Wednesday, April 5, 2023

மதில் மேல் பூனை

 

وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ‌ ‌ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ‌  وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ‌ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ‌  ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ‏

மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற   நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (அல்குர்ஆன் : 22:11)

عَلى حَرْفٍ﴾ أيْ عَلى طَرَفٍ مِنَ الدِّينِ لا في وسَطِهِ وقَلْبِهِ، وهَذا مَثَلٌ لِكَوْنِهِمْ عَلى قَلَقٍ واضْطِرابٍ في دِينِهِمْ لا عَلى سُكُونِ طُمَأْنِينَةٍ كالَّذِي يَكُونُ عَلى طَرَفٍ مِنَ العَسْكَرِ فَإنْ أحَسَّ بِغَنِيمَةٍ قَرَّ واطْمَأنَّ وإلّا فَرَّ وطارَ عَلى وجْهِهِ

ஓரத்தில் நின்று வணங்குவார்கள் என்று இறைவன் கூறுகிறான். அதாவது எதிலும் உறுதி இல்லாமல் தடுமாற்றத்தில் இருப்பார்கள். ஈமானிலும் அமலிலும் உறுதியற்ற நிலையில் இருப்பார்கள். போர்ப்படையின் ஓரத்தில் நின்று போர் புரியும் ஒருவனைப் போல. அந்த போர்க்களத்தில் கனீமத் பொருட்கள் கிடைத்து விட்டதாக உணர்ந்தால் அவன் உறுதியாக நிற்பான். இல்லையென்றால் அங்கிருந்து விரண்டோடி விடுவான். (தஃப்ஸீர் ராஸீ)

عَنِ ابْنِ عَبَّاسٍ ﴿وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ﴾ قَالَ: كَانَ الرَّجُلُ يَقدم الْمَدِينَةَ، فَإِنْ وَلَدَتِ امْرَأَتُهُ غُلَامًا، ونُتِجَت خيلُه، قَالَ: هَذَا دِينٌ صَالِحٌ. وَإِنْ لَمْ تَلِدِ امْرَأَتُهُ، وَلَمْ تُنتَج(٣) خَيْلُهُ قَالَ: هَذَا دِينٌ سُوءٌ

மதினாவிற்கு சிலர் வருவார்கள். அங்கே அவர்களுக்கு குழந்தை பிறந்தால், அவர்களது குதிரைகள் குட்டியை ஈன்றெடுத்தால் இது சிறந்த மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுக்கு குழந்தை பிறக்க வில்லையானால், குதிரை குட்டியை ஈன்றெடுக்கவில்லையென்றால் இது மோசமான மார்க்கம் என்று சொல்வார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்)

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ نَاسٌ مِنَ الْأَعْرَابِ يَأْتُونَ النَّبِيَّ فيُسْلِمون، فَإِذَا رَجَعُوا إِلَى بِلَادِهِمْ، فَإِنْ وَجَدُوا عَامَ غَيث وَعَامَ خِصْبٍ وَعَامَ وَلَادٍ حَسَنٍ، قَالُوا: "إِنَّ دِينَنَا هَذَا لَصَالِحٌ، فتمَسَّكُوا بِهِ". وَإِنْ وَجَدُوا عَامَ جُدوبة وَعَامَ وِلَادٍ سَوء وَعَامَ قَحْطٍ، قَالُوا: "مَا فِي دِينِنَا هَذَا خَيْرٌ". فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ:

கிராமவாசிகளில் சிலர் நபி அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள் அங்கே திரும்பிய பிறகு அந்த ஊர் நல்ல மழை பெய்து செழிப்பாக இருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்ட மார்க்கம் சிறந்த மார்க்கம் என்று சொல்வார்கள். அதற்கு மாற்றமாக மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நாங்கள் ஏற்றிருக்கிற இந்த மார்க்கம் மோசமானது என்று சொல்வார்கள். (இப்னு கஸீர்)

அதாவது மார்க்கத்தில் உறதியாக இருக்க மாட்டார்கள். பிரதிபலனை எதிர் பார்ப்பார்கள். அது கிடைத்து விட்டால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வருவார்கள். பிரதிபலன் எதுவும் கிடைக்க வில்லை யென்றால் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விடுவார்கள்.

இன்றைக்கு நம்மிலும் இதேபோன்று மனிதர்கள் உண்டு. எனக்கு இறைவன் எதுவும் செய்வதில்லை. வியாபரம் இல்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. குழந்தை இல்லை,வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. சோதனைக்கு மேல் சோதனை. நான் ஏன் தொழ வேண்டும். ஏன் நோன்பு வைக்க வேண்டும் என்று கேட்பார்கள். இதுபோன்றவர்களைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். சுருக்கமாக சொன்னால், நன்மைகள் நடந்தால் அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்தி கொள்வார்கள். சோதனைகளை சந்தித்தால் பொருந்திக் கொள்ள மாட்டார்கள்.

அல்லாஹ்வை எல்லா நேரத்திலும் வணங்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் அவனை நினைவு கூற வேண்டும். எல்லா நிலையிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருந்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியை தந்தாலும் அவனை பொருந்திக் கொள்ள வேண்டும். கஷ்டங்களைக் கொடுத்தாலும் அவனைப் பொருந்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கொடுத்த நேரத்திலும் அல்லாஹ்வின் மீது திருப்தி கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தாலும் அல்லாஹ்வை திருப்தி கொள்ள வேண்டும். நாம் கேட்டதைக் கொடுத்தாலும் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்ள வேண்டும். கேட்டதை கொடுக்காமல் மறுத்து விட்டாலும் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்ள வேண்டும். எல்லா நிலையிலும் இறைவனை பொருந்திக் கொள்பவன் தான் உண்மையான இறை விசுவாசம் உள்ளவனாக இருக்க முடியும்.

சஹாபாக்கள் அத்தகைய உண்மை விசுவாசிகளாக இருந்தார்கள். எல்லா நிலையிலும் படைத்த ரப்புல் ஆலமீனை பொருந்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

بينا النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ جالسٌ وعندَه أبو بَكرٍ الصِّدِّيقُ وعليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بِجِلالٍ إذ نزلَ عليهِ جبريلُ عليهِ السَّلامُ فأقرأَه منَ اللَّهِ السَّلامَ وقالَ يا رسولَ اللَّهِ ما لي أرى أبا بَكرٍ عليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بجِلالٍ قال يا جبريلُ أنفقَ مالَه عليَّ قبلَ الفتحِ قال فأقرِئهُ منَ اللَّهِ السَّلامَ وقل لهُ يقولُ لَك ربُّكَ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخِطٌ فالتفتَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ إلى أبي بَكرٍ فقال يا أبا بَكرٍ هذا جبريلُ يقرئُك السَّلامَ منَ اللَّهِ ويقولُ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخطٌ فبَكى أبو بَكرٍ وقالَ أعلى ربِّي أغضبُ أنا عن ربِّي راضٍ أنا عن ربِّي راضٍ

الراوي: عبدالله بن عمر المحدث: أبو نعيم           - المصدر: حلية الأولياء – الصفحة أو الرقم: 7/115                      

பெருமானார் அவர்களுடன் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அமர்ந் திருந்தார்கள். அவர்கள் உடுத்துவதற்கு வேறு ஆடையின்றி மேனியில் போர்வை ஒன்றை மட்டும் போர்த்தியிருந்தார்கள். அந்நேரம் ஜிப்ரயீல் அலை அவர்கள் வருகை தந்து ஏன் உங்கள் நண்பர் அபூபக்கர் மேனியில் வெறும் போர்வை மட்டும் போர்த்தியிருக்கிறார் என்று கேட்டார்கள். அவர் தன்னிடம் இருந்த பொருள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விட்டார்.இப்போது அவரிடம் எதுவும் இல்லை என்றார்கள்.அவரிடம் அல்லாஹ்வின் ஸலாமை சொல்லி விடுங்கள். இந்த நிலையிலும் அபூபக்கர் என்னை திருப்தி கொள்கிறாரா இல்லை அதிருப்தி கொள்கிறாரா என்று அல்லாஹ் கேட்டான் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சொன்னார்கள். நபி  அவர்கள் அதை அபூபக்கர் ரலி அவர்களிடம் சொன்ன போது அவர்கள் அழுது கொண்டே நான் என்னைப் படைத்த ரப்பை அதிருப்தி கொள்வேனா ! நான் அவனை இப்போதும் பொருந்திக் கொள்கிறேன் பொருந்திக் கொள்கிறேன் என்றார்கள். {ஹுல்யதுல் அவ்லியா}

அல்லாஹ்வை எல்லா நேரத்திலும் அவர்கள் பொருந்திக் கொண்டார்கள். அல்லாஹ் விரும்புவதையே அவர்களும் விரும்பினார்கள்.தன் விரும்பத்திற்கு முக்கியத்துவம் தராமல் படைத்தவனின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் தந்தார்கள்.

وقد اجتمع وهيب بن الورد ، و سفيان الثوري ، و يوسف بن أسباط . فقال [ ص: 207 ] الثوري : قد كنت أكره موت الفجاءة قبل اليوم . وأما اليوم : فوددت أني ميت

فقال له يوسف بن أسباط : ولم ؟ فقال : لما أتخوف من الفتنة

فقال يوسف : لكني لا أكره طول البقاء

فقال الثوري : ولم تكره الموت ؟

قال : لعلي أصادف يوما أتوب فيه وأعمل صالحا

فقيل لوهيب : أي شيء تقول أنت ؟

فقال : أنا لا أختار شيئا ، أحب ذلك إلي أحبه إلى الله

فقبل الثوري بين عينيه . وقال : روحانية ورب الكعبة

உஹைப் ரஹ் சுஃப்யான் ஸவ்ரி ரஹ் யூசுஃப் ரஹ் ஆகிய மூவரும் பேசிக் கொள்கிறார்கள்.கடும் சோதனைகளும் குழப்பங்களும் நிறைந்த காலம் அது. அப்போது சுஃப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் நான் இந்த நேரத்திலேயே மரணித்து விடுவதை பிரியப்படுகிறேன் என்றார்கள். காரணம் கேட்ட போது, உலகத்தில் நடக்கக்கூடிய குழப்பங்களைப் பார்த்து அவ்வாறு சொல்கிறேன் என்றார்கள். இரண்டாவதாக யூசுஃப் ரஹ் அவர்கள் நான் உலகத்தில் நீண்ட காலம் வாழ்வதையே பிரியப்படுகிறேன் என்றார்கள். ஏன் என்று கேட்ட போது நீண்ட காலம் வாழ்ந்தால் தான் நிறைய அமல்கள் செய்ய முடியும். பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய முடியும் என்றார்கள். மூன்றாவதாக உஹைப் ரஹ் அவர்களிடத்தில் நீங்கள் எதை பிரியப்படுகிறீர்கள்? மரணிப்பதையா அல்லது வாழ்வதையா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் நானாக எதையும் விரும்பிக் கேட்க வில்லை. அல்லாஹ்விற்கு எது விருப்பமோ அதுவே எனக்கும் விருப்பம். நான் வாழ்வது அவனுக்கு புரியும் என்றால் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் அவனைப் போய் சந்திப்பது அவனுக்கு விருப்பம் என்றால் அதையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன போது சுஃப்யான் ஸவ்ரீ ரஹ் அவர்கள் அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டார்கள். )இஹ்யா உலூமித்தீன்)   

قال عمر بن الخطاب : « ما أبالي على أي حال أصبحت على ما أحب أو على ما أكره ، لأني لا أدري ، الخير فيما أحب أو فيما أكره ؟

நான் விரும்பியது நடந்தாலும்,எனக்கு விருப்பமில்லாதது நடந்தாலும் நான் கவலை கொள்ள மாட்டேன்.எதில் நலவு இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

عن أبي علي الرازي ، قال : صحبت فضيل بن عياض ثلاثين سنة ما رأيته ضاحكا ولا مبتسما إلا يوم مات علي ابنه فقلت له في ذلك فقال : « إن

الله عز وجل أحب أمرا فأحببت ما أحب الله

அபூ அலி ராஸி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் ; ஃபுளைல் பின் இயாழ் [ரலி] அவர்களை எனக்கு 30 வருடமாகத் தெரியும். அந்த 30 வருடத்தில் ஒரு நாள் கூட அவர்கள் சிரித்தோ, புன்னகைத்தோ நான் கண்டதில்லை. அத்தகையவர்கள், அவர்களின் மகன் இறந்த அன்று சிரித்தார்கள். என்றைக்கும் சிரிக்காத நீங்கள் எல்லோரும் அழுகின்ற ஒரு தினத்தில் சிரிக்கிறீர்களே என்று வியப்புடன் வினவினேன். அப்போது அவர்கள் ; என் மகனின் மரணத்தை இறைவன் விரும்பி யிருக்கிறான். அவன் விரும்பியதை நானும் விரும்பி விட்டேன். அதனால் எனக்கு மகிழ்ச்சி என்றார்கள்.

 

ஸுஃப்யான் ஸவ்ரீ [ரஹ்] அவர்கள்  اللهم ارض عنا என்னை திருப்தி கொள் என்று துஆ செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த ராபியத்துல் அதவிய்யா [ரலி] அவரகள் ;

اما تستحي من الله تسا له الرضا وانت غير راض

நீங்கள் அவனை திருப்தி கொள்ளாமல் அவன் திருப்தியை மட்டும் கேட்பதற்கு உங்களுக்கு தயக்கம் இல்லையா? என்று கேட்டார்கள்.  அப்படியானால் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டவனாக ஓர் அடியான் எப்போது ஆகுவான் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. நல்லதைக் கொண்டு மகிழ்வதைப் போன்று கெட்டதைக் கொண்டும் எவன் மகிழ்கிறானோ அப்போது தான் அவன் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டதாக பொருள் என்றார்கள் ராபியத்துல் அதவிய்யா [ரலி] அவர்கள்.

1 comment: