Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை



வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.
எதையும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செய்வதற்கும் இஸ்லாம் வழிகாட்ட வில்லை, அதில் எடுத்தோம் கவுத்தோம் என்று அவசரமாக செயல்படுவதற்கும் இஸ்லாம் வழிகாட்ட வில்லை. நிதானம் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்று. ஆனால் அதே வேளையில் விரைவாக செய்ய வேண்டும்.குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்,அதில் நேரம் தவறாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் அடையாளப் படுத்தியிருக்கிற ஒரு  சில காரியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அதில் முதலாவது, அல்லாஹ் நமக்கு கடமையாக் கியிருக்கிற ஐவேளைத் தொழுகை.

ثلاثة لا تؤخرها: الصلاة إذا أتت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا
நபி அவர்கள் ஹள்ரத் அலி ரலி அவர்களைப் பார்த்து சொன்னார்கள் ; மூன்று விஷயங்களை பிற்படுத்தாதே. 1, நேரம் வந்து விட்டால் தொழுகையை. 2, மரணித்து விட்டால் அடக்கம் செய்வதை. 3, பெண்ணிற்கு தகுந்த ஜோடி அமைந்து மணமுடிப்பதை. (திர்மிதி : 1075)

ان الصلاة كانت علي المؤمنين كتابا موقوتا
நிச்சயமாக தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிப்பிடப்பட்ட ஒரு கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 4 ;103(

இஸ்லாம் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒவ்வொரு நேரங்களைக் குறிப்பிட்டு அந்தந்த நேரங்களில் அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.இஸ்லாம் குறிப்பிட்டுச் சொன்ன அந்த நேரங்களில் தொழாமல் காரணமில்லாமல் அதை பிற்படுத்துவது அதை தள்ளிப்போடுவது அதில் அசட்டை செய்வது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல, நாம் சரியாக தொழுதோம் என்பதற்கு அடையாளமும் அல்ல.

குர்ஆனில் 60 ம் மேற்பட்ட வசனங்களில் அல்லாஹ் தொழுகையைப் பற்றி சொல்கிறான்.அதில் எந்த இடத்திலும் தொழுங்கள் என்றோ தொழுவார்கள் என்றோ சொல்ல வில்லை. يقيمون الصلاة واقيموا الصلاة நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள், அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். اقامة الصلاة  என்ற வார்த்தையைத்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான். اقامة الصلاة  என்ற வார்த்தைக்கு பல விளக்கங்களும் வியாக்கியானங்களும் சொல்லப்பட்டாலும் அதற்கு அறிஞர்கள் சொல்லும் முக்கியமான விளக்கம்  المحافظة في الصلاة في اوقاتها தொழுகையை அதற்கான நேரங்களில் தொழுவது என்று தான் சொல்கிறார்கள். எனவே சரியான நேரங்களில் தொழாமல் தேவையில்லாமல் பிற்படுத்தித் தொழுதால் அல்லது அவ்வாறு பிற்படுத்தித் தொழுவதையே வாடிக்கையாக ஆக்கிக் கொண்டால் அது தொழுகை என்ற பெயரில் மட்டும் தான் இருக்குமே தவிர அது உண்மையான தொழுகையாக இருக்காது.அவர் தொழுதார் என்று தான் சொல்ல முடியுமே தவிர இறைவன் சொல்வதைப் போன்று அவர் தொழுகையை நிறைவேற்றினார் என்று சொல்ல முடியாது.எனவே தொழுதால் மட்டும் போதாது நேரம் தவறாமல் தொழ வேண்டும்.

وصَلُّوا كما رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أحَدُكُمْ، ولْيَؤُمَّكُمْ أكْبَرُكُمْ. .
நான் எப்படி தொழுவதாக நீங்கள் பார்த்தீர்களே அப்படியே தொழுங்கள். (புகாரி : 7246)

தொழுகை என்றால் முதலில் உடல், உடை, இடம் இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்,ஒழு சரியான முறையில் செய்திருக்க வேண்டும்,அதிலுள்ள சுன்னத் முஸ்தஹப்புகளை பேண வேண்டும்,கிராஅத் பிழையில்லாமல் ஓத வேண்டும், ருகூஃ, சுஜூதுகளை நிதானத்தோடு செய்ய வேண்டும்,கவனம் சிதறாமல் எந்த அல்லாஹ்வை நாம் தொழுகிறோமோ அந்த அல்லாஹ் நாம் பார்ப்பதைப் போன்று தொழ வேண்டும், இல்லையென்றால் அவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு தொழ வேண்டும்,நேரம் தவறாமல் தொழ வேண்டும்,ஜமாஅத்தோடு தொழ வேண்டும்,எல்லாவற்றுக்கும் மேலாக பணிவோடு தொழ வேண்டும், உஸ்கி படாயீ அவ்ர் அப்னீ ஆஜிஸீ ஜாஹிர் கர்னா என்று சொல்வார்கள். இத்தனை அம்சங்களும் இணைந்தது தான் தொழுகை, இஸ்லாம் கற்றுத்தருவது இந்த தொழுகையைத்தான்.அல்லாஹ் குர்ஆனில் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று சொல்வது இந்த தொழுகையைத்தான்.நபி அவர்கள் நான் தொழுவதைப் போன்று தொழுகுங்கள் என்று சொன்னதும் இந்த தொழுகையைத்தான். இன்றைக்கு நாம எல்லாருமே தொழுகிறோம்.ஆனால்  நம்மில் எத்தனை பேரின் தொழுகை நபியின் தொழுகையாக இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

وقد ذكر العلامة ابن القيم الجوزية رحمه الله في كتابه "الوابل الصيب من الكلم الطيب" أن الناس في الصلاة على مراتب خمس هي "مُعاقَب، مُحاسَب، مُكفَّر عنه، مُثاب، مُقرَّب من ربه".
فالقسم الأول مُعاقَب وهو مرتبة الظالم لنفسه المفرط وهو الذي انتقص من وضوئها ومواقيتها وحدودها وأركانها، والقسم الثاني مُحاسَب وهو من يحافظ على مواقيتها وحدودها وأركانها الظاهرة ووضوئها لكن قد ضيع مجاهدة نفسه في الوسوسة فذهب مع الوساوس والأفكار.
وأما القسم الثالث هو مُكفَّر عنه وذلك من يحافظ على حدودها وأركانها وجاهد نفسه في دفع الوساوس والأفكار فهو مشغول بمجاهدة عدوه لئلا يسرق صلاته فهو في صلاة وجهاد .
والقسم الرابع مرتبة المُثاب من إذا قام إلى الصلاة أكمل حقوقها وأركانها وحدودها واستغرق قلبه مراعاة حدودها وحقوقها لئلا يضيع شيئا منها بل همه كله مصروف إلى إقامتها كما ينبغي وإكمالها واتمامها قد استغرق قلب شأن الصلاة وعبودية ربه تبارك وتعالى فيها.
والقسم الخامس هو مُقرَّب من ربه من إذا قام إلى الصلاة قام إليها كذلك ولكن مع هذا قد أخذ قلبه ووضعه بين يدي ربه عز وجل ناظرا بقبله إليه مراقبا له ممتلئا من محبته وعظمته كأنه يراه ويشاهده وقد اضمحلت تلك الوساوس والخطوات وارتفعت حجبها بينه وبين ربه فهذا بينه وبين غيره في الصلاة أفضل وأعظم مما بين السماء والأرض وهذا في صلاته مشغول بربه عز و جل قرير العين به
அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள். 1, தண்டனைக்குரியவர், 2, கேள்வி கேட்கப்படுபவர். 3, பாவங்கள் மன்னிக்கப்படுபவர். 4, கூலி வழங்கப்படுபவர். 5, இறை நெருக்கத்தைப பெறுபவர்.
1, சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.
2, மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் ஓர்மையின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் அல்லாஹ்விடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.
3, தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இவரின் பாவங்களை அந்த தொழுகை இல்லாமல் ஆக்கி விடும்.
4, தொழுகையின் முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். இவர் கூலி வழங்கப்படுபவர்.
5, மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர்.     

இமாம் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் சொன்ன இந்த ஐந்து வகை தொழுகையாளிகளில் நாம் எந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகையை இஸ்லாம் கடையாக்கியிருக்கிறது, ஆனால் நம்மில் அதிகமானோர் தொழுவதே கடமைக்காகத்தான், இன்னும் அதிகமானோர் அது கடுமை என்பதைக்கூட உணராமல் சிந்திக்காமல் வார முஸல்லியாக  விஷேச தின முஸல்லியாக பெருநாள் முஸல்லியாக இருப்பது வேதனை தரும் செய்தி.
وما خلقت الجن والانس الا ليعبدون
மனிதன் மற்றும் ஜின் இனத்தை என்னை வணங்குவதற்காகவே தவிர படைக்க வில்லை. (அல்குர்ஆன் : 51 ; 56)

அல்லாஹ் நம்மைப் படைத்த நோக்கமும் நாம் இந்த உலகத்தில் பிறந்த நோக்கமும் தொழுவது தான். நாம் படிப்பதோ வேலைக்கு போவதோ கல்யாணம் செய்வதோ பிள்ளைகளை பெற்றுக் கொள்வதோ வியாபாரம் செய்வதோ குடும்பத்தைக் கவனிப்பதோ சமூகத்தைக் கவனிப்பதோ சாப்பிடுவதோ தூங்குவதோ குளிப்பதோ இவை அனைத்தும் வாழ்வின் இரண்டாம் பகுதி தான். இந்த வசனத்தின் படி வாழ்வின் மிக முக்கியமான முதல் பகுதி வணக்கம் தான்.ஆனால் நாம் அதிகமாக அந்த இரண்டாம் பகுதியை எடுத்துக் கொண்டு முதல் பகுதியை கோட்டை விட்டு விடுகிறோம். இது எவ்ளோ பெரிய அநியாயம் என்பதை நாம் இந்த தருணத்தில் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தொழுகையில் நிறைய நன்மைகள் இருப்பதாக எண்ணற்ற பிரயோஜனங்கள் இருப்பதாக குர்ஆனூம் ஹதீஸும் நமக்கு கூறுகிறது.

اذا مسه الشر جزوعا واذا مسه الخير منوعا الا المصلين
மனிதன் அவசரக்காரணாக படைக்கப்பட்டுள்ளான்.அவனை ஒரு தீங்கு தொட்டு விட்டால் பதறுகிறான். அவனை ஒரு நன்மை தொட்டால் (அது பிறருக்கு கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.தங்கள் தொழுகையின் மீது நிலைத்திருக்கிற தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்ஆன் : 70 ; 19,20,21,22,23)

இன்றைக்கு வாழ்க்கை என்றால் பதட்டம் என்றாகி விட்டது.எங்கும் பதட்டம்,எதிலும் பத்தட்டம், பதட்டமில்லாதவர்களைப் பார்ப்பது மிக மிக அரிதாகிப்போனது.ஆனால் அந்தப் பதட்டம் தொழுகையாளி களுக்கு இருக்காது என்று அல்லாஹ் கூறுகிறான்.எனவே வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் தொழுகையில் இருக்கிறது.

ولقد نعلم انك يضيك صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين
அவர்கள் சொன்ன வார்த்தைகளால் உமது உள்ளம் நெருக்கடியாவதை நாம் அறிவோம்.எனவே நீங்கள் உங்கள் இறைவனை புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்பவர்களில் நீங்களும் ஆகி விடுவீராக. (அல்குர்ஆன் : 15 ;97,98)

மன இறுக்கத்திற்கும் நிம்மதியின்மைக்கும் பதட்டமான சூழ்நிலைக்கும் அருமருந்தாக தொழுகையை இறைவன் இவ்வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

இஸ்லாம் தொழுகைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த காரியத்திற்கும் அந்தளவு முக்கியம் கொடுத்ததில்லை. இஸ்லாத்தில் எல்லா காரியத்திற்கும் சலுகை உண்டு. ஏதோ கட்டத்தில் அதை விட்டு விடுவதற்கு அனுமதி உண்டு.ஆனால் விடுவதற்கு அனுமதிக்கப்படாத ஒரே விஷயம் தொழுகை மட்டும் தான்.ஒரு மனிதன் பருவ வயதை அடைந்ததிலிருந்து அவன் மரணம் வரை எந்த சூழ்நிலையிலும் தொழ வேண்டும்.நின்று தொழ வேண்டும்,அதற்கு  முடியாதவர்கள் உட்கார்ந்து தொழ வேண்டும், அதற்கு முடியாதவர்கள் படுத்துத் தொழ வேண்டும்,அதற்கும் முடியாதவர்கள் சைக்கினையால் தொழ வேண்டும். போர்க்களம் போன்ற பதட்டமான சூழ்நிலையில் கூட எப்படி தொழ வேண்டும் என்ற தெளிவை அல்குர்ஆனில் பார்க்க முடிகிறது. எனவே தொழுகையின் நிலையும் முறையும் மாறாமலேயே தவிர தொழுகையை விடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்க வில்லை.

அதனால் தான் நபி அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிகின்ற அந்த கடைசி தருணத்தில் அவர்கள் தன் சமூகத்திற்கு வலியுறுத்திக் கூறிய மிக முக்கியமான விஷயமாக தொழுகை தான் இருந்தது. அருமை ஸஹாபா பெருமக்களின் சிந்தனையும் எண்ணமும் கவலையும் முழுக்க முழுக்க தொழுகையில் தான் இருந்திருக்கிறது.

إن يخرج وأنا فيكم ! فأنا حجيجه دونكم ، وإن يخرج ولست فيكم ، فامرؤ حجيج نفسه ، والله خليفتي على كل مسلم ، فمن أدركه منكم فليقرأ عليه فواتح سورة الكهف ، فإنها جواركم من فتنته . قلنا : وما لبثه في الأرض ؟ قال : أربعون يوما : يوم كسنة ويوم كشهر ، ويوم كجمعة ، وسائر أيامه كأيامكم فقلنا : يا رسول اللهِ : هذا اليوم الذي كسنة أتكفينا فيه صلاة يوم وليلة ؟ قال : لا ، اقدروا له قدره ، ثم ينزل عيسى بن مريم ، عند المنارة البيضاء شرقي دمشق فيدركه عند بًاب لد فيقتله

அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்என்று சொன்னார்கள். (அபூதாவூது ; 4321)

கியாமத்தின் அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலைக் குறித்து நபி அவர்கள் கூறும் போது, அந்த நேரத்தில் கூட ஸஹாபாக்களின் சிந்தனையும் எண்ணமும் தொழுகையைக் குறித்துத்தான் இருந்தது என்பதை இந்த ஹதீஸ் விவரிக்கிறது. 

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதியும் நீதத்தின் மறுஉருவமும் யாரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று அண்ணலம் பெருமானார் அவர்களால் சோபனம் சொல்லப்பட்டார்களோ அத்தகைய ஹள்ரத் உமர் ரலி அவர்கள் எதிரியால் குத்தப்பட்டு அவர்கள் ஷஹீதாகுவதற்கு காரணமான அந்த எதிரியால் அவர்கள் தாக்கப்பட்டது தொழுகையில் தான் என்பது நமக்கெல்லாம் தெரிந்த செய்தி.அதில் நமக்குத் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால் மரணத்தின் விழிம்பில் இருந்த அவர்கள் அடிக்கடி மயக்கமுற்று விடுவார்கள். ஆனால் தொழுகை என்ற வார்த்தை அவரின் காதில் விழுந்தவுடன் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

قال مصعب : سمع عامر بن عبد الله المؤذن وهو يجود بنفسه ، فقال : خذوا بيدي فقيل : إنك عليل ، قال : أسمع داعي الله ، فلا أجيبه ، فأخذوا بيده ، فدخل مع الإمام في المغرب ، فركع ركعة ، ثم مات . المنتقي شرح مؤطا مالك
அமிர் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் நோயுற்று எழுந்து நடப்பதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள்.அப்போது பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் என் கையைப் பிடித்து என்னை தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். நீங்கள் இயலாமல் இருக்கிறீரே என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ்வின் அழைப்பை நான் கேட்டு விட்டேன். எப்படி அதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியும் என்று சொன்னார்கள். அவரை அழைத்துச் சென்றார்கள். மக்ரிப் தொழுகையின் ஜமாஅத்தில் கலந்து கொண்டு ரூகூவிற்கு சென்றார்கள். அந்த நிலையிலேயே அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. (முன்தகா ஷரஹு முஅத்தா மாலிக்)

எனவே அருமை ஸஹாபாக்களைப் பொறுத்த வரை தொழுகை என்பது வெறும் கடமையல்ல. தொழுகையை அவர்கள் வெறும் கடமையாக மட்டும் பார்க்க வில்லை.அதை தங்கள் உயிராகக் கருதினார்கள்,தங்கள் உயிர் மூச்சாக நினைத்தார்கள்.அதன் ஆழத்தை விளங்கினார்கள், யாரும் எதிலும் காணாத இன்பத்தையும் சுகத்தையும் அவர்கள் தொழுகையில் கண்டார்கள்.  தொழுகை உயிர் மூச்சாக இருந்த காரணத்தினால் தான் ஹயாத்தாக இருக்கிறார்களா மரணித்து விட்டார்களா என்று தெரியாத அளவு மயக்கத்தில் இருந்த உமர் ரலி அவர்கள் தொழுகை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மயக்கம் தெளிந்தார்கள்,மரணத்தின் விளிம்பில் நின்ற போதும் கூட தொழ வேண்டும் என்று ஆசைப்பட்டு தொழச்சென்று அந்த தொழுகையிலேயே தன் உயிரை விட்டார்கள்.

தொழுகை என்பது வெறும் கடமையென்று தொழாமல் அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து தொழ வேண்டும்.உண்மையில் ஒருவர் தொழுகையில் இன்பத்தை உணர்ந்து விட்டால் ஒருக்காலும் அந்த தொழுகையை விட மாட்டார்.அப்படியே விட்டு விட்டாலும் அதை சாதாரணமாக நினைக்க மாட்டார்.

• ﺳﻠﻴﻤﺎﻥ عليه السلام ﻳﻀﺮبُ ﺃﻋﻨﺎقَ ﺧﻴﻠﻪ ﻭﺳﻮقَها؛ لأنها ﺷﻐﻠَﺘﻪ ﻋﻦ ﺻﻼﺓ ﺍﻟﻌﺼﺮ ﴿ حَتَّى تَوَارَتْ بِالْحِجَابِ ﴾ [ص: 32]؛ إﻧَّﻬﺎ الصلاة.
அஸர் தொழுகை தவறுவதற்கு காரணமாக இருந்த அத்தனை குதிரைகளையும் சுலைமான் நபி அலை அவர்கள் குர்பானி கொடுத்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

عنِ النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أنَّهُ قالَ يومَ الأَحزابِ : حَبَسونا عَن صلاةِ الوُسطى صَلاةِ العَصرِ حتَّى غربتِ الشَّمسُ ، ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا قالَ شعبةُ : ملأَ اللَّهُ قبورَهُم وبيوتَهُم أو قبورَهُم وبطونَهُم نارًا لا أَدري أفي الحديثِ هوَ أم ليسَ في الحديثِ أشُكُّ فيهِ .
அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். (புகாரி : 2931)

என்றைக்குமே தங்கள் வாழ்வில் யாரையும் பத்வா செய்து பழக்கப்படாத அருமை நாயகம் அவர்கள் அஸர் தொழ விடாமல் தடுத்த அவர்களை பத்வா செய்தார்கள் என்றால் தொழுகையின் மீது அவர்களுக்கு இருந்த அதீத ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்க்க முடிகின்றது.
 


No comments:

Post a Comment