Sunday, September 12, 2021

ஹதீஸ் எண் ; 10 - صلاة الرجل جماعة

 

عن أبي هريرة رض قال: قال رسول الله : صلاة الرجل في جماعة تزيد على صلاته في بيته وصلاته في سوقه بضعاً وعشرين درجة، وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء، ثم أتى المسجد لا يَنهَزه إلا الصلاة، لا يريد إلا الصلاة، فلم يخط خطوة إلا رُفع له بها درجة، وحُط عنه بها خطيئة، حتى يدخل المسجد، فإذا دخل المسجد كان في الصلاة ما كانت الصلاة هي تحبسه، والملائكة يصلون على أحدكم ما دام في مجلسه الذي صلى فيه، يقولون: اللهم ارحمه، اللهم اغفر له، اللهم تب عليه، ما لم يُؤذِ فيه، ما لم يُحدث فيه

ஜமாத்துடன் கூட்டாக ஒருவர் தொழுவது அவர் தன் கடையில் தன் வீட்டில் தொழுவதை விட

தகுதியால் இருபது சொச்சம் மடங்கு அதிகமாகும். ஏனெனில், அவர்களில் ஒருவர் ஒழு செய்து, அந்த ஒழுவை அழகான முறையில் செய்து, பின்பு தொழுகையைத் தவிர வேறு நோக்கம் இன்றி தொழுகைக்காகவே வீட்டை விட்டு பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படும். ஒரு பாவம் அழிக்கப்படும். பள்ளிக்குள் நுழைந்து விட்டால் தொழுகை அவரை பள்ளியில் தடுத்து வைத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார். உங்களில் ஒருவர் தொழுத அதே இடத்தில் இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் அவர்களுக்காக துஆ செய்கிறார்கள். இறைவா இவருக்கு அருள் புரிவாயாக இறைவா இவரை மன்னிப்பாயாக இறைவா இவரது பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக என்று அவர்கள் கூறுவார்கள். அவர் பிறருக்கு நோவினை தராத வரை, அவரது ஒழு முறியாத வரை இது நீடிக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி ; 647)

இந்த ஹதீஸிற்கு இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. ஒன்று பள்ளியில் தொழுவதால் கிடைக்கும் அந்த 27 மடங்கு நன்மை, ஒருவர் வீட்டிலோ அல்லது கடைவீதியிலோ தனித்து தொழுதாலும் கூட்டாக தொழுதாலும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் இன்னும் சில மார்க்க அறிஞர்கள் வீட்டிலோ அல்லது கடையிலோ கூட்டாக தொழுதால் அந்த இருபத்தி ஏழு மடங்கு நன்மையை பெற்றுக் கொள்ள முடியும் என்று எழுதுகிறார்கள் இதில் முதல் கருத்து பொருத்தமானதாக தெரிகிறது.

என்றாலும் இதில் தொழுகையின் படித்தரங்களை விவரிக்கும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று பட்டு கூறும் கருத்து என்னவென்றால், படித்தரத்தில் ஆக உயர்ந்தது பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதாகும். அதில் இரண்டாவது வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுவது. அதில் மூன்றாவது வீட்டில் தனித்துத் தொழுவது. அதில் நான்காவது கடை வீதிகளில் ஜமாஅத்தாகத் தொழுவது.

தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் வீட்டிலிருந்து புறப்படுதல் என்ற வார்த்தை ஹதீஸில் இடம் பெற்றிருக்கிறது. எனவே ஒருவர் வீட்டில் ஒழு செய்து கொண்டு வேறு எங்கும் செல்லாமல் வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் நேரடியாக தொழுகைக்காக பள்ளிக்கு வந்தால் தான் அந்த அந்தஸ்து கிடைக்கும். என்றாலும் காலையிலேயே தன் சொந்த வேலைகளுக்காக சென்றவர் அல்லது கடையில் தொழில் செய்பவர், தொழுகை நேரம் வந்தவுடன் அங்கிருந்து ஒழு செய்து கொண்டு தொழுகை என்ற எண்ணத்தில் பள்ளியை நோக்கி வந்தால் அவருக்கும் இந்த அந்தஸ்து கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

எண்ணத்திற்கும் நன்மை கிடைக்கும் என்கிற விஷயம் இந்த ஹதீஸின் மூலமும் நமக்கு உணர்த்தப்படுகிறது. தொழுகையைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் வீட்டில் இருந்து கிளம்பி வருபவருக்கு அந்தஸ்து உயர்த்தப்பட்டு பாவம் அளிக்கப்படும் என்ற வார்த்தையும் தொழுகைக்காக அவர் காத்திருக்கும் நேரம் எல்லாம் அவர் தொழுகையில் இருக்கிறார் என்ற வார்த்தையும் அமலைக் குறித்த எண்ணத்திற்கும் கூலி உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது.

No comments:

Post a Comment