Sunday, April 3, 2022

குர்ஆனிய தொடர்பு

 

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ  وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன்   (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய்,   பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! (அல்குர்ஆன் : 2:185)

அல்குர்ஆனோடு தொடர்பு கொள்கிற அனைத்தும் உயர்வைப் பெரும் என்பது குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப்பெரும் கண்ணியமாகும். அல்குர்ஆன் இறங்கியதால் ரமழான் சிறந்த மாதமானது,லைலத்துல் கத்ர் சிறந்த இரவானது,அல்குர்ஆனை- கொண்டு வந்ததினால் ஜிப்ரயீல் [அலை]அவர்கள் சிறந்த மலக்கானார்கள்,அல்குர்ஆன் இறங்கியதால் மக்கா சிறந்த ஊரானது,அரபி சிறந்த மொழியானது,நாம் சிறந்த உம்மத்தானோம்.

 

அல்குர்ஆன் தன்னோடு தொடர்பு கொள்கிற யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அதை உச்சத்திற்கு கொண்டு போய் விடும். இது அல்குர்ஆனின் தனித்தன்மை.

ஸஹாபிகளில் அதிகமதிகம் குர்ஆனோடு தொடர்பை, நெருக்கத்தை, ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டவர்கள் உபை பின் கஃப் ரலி அவர்கள்.

 

قوله صلى الله عليه وسلم: (أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ... وَأَقْرَؤُهُمْ أُبَيٌّ

என் சமூகத்தில் என் சமூகத்தின் மீது அதிகம் இரக்கம் உடையவர் அபூபக்கர் ரலி அவர்கள். அல்லாஹ்வுடைய உத்தரவில் கடுமையாக நடந்து கொள்பவர் உமர் ரலி அவர்கள். என் சமூகத்தில் நன்கு ஓதக் கூடியவர் உபை பின் கஅப் அவர்கள். (அல்ஜாமிவு)

உமர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் ரமலான் காலத்தில் தனித்தனியாக பள்ளிவாசலில் இரவுத் தொழுகைகளை தொழுது கொண்டிருந்தவர்களை ஒரே இமாமுக்கு கீழ் ஜமாஅத்தாக தொழுவதற்கு உமர் ரலி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அப்போது அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துவதற்கு உமர் ரலி அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உபை பின் கஃப் ரலி அவர்கள் தான் என்பது நமக்கு தெரியும்.

அந்தக் குர்ஆனிய ஈடுபாடு அவர்களுக்கு கொடுத்த உயர்வு என்ன தெரியுமா ?

 عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ» قَالَ أُبَيٌّ: آللَّهُ سَمَّانِي لَكَ؟ قَالَ: «اللَّهُ سَمَّاكَ لِي» فَجَعَلَ أُبَيٌّ يَبْكِي، قَالَ قَتَادَةُ: فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ: {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكِتَابِ} [البينة:

நபி ஸல் அவர்கள் உபை பின்  கஅப் ரலி அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து,  அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். அதைக் கேட்டு ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கிய உபை ரலி அவர்கள், 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள்.நபி ஸல் அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உம்முடைய பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். (புகாரி ; 4960)

அல்லாஹ் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது எவ்ளோ பெரிய மகத்தான பாக்கியம். அல்குர்ஆன் என்பது ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் அருளப்பட்ட அருள் மறை. எல்லோருக்கும் ஓதிக் காட்ட வேண்டும் என்பதற்குத்தான் அது அருளப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரை சொல்லி அவரித்திலே நீங்கள் ஓதுங்கள் என்று இறைவன் சொன்னான் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மாபெரும் பாக்கியத்தை உபை பின் கஅப் ரலி அவர்கள் பெற்றார்கள். காரணம் குர்ஆனோடு அவர்களுக்கு இருந்த அந்த தொடர்பு. குர்ஆனிய தொடர்பு தான் அவர்களுக்கு அந்த பாக்கியத்தை பெற்றுக்கொடுத்தது.

ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதற்கான அளவுகோல் குர்ஆன் தான். ஒருவரிடத்தில் குர்ஆனும் குர்ஆனுடைய ஞானமும் இருந்தால் அவர் உயர்ந்தவர் என்பதற்கு அந்த ஒரு தகுதியே போதுமானது.

أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ ، وَكَانَ عُمَرُ اسْتَعْمَلَهُ عَلَى أَهْلِ مَكَّةَ ، فَسَلَّمَ عَلَى عُمَرَ ، فَقَالَ لَهُ عُمَرُ : مَنْ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي ؟ فَقَالَ نَافِعٌ : اسْتَخْلَفْتُ عَلَيْهِمْ ابْنَ أَبْزَى ، فَقَالَ عُمَرُ : وَمَنْ ابْنُ أَبْزَى ؟ فَقَالَ : مَوْلًى مِنْ مَوَالِينَا ، فَقَالَ عُمَرُ : فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى ؟ فَقَالَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ ، عَالِمٌ بِالْفَرَائِضِ ، فَقَالَ عُمَرُ : أَمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا ، وَيَضَعُ بِهِ آخَرِينَ " .

நாஃபிஃ பின் அப்துல் ஹாரிஸ் என்பவரை உமர் ரலி அவர்கள் மக்காவின் பொறுப்புதாரியாக நியமித்து இருந்தார்கள். ஒரு நாள் ஹஜ்ஜின் பயணத்தில் அவரை உஸ்ஃபான் என்ற இடத்தில் சந்தித்தார்கள். அப்போது அவரிடத்தில் மக்காவில் உங்களுடைய இடத்தில் உங்களுக்கு பிரதிநிதியாக யாரை விட்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அவர்கள் அப்னு அப்ஜா என்பவரை பிரதி நிதியாக ஆக்கி விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யார் அவர் என்று கேட்ட போது, அவர் ஒரு அடிமை என்றார்கள், ஒரு அடிமையையா விட்டு வந்தீர்கள்?  என்று உமர் ரலி அவர்கள் கேட்ட போது அவர் அடிமையாக இருந்தாலும் குர்ஆனை ஓத கூடிய ஒரு ஹாஃபிழ். மட்டுமல்ல வாரிசு சட்டங்களை அதிகம் விளங்கியவர் என்று கூறினார்கள். அப்போது உமர் ரலி அவர்கள் இந்த வேதத்தைக் கொண்டு ஒரு கூட்டத்தை அல்லாஹ் உயர்த்துகிறான். இன்னொரு கூட்டத்தை தாழ்த்துகிறான் என்று நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தையை நினைவுகூர்ந்தார்கள். (முஸ்லிம் ; 817)

எனவே குர்ஆன் அடிமையைக் தூட தலைவராக்கி விடும்.

قام رجل إلى النبي - صلى الله عليه وسلم - وهو على المنبر ، فقال : يا رسول الله ، أي الناس خير ؟ فقال - صلى الله عليه وسلم - : " خير الناس أقرؤهم ، وأتقاهم لله عز وجل ، وآمرهم بالمعروف ، وأنهاهم عن المنكر ، وأوصلهم للرحم ".

ஒருநாள் நபி ஸல் அவர்கள் மிம்பரில் ஏறி மக்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது ஒரு நபித்தோழர் மக்களில் சிறந்தவர் யார் என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் மக்களில் சிறந்தவர் அவர்களில் குர்ஆனை அதிகம் ஓதக் கூடியவர் என்றார்கள். (அல் ஜாமி ;2897)

இமாமத் செய்வதற்கு யாரை முற்படுத்த வேண்டும் என்பதை குறித்து கூறும் போது அங்கேயும் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களுக்குத் தான் முதன்மை இடத்தை நபி ஸல் அவர்கள் வழங்கினார்கள்.

  يَؤُمُّ القَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فإنْ كَانُوا في القِرَاءَةِ سَوَاءً، فأعْلَمُهُمْ بالسُّنَّةِ، فإنْ كَانُوا في السُّنَّةِ سَوَاءً، فأقْدَمُهُمْ هِجْرَةً، فإنْ كَانُوا في الهِجْرَةِ سَوَاءً، فأقْدَمُهُمْ سِلْمًا،

மக்களில் குர்ஆனை அதிகம் தெரிந்தவர் அவர்களுக்கு தொழுகை நடத்துவார். குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமமாக இருந்தால் என் சுன்னத்துக்களை அதிகம் தெரிந்தவர் தொழுகை நடத்துவார். அதிலும் அவர்கள் சமமாக இருந்தால் ஹிஜ்ரத்தில் முந்தியவர் தொழுகை நடத்துவார். அதிலும் அவர்கள் சமமாக இருந்தால் இஸ்லாத்தில் அவர்களில் முந்தியவர் தொழுகை நடத்துவார் என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 673)

 

No comments:

Post a Comment