Thursday, March 16, 2023

மனிதனைப் பக்குவப்படுத்தும் நோன்பு

 

அல்லாஹ்வின் அருளால் ஷஃபான் மாதத்தின் இறுதி ஜும்ஆ இது. அநேகமாய் அல்லாஹ் நாடினால் அடுத்த வார ஜும்ஆ ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும். ரப்புல் ஆலமீன் பூரண உடல் சுகத்தோடு அதை அடைந்து கொள்ள தவ்ஃபீக் செய்வானாக! ரமலானைத் தொட்டும் விடும் தூரத்தில் நாம் இருக்கிறோம். ரமலானுடைய காலங்கள் நம்முடைய வாழ்வில் பொன்னான காலங்கள். ரமலான் மாதம் வந்து விட்டாலே நம் எல்லாரின் முகத்திலும் மலர்ச்சி தோன்றி விடும். நம் உள்ளங்களில் சந்தோஷம் ஒட்டிக் கொள்ளும்.நம் வணக்கங்களில் உற்சாகமும் உத்வேகமும் பிறந்து விடும்.தொலைத்து பல நாட்களாக தேடிக் கொண்டிருந்த ஒரு புதையல் கிடைத்ததைப் போன்ற ஒரு உணர்வு நமக்குள் பிறக்கும். மற்ற காலங்களில் பசியே தெரியாத அளவிற்கு அவ்வப்போது எதையாவது ஒன்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும் நமக்கு ரமலான் காலங்களில் பகல் முழுதும் உண்ணாமலும் பருகாமலும் இருந்தாலும் அந்த பசியும் தாகமும் சுமையைத் தருவதற்குப் பதில் நமக்கு சுகத்தைத் தரும். இது தான் நோன்புக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிற தனித்தன்மை.

நோன்பு சுமையாக இருப்பதற்குப் பதிலாக சுகமாக இருக்கும். இன்னலாக இருப்பதற்குப் பதிலாக இன்பமாக இருக்கும். இருக்க வேண்டும். இறைநேசர்களுக்கு நோன்பு சுகமாகத்தான் இருந்தது.

 عن سعيد بن جبير قال لما حضر ابن عمر الموت قال ما آسى على شيء من الدنيا إلا على ثلاث ظمأ الهواجر ومكابدة الليل واني لم أقاتل هذه الفئة الباغية التي نزلت بنا يعني الحجاج

நான் இந்த துன்யாவில் மூன்று விஷயங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றேன். மற்றபடி இந்த துன்யாவை விட்டுப் பிரிவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் தங்களின் மரண தருவாயில் கூறினார்கள்.

1.கடுமையான வெப்ப காலத்தில் நோன்பு நோற்பது.

2.இன்பமான இரவு வணக்கம்.

3.அழிச்சாட்டியம் செய்யும் ஹஜ்ஜாஜ் படையுடன் போர் செய்யாமல் விட்டது. (தாரீகு திமிஷ்க்)

உலகத்திலேயே எனக்கு பிடித்தமான விஷயம் நோன்பு வைப்பது என்று கூற வில்லை. கடுமையான வெயில் காலத்தில் நோன்பு வைப்பது என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நோன்பை எந்தளவு அவர்கள் ரசித்து அதன் இன்பத்தை உணர்ந்து உளப்பூர்வமாக வைத்திருப்பார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும்.

لما احتضرت السيدة نفيسة وهي صائمة ألزموها الفطر

فقالت : واعجباه لي منذ ثلاثين سنة أسأل الله أن ألقاه وأنا صائمة أفأفطر الآن ، هذا لا يكون ثم أنشدت تقول  

اصرفوا عني طبيـبي :: ودعوني وحبيــــبي

زاد شوقـي إليـه :: وغرامي ونحيــــبي

...ثم ابتدأت بسورة الأنعام فلما وصلت إلى قوله تعالى : ( لَهُمْ دارُ السَّلامِ عِنْدَ رَبِّهِمْ فاضت روحها الطاهرة الى ربه 

ஹஸன் ரலி அவர்களின் மகள் நபீஸா ரஹ் அம்மையாரின் மரண நேரம் நெருங்கிய போது நோன்பு வைத்திருந்த அவர்களை நோன்பை விடச் சொல்லி அவர்களின் மக்கள் வற்புறுத்தினார்கள்.அதை மறுத்த அந்த அம்மையார், நான் நோன்பாளியாகவே மரணிக்க வேண்டும் என அல்லாஹ்விடம் 30 ஆண்டுகளாக துஆச் செய்து வருகின்றேன். இந்த நேரத்திலா நோன்பை திறப்பேன்? தபீபை (மருத்துவர்) அனுப்பி விடுங்கள். நான் ஹபீபை (அல்லாஹ்) சந்திக்க வேண்டும் என்று கூறி சூரா அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள்.

لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ‌ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல் களின் காரணமாக அவன் அவர்களை நேசிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 6:127) என்ற வசனம் வந்த போது அவர்களின் உயிர் பிரிந்தது.

نزل الحَجَّاج في بعض أسفاره بماء بين مكة والمدينة، فدعا بغدائه، ورأى أعرابيًّا، فدعاه إلى الغداء معه، فقال

"دعاني من هو خير منك فأجبته"، قال: "ومن هو؟"، قال: "الله تعالى دعاني إلى الصيام فصمتُ"، قال: "في هذا الحر الشديد؟

قال: "نعم، صمتُ ليوم أشد منه حرًّا"، قال: "فأفطر وصم غدًا"، قال: "إن ضمنت لي البقاء إلى غد"، قال: "ليس ذلك إليَّ

قال: "فكيف تسألني عاجلاً بآجل لا تقدر عليه؟

ஹஜ்ஜாஜ் பயணத்தின் போது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க தங்கினான்.அப்போது சாப்பிடுவதற்கு உணவை கொண்டு வரச்சொன்னான்.மேலும் தன்னுடன் சேர்ந்து உண்ண அங்கிருந்த ஒரு கிராமவாசியையும் அழைக்கும்படி கூறினான்.அந்த கிராமவாசியோ, உங்களை விட சிறந்தவனின் அழைப்புக்கு நான் ஏற்கனவே  பதில் சொல்லி விட்டேன் என்று கூறினார். யார் அவர்? என ஹஜ்ஜாஜ் கேட்ட போது அல்லாஹ் என்று அக்கிராமவாசி கூறினார். ஆம்! அல்லாஹ்வின் அழைப்பான நோன்புக்கு நான் பதில் சொல்லி நோன்பு வைத்திருக்கின்றேன் என்றார்.

இந்த கடிமையான வெயில் காலத்திலா? என ஹஜ்ஜாஜ் ஆச்சரியப்பட்டு கேட்டான்.ஆம் இதை விடவும் கடுமையான நரக வெப்பத்திலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றுள்ளேன் என்றார். சரி பரவாயில்லை. இப்போது நோன்பு திறந்து கொள்.நாளை நோன்பு நோற்றுக் கொள் என்று ஹஜ்ஜாஜ் கூறிய போது நாளை வரை நான் உயிரோடு இருப்பேன் என்பதற்கு நீங்கள் உத்தரவாதம் தருவீர்களா என்று கேட்டார். அதற்கு ஹஜ்ஜாஜ் என் அதிகாரத்தில் இல்லாத விஷயத்திற்கு நான் எப்படி உத்தரவாதம் தர இயலும் என்று கேட்டான்.

இன்றைக்கு சின்னச் சின்ன காரணங்களுக்காக நம்மில் சிலர் நோன்பை விட்டு விடுகிறார்கள். குறிப்பாக சுகர்,பிரஷர். ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது,ரொம்ப நேரம் பசியாக இருக்கக் கூடாது,கரைக்டாக மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று காரணம் சொல்லி பெரும்பாலும் சுகர்,பிரஷர் நோயாளிகள் நோன்பு நோற்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா ? நோன்பு என்பது மிகப்பெரிய நோய் நிவாரணி. ஒருநாள் நோன்பு பிடிப்பது  மூன்றுவாரம் மருந்தெடுப்பதற்கு சமம் என்று சொல்லுவார் மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா அவர்கள்.

صوموا تصحوا

நோன்பு நோற்று உடல் ஆரோக்கியம் பெற்றுக் கொள்ளுங்கள். (அல்முஃஜமுல் அவ்ஸத்)

எனவே நோன்பு பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.குறிப்பாக ஒரு சுகர் பிரஷர் பேஷன்ட் நோன்பு வைத்தால் அவ்விரண்டும் குறைகிறது. அல்லது கன்ட்ரோலில் இருக்கிறது என்று இன்றைக்குள்ள நம்பமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே சுகர், பிரஷர் என்பது நோன்பை விடுவதற்கான காரணமே அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் நோன்பினுடைய சட்டங்களை நாம் நினைவு படுத்திக் கொள்வது மிகப் பொறுத்தமாக இருக்கும். நோன்பைப் பொறுத்த வரை முஸ்லிமான பருவ வயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொருவருக்கும் நோன்பு வைப்பது கடமை. அனைவரும் நோன்பு வைத்தாக வேண்டும்.ஆனால் மார்க்கம் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகை வழங்கியுள்ளது.

1, கஸ்ரின் தொலை தூரம் பயணிப்பவர் 2, நோயாளி,நோயாளி என்றால் சாதாரணமான நோயில்லை.எந்த நோய் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ,அவர் நோன்பு வைத்தால் அந்த நோய் அதிகமாகி விடும்.அல்லது நோய் நீங்காது என்று பயந்தால் நோன்பை விட்டுக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் சலுகை அளிக்கப் பட்டிருந்தாலும் நோன்பு வைப்பது சிறந்தது. 3, மாதவிலக்குள்ள பெண்கள். 4,பிரசவத்தீட்டு வரக்கூடிய பெண்கள். இவர்கள் நோன்பு வைப்பது கூடாது. 5, குழந்தையை சுமப்பவள் 5, பால் கொடுப்பவள். இவ்விருவரும் தன் குழந்தையின் மீது பயந்தால் நோன்பை விட்டுக்கொள்ளலாம்.

இந்த ஐந்து சாராரும் ரமலான் முடிந்த பிறகு விட்ட நோன்புகளை களா செய்ய வேண்டும்.

6, வயதானவர். 7, நீங்க முடியாத நோயுடையவர். இவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டும்.

எனவே சாதாரணமாக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நோன்பை விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.

நோன்பை கடமை என்ற எண்ணத்தில் நோற்காமல் அதை ஈடுபாட்டோடு நோற்க வேண்டும்.உண்மையான பிரியத்தோடு அதை நோற்க வேண்டும்.நோன்பு நம்மை பக்குவப்படுத்தி நமக்கு இறை நினைவை ஏற்படுத்தி அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் என்ற உணர்வோடு நோற்க வேண்டும்.

பொதுவாக அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட எந்த வணக்கமானாலும் அதற்கு நோக்கம் அவசியமாக இருக்கும். காரணமின்றி காரியமாற்றச்சொல்லும் வழக்கம் அல்லாஹ்வுக்கு கிடையாது.அப்படிப்பார்க்கும் போது நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னனியிலும் ஒரு அழுத்தமான காரணமுண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.அதை அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு கடமயாக்கப்பது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது.காரணம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக. (அல்குர்ஆன் : 2 ; 183)

அல்லாஹுத்தஆலா மற்றக் கடமைகளை சொல்லும் போது அதன் நோக்கத்தையோ அதன் காரணத்தையோ வெளிப்படையாக குறிப்பிட வில்லை.

தொழுகை,ஜகாத்,உம்ரா,ஹஜ்,குர்பானி போன்ற எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் மகத்தான நோக்கங்கள் இருந்தாலும் அதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாகக் கூற வில்லை.ஆனால் நோன்பை பற்றி கூறும் போது மட்டும் அதன் நோக்கத்தையும் இணைத்தே கூறுகிறான். காரணம் என்னவென்றால்,

தொழுகை,ஜகாத்,ஹஜ் போன்ற அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட எந்த வணக்கத்தை செய்வதற்கும் இறையச்சம் வேண்டும். இறையச்சமுள்ளவர்கள் தான் தொழுவார்கள் ஜகாத் கொடுப்பார்கள். உரிய நேரத்தில் ஹஜ் செய்வார்கள். குர்பானி கொடுப்பார்கள். எனவே எல்லா வணக்கங்களுக்கும் தக்வா தான் அடிப்படை. அந்த தக்வா நமக்கு கொடுப்பது நோன்பு.அதாவது அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் தான் அமல் செய்யும் ஆர்வம் உண்டாகும்.அந்த அச்சம் உருவாக  நோன்பு ஒரு பயிற்சியாக அமைகின்றது. 

அதேபோன்று பாவங்களை விடுவதற்கும் இறையச்சம் வேண்டும். இறையச்சம் இல்லாதவர் தான் பாவம் செய்வார். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு இருக்கும் ஒருவர் நிச்சயம் பாவம் செய்ய மாட்டார்.


أتى رجل إبراهيم بن أدهم رحمه الله تعالى فقال: يا أبا إسحاق، إنـي مـسرفٌ على نفسي، فاعرضْ عليَّ ما يكون به زجرٌ ووعظٌ لها!!

فقال: إن قبلتَ مني خمسَ خصال وقَدِرْتَ عليها لم تضرَّكَ المعصيةُ ما حييت.

قال الرجل: هاتِ يا أبا إسحاق.

قال: أما الأولى: فإذا أردتَ أن تعصيَ الله تعالى، فلا تأكلْ مِن رزقه!!

قال الرجل: فمن أين آكلُ إذاً، وكلُّ ما على الأرض مِن رزقِ الله تعالى؟؟

قال: يا هذا، أفيحسنُ بك أن تأكلَ مِن رزقهِ وتعصِيَهُ أيضاً!!!

قال الرجل: لا والله..، هاتِ الثانية.

قال: وإذا أردتَ أن تعصِيَهُ على أرضٍ، فلا تسكنْ شيئاً مِن بلاده.

قال الرجل: هذه أعظم، فأينَ أسكُن، والأرضُ والبلادُ كلُّها لله تعالى!!!

قال: يا هذا، أفيحسُنُ بك أن تأكلَ مِن رزقهِ، وتسكن أرضَهُ، ثم أنت بعد ذلك تعصيه!!

قال الرجل: لا والله..، هاتِ الثالثة.

قال: وإذا أردتَ أن تعصيهُ وأنت تأكلُ مِن رزقهِ، وتسكنُ بلادَهُ، فانظر مكاناً لا يراك فيه، فاعصِه فيه؟؟!!

قال الرجل: يا إبراهيم!! ما هذا، وكيف يكونُ ذلك والله مطلعٌ على السرائرِ، ولا تخفى عليه خافية!!

قال: يا هذا، أفيحسنُ بكَ أن تأكلَ مِن رزقهِ، وتسكنَ أرضهُ، ثم أنتَ تعصيهُ وهو يراك، ويعلمُ ما تجاهرُ به!!

قال الرجل: لا والله..، هاتِ الرابعةَ.

قال: فإذا جاء ملك الموت ليقبض روحكَ وأنتَ على غير ما يرضى الله تعالى، فقلْ له: أخِّرني حتّى أتوبَ إلى الله تعالى توبةً نصوحاً، وأعملَ صالحاً.

قال الرجل: إنّ مَلَكَ الموتِ إن جاءني ليقبضَ رُوحي لا يقبلُ مني ما تقول!!

قال: يا هذا، إنك إذا لم تقدر أن تدفعَ عنك الموتَ لتتوبَ، وتعلمُ أنه إذا جاء لم يكن له تأخير، فكيف تتجرّأُ على الله بأنواعِ المعاصي، ولا تكون على استعدادٍ دائمٍ للرحيل!!

قال الرجل: هاتِ الخامسة.

قال: إذا قُبِضْتَ على المعصية، وأمر الله تعالى بك إلى النار، وجاء الزبانية ليأخذوك إلى النار، فلا تذهبْ معهم!!

قال الرجل: إنهم ملائكة أقوياء أشداء، ولن يَدَعُوني أو يَقْبلوا مني!!

قال إبراهيم: فكيف ترجو النجاة إذاً وأنت على هذه الحال من المعاصي والغفلة؟!

قال الرجل: يا إبراهيم حسبي.. حسبي.. أستغفر الله العظيم وأتوب إليه..

ثُمَّ تابَ الرجلُ من بعدِ هذا اللقاء توبةً نصوحاً، فلزمَ العبادةَ والاستقامةَ حتى فارقَ الدنيا.

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்  அவர்களிடத்தில் ஒருவர் வந்து நான் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த பாவத்தை நான் விடுவதற்கு எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். அந்த பாவத்தை விட்டும் நான் விலகிக் கொள்ளும்படியான ஏதாவது எச்சரிக்கையை எனக்கு ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் ஐந்து விஷயத்தின் மீது நீ சக்தி பெற்றால் நீ செய்யக் கூடிய எந்த பாவமும் உனக்கு எந்த இடையூறையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்கள். அது என்ன ஐந்து விஷயம் என்று அவர் கேட்டார். 

1 வது, நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய உணவை நீ உண்ணக் கூடாது என்றார்கள். அப்போது அவர் அது எப்படி சாத்தியமாகும்? பூமியிலே இருக்கிற அத்தனையும் இறைவன் கொடுத்த உணவு அல்லவா! என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுக்கு மாறு செய்து கொண்டு இறைவன் தரக்கூடிய உணவை உண்ணலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

இரண்டாவது நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய பூமியிலே நீ தங்கக்கூடாது என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? உலகத்தில் இருக்கும் அனைத்தும் இறைவனுடைய பூமி அல்லவா! என்று அவர் கேட்ட பொழுது, இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுடைய உணவை உண்டு கொண்டு இறைவனுடைய பூமியில் நீ தங்கிக் கொண்டு அவனுக்கு மாறு செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

மூன்றாவது ; நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவன் பார்க்காத இடத்திலிருந்து நீ பாவம் செய் என்றார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியமாகும்? இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லவா! அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும். எல்லாம் அறிந்தவன். அவனுடைய பார்வையை விட்டும் நான் எப்படி தப்பிக்க முடியும்? என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

நான்காவது நீ பாவம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில் உன் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு உன்னிடத்திலே வந்தால் நான் தவ்பா செய்ய வேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேள் என்றார்கள். அப்போது அவர் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் எப்படி அவகாசம் கிடைக்கும்? தவ்பா செய்வதற்கு எப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்? என்று அவர் கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் அதை தாமதப்படுத்த முடியாது. தவாஃப் செய்வதற்கு அவகாசம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நீ எப்படி பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள் இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

ஐந்தாவது ; நீ பாவம் செய்து அதே நிலையில் மவ்த்தாகி அல்லாஹ் உனக்கு நரகத்தைக் கொண்டு தீர்ப்பளித்து விட்டால் நரகத்திற்கு உன்னை இழுத்துச் செல்லக்கூடிய மலக்குகள் உன்னிடத்தில் வரும்பொழுது நீ அவர்களோடு செல்லாதே என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவர்கள் ரொம்பவும் சக்தி பெற்றவர்கள். வலு உள்ளவர்கள். அவர்களோடு நான் எப்படி செல்லாமல் இருக்க முடியும்? என்னை எப்படி அவர்கள் விடுவார்கள்? நான் ஏதாவது சொன்னால் என்னிடத்திலிருந்து எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள்? என்றெல்லாம் அவர் கேட்டார். இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அவர்களை விட்டும் தப்பிக்க முடியாது என்று தெரிந்திருந்தும் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக் கொண்டார்.

இந்த ஐந்து விஷயங்களையும் கேட்ட பிறகு அவர் மனம் திருந்தி வருந்தி இறைவனிடத்தில் தவ்பா செய்து மீண்டு தூய்மையான வாழ்க்கைக்குத் தயாராகி கொண்டார்.

எனவே நன்மைகள் செய்வதற்கும் பாவங்களை விட்டு விலகி நடப்பதற்கும் இறையச்சம் தேவை. அந்த இறையச்சத்தை நோன்பு தருகிறது. இந்த அடிப்படையில் நோன்பு எல்லா வணக்கங்களை விட தனித்துவம் பெற்றதாக இருக்கிறது. 

நோன்பில் இன்னொரு தனித்தன்மை இருக்கிறது.

தொழுகை என்றால் நிற்குதல்,ருகூவு செய்தல், ஸஜ்தா செய்தல், உட்காருதல் குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் போன்ற செயல்களை குறிக்கும்.ஜகாத் என்றால் பொருளை கொடுத்தல். ஹஜ் என்றால் தவாப் செய்தல், ஸயீ செய்தல், ரம்யி செய்தல்,தங்குதல் போன்ற செயல்களைக் குறிக்கும். ஆனால் நோன்பு என்பது செய்வதல்ல, விடுவது.

ஸவ்ம் என்ற அரபி வார்த்தைக்கு பொருளே விடுவது என்பது தான். உணவை, குடிபானத்தை, மனைவியுடன் சேருவதை விடுவதற்குப் பெயர் நோன்பு.ஒரு செயலை செய்தை விட பழக்கமாகிப்போன ஒன்றை விடுவது மிகவும் கஷ்டமான காரியமாகும்.

நூறு ரக்கஅத் தொழச் சொன்னால் கூட ஒருவன் தொழுது விடுவான். ஆனால்   அவனிடம் ஊறிப்போன ஒரு தீயபழக்கத்தை விடுவது மிகவும் சிரமமான காரியம்.

நோன்பு என்பது தடுக்கப்பட்ட காரியத்தை விடுவதல்ல, அல்லாஹ்வுக்காக ஹலாலையே விடுவது. எனவே இந்த வகையில் பார்க்கும் போது அல்லாஹ்வின் கட்டளையை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் பயிற்சியை நோன்பு பயிற்றுவிக்கிறது,

நோன்பின் இந்த முழு  பலன்களையும் அடைய வேண்டுமென்றால் நாம் நோன்பு வைத்தால் மட்டும் போதாது.அதை முறையாக வைக்க வேண்டும். சாப்பிடாமல் குடிக்காமல் மனைவியோடு சேராமல் இருப்பது, இது, நோன்புக்கான வெளிரங்கமான பொருள். ஆனால் உள்ரங்கமான பொருள் என்பது நம் உறுப்புக்களை பாவம் செய்ய விடாமல் தடுப்பது.

عن أبي هريرة:] مَن لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ والعَمَلَ به والجَهْلَ، فليسَ لِلَّهِ حاجَةٌ أنْ يَدَعَ طَعامَهُ وشَرابَهُ

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தன் உணவையும் பானத்தையும் வெறுமனே கைவிடுவதில் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை. (புகாரி ; 6057)

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، كَانَ يَقُولُ: «لَيْسَ تَقْوَى اللَّهِ بِصِيَامِ النِّهَارِ، وَلَا بِقَيَامِ اللَّيْلِ، وَالتَّخْلِيطِ فِيمَا بَيْنَ ذَلِكَ، وَلَكِنَّ تَقْوَى اللَّهِ تَرْكُ مَا حَرَّمَ اللَّهُ، وَأَدَاءُ مَا افْتَرَضَ اللَّهُ، فَمَنْ رُزِقَ بَعْدَ ذَلِكَ خَيْرًا فَهُوَ خَيْرٌ إِلَى خَيْرٍ

இறையச்சம் என்பது பகலில் நோன்பு வைப்பதைக் கொண்டோ இரவில் நின்று வணங்குவதைக் கொண்டோ இல்லை. மாறாக அல்லாஹ் தடுத்ததை விடுவதும் அல்லாஹ் கடமையாக்கியதை செய்வதும் தான் இறையச்சமாகும். அதற்கு மேலாக ஒருவருக்கு நன்மைகள் செய்வதற்கு வாய்ப்பை இறைவன் வழங்கினால் அது மேலும் சிறந்ததாக இருக்கும் என உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قالَ جابِرُ بنُ عبدِ اللهِ إذا صُمتَ فليصُمْ سمعُك وبَصرُك من المَحارمِ ولسانُك مِنَ الكذِبِ ودَعْ أذى الخادِمِ وليَكُنْ عَليكَ وقارٌ وسَكينةٌ ولا تجعَلْ يومَ صومِك ويومَ فطرِك سواءً

நீ நோன்பிருக்கும் காலங்களில் அல்லாஹ் தடுத்த விஷயங்களை விட்டும் உன் பார்வையும் உன் செவியும் நோன்பிருக்கட்டும். பொய்யை விட்டும் உன் நாவு நோன்பிருக்கட்டும். பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை விட்டு விடு. நோன்பிருக்கும் நாளையும் நோன்பில்லாத நாளையும் சமமாக ஆக்கி விடாதே. (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா ; 8973)

எனவே நோன்பின் காலங்களை மற்ற காலங்களைப் போன்று ஆக்கி விடாமல் இதில் பக்குவமாகவும் பேணுதலாகவும் இருக்க வேண்டும்.

6 comments:

  1. அருமை மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. بارك الله

    ReplyDelete
  4. ஜஸாகல்லாஹு கைர் ஹழ்ரத்

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பயான் வாராவாரம் அனுப்பிவிடுங்கள் மவுலானா

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹூ அருமையான பதிவு.... கட்டுரை போங்கும் அற்புதம் பாரக்கல்லாஹூ

    ReplyDelete