Wednesday, April 13, 2022

ஷைத்தானின் சகோதரர்கள்

 

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன். (அல்குர்ஆன் : 17:27)

இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான மார்க்கம். கட்டுப்பாடுகளைக் கொண்ட மார்க்கம். ஒரு முஸ்லிம் எப்படியும் வாழ முடியாது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அந்த வகையில் பொருளாராத்தை திரட்டுவதிலும் அதை செலவு செய்வதிலும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பொருளாதாரத்தை செலவு செய்யும் விஷயத்தில் இஸ்லாம் விதித்த கட்டுப்பாடு அந்த பொருளாதாரத்தை வீண்விரயம் செய்யாமல் இருக்குதல்.

இது என் பணம் நான் சம்பாதித்தது. இது என் உணவு நான் சமைத்தது. அதை எப்படியும் செய்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்று ஒருவன் விதன்டாவாதம் பேசினால்  அவனை  விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. இவ்வாறு கேட்டதினால் தான் ஷுஐப் அலை அவர்களின் சமூகம் அழிவை சந்தித்தார்கள்.

الُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا‌  اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ‏

அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் : 11:87)

நம் பணம் தான். ஆனால் நம் விருப்படி செலவழிப்பதற்கு நமக்கு அனுமதி இல்லை. நம் உணவு தான் ஆனால் நம் விருப்பப்படி அதை செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.எல்லாவற்றிற்கும் இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையரைகளை கொடுத்திருக்கிறது. அப்படித்தான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும்.

இன்று பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் வாழுகிற இந்த வாழ்க்கையில் எத்தனை வீண்விரயங்களை செய்து கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தை வீணடிக்கிறோம், தண்ணீரை வீணடிக்கிறோம், பொன்னான  நேரங்களை வீணடிக்கிறோம், நம் இளமையை வீணடிக்கிறோம்,திருமணம் என்ற பெயரால் பணத்தையும் உணவையும் வீணடிக்கிறோம், அன்றாடம் வீட்டில் எவ்வளவோ உணவுகளை கீழே கொட்டுகிறோம்.

உலகில் 100 கோடி பேர் பசியால் அவதிப்படுகிறார்கள். ஆனால் வருடம் தோறும் 280 மில்லியன் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று ஐ.நா. உணவு அமைப்பு கூறுகிறது.நாம் வீணடிக்கும் ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

இஸ்லாம் வீண்விரயம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறது.

كلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين

உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 7 ; 31)

كُلوا واشرَبوا وتَصدَّقوا والْبَسوا ما لم يخالِطْهُ إسرافٌ أو مَخيَلةٌ

உண்ணுங்கள், பருகுங்கள், தரமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள். ஆனால், அதில் விரயமும், கர்வமும் கலந்து விடக் கூடாது(இப்னுமாஜா ; 2920)

أنَّ مُعَاوِيَةَ كَتَبَ إلى المُغِيرَةِ: أنِ اكْتُبْ إلَيَّ بحَدِيثٍ سَمِعْتَهُ مِن رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ: فَكَتَبَ إلَيْهِ المُغِيرَةُ: إنِّي سَمِعْتُهُ يقولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلَاةِ: لا إلَهَ إلَّا اللَّهُ وحْدَهُ لا شَرِيكَ له، له المُلْكُ وله الحَمْدُ، وهو علَى كُلِّ شيءٍ قَدِيرٌ ثَلَاثَ مَرَّاتٍ، قالَ: وكانَ يَنْهَى عن قيلَ وقالَ، وكَثْرَةِ السُّؤَالِ، وإضَاعَةِ المَالِ، ومَنْعٍ وهَاتِ، وعُقُوقِ الأُمَّهَاتِ، ووَأْدِ البَنَاتِ

முஆவியா ரலி அவர்கள் முஃகீரா இப்னு ஷுஅபா ரலி அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், 'இறைத்தூதர் அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா ரலி அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி அவர்கள் தொழுது முடித்தவுடன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்' என்று கூறுவார்கள். மேலும், நபி அவர்கள்,  'இவ்வாறு சொல்லப்பட்டது;  (இவ்வாறு அவர் சொன்னார் என்று (ஊர்ஜித மில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப் பேசுவது,  அதிகமாக கேள்வி, அல்லது யாசகம் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தரமறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி : 6473)

فعَن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم مَرَّ بِسَعْدٍ وهو يتوضأ فقال: ما هذا الإسراف؟ فقال: أفي الوضوء إسراف؟! قال: نعم، وإن كنتَ على نهرٍ جارٍ

ஒழு செய்து கொண்டிருந்த சஃது ரலி அவர்களை நபியவர்கள்  கடந்து சென்றார்கள். என்ன இது வீண் விரயம் என்று கேட்டார்கள். ஒழுவில் கூட வீண் விரயம் உண்டா என்று அவர்கள் கேட்ட போது, ஆம், நீ ஓடக்கூடிய நதியில் இருந்தாலும் அதிலும் வீண்விரயம் இருக்கிறது என்று சொன்னார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் ; 1/108)

வீண்விரயம் என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பல விதமான விளக்கங்களைத் தருகிறார்கள்.

1, பாவமான காரியங்களில் பொருளை செலவு செய்வது வீண்விரயம்.

قال سفيان الثوري رضي الله عنه: "ما أنفقت في غير طاعة الله فهو سرف

அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தில் நீ செலவு செய்கின்ற பணம் அது மிகக் குறைவாக இருந்தாலும் அது வீண் விரயம் என்று சுஃப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

2, முறையின்றி செலவு செய்வது வீண்விரயம்.

قال ابن عباس رضي الله عنه: "من أنفق درهماً في غير حقه فهو سرف".

முறையின்றி ஒருவர் ஒரு திர்ஹமை செலவு செய்தால் அதுவும் வீண்விரயம் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

 3, தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது வீண்விரயம்.

قال الزَّجَّاجُ -رحمه الله- في تفسير الإسراف: "لا تأكلوا من الحلال فوق الحاجة"

ஆகுமானதைக் கூட உன் தேவைக்கு மேலே நீ உண்ண வேண்டாம். அவ்வாறு உண்ணுவது வீண் விரயம் ஆகும் என்று ஸுஜாஜ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال عمر بن الخطاب رضي الله عنه: إياكم والبطنة في الطعام والشراب فإنها مفسدة للجسم، مورثة للسقم، مكسلة عن الصلاة، وعليكم بالقصد فيهما فإنه أصلح للجسد وابعد من السرف

 

உணவாலும்  பானத்தாலும் வயிறு நிரப்புவதை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவ்வாறு வயிற்றை நிரப்புவது உடலைக் கெடுத்து விடும். நோயை உருவாக்கும். தொழுகையில் சோம்பேறித் தனத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்த உணவிலும் குடிப்பிலும் நடுநிலையை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். அந்த நடுநிலை தான் உடலுக்கு நன்மையாக இருக்கும்  வீன் விரயத்தில் இருந்து உங்களை தூரமாகும். (அல்மகாஸிதுல் ஹஸனா)

وأتى سلمان الفارسي أبا بكر الصديق - رضي الله تعالى عنهما - في مرضه الذي مات فيه فقال: أوصني يا خليفة رسول الله صلى الله عليه وسلم فقال أبو بكر: (إن الله فاتح عليكم الدنيا فلا يأخذنَّ منها أحد إلا بلاغاً)

ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் மரண வேளையில் இருக்கிற பொழுது அவர்களை சந்திப்பதற்காக ஸல்மான் ஃபாரிஸி ரலி அவர்கள் வந்தார்கள். கலிஃபா அவர்களே எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அபூபக்கர் ரலி அவர்கள், நிச்சயமாக அல்லாஹுத்தஆலா உங்களுக்கு உலகத்தை விசாலமாக திறந்து கொடுத்திருக்கிறான். அதிலிருந்தும் ஒருவர் தன் தேவையை தவிர வேறு எதையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்கள்.

وكتب سعد بن أبى وقاص إلى عمر بن الخطاب - رضي الله عنهما - وهو على الكوفة يستأذنُه في بناء بيت يسكنه فوقع في كتابه:

(ابنِ ما يستركَ من الشمس، ويُكنُّك من الغيث، فإنَّ الدنيا دار بلغة)

கூஃபா நகரத்தின் அதிகாரியாக இருந்த ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் ஜனாதிபதி உமர் ரலி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, தான் வசிப்பதற்கு ஒரு வீடு கட்டிக்கொள்ள அனுமதி தேடினார்கள். அதற்கு பதில் கடிதத்தை எழுதும் போது உமர் ரலி அவர்கள், சூரிய வெப்பத்திலிருந்து உன்னை தடுத்துக் கொள்ளும் படியான மேலும் மழையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் படியான ஒரு வசிப்பிடத்தை நீங்கள் கட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த உலகம் என்பது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதை மட்டுமே எடுத்துக் கொள்கிற உலகம் ஆகும் என்றார்கள்.

4, விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதும் வீண்விரயம்.

عن أنس أن النبي صلى الله عليه وسلم قال: "من السرف أن تأكل كل ما اشتهيت

நீ விரும்பிய அனைத்தையும் உண்பது கூட விரயம் தான். (இப்னுமாஜா ; 3352)

عن عُمرَ بنِ الخطَّابِ أنَّه قالَ : كفَى سَرَفًا أن لا يشتَهيَ رجلٌ شيئًا إلَّا اشتراهُ فأكلَه

விரும்பியதை உடனே வாங்கி சாப்பிடுவதே வீண்விரயம் என்பதற்கு போதுமாகும். (அல்மகாஸிதுல் ஹஸனா ; 515)

دخل عمر بن الخطاب على ابنه عبد الله - رضي الله تعالى عنهما - فرأى عنده لحماً، فقال: ما هذا اللحم؟ قال: أشتهيه! قال: وكلما اشتهيت شيئاً أكلته؟ كفى بالمرء سرفاً أن يأكل كلَّ ما اشتهاه)!

ஹஜ்ரத் உமர் ரலி அவர்கள், அவர்களது மகன் அப்துல்லாஹ் ரலி அவரிடத்தில் வந்தார்கள். அவரிடத்தில் இறைச்சித் துண்டு இருப்பதைப் பார்த்தார்கள். என்ன இது இறைச்சி என்று கேட்ட போது, சாப்பிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது அதனால் சாப்பிடுகிறேன் என்று சொன்னார். அப்போது உமர் ரலி அவர்கள் நீ விரும்பியதையெல்லாம் சாப்பிடுவாயா என்று கேட்டு விட்டு, ஒருவர், தான் விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதே அவர் வீண்விரயம் செய்கிறார் என்பதற்கு போதுமானதாகும் என்று கூறினார்கள்.

எப்படியிருந்தாலும் வீண்விரயம் செய்தால் இறைவனுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.

خَرَجَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ ذَاتَ يَومٍ، أَوْ لَيْلَةٍ، فَإِذَا هو بأَبِي بَكْرٍ وَعُمَرَ، فَقالَ: ما أَخْرَجَكُما مِن بُيُوتِكُما هذِه السَّاعَةَ؟ قالَا: الجُوعُ يا رَسولَ اللهِ، قالَ: وَأَنَا، وَالَّذِي نَفْسِي بيَدِهِ، لأَخْرَجَنِي الذي أَخْرَجَكُمَا، قُومُوا، فَقَامُوا معهُ، فأتَى رَجُلًا مِنَ الأنْصَارِ فَإِذَا هو ليسَ في بَيْتِهِ، فَلَمَّا رَأَتْهُ المَرْأَةُ، قالَتْ: مَرْحَبًا وَأَهْلًا، فَقالَ لَهَا رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: أَيْنَ فُلَانٌ؟ قالَتْ: ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ المَاءِ، إذْ جَاءَ الأنْصَارِيُّ، فَنَظَرَ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ وَصَاحِبَيْهِ، ثُمَّ قالَ: الحَمْدُ لِلَّهِ ما أَحَدٌ اليومَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي، قالَ: فَانْطَلَقَ، فَجَاءَهُمْ بعِذْقٍ فيه بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ، فَقالَ: كُلُوا مِن هذِه، وَأَخَذَ المُدْيَةَ، فَقالَ له رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: إيَّاكَ، وَالْحَلُوبَ، فَذَبَحَ لهمْ، فأكَلُوا مِنَ الشَّاةِ وَمِنْ ذلكَ العِذْقِ وَشَرِبُوا، فَلَمَّا أَنْ شَبِعُوا وَرَوُوا، قالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ لأَبِي بَكْرٍ، وَعُمَرَ: وَالَّذِي نَفْسِي بيَدِهِ، لَتُسْأَلُنَّ عن هذا النَّعِيمِ يَومَ القِيَامَةِ، أَخْرَجَكُمْ مِن بُيُوتِكُمُ الجُوعُ، ثُمَّ لَمْ تَرْجِعُوا حتَّى أَصَابَكُمْ هذا النَّعِيمُ

அல்லாஹ்வின் தூதர் "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.  அப்போது அல்லாஹ்வின்  தூதர் அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம் ؛ 2038)

لا تزول قدما ابنِ آدمَ يومَ القيامةِ من عندِ ربِّه حتى يُسألَ عن خمسٍ : عن عمُره فيما أفناهُ، وعن شبابِه فيما أبلاهُ، وعن مالِه من أين اكتسَبه وفيما أنفقَه، وماذا عمِل فيما علِم

ஒருவன் தன் ஆயுள் காலத்தை எப்படி அழித்தான். அவனுடைய வாலிபத்தை எப்படி கழித்தான். அவன் பொருளாதாரத்தை எங்கிருந்து சம்பாதித்தான். எதில் செலவழித்தான். அவன் கற்றதில் என்ன அமல் செய்தான் என்ற ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை இறைவன் புறத்திலிருந்து மறுமை நாளில் மனிதனின் பாதங்கள் நகராது. (திர்மிதி ; 2416)

நாம் அனுபவிக்கிற அனைத்தையும் அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகள் என்று எண்ணி அதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். வீண்விரயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். நாம் சம்பாதிக்கிற மற்றும் செலவழிக்கிற ஒவ்வொன்றுக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்,எத்தனையோ  ஏழைக்குமர்கள் இருக்கிறார்கள், வாழ்க்கை யில் துவண்டு போனவர்கள் இருக்கிறார்கள், ஒரு நேர உணவுக்கு கூட பிறரை எதிர்பார்க்கிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்க நம் பணத்தை பயன்படுத்துவோம். அவர்களின் துஆ நம்மை வாழ வேண்டும்.

No comments:

Post a Comment