Monday, April 4, 2022

நம்பிக்கையை கை விட வேண்டாம்

 

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا   وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ

அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு  எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் : 3:173)

عن السدي قال: لما ندموا= يعني أبا سفيان وأصحابه= على الرجوع عن رسول الله صلى الله عليه وسلم وأصحابه، وقالوا: " ارجعوا فاستأصلوهم "، فقذف الله في قلوبهم الرعب فهزموا، فلقوا أعرابيًّا فجعلوا له جُعْلا فقالوا له: إن لقيت محمدًا وأصحابه فأخبرهم أنا قد جمعنا لهم! فأخبر الله جل ثناؤه رسول الله صلى الله عليه وسلم، فطلبهم حتى بلغ حمراء الأسد، فلقوا الأعرابيَّ في الطريق، فأخبرهم الخبر، فقالوا: " حسبنا الله ونعم الوكيل "! ثم رجعوا من حمراء الأسد. فأنـزل الله تعالى فيهم وفي الأعرابي الذي لقيهم: " الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانًا وقالوا حسبنا الله ونعم الوكيل ".

உஹதிலிருந்து அபூசுஃப்யான் தமது படையுடன் மக்கா திரும்பிச் சென்று கொண்டிருக்கும் போது, ரவ்ஹா எனும் இடத்தை அடைந்ததும் நமக்கு முழுமையான வெற்றி வேண்டுமானால், (நஊது பில்லாஹ்..) முஹம்மது {ஸல்} அவர்களையும் எஞ்சியிருக்கிற முஸ்லிம்களையும் ஏன் நாம் கொல்லக்கூடாது? வாருங்கள்! முஸ்லிம்களையும், நபி {ஸல்} அவர்களையும் பூண்டோடு அழித்து வருவோம்!என்று கூறி மீண்டும் படையை நடத்தி வந்தார். உஹதிலிருந்து முஸ்லிம் படைகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்த இடையில் அல்லாஹ் இந்தச் செய்தியை மாநபி {ஸல்} அவர்களுக்குத் தெரியப் படுத்தி விட்டான்.  அண்ணல் நபி {ஸல்} அவர்கள் மீண்டும் படையை ஹம்ராவுல் அஸத் எனும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள். ஆனால் முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று கிழம்பி வந்த மக்காவாசிகளின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தைப் போட்டான். உடனே அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். மாநபி {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் மூன்று நாட்கள் அங்கே முகாமிட்டு பின்னர் நிம்மதியாக மதீனா திரும்பினார்கள்.

இருந்தாலும் முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக ஒரு காரியத்தைச் செய்தார்கள் ஒரு கிராமவாசியிடத்தில் கொஞ்சம் காசு பணத்தைக் கொடுத்து முஸ்லிம்களைப்  பார்த்தால் உங்களை வேரோடு அழிப்பதற்கு மக்காவாசிகள் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்லி விடு என்று கூறி அவரை அனுப்பினார்கள். அவர்களைப் பார்த்து அந்த  செய்தியைக் கூறினார். அப்போது தான் நபித்தோழர்கள் ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்ற வாசகத்தை சொன்னார்கள்.

உஹதுப் போர்க்களத்தில் மிகப்பெரிய தோல்வி. பெரும்பெரும் நபித்தோழர்கள் ஷஹீதைக்கப்பட்டு  விட்டார்கள். எண்ணற்ற பேர் காயமடைந்து நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் தங்களைப் பூண்டோடு அழிப்பதற்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலையில் கூட மனம் தளராமல் அவர்கள் உச்சரித்த வார்த்தை தான் இது.

இன்றைக்கு நம் வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சனைகள் வந்து விட்டாலே அப்படியே சோர்ந்து விடுகிறோம். வாழ்க்கையே முடிந்து போய் விட்டது போல் நிராசை அடைந்து விடுகிறோம். மனம் தளர்ந்து விடுகிறோம். ஆனால் முஸ்லிம் சமூகம் எந்த நேரத்திலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. எந்த நிர்க்கதியான சந்தர்ப்பத்திலும் சோர்ந்து விடக்கூடாது. இறைவன் இருக்கிறான். அவன் நம்மை கைவிட மாட்டான். அவன் நமக்கு உதவி புரிவான். நமக்கு அவன் துணை நிற்பான் என்கிற நம்பிக்கையும் தவக்குலும் முஸ்லிம் சமூகத்திற்கு அவசியம் வேண்டும் என்பதைத்தான் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிலைகளை விட பன்மடங்கு நிற்கதியான நெருக்கடியான சந்தர்ப்பங்களை நபி ஸல் அவர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்தார்கள். ஆனால் இறைவன் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள் கை விட வில்லை.

நமக்கெல்லாம் தெரியும் நபி ஸல் அவர்கள் இஸ்லாத்தை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அந்த நேரத்தில் கடுமையான எதிர்ப்புகளும் எதிரிகளால் ஆபத்துகளும் சூழ்ந்த போது அவர்களுக்கு மிகப்பெரும் உறுதுணையாகவும் ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருந்தது அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் அவர்களின் அன்பு மனைவியும் அன்னை கதீஜா ரலி அவர்கள்தான்  நபி ஸல் அவர்களுக்கு நெருக்கடிகள் வரும் பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் கூறும் இடத்தில் அன்னை கதீஜா அவர்களை பாதுகாக்கும் இடத்தில் அபூதாலிப் அவர்களும் தான் இருப்பார்கள். அபூதாலிப் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை யாராலும் நபியை நெருங்க முடியவில்லை நபியை சீண்ட முடிய வில்ல.

ஆனால் அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு எதிரிகளின் கொட்டம் அதிகரித்தது. எதிரிகளின் ஆட்டம் எல்லை மீறியது. செல்லும் இடங்களில் எல்லாம் நபியின் மீது மண்ணை வாரி எறிந்தார்கள்.

தாயிஃப் மக்கள் தனக்கு உதவி செய்வார்கள். தனக்கு வரவேற்பளிப்பார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அங்கே சென்றார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்று நமக்கெல்லாம் தெரியும். அங்கே அவர்களுக்கு ஏமாற்றமும் அவமரியாதையும் தான் மிஞ்சியது. நபியை விரட்டியடித்தார்கள் சிறுவர்களை வைத்து கல்லால் அடித்து அவர்களை துரத்தினார்கள்.

فقال له زيد بن حارثة : كيف تدخل عليهم وقد أخرجوك ؟ يعني قريشا فقال : [ يا زيد إن الله ناصر دينه ومظهر نبيه

அந்த நேரத்தில் மீண்டும் மக்காவை நோக்கி திரும்பிய போது ஜைத் பின் ஹாரிஸா ரலி அவர்கள் இப்போது என்ன செய்வது ? ஊர் மக்களும் ஏற்க வில்லை. வெளியூர் மக்களும் ஆதரவளிக்க வில்லை என்று கேட்ட போது நபி ஸல் அவர்கள் நிச்சயமாக இறைவன் அவனுடைய தீனுக்கு உதவி புரிவான். அவனே அந்த தீனை வெற்றியடையச் செய்வான் என்றார்கள்.

இந்த வார்த்தையை நபி ஸல் அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் சொன்னார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் இப்படியெல்லாம் சொல்வோம். அல்லாஹ் எனக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னைக் காப்பாற்றுவான், அல்லாஹ் என்ன கைவிட மாட்டான் என்று சொல்லுவோம். எப்போது என்றால் எல்லாம் கைகூடி வருகிற பொழுது, எல்லா உதவிகளும் நம் கண் முன்னால் தெரிகின்ற பொழுது, வெற்றிக்கான வாசல்கள் எல்லாம் திறக்கப்படுகிற போது, சூழ்நிலைகளெல்லாம் நமக்கு சாதகமாக அமைகிற போது. சொல்வோம். ஆனால் அன்றைக்கு நபிகள் சூழ்நிலை என்ன? தனக்கு பக்கபலமாக இருந்த அபூதாலிப் போய் விட்டார்கள். அவ்வப்போது ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தி வந்த அன்னை கதீஜா ரழி அவர்கள் போய் விட்டார்கள். சொந்த ஊர் மக்கள் அவர்களை துரத்துகிறார்கள் ஆறுதலும் உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற வெளியூர் மக்களும் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள்.உதவிக்கரம் நீட்ட ஆளில்லை. அரவணைக்க ஆளில்லை. தோள் கொடுக்க ஆளில்லை.சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அப்போது அவர்கள் வெற்றி பெறுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த நிர்க்கதியான சூழ்நிலையிலும் அல்லாஹ் இந்த தீனுக்கு உதவி செய்வான். அல்லாஹ் என்னை பாதுகாப்பான். எனக்கு கண்ணியத்தைத் தருவான் என்று சொன்னார்கள் என்றால் அவர்களின் மிக உயர்ந்த ஈமானிய பலத்தையும் இறை நம்பிக்கையின் ஆழத்தையும் இந்த வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

எந்த நேரத்திலும் இறை நம்பிக்கையை கை விடக்கூடாது என்பதைத்தான் மேற்கூறப்பட்ட வசனம் உணர்த்துகிறது.

  عَنِ ابْنِ عَبَّاسٍ: حَسْبُنَا اللَّهُ ونِعْمَ الوَكِيلُ، قالَهَا إبْرَاهِيمُ عليه السَّلَامُ حِينَ أُلْقِيَ في النَّارِ، وقالَهَا مُحَمَّدٌ صلَّى اللهُ عليه وسلَّم حِينَ قالوا: {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} [آل عمران: 173].

 

இந்த வார்த்தையை இப்ராஹிம் அலை அவர்கள் நெருப்பிலே போடப்படும் வேளையில் சொன்னார்கள்.உங்களுக்கு  எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறிய சமயத்தில் இந்த வார்த்தையை முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 4563)

இந்த வார்த்தை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தாரக மந்திரம். இன்றைக்கு பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. வீடுகளே இல்லை. எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சில நேரத்தில் வரும் பிரச்சனைகள் ரொம்ப மோசமாக இருக்கும். யாரிடமும் சொல்லவும் முடியாது. நம்மாலும் சரி செய்ய முடியாது. அந்த மாதிரியான நிர்க்கதியான சூழ்நிலைகள் இந்த வார்த்தைகள் நிச்சயம் நமக்கு கை கொடுக்கும்.

 

عن أبي هريرة ، رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا وقعتم في الأمر العظيم فقولوا : ( حسبنا الله ونعم الوكيل " .

 

மாபெரும் ஒரு காரியத்தில் நீங்கள் விழுந்து விட்டால் அப்போது இந்த வார்த்தையை சொல்லுங்கள். (அல்ஜாமிவுஸ்ஸகீர் ; 891)

عن أم المؤمنين عائشة وزينب [ بنت جحش ] رضي الله عنهما ، أنهما تفاخرتا فقالت زينب : زوجني الله وزوجكن أهاليكن وقالت عائشة : نزلت براءتي من السماء في القرآن . فسلمت لها زينب ، ثم قالت : كيف قلت حين ركبت راحلة صفوان بن المعطل ؟ فقالت : قلت : حسبي الله ونعم الوكيل ، فقالت زينب : قلت كلمة المؤمنين .

ஒரு நாள் நபி ஸல் அவர்களின் மனைவிமார்களான ஆயிஷா ரலி அவர்களும் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ரலி அவர்களும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர்கள் என்பதைப்பற்றி பேசிக் கொண்டார்கள். அப்போது ஜைனப் ரலி அவர்கள் உங்களை உங்கள் குடும்பத்தினர் மணமுடித்து வைத்தார்கள். ஆனால் என்னை ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வே மணமுடித்து வைத்தான் என்று கூறினார்கள். பிறகு அதற்கு பதில் கூறிய ஆயிஷா ரலி அவர்கள் என்னைப் பற்றி அவதூறு கூறப்பட்ட போது நான் பரிசுத்தமானவர் என்பதை எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் தன் திருமறை வசனங்களின் வழியாக உலகத்திற்குச் சொன்னான் என்று கூறினார்கள். ஆம் நீங்கள் கூறுவது சரி தான் என்று ஜைனப் ரலி அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் அப்போது உங்களைப் பற்றி அவ்வாறு அவதூறு கூறப்பட்ட அந்த நேரத்தில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்று கேட்ட போது, அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அந்த நேரத்தில் நான் ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வக்கீல் என்ற வார்த்தையைத் தான் கூறினேன் என்றார்கள். அதைக்கேட்ட ஜைனப் ரலி அவர்கள் இது முஃமின்களுடைய வார்த்தை அல்லவா என்று கூறினார்கள். (இப்னுகஸீர்)

No comments:

Post a Comment