத்ரூம் போய் பழக வில்லையென்றால் நமக்கு மோஷன் பிரச்சனை வரும். சுபுஹு தொழுது விட்டால் அந்த பிரச்சனை இருக்காது.                       

 

நரம்பியல் துறை நிபுணர்கள் மனித மூளையின் ஆற்றலை நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்தார்கள். மூளையின் ஆற்றல் முழுமையாக அறியப்படவில்லையென்றாலும் அவர்கள் கண்டு பிடித்த வரை சராசரியாக மனித மூளையின் ஆற்றல் 30 முதல் 40 சதவீதமாக இருக்கும்.ஆனால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக மனித மூளையின் ஆற்றல் 70 சதவீதமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  

 

இந்த பாக்கியங்கள் அனைத்தும் காலைப் பொழுதில் அடங்கியிருக்கிற காரணத்தினால் தான் ஒரு விஞ்ஞானி பொறாமையோடு கூறிய வார்த்தை முஸ்லிம்கள் பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர்கள். muslims are born with silver spoon in their mouth. அதாவது [பாக்கியசாலிகள்]. காரணம் மூளையின் ஆற்றல் உச்சத்தில் இருக்கும் போது சுபுஹு தொழுகையைத் தொழுது விட்டு, தங்கள் வேலைகளை துவங்கும் படி ஏவப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

அதிகாலை நேரம் பரக்கதான நேரம். அந்த நேரத்தில் தொழப்படும் ஃபஜ்ர் தொழுகை மிகவும் மகத்தான தொழுகை. வாழ்க்கையின் அனைத்து வெற்றிகளையும் பெற்றுத் தருகின்ற தொழுகை.இதை நாம் உணராமல் இருக்கிறோம். ஆனால் மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இதை மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார்கள்.

 

கோல்டா மேயர் என்ற பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர். “”கடைசிக் காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளார்களேஅதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா? “”ஆம், நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்.

அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப் பெண்மணி கூறினார்: “”ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்று வேண்டுமென்றால் அது நடக்கலாம். சாத்தியப்படலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறினார்.

நம்மை எந்தளவு சரியான முறையில் கணித்திருந்தால் இந்த வார்த்தையைக் கூற முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் கூறியதைப் போன்று தான் நம் நிலையும் இருக்கிறது. ஜும்ஆவிற்கு வரும் மக்களில் பத்து சதவீதம் மக்கள் கூட ஃபஜ்ர் தொழுகைக்கு வருவதில்லை. நம்மில் 90 சதவீதம் பேருக்கு அவர்களது வாழ்க்கையில் ஃபஜ்ர் தொழுகையே கிடையாது. பள்ளியோடு தொடர்பில் இருக்கிற, மற்ற தொழுகைகளை தவற விடாமல் பேணுதலாக தொழக்கூடியவர்கள் கூட மிக முக்கியமான ஃபஜ்ர் தொழுகையில் கவனம் இல்லாமல் இருப்பது தான் வியப்பைத் தரும் செய்தி.

எங்கும் நாம் அடிக்கப்படுகிறோம். உரிமைகள் மறுக்கப்படுகிறோம். நமக்கு பாதுகாப்பில்லை. நம் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பில்லை. நம் மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களுக்கும் பாதுகாப்பில்லை. கியான்வாபி மஸ்ஜிதைத்  தொடர்ந்து உத்தரபிரதேசம் பதாவுனில் உள்ள இந்தியாவின் மூன்றாவது பழமையான மற்றும் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் தொழக்கூடிய அளவு ஏழாவது பெரிய மசூதியாக இருக்கக்கூடிய ஜமா மஸ்ஜிதை ஒரு கோவில் எனக்கூறி சர்ச்சையை கிழப்பியிருக்கிறார்கள். இது ஒரு கோவில் என்பதாகவும்,கோவில் வழிபாடுகள் நடந்ததாகவும் பொய்யான புனையப்பட்ட செய்திகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இப்படியே நம்முடைய ஒவ்வொரு உரிமைகளிலும் கை வைக்கப்படுகிறது. நீதிமன்றங்களும் நமக்கு எதிராகவே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் உலக அரங்கில் நாம் தோற்றுப் போய் நிற்கிறோம். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் வெற்றியைத் தரும் ஃபஜ்ர் தொழுகை நம்மிடம் இல்லை. இன்றைக்கு இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் இது தான்.

அதிகம் பேர் கூறும் ஒரு பொதுவான காரணம், என்னால் எழுந்திருக்க முடிய வில்லை.எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் முடிய வில்லை. ஆனால் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனென்றால் ஃபஜ்ர் தொழுகையின் நேரத்தில் எழுந்திருப்பது முடியாத காரியமாக இருந்திருந்தால் அதை அல்லாஹ் மனித சமூகத்திற்கு கடமையாக்கியிருக்க மாட்டான்.

لا يكلف الله نفسا الا وسعها

அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்ப தில்லை. (அல்குர்ஆன் : 2 ; 286)

 

எழுந்திருக்க முடிய வில்லை என்று சொல்கிற நாம் வெளியூர் செல்ல வேண்டிய தேவை இருந்தால் 5 மணிக்கல்ல 4 மணிக்கே எழுந்து விடுகிறோம். அதிகாலையில் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய தேவை இருந்தால் விரைவாக எழுந்து விடுகிறோம்.உலக ஆதாயங்கள் எதுவும் கிடைக்கும் என்றால் அதை பெறுவதற்காக துரிதமாக எழுந்து விடுகிறோம். இதுபோன்ற உலகியல் காரணங்களுக்காக எழுந்திருக்கிற நம்மால் தொழுகைக்காக ஏன் எழுந்திருக்க முடியாமல் போனது. நாய்களை வளர்க்க ஆரம்பித்து விட்ட இந்த நாகரீக காலத்தில் அவைகளின் ஆரோக்கியத்திற்காக 4 மணிக்கே எழுந்திருந்து அவைகளோடு வெளியே கிழம்பி விடுகிறார்கள். அவர்கள் அந்த நாயிக்கு கொடுக்கிற மரியாதையைக் கூட நம்மைப் படைத்த நாயனுக்கு நாம் கொடுப்பதில்லை.

 

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஃபஜ்ர் தொழுவார்கள். ஆனால் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுது கொள்வார்கள். இவர்களைக் குறித்து நபியவர்கள் கூறினார்கள்.  

 

عَنْ عبدِ اللهِ، قالَ: مَن سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا، فَلْيُحَافِظْ علَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بهِنَّ، فإنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ سُنَنَ الهُدَى، وإنَّهُنَّ مَن سُنَنَ الهُدَى، ولو أنَّكُمْ صَلَّيْتُمْ في بُيُوتِكُمْ كما يُصَلِّي هذا المُتَخَلِّفُ في بَيْتِهِ، لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ، ولو تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ

 

யார் நாளை இறைவனை முஸ்லிமாக சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் பாங்கு சொல்லப்படும் பள்ளியில் இந்த தொழுகைகளை பேணுதலாக தொழுது கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் நபிக்கு நேர்வழியின் பாதைகளை காட்டி விட்டான். அவைகள் தான் நேரான பாதைகள். நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுது கொண்டால் உங்கள் நபியின் வழிமுறையை விட்டு விட்டீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை விட்டு விட்டால் நீங்கள் வழிதவறிப் போய் விடுவீர்கள். (முஸ்லிம் ; 654)

 

எனவே காரணமின்றி வீட்டில் தொழுவது அது நபிவழிக்கு மாற்றமானது.

 

நம் முன்னோர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ:  حَضَرْتُ عِنْدَ مُنَاهَضَةِ حِصْنِ تُسْتَرَ عِنْدَ إِضَاءَةِ الفَجْرِ، وَاشْتَدَّ اشْتِعَالُ القِتَالِ، فَلَمْ يَقْدِرُوا عَلَى الصَّلاَةِ، فَلَمْ نُصَلِّ إِلَّا بَعْدَ ارْتِفَاعِ النَّهَارِ، فَصَلَّيْنَاهَا وَنَحْنُ مَعَ أَبِي مُوسَى فَفُتِحَ لَنَا، وَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: وَمَا يَسُرُّنِي بِتِلْكَ الصَّلاَةِ الدُّنْيَا وَمَا فِيهَا

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டு உமர் (ரலி) அவர்களது ஆட்சி காலத்தில்  ஈரானிலுள்ள துஸ்தர்எனும் கோட்டையை ஃபஜ்ர் வெளுக்கும் நேரத்தில் வெற்றி கொள்ளும் நிலை இருந்தது. அப்போது நானும் இருந்தேன். போர்த் தீ கடுமையாக மூண்டது. மக்களால் தொழ முடிய வில்லை. எனவே, நாங்கள் (ஃபஜ்ர் தொழுகையை) சூரியன் மேலே உயர்ந்த பிறகே தொழுதோம். அத்தொழுகையை நாங்கள் அபூமூசா (ரலி) அவர்களுடன் தொழுதோம். (அந்தப் போரில்) எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்தத் தொழுகைக்குப் பகரமாக இவ்வுலகமும் அதிலுள்ளவையும் (எனக்கு வழங்கப்பட்டாலும் அவை) எனக்கு மகிழ்ச்சியளிக்காது.

அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் துஸ்தரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அழுவார்கள்.அதில் நமக்கு வெற்றியல்லவா கிடைத்தது. பின்பு எதற்காக அழுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அந்த வெற்றி எங்களை அதிகாலைத் தொழுகையை தொழ விடாமல் செய்து விட்டதே என்று கூறுவார்கள்.

 

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை, அதுவும் தீனுல் இஸ்லாத்திற்காக போர் புரியும் நேரத்தில் தவறி விட்ட ஒரு தொழுகைக்காக காலம் முழுக்க கவலைப்பட்டு அழுத நம் முன்னோர்கள் எங்கே ? எந்த காரணமுமின்ற வேண்டுமென்றே தினம் தினம் அந்த தொழுகையைத் தொழாமல் உறங்குகின்ற நாம் எங்கே ? உண்மையில் அந்த தொழுகையால் கிடைக்கும் நன்மைகளையும் அதை விடுவதால் ஏற்படும் நஷ்டமும் புரிந்திருந்தால் நமக்கு உரக்கம் வராது.

 

ஒருவர் உண்மையான முஃமின் என்பதற்கு அடையாளமே ஃபஜ்ர் தொழுகை தான். உலகில் ஒருவன் முஃமினா இல்லை முனாஃபிக்கா என்பதை சோதிப்பதற்கு அல்லாஹ் சில சோதனைகளை ஏற்படுத்துவது வழக்கம். அந்த சோதனையின் முடிவில் யார் முஃமின் யார் முனாஃபிக் என்பது வெட்டவெளிச்சமாகும். நபி அவர்களின் காலத்தில் சுமார் 370 முனாஃபிக்குகள் இருந்தார்கள். ஸஹாபாக்களோடு ஸஹாபாக்களாக இருப்பார்கள். தொழுவார்கள்,நோன்பு நோற்பார்கள். ஆனால் உள்ளத்தில் குஃப்ரையும் நபியின் மீதான வெறுப்பையும் வைத்திருந்தார்கள். அவர்களை அடையாளப்படுத்துவதற்கு அல்லாஹ் சில சோதனைகளை ஏற்படுத்தினான். அதில் தான் அவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். அதில் ஒன்று தான் ஃபஜ்ர் தொழுகை.

أُبَىِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : ” أَشَاهِدٌ فُلاَنٌ ؟ ” فَقَالُوا لاَ ، فَقَالَ : ” أَشَاهِدٌ فُلاَنٌ ” فَقَالُوا لاَ ، لِنَفَرٍ مِنَ الْمُنَافِقِينَ لَمْ يَشْهَدُوا الصَّلاَةَ فَقَالَ : ” إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ _ الفجر والعشاء _ أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ ولَو تعلَمونَ ما فِيهِما لأتيتُموهُما ولَو حَبوًا علَى الرُّكَبِ

உபை பின் கஅப் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி அவர்கள் ஃபஜ்ர் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” கேட்டார்கள்: மக்கள், “இல்லை..என்று கூறினார்கள். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?” என்று கேட்க, மக்களும் இல்லைஎன்று கூற, பெருமானார் அவர்கள் நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (அபூதாவூது ; 554)

ஃபஜ்ர் தொழுகை முனாஃபிக்குகளுக்கு சிரமமான தொழுகை என்று சொன்ன காரணத்தினால் ஸஹாபாக்கள் எந்த சூழலிலும் உயிர் போகும் நேரத்திலும் ஃபஜ்ர் தொழுகையை விடவே மாட்டார்கள்.

عن هشام بن عروة ، عن أبيه ؛ أن المسور بن مخرمة أخبره ؛ أنه دخل على عمر بن الخطاب من الليلة التي طعن فيها . فأيقظ عمر لصلاة الصبح . فقال عمر : نعم  ولا حظ في الإسلام لمن ترك الصلاة . فصلى عمر ، وجرحه يثعب دما   

மிஸ்வர் பின் மக்ரமா ரலி அவர்கள் உமர் ரலி அவர்களை ஃபஜ்ர் தொழுகைக்கு எழுப்பினார்கள்.அந்நேரத்தில் அவர்கள் ஈட்டியால் குத்தப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தார்கள். அவ்வப்போது மயங்கி விடுகிறார்கள். குத்தப்பட்ட பகுதியிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. அந்த நிலையிலும் அவர்கள் தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறி ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். (முஅத்தா மாலிக்)

நபி அவர்களின் இந்த வார்த்தையையும் உமர் ரலி அவர்களின் இந்த செயலையும் பார்த்த பிறகு இப்னு உமர் ரலி அவர்கள் கூறிய வார்த்தை ;  

عنِ ابنِ عمرَ قالَ كنَّا إذا فقدنا الرَّجلَ في الفجرِ والعشاءِ أسأنا بهِ الظَّنَّ رواه ابن خزيمة

 ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே (அதாவது நயவஞ்சகர்கள் என்றே) எண்ணியிருந்தோம்(இப்னு குஜைமா)

ஃபஜ்ர் தொழுகைக்கு ஒருவர் வர வில்லையென்றால் ஒன்று அவருக்கு அவரின் உடலில் முஸீபத் ஏற்பட்டிருக்கும். அல்லது அவரின் தீனில் முஸீபத் ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

எனவே நபித்தோழர்களின் காலத்தில் இறை நம்பிக்கையாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களை அளக்கும் அளவு கோலாக ஃபஜ்ர் தொழுகை தான் இருந்திருக்கிறது. ஃபஜ்ர் தொழுகைக்கு வராததை வைத்து அவர் முனாஃபிக் என்று விளங்கிக் கொண்டார்கள் என்றால் வழமையாக ஃபஜ்ர் தொழுகைக்கு வராத நாம் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மை உண்மை இறை விசுவாசிகளாக ஆக்குவானாக!

 

 

 

 

 

 

      

 

9 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அருமையான பதிவு

    ReplyDelete
  2. Masha Allah hazarath

    ReplyDelete
  3. பாரகல்லாஹு ஹஜ்ரத் அழகான அற்புதமான கோர்வை மிகவும் பயனுள்ள குறிப்புகள்

    ReplyDelete
  4. மிக மிக முக்கிய மான கட்டுரை

    ReplyDelete
  5. Jazakkumullah Hazrath

    ReplyDelete
  6. அருமை அருமை

    ReplyDelete
  7. மாஷா அல்லா நல்ல குறிப்புகள் ஹஜ்ரத் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும் ஆமீன்

    ReplyDelete
  8. Jazakallah khair moulana இறைவன் தங்களின் கல்வியில் பரகத் செய்வானாக.

    ReplyDelete