Sunday, September 19, 2021

20 வது ஹதீஸின் தொடர் ;-

 


1، அல்லாஹ்வின் ரஹ்மத்தும் அடியார்கள் மீது அவன் கொண்டிருக்கிற விசாலமான அன்பும் இந்த ஹதீஸின் மூலம் உணர்த்தப்படுகிறது.

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا

வரம்பு மீறி குற்றம் செய்து விட்ட என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டும் நிராசை அடைந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். (அல்குர்ஆன் : 39 ; 53)

நல்லடியார்களை அழைப்பதைப் போன்று பாவம் செய்தவர்களையும் என் அடியார்களே என்று அழைப்பதன் மூலம் அல்லாஹ் அடியார்கள் மீது கொண்டிருக்கிற கிருபையும் இரக்கமும் நமக்கு தெளிவாகிறது. குற்றம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் ஒருவர் மனமுருகி அல்லாஹ்விடத்தில் தவ்பா கேட்கின்ற பொழுது அல்லாஹ் அதை மன்னிக்க தயாராக இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய அருளின் மீது நமக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். மிகப்பெரிய குற்றம் புரிந்து விட்டேன். எனக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்குமா என் தவ்பாவையெல்லாம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா என்ற நிராசை வந்து விடக்கூடாது. அல்லாஹ் ஒருவரை மன்னிப்பதற்கு அவர், தான் செய்த குற்றத்தைப் பற்றி கவலைப்படுவதும் கைசேதப்படுவதும் மட்டும் போதுமானது. இந்த ஹதீஸில் 100 கொலை செய்த நபர் தவ்பாவிற்காக  எதுவும் செய்ய வில்லை. எந்த நன்மையான காரியங்களையும் புரிய வில்லை. தன் பாவங்களை நினைத்து வருந்தினார். கைசேதப்பட்டார். தவ்பா கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக சிறிதளவு முயற்சித்தார். அல்லாஹ்வின் அருளைப் பெற்று விட்டார். எனவே தவ்பாவிற்கு பிரதானமானது தவறை நினைத்து கைசேதப்படுவதாகும்.

شروط التوبة سبعة

١، اعتراف الذنب

٢، حسن الظن بالله ورحمته

٣، التوبه لله

٤، ان يقلع عن الذنب

٥، ان يندم علي فعله

٦، ان يعزم ان لا يعود اليها

٧، ان يتوب قبل ان يغرغر وقبل ان يطلع الشمس من مغربها.

தவ்பாவின் நிபந்தனைகள் ஏழு. 1, செய்த பாவத்தை பாவம் என்று ஏற்றுக் கொள்வது. 2,அல்லாஹ்வுடைய அருளின் மீது ஆதரவு வைப்பது. 3, செய்கின்ற தவ்பா இறைவனுக்காக இருப்பது. 4, அந்த பாவத்திலிருந்து முற்றிலுமாக விலகி விடுவது. 5, செய்த பாவத்தை நினைத்து கைசேதப்படுவது. 6,மீண்டும் அந்த குற்றத்தை செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்வது. 7,ரூஹ் தொண்டைக் குழியை அடைவதற்கு முன்பு தவ்ப செய்து விடுவது.

2, பாவம் செய்தவரை வெறுத்து ஒதுக்குவதோ அவரை ஒரு மாதிரியாக பார்ப்பதோ அவரை இழிவுபடுத்துவதோ, அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் என்பது போன்ற வார்த்தைகளை சொல்வதோ கூடாது. அவ்வாறு சொல்வதை இறைவன் விரும்புவதில்லை.

كانَا رجلانِ في بني إسرائيلَ مُتواخيينِ فكانَ أحدُهما يذنِبُ والآخَرُ مجتهدٌ في العبادةِ فكانَ لا يزالُ المُجتهدُ يرى الآخرَ على الذَّنبِ فيقولُ أقصِر فوجدَهُ يومًا على ذنبٍ فقالَ لهُ أقصِر فقالَ خلِّني وربِّي أبُعِثتَ عليَّ رقيبًا فقالَ واللَّهِ لا يغفرُ اللَّهُ لكَ أو لا يدخلُكَ اللَّهُ الجنَّةَ فقبضَ أرواحَهما فاجتمعا عندَ ربِّ العالمينَ فقالَ لهذا المُجتهدِ أكنتَ بي عالِمًا أو كنتَ على ما في يدي قادِرًا وقالَ للمذنبِ اذهب فادخلِ الجنَّةَ برحمتي وقالَ للآخرِ اذهبوا بهِ إلى النَّارِ قالَ أبو هريرةَ والَّذي نفسي بيدِهِ لَتكلَّمَ بكلمةٍ أوبَقت دنياهُ آخرتَهُ

பனூ இஸ்ரவேலர்களில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் அதிகம் பாவத்தில் ஈடுபடக் கூடியவர். இன்னொருவர் இபாதத்தில் அதிகம் ஈடுபடக்கூடியவர். இபாதத்தில் ஈடுபடக்கூடியவர் தன் சகோதரனைப் பாவத்தில் பார்க்கும் பொழுதெல்லாம், நீ பாவத்தை குறைத்துக் கொள் என்று சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் அவ்வாறு சொன்ன பொழுது அது எனக்கும் என் இறைவனுக்கு மத்தியில் உள்ளது. எனவே என்னை விட்டு விடு.அதில் நீ தலையிடாதே. என்னை கண்காணிப்பதற்காகவா நீ அனுப்பப்பட்டிருக்கிறாய் என்று அவர் கேட்டார். அதற்கு இந்த வணக்கசாலி, அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான் அல்லது உன்னை சுவனத்தில் நுழைவிக்க மாட்டான் என்று கூறினார். இரண்டு பேரின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றி தன் சன்னிதானத்தில் நிறுத்தினான். வணக்கசாலியை அழைத்து என்னைப் பற்றி உனக்கு நன்கு தெரியுமா. என் கரத்தில் உள்ளத்தின் மீது நீ ஆற்றலுடையவனா என்று கூறி அவரை நரகத்திற்கு கொண்டு செல்லும் படி உத்தரவிட்டான். அந்த பாவம் செய்த வரை அழைத்து என் அருளைக் கொண்டு நீ சுவனத்திற்கு செல்லும் என்று கூறினான். (இப்னு ஹிப்பான் ; 5712)

 

3, ஒருவர் பாவத்தை விட்டும் விலகி நடப்பதற்கும் பாவம் செய்தவர் தன்னை திருத்திக் கொள்வதற்கும் அவரைச் சுற்றி இருக்கிற சூழ்நிலை சரியாக இருக்க வேண்டும். மோசமான சூழ்நிலை ஒருவரை பாவத்தில் தள்ளி விடும். சரியான சூழலும் நல்லோர்களின் தொடர்பும் ஒருவரை ஈடேற்றப்படுத்தி விடும் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து நாம் தெரிய வரும் உண்மையாகும்.

No comments:

Post a Comment