அல்லாஹுத்தஆலா உலகில் நமக்கு வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை கொடுத்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் என்பது ஈமானை அடிப்படையாகக் கொண்டது, இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டது, செயல்களை காட்டிலும் இறை நம்பிக்கைக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் முதன்மை இடத்தைக் கொண்டது. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அமல்கள் என்பது அவனுக்கு முக்கியமானதாக இருந்தாலும் அந்த அமல்களுக்கு மிகவும் பிரதானமானது அவனது இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் தான். இறை விசுவாசம் தான் அவன் செய்யக்கூடிய காரியங்கள் நன்மையா இல்லையா என்பதையே தீர்மானிக்கிறது. இறை விசுவாசத் திற்கு பிறகு தான் ஒரு காரியம் நன்மை என்ற அங்கீகாரத்தையே பெறுகிறது.