Tuesday, April 5, 2022

மரண சிந்தனை மனித வாழ்க்கையை செதுக்கும்

 

أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (அல்குர்ஆன் : 4:78) 

نَزَلَتْ فِي الْمُنَافِقِينَ الَّذِينَ قَالُوا فِي قَتْلَى أُحُدٍ: لَوْ كَانُوا عِنْدَنَا مَا مَاتُوا وَمَا قُتِلُوا فَرَدَّ اللَّهُ عَلَيْهِمْ بِقَوْلِهِ: أَيْنَما تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ

உஹத் போர்க்களத்திற்குப் பிறகு அதில் கலந்து கொண்ட நபித் தோழர்களைக் குறித்து முனாஃபிக்குகள் சொன்னார்கள் ; அவர்கள் போருக்குச் செல்லாமல் எங்களோடு இருந்திருந்தால் அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறிய முனாஃபிக்களுக்கு பதில் கூறும் முகமாகத் தான் மேற்கூறப்பட்ட வசனத்தை இறைவன் இறக்கியருளினான். (தஃப்ஸீர் பகவீ)

போர்க்களத்திற்கு சென்றதால் தான் அவர்கள் மரணித்தார்கள். போர்க்களத்திற்கு போகாமல் எங்களைப்போன்ற ஊரிலேயே அமர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது அவர்களது எண்ணம். ஆனால் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன், மரணம் எங்கிருந்தாலும் வரும். நீங்கள் போர்க்களத்திற்கு சென்றாலும் வரும். செல்லாமல் ஊரில் இருந்தாலும் மரணம் உங்களைத் தேடி வரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று அந்த வசனத்தின் வழியே பதில் கூறுகிறான்.

மரணம் அனைவரையும் கண்டிப்பாக வந்தடைந்து விடும். இந்த நேரத்தில் எனக்கு மரணம் வர வேண்டும். இந்த இடத்தில் தான் நான் மரணிக்க வேண்டும். அல்லது இந்த நேரத்தில் நான் மரணிக்கக் கூடாது. இந்த இடத்தில் மரணிக்கக் கூடாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அல்லாஹ் நம் விதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானோ அந்த இடத்தில் தான் நடக்கும்.அந்த நேரத்தில் தான் நடக்கும். 

 قال خالد بن الوليد حين جاءه الموت على فراشه : لقد شهدت كذا وكذا موقفا ، وما من عضو من أعضائي إلا وفيه جرح من طعنة أو رمية ، وها أنا أموت على فراشي ، فلا نامت أعين الجبناء

காலித் பின் வலீத் ரலி அவர்கள் மரண வேளையில் கூறினார்கள் ;  நான் எத்தனையோ போர்க்களத்தில் கலந்திருக்கிறேன். என்னுடைய உடல் முழுக்க அம்பு எய்யப்பட்ட காயங்களும் ஈட்டி குத்தப்பட்ட ரணங்களும் ஏராளம் இருக்கிறது.  ஆனால் அந்த போர்க் களத்திலெல்லாம் மரணிக்காமல் இப்போது நான் என் வீட்டில் என்னுடைய இந்த  விரிப்பில் மரணமடைகிறேனே என்று குறிப்பிட்டார்கள்.

சிலர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் சீக்கிரமே அவர்களுக்கு மரணம் வந்து விடும். சிலர் வாழ்க்கை வெறுத்துப் போய் சீக்கிரமே மரணித்து விட வேண்டும் என்று விரும்புவர்கள். மரணத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனவே யாருக்கு எப்போது மரணம் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அப்போது தான் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. மாற்ற முடியாது.

மரணம் என்பது நாமாக முடிவு செய்யும் ஒரு விஷயமல்ல. ஃபிளாட் இந்த இடத்தில் வாங்க வேண்டும், வீடு இப்படி கட்ட வேண்டும், தலைவாசல் இப்படி வைக்க வேண்டும், இந்த நாளில் திறப்பு விழா வைக்க வேண்டும். திருமணம் இந்த ஊரில் இந்த நாளில் இந்த மண்டபத்தில் நடக்க வேண்டும் என  வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிடுவதைப் போன்று மரணத்தை திட்டமிட முடியாது. மிகவும் சிரமப்பட்டு கடன்களை வாங்கி பெரும் கனவுகளோடு வீடு கட்டுவார். வீடு கட்டி அதில் குடியேறுவதற்குள் அவருக்கு மரணம் வந்து விடும். அழகான பெண் பார்த்து பேசி நிச்சயம் செய்து திருமணத்திற்கான எல்லா தயாரிப்புகளையும் செய்து அந்தப் பெண்ணோடு அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பெரும் எதிர் பார்ப்புகளோடு காத்திப்பார். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் மரணித்து விடுவார். அல்லது திருமணமாகி இரண்டு நாட்களில் மரணம் ஏற்பட்டு விடும். மரணமும் இரணமும் நம் கையில் இல்லை. அது முடிவு செய்யப்பட்டது.

إن أحدكم يُجمَع في بطن أمه أربعين يومًا نُطْفة، ثم يكون عَلَقة مثل ذلك، ثم مُضْغة مثل ذلك، ثم يرسل المَلَك فينفخ فيه الروح، ويؤمَر بأربع كلمات: بكَتْب رزقه، وأجله، وعمله، وشقي أو سعيد

உங்களில் ஒருவர் அவருடைய தாயின் வயிற்றில் முதல் நாற்பது நாட்கள் இந்திரியத் துளியாகவும் அடுத்த நாற்பது நாட்கள் இரத்தக்கட்டியாகவும் அடுத்த நாற்பது நாட்கள் சதைக் கட்டியாகவும் இருப்பார். பின்பு அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவருக்கு ரூஹ் ஊதச் செய்வான். பின்பு அவருடைய இரணம், அவருடைய மரணம், அவர் செய்யும் அமல்கள், அவர் நல்லவரா ? தீயவரா ?  இந்த நான்கு விஷயங்களையும் எழுதும்படி அல்லாஹ் உத்தரவிடுவான். (புகாரி ; 6594)

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ‌ ‌ 

பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். (அல்குர்ஆன் : 55:26)

وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌‏

மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். (அல்குர்ஆன் : 55:27)

உலகத்தில் அல்லாஹ்வைத்தவிர அனைத்திற்கும் மரணம் வந்து விடும். ஏன் மறுமை நாளில் அந்த மரணத்திற்கே மரணம் வரும் என்பது ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 يُؤْتَى بالمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أمْلَحَ، فيُنادِي مُنادٍ: يا أهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: هلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، ثُمَّ يُنادِي: يا أهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ ويَنْظُرُونَ، فيَقولُ: وهلْ تَعْرِفُونَ هذا؟ فيَقولونَ: نَعَمْ، هذا المَوْتُ، وكُلُّهُمْ قدْ رَآهُ، فيُذْبَحُ، ثُمَّ يقولُ: يا أهْلَ الجَنَّةِ، خُلُودٌ فلا مَوْتَ، ويا أهْلَ النَّارِ، خُلُودٌ فلا مَوْتَ.

மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ ‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம்! இதுதான் மரணம்என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், ‘சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லைஎன்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 4730)

மரணத்தைக் குறித்து பேசும் இந்த நேரத்தில்  இரண்டு முக்கியமான விஷயங்கள் உண்டு. 1, ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் மரணம் இழப்பல்ல, அதோடு வாழ்க்கை முடிந்து போகும் விஷயமல்ல. அதற்கு பிறகு தான் உண்மையான வாழ்க்கையே இருக்கிறகு. மரணம் உலக வாழ்க்கையின் end. ஆனால் உண்மையான நிரந்தரமான மறுமை வாழ்க்கையின் beginning மரணம் தான். மரணம் என்பது அல்லாஹ்வை சந்திப்பதற்கான ஒரு வழித்தடமாகும்.

الموت جسر يوصل الحبيب إلى الحبيب

மவ்த் என்பது ஒரு நேசனை அவனுடைய நேசனின் பக்கம் சேர்த்து வைக்கும் ஒரு பாலம் என்று ஞானிகள் கூறுவார்கள்.

 أن ملك الموت عليه السلام جاء الى ابراهيم عليه السلام خليل الرحمن عز وجل ليقبض روحه  فقال ابراهيم ياملك الموت هل رأيت خليلا يقبض روح خليله ؟ فعرج ملك الموت عليه السلام الى ربه فقال قل له هل رأيت خليل يكره لقاء خليله ؟ فرجع فقالاقبض روحى الساعه

நபி இப்ராஹீம் அலை அவர்களின் உயிரை கைப்பற்ற வந்த மலகுல் மவ்த்திடம்-ஒரு நண்பன் தன் நண்பனின் உயிரை எடுப்பானா?என்று கேட்டார்கள்.மலகுல் மவ்த் அவர்கள் இந்த கேள்வியை தன் ரப்பிடம் கூறிய போது, ஒரு நண்பன் தன் நண்பனை சந்திக்க வெறுப்பானா? என்று அல்லாஹ் திருப்பிக்கேட்டான். (தத்கிரா)

2, மரணத்தை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மரணத்தின் சிந்தனை நம் வாழ்க்கையை பக்குவப்படுத்தும். நம் வாழ்க்கையை அழகாக செதுக்கும்.

كان عمر بن عبد العزيز يجمع كل ليلة الفقهاء، فيتذاكرون الموت والقيامة والآخرة، ثم يبكون حتى كأنَّ بين أيديهم جنازة.

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் ஒவ்வொரு இரவும் ஏழைகளை ஒன்று கூட்டி மரணத்தையும் மறுமையையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மய்யித் வைக்கப்பட்டிருப்பதைப் போல் அனைவரும் அழுவார்கள்.

وكان محمد بن واسع رحمه الله إذا قيل له: كيف أصبحت؟ قال: ما ظنُّك برجلٍ يرحل في كل يوم إلى الآخرة مرحلة

முஹம்மத் பின் வாஸிஃ ரஹ் அவர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று யாராவது நலம் விசாரித்தால் மறுமையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக பயணித்துக் கொண்டிருக்கிற ஒருவரைப் பற்றி என்ன சொல்ல முடியும் என்று கேட்பார்கள்.

قال الدقاق: من أكثر من ذكر الموت أكرم بثلاثة أشياء: تعجيل التوبة، وقناعة القلب، ونشاط العبادة، ومن نسي الموت عوقب بثلاثة أشياء: تسويف التوبة، وترك الرضى بالكفاف، والتكاسل في العبادة. انتهى.

மரண சிந்தனை உள்ளவருக்கு மூன்று பாக்கியங்கள் கிடைக்கும். 1, விரைவான தவ்பா. 2, போதுமென்ற மனம். 3, வணக்கத்தில் உற்சாகம். மரண சிந்தனை இல்லாதவருக்கு இந்த மூன்றும் கிடைக்காது. (தத்கிரா லில் இமாம் குர்துபீ)

 

 

 

5 comments:

  1. பாரக்கல்லாஹு அருமை ஹஜ்ரத்

    ReplyDelete
  2. Muhammad Hasan KashifiApril 10, 2022 at 12:40 PM

    الحمد لله على كل حال

    ReplyDelete
  3. நல்ல செய்திகள் بارك الله

    ReplyDelete