Thursday, March 9, 2023

பேணுதலான வாழ்வு


இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தையும் பேணுதலையும் கடைபிடிக்குமாறு  போதிக்கிறது. கடமைகளை செய்யச் சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச் சொல்கிறது. அ்தேபோன்று சிறு குற்றங்களிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவறக் காரணமாகி விடும். கடமைகளை விடக்கூடியவர்கள்   அதை ஒரே நாளில் கற்றுக் கொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஏற்படும் அலட்சியமும் கவனக்குறைவும் தான் கடமைகளில் குறையுள்ளவர்களாக அவர்களை மாற்றி விடுகிறது. அதேபோன்று பெரும்பாவங்களை மனிதன் உடனே செய்து விடுவதில்லை. சிறு குற்றங்களில் அவனிடம் இருக்கும் எச்சரிக்கையின்மை தான் நாளடைவில் பெரும்பாவங்கள் செய்வதற்கான துணிச்சலை ஏற்படுத்துகிறது.


மனிதனை வழிகெடுப்பதற்காக  இப்லீஸ் கையாளுகிற முக்கியமான வழிமுறை நன்மையை அலட்சியமாகவும், பாவத்தை இலேசாகவும் காட்டுவது தான். தொழுகை தானே, ஜமாஅத் தானே. ஜகாத் தானே. அடுத்த வருடம் கொடுக்கலாம், இவ்வளவு கொடுத்தால் போதும், இந்த பொருளுக்கு மட்டும் கொடுத்தால் போதும்,ஹஜ்ஜிற்கு இப்போது என்ன அவசரம் ? அது வயதான காலத்தில் எல்லாக் கடமைகளையும் முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு செய்து கொள்ளலாம். இப்படி நன்மைகளை செய்வதில்  அலட்சியத்தைக் கொடுப்பான். அதேபோன்று பாவம் செய்வதில் பொடுபோக்குத்தனத்தை ஏற்படுத்துவான். இப்படி நன்மைகளை அலட்சியப் படுத்துவதும் பாவத்தை இலேசாக காட்டுவதும் தான் மனிதனைக் கெடுப்பதற்கு ஷைத்தான் கையாளுகிற மிகப்பெரிய ஆயுதம். 

எந்தப் பாவத்தையும் இலேசாக நினைக்கக்கூடாது.

لا تحقِرنّ ذنباً تفعله إنّ آدم عليه السلام خرج من الجنّة بذنبٍ واحد وإبليس صار خالداً في النار بذنبٍ واحد ولا تحقِرنّ معروفاً تفعل أنت تحتاج كل شئ وانت لا تدري الموازين كيف هي

ஒரு பாவம் தானே என்று எதையும் சாதாரணமாக நினைத்து விடாதே! ஒரே ஒரு பாவத்தினால் தான் இப்லீஸ் சுவனத்திலிருந்து வெளியேற் றப்பட்டான். ஒரு நன்மை என்று அதையும் அலட்சியம் செய்யாதே! மஹ்ஷர் மைதானத்தில் நன்மையின் தட்டு எவ்வாறிருக்கும் என்று உனக்குத் தெரியாது என்று கூறுவார்கள்.

எனவே எதிலும் கவனம் தேவை, பேணுதல் தேவை. குறிப்பாக பாவங்கள் விஷயத்தில் அதிக விழிப்புணர்வு தேவை.சிறு பாவம் தானே என்று எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சின்ன சின்ன குற்றங்கள் தான் பெரும் பாவங்களுக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.பெரும் பாவத்திலிருந்து விலகி வாழவேண்டுமானால் கட்டாயமாக சிறுபாவத்தை விட்டும் முதலில் தூரமாக வேண்டும்.

விபச்சாரத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒரு முஃமின் பார்வையைப் பேண வேண்டும். அதனால் தான் பார்வையைப் பேண வேண்டிய அவசியத்தை முதலாவதாக இஸ்லாம் கூறுகிறது. வட்டியின் விபரீதத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒரு முஃமின் கடனைக்கூட மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதிகாரத்திலிருக்கும் ஒருவர் ஊழல்,லஞ்சம் போன்ற சமூக தீங்குகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் அங்கீகரிக்கப்பட்ட அன்பளிப்புக்களைக் கூட சில நேரங்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ ، قَالَ : اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الْأَسْدِ يُقَالُ لَهُ : ابْنُ اللُّتْبِيَّةِ - قَالَ عَمْرٌو، وَابْنُ أَبِي عُمَرَ عَلَى الصَّدَقَةِ - فَلَمَّا قَدِمَ قَالَ : هَذَا لَكُمْ، وَهَذَا لِي أُهْدِيَ لِي. قَالَ : فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ : " مَا بَالُ عَامِلٍ أَبْعَثُهُ، فَيَقُولُ : هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي، أَفَلَا قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ، أَوْ فِي بَيْتِ أُمِّهِ، حَتَّى يَنْظُرَ، أَيُهْدَى إِلَيْهِ، أَمْ لَا ؟ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَنَالُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ ، أَوْ بَقَرَةٌ لَهَا خُوَارٌ ، أَوْ شَاةٌ تَيْعِرُ ". ثُمَّ رَفَعَ يَدَيْهِ، حَتَّى رَأَيْنَا عُفْرَتَيْ إِبْطَيْهِ، ثُمَّ قَالَ : " اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ". مَرَّتَيْنِ

நபி அவர்கள் அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை ஜகாத் வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல்லுத்பியா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார்.  நபி அவர்கள் மிம்பர் மீது ஏறி நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நான் அனுப்பிய பொறுப்பாளரின் நிலை தான் என்ன ? இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறார்.  இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தன் கைகளை உயர்த்தி இறைவா உன் செய்தியை மக்களுக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா! என்று இரு முறை கூறினார்கள். (முஸ்லிம் ; 1832)

இந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள் ; அன்பளிப்பு என்பது மார்க்கம் வரவேற்கிற முஸ்தஹப்பான விஷயம். ஒருவருக்கொருவர் அன்பளிப்பைக் கொடுத்து உங்களுக்கு மத்தியில் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான் மார்க்கத்தின் வழிகாட்டுதல். இருந்தாலும் அன்பளிப்பைப் பெற்ற அந்த ஸஹாபியை நபி அவர்கள் கண்டித்த காரணம்,  அதிகாரத்தில் இருப்பவர்கள் அன்பளிப்பைப் பெறுவது கூடாது. ஏனெனில் அவர்கள் அன்பளிப்பைப் பெற ஆரம்பித்தால் காலப்போக்கில் அது லட்சம் வாங்க வழிவகுத்து விடும். எனவே தான் அவர்களைக் கண்டித்தார்கள்.

எனவே பாவங்களை மட்டுமல்ல பாவத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் விஷயங்களைக் கூட தவிர்ந்து நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹராமில் கொண்டு போய் விட்டு விடும் என்று அச்சம் இருந்தால் ஹலாலைக் கூட தள்ளி வைக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. பேணுதல் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் சொல்லும் உலமாக்கள் இந்த நிலையைத் தான் குறிப்பிடுகிறார்கள்.

الوَرَع في الشرع ليس هو الكف عن المحارم فقط، بل هو الكف عن كثيرٍ من المباح،

ஷரீஅத்தில் பேணுதல் என்பது ஹராமை விடுவது மட்டுமல்ல, ஆகுமாக்கப்பட்டதில் அதிகமானதை விடுவதாகும்.

قال عمر - رضي الله عنه -: "تركنا تسعة أعشار الحلال مخافة الربا مصنف عبد الرزاق

வட்டியைப் பயந்து ஆகுமாக்கப்பட்டதில் பத்தில் ஒன்பதை நாங்கள் விட்டு விடுவோம் என்று உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

பேனுதலில் மூன்று வகை உண்டு. 1 ஹராமை விட்டு விடுவது.இது முதல் நிலை. 2 ஹராமாக இருக்குமோ எனும் சந்தேகம் வந்து விட்ட விஷயங்களையும் ஓரம் கட்டுவது.இது இரண்டாம் நிலை. 3 ஹராமுக்கு பயந்து ஹலாலையே விடுவது. இது பேனுதலின் உச்ச நிலை. இதைத்தான் ஸஹாபாக்கள் கடைபிடித்தார்கள்.

எனவே பேணுதலான வாழ்க்கை என்பது மிக முக்கியமானது. இறைவன் நம்மிடம் அந்த பேணுதலான வாழ்க்கையைத் தான் எதிர் பார்க்கிறான்.

وقال الحسن: مثقال ذرَّة من الورع؛ خير من ألف مثقال من الصوم والصلاة

ஒரு அனு அளவு பேணுதல் என்பது அதில் ஆயிரம் மடங்கு தொழுகை மற்றும் நோன்பை விட மேலானது என்று ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وجاء عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال : (( أربع إذا كنّ فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفّة في طُعمة

நான்கு விஷயங்கள் உன்னிடம் இருந்தால் உலகத்தில் உனக்கு எது கிடைக்காமல் போனாலும் பரவா இல்லை. (அது உனக்கு எந்த இடையூரையும் ஏற்படுத்தாது)1,அமானிதத்தைப் பாதுகாக்கும் தன்மை. 2,உண்மை பேசுவது. 3,அழகிய குணம். 4,உணவில் பேணுதல். (பைஹகீ ; 458)

قال حبيب ابن أبي ثابت رحمه الله تعالى: «لا يُعجبْكم كثرةُ صلاة امرئ ولا صيامه، ولكن انظروا إلى وَرَعِه، فإن كان وَرِعا مع ما رزقه الله من العبادة فهو عبدٌ لله حقّا»

ஹபீப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருவர் அதிகம் தொழுவதோ அதிகம் நோன்பு வைப்பதோ உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அவரிடம் பேணுதல் இருக்கிறதா என்று பாருங்கள். வணக்கத்தோடு பேணுதலும் யாரிடம் இருக்கிறதோ அவரே அல்லாஹ்விடம் சிறந்த மனிதர்.

ரொம்ப பேணுதலாகவும் இறையச்சத்தோடும் வாழ்ந்த மனிதர்கள் வரலாறுகளில் காணக் கிடைக்கிறார்கள்.

عن عبد الله بن عمر:] سمعَ ابنُ عُمرَ مِزمارًا فوضعَ أصبُعَيْهِ في أذُنَيْهِ، ونَأى عَن الطَّريقِ وقالَ لي: يا نافعُ هل تسمَعُ شَيئًا؟ قلتُ: لا، فرَفعَ أصبُعَيْهِ مِن أذُنَيْهِ وقالَ: كُنتُ معَ النَّبيِّ - - وسمعَ مثلَ هذا وصنعَ مِثلَ هذا

ஒரு பயணத்தின் போது இசையின் சப்தம் இப்னு உமர் ரலி அவர்களின் காதில் விழுந்தது. உடனே தன் காதை அடைத்துக் கொண்டார்கள். சப்தம் வருகின்ற அந்த பாதையை விட்டும் தூரமாகி விட்டார்கள். பின்பு நாஃபிஇயிடம் இப்போது சப்தம் எதாவது கேட்கிறதா என்று கேட்டார்கள். இல்லையென்று அவர் சொன்ன பிறகு தன் காதிலிருந்து விரல்ளை எடுத்தார்கள். நான் நபி அவர்களுடன் ஒரு நாள் இருந்தேன். அப்போது அவர்கள் இவ்வாறு ஒரு சப்தத்தைக் கேட்ட போது இவ்வாறு தான் செய்தார்கள் என்றார்கள். (அபூதாவூது ; 4924)  

ففي الصحيحين عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ، فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى العَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى العَقَارَ: خُذْ ذَهَبَكَ مِنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ، وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ، وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ: إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ: الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟ قَالَ أَحَدُهُمَا: لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ: لِي جَارِيَةٌ، قَالَ: أَنْكِحُوا الغُلاَمَ الجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا

முன் வாழ்ந்த பனீஇஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ஒரு நிலத்தை வாங்கினார்.நிலம் வாங்கியவர் தன் நிலத்தின் கீழே ஒரு தங்க புதையலை பெற்றுக்கொண்டார்.உடனே அதை நிலம் விற்றவரிடம் கொண்டு வந்து கொடுத்து, நான் உங்களிடம் காலிமனையைத் தான் வாங்கினேன்.இந்த தங்கத்தை அல்ல.எனவே இது உங்களுக்கே பாத்தியப்பட்டது என்று கூறினார்.   அதற்கு நிலம் விற்பனையாளர் தோழரே! நான் உங்களுக்கு அந்த நிலத்தை விற்று விட்டேன்.எனவே அதற்கு கீழ் இருப்பதும் உங்களுக்கே சொந்தமானது என்று கூறி அதை வாங்க மறுத்து விட்டார்.இறுதியாக அவ்விருவரும் நீதிபதியிடம் முறையிட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா? எனக் கேட்ட போது அவ்விருவரில் ஒருவர் தனக்கு ஆண்மகன் உண்டு எனவும், மற்றொருவர் தனக்கு பெண்மகள் உண்டு என்றும் கூறினர்.

அப்படியானால் உங்களில் ஒருவரின் மகனுக்கு மகளை நிகாஹ் செய்து வைத்து விடுங்கள்.அதிலிருந்து அவ்விருவருக்கும் செலவு செய்யுங்கள் என்று கூறித் தீர்ப்பளித்தார். (புகாரி ; 3472)

இதே நிகழ்வு நம் காலத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்று லேசாக கற்பனை செய்து பார்க்கலாம். நிலம் வாங்கியவருக்கு அப்படி எதாவது புதையல் கிடைத்தால் முதலில் அவர் அதை வெளிப்படுத்தவே மாட்டார். புதையலை வெளியே எடுக்காமல் அங்கேயே புதைத்து அதை மறைத்து விடுவார். அப்படி ஒரு வேலை அதை வெளியே எடுத்து நிலத்தைக் கொடுத்தவருக்கு தெரிந்து விட்டால் பிரச்சனை வேறு மாதிரி இருந்திருக்கும். நான் நிலத்தை வாங்கிட்டேன். எனவே இதிலுள்ளவைகளும் எனக்குத்தான் சொந்தம்  என்று அவர் சொல்வார். இல்லை, இல்லை, உனக்கு நிலத்தை மட்டும் தான் விற்றேன். அதில் உள்ளதையும் சேர்த்து விற்க வில்லை. எனவே அது எனக்குத் தான் சொந்தம் என்று விற்றவர் வாதாடுவார். கடைசியில் அந்தப் பிரச்சனை பெரிய பூதாகரமாக வெடித்து இருவரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் மாறி மாறி வழக்கு தொடுத்து அந்த வழக்கு இழுத்தடித்து கடைசியில் யாருக்குமே கிடைக்காமல் போய் விடும். இது தான் நம்மிடம் இருக்கிற பேணுதல்.

ஒருமுறை இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கடையில் இல்லாத போது வேலைக்காரர் கடையிலிருந்த ஒரு குறையுள்ள ஆடையை விற்று விட்டார். இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் குறைகளை சுட்டிக் காட்டீனீரா என்று கேட்டார்கள். இல்லை என்றார் ஊழியர், என்ன விலைக்கு விற்றாய் என்றார்கள், அவர் இருபது திர்ஹம் என்றார். உடனே இமாம் அவர்கள் கொடுத்த பணத்தைக் கொடு என்று வாங்கிக் கொண்டு துணியை  வாங்கிச் சென்ற மனிதரைப்பற்றிய அடையாளங் களை கேட்டறிந்து அவரை தேடிக் கொண்டு ஊர் எல்லை வரை வந்து விட்டார்கள். ஊர் எல்லையில் அவரைக் கண்டு பிடித்து விஷயத்தைக் கூறி பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். அந்த மனிதரோ பணத்தை வாங்கியவுடன் அது, தான் கொடுத்த பணம் தான் என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு அதை அருகிலிருந்த கிணற்றில் வீசினான், பிறகு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களிடம் கூறினான், நான் குறையுள்ளதை வாங்கி விடக் கூடாதே என்று இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள். ஆனால் நான் போலி நாணயத்தை உங்களிடம் கொடுத்து துணியை வாங்கி வந்து விட்டேன் என்று கூறி துணிக்குத் தகுந்த சரியான காசை திருப்பிக் கொடுத்தான்.

كان المبارك بن واضح (والد الإمام عبدالله بن المبارك) يعمل أجيرًا في بستان، فجاء صاحب البستان يومًا، وقال له: "أريد رمانًا حلوًا"، فمضى إلى بعض الشجر، وأحضر منها رمانًا، فكسره فوجده حامضًا، فغضب عليه، وقال: "أطلب الحلو فتحضر لي الحامض؟ هات حلوًا"، فمضى، وقطع من شجرة أخرى، فلما كسرها وجده أيضًا حامضًا، فاشتد غضبه عليه، وفعل ذلك مرة ثالثة، فذاقه، فوجده أيضًا حامضًا، فقال له بعد ذلك: "أنت ما تعرف الحلو من الحامض؟"، ففال: "لا"، فقال: "وكيف ذلك؟"، فقال: "لأني ما أكلتُ منه شيئًا حتى أعرفه"، فقال: "ولِمَ لَمْ تأكل؟"، قال: "لأنك ما أذنتَ لي بالأكل منه"، فعجب من ذلك صاحبُ البستان، وسأل عن ذلك فوجده حقًّا، فعظُم المبارك في عينيه، وزاد قدره عنده، وكانت له بنت خُطبت كثيرًا، فقال له: "يا مبارك، مَن ترى تزوَّج هذه البنت؟"، فقال: "أهل الجاهلية كانوا يزوجون للحسب، واليهود للمال، والنصارى للجمال، وهذه الأمة للدِّين"، فأعجبه عقله، وذهب فأخبر به أمها، وقال لها: "ما أرى لهذه البنت زوجًا غير مبارك"، فتزوجها، فجاءت بعبدالله بن المبارك؛

முபாரக் ரஹ் அவர்கள் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அந்த தோட்டத்திற்கு உரிமையாளர் வந்து எனக்கு இனிப்பான ஒரு மாதுளை வேண்டும். பறித்து வா என்று சொன்னார். அவர்கள் ஒரு மரத்திலிருந்து அதை பறித்துக் கொண்டு வந்த பொழுது அது புளிப்பாக இருந்தது. நான் உன்னிடம் இனிப்பானதைத் தானே கேட்டேன். நீ புளிப்பைக் கொண்டு வந்திருக்கிறாயே என்று கூறி, இனிப்பான பழத்தை எடுத்து வா என்று சொன்னார்கள். மீண்டும் சென்று இன்னொரு மரத்திலிருந்து பழத்தைப் பறித்து வந்த பொழுது அதுவும் புளிப்பாகவே இருந்தது. அவர் கோபமடைந்து மீண்டும் எடுத்து வரச் சொன்னார். மூன்றாவது முறை அவர்கள் கொண்டு வந்த பழமும் புளிப்பாகவே இருந்தது. அதைப் பார்த்த அந்த உரிமையாளர்,இவ்வளவு காலம் இத்தோட்டத்தில் வேலை செய்கிறாய். எந்த பழம் இனிக்கும் எந்த பழம் புளிக்கும் என்று உனக்குத் தெரியாதா? என்று கேட்டார். தெரியாது என்று கூறினார்கள். இங்கு தானே பணி புரிகிறாய். உனக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ? என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது முபாரக் ரஹ் அவர்கள், நான் இங்கிருந்து ஒரு பழத்தைக் கூட எடுத்து சாப்பிட்டதில்லை. சாப்பிட்டால் தானே எந்த பழம் புளிக்கும் எந்த படம் இனிக்கும் என்று தெரியும் என்று கூறினார்கள். ஏன் சாப்பிட வில்லை? என்று கேட்ட போது இங்கிருந்து பழங்களை எடுத்து சாப்பிடுவதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரவில்லை என்று கூறினார்கள். அவர்களின் அந்தப் பேணுதலையும் இறையச்சத்தையும் பார்த்து ஆச்சரியமடைந்த அந்த உரிமையாளர் தன்னுடைய மகளை முபாரக் ரஹ் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். அந்த தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள். (வஃபயாதுல் அஃயான்)

  

جاءت إمرأة الى الإمام أحمد بن حنبل ، فقالت : يا أباعبدالله ، إني إمرأة أغزل

  غزل الخيوط لصنع الملابس  في ضوء السراج ، فيمر بنا العسس ( رجال الشرطة ) بالليل يحملون مشاعل السلطان ،  أيحل لي أن أغزل على ضوء نارهم ؟فبكى الامام احمد ابن حنبل و قال لها : من انت ؟ ، فقالت : اخت بشر الحافي ، فقال لها : من بيتكم يخرج الورع الصادق ، لا تغزلي علي شعاعها

ஒரு பெண்மனி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்களிடம் வந்தாள். நான் துணி தைக்கக்கூடிய பெண். இரவில் என் வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து தைத்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் பாதுகாவலர்கள் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வீதியில் செல்வார்கள். அந்த வெளிச்சம் என் வீட்டுக்குள் விழும். அந்த வெளிச்சத்தில் நான் துணியைத் தைக்கலாமா என்று கேட்டாள், அதைக் கேட்ட இமாம் அவர்கள் அழுது விட்டார்கள். நீ யார் என்று கேட்டார்கள். நான் பிஷ்ருல் ஹாஃபி ரஹ் அவர்களின் சகோதரி என்று பதில் சொன்னாள். உங்கள் வீட்டிலிருந்து தான் உண்மையான பேணுதல் வெளிப்படுகிறது என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்கள் கூறினார்கள்.

 

5 comments:

  1. மாஷா அல்லாஹ் காலத்திற்கு தேவையான அழகான கட்டுரை

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete
  3. நான் இப்பொழுதுதான் உங்களுடைய கட்டுரையை முதன்முதலாக படித்துள்ளேன் ஆனாலும் கட்டுரை நன்றாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே அல்லாஹு ரப்புல் ஆலமீன் உங்களுடைய எழுத்தாற்றலில் இன்னும் அதிகப்படுத்தி தருவானாக

    ReplyDelete