Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 53 لا تتمنوا لقاء العدو

 

عَنْ أَبِي إِبْرَاهِيمَ عَبْدِاللهِ بْنِ أَبِي أَوفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ، انْتَظَرَ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ، فَقَالَ: «يَا أيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيوفِ متفق عليه

நபி ஸல் அவர்கள் எதிரிகளைச் சந்தித்த போர்க்களங்களில் ஒரு போரின் போது, சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை காத்திருந்து பின், மக்களே எதிரிகளை சந்திக்க விரும்பாதீர்கள். அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் எதிரிகளை நீங்கள் சந்தித்து விட்டால் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக சொர்க்கம் வாள்களின் நிழல்களுக்குக் கீழே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (புகாரி ; 2818)

இஸ்லாத்தைக் குறித்து ஒரு தவறான அபிப்ராயம் இருக்கிறது. அதாவது இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகின்ற மார்க்கம். சண்டையை ஊக்குவிக்கின்ற மார்க்கம். போர்க்களத்தை ஆர்வப்படுத்துகின்ற மார்க்கம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாம் என்பது அமைதியும் சாந்தமும் நிறைந்த மார்க்கம் என்பது இஸ்லாம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது.

யார் தன் கரைத்தாலும் தன் நாவால் பிறருக்கு தொந்தரவு தராமல் இருக்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம் என்பது நபி மொழியாகும்.

எனவே இஸ்லாம் என்பது அமைதி மார்க்கம். அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கின்ற மார்க்கம். சண்டையை தூண்டுகின்ற மார்க்கமல்ல. இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்க்களத்தை ஆய்வு செய்தால் அதில் எந்த போர்க்களமும் எதிரிகளை அழிக்க வேண்டும். அவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும். அவர்களை துடைத்து எரிய வேண்டும். நம் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். அல்லது அவர்களது பொருட்களை சூறையாட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நடந்ததில்லை. இஸ்லாத்தில் நடந்த அத்தனை போர்க்களமும் தற்காப்புக்காகவும் இஸ்லாத்தை ஓங்கச் செய்வதற்காகவும் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதற்காகவும் நடந்தவை தான்.

அந்த போர்க்களத்தில் கூட முதியவர்களை கொல்லக்கூடாது. பெண்களை கொல்லக்கூடாது. சிறுவர்களை கொலை செய்யக்கூடாது. மரங்களை வெட்டக்கூடாது. அவர்களின் புனித ஆலயங்களைத் தகர்க்கக் கூடாது என்றெல்லாம் ஒழுங்குமுறைகளை இஸ்லாம் விதித்திருக்கிறது.

وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا

உங்களோடு யார் சண்டை எடுக்கிறார்களோ அவர்களோடு நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் நீங்கள் அதில் வரம்பு மீறாதீர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ادع الي سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم باللتي هي احسن

உம்முடைய இறைவனின் பாதையின் பக்கம் நுட்பத்தை கொண்டும் அழகிய உபதேசங்களை கொண்டும் நீங்கள் அழையுங்கள்ز அழகானதைக் கொண்டு அவர்களிடத்தில் நீங்கள் விவாதம் செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்லாம் வாளால் பரவியது. போர்க்களங்களைக் கொண்டு தான் இஸ்லாம் வளர்ந்தது என்றெல்லாம் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் அழகிய உபதேசங்களைக் கொண்டும் உயரிய நற்குணங்களைக் கொண்டும் தான் வளர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

 

எனவே இஸ்லாம் சண்டையையோ போர்க்களத்தையோ தூண்டுகின்ற அதை ஆர்வப்படுத்துகின்ற மார்க்கமல்ல. மேற்குறிப்பிட்ட ஹதீஸில் கூட போர்க்களம் தொடங்குகின்ற அந்த நேரத்தில் போரைக் குறித்து ஆர்வப்படுத்தாமல் நீங்கள் எதிரிகளை சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். போர் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள் என்று உபதேசம் செய்வது இஸ்லாம் போர்க்களத்தை விரும்புகின்ற மார்க்கம் அல்ல என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

1 comment:

  1. மாஷா அல்லாஹ், அருமை , மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete