Thursday, October 28, 2021

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான தூதர்.

 


இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நாம் வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் நபிகள் பெருமானார் ஸல் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வில் எதைக்குறித்து பேசுவதானாலும் நபியைத் தொடாமல் நபியின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டாமல் அவர்களை உதாரணப் படுத்தாமல் நாம் பேசி விட முடியாது.அப்படி பேசினாலும் அது மார்க்கமாக ஆகாது.

உலகில் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கிறதோ அத்தனை துறைகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை தன் ஆழிய சிந்தனைகளை தன் சிறந்த வழிகாட்டுதல்களை அதில் பதிவு செய்திருக்கிறார்கள்.சமயம்,சமூகம், அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு,அறிவியல், விஞ்ஞானம்,மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம்   உள்ளிட்ட அனைத்து  துறைகளிலும் அண்ணல்  நபி ஸல் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். அதில் தடம் பதித்திருக்கிறார்கள்.நபி ஸல் அவர்கள் தொடாத துறைகளே உலகத்தில் கிடையாது. அந்தள மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனைக்கும் முன்னோடியாக முன்மாதிரியாக அண்ணல் நபி ஸல் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் இல்லாத எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத எந்த தொழில் நுட்பங்களின் அறிவும் இல்லாத அந்த காலத்தில் எந்த ஆசிரியரிடத்திலும் போய் மண்டியிடாத எந்த அறிவியல் நூட்களையோ வரலாற்று நூட்களையோ புரட்டிப் பார்த்திடாத உம்மி நபி என்று சொல்லப்படுகிற அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் சொன்ன அறிவியல் கருத்துக்களையும் விஞ்ஞானக் கருத்துக்களையும் பார்த்து இன்றைக்கு உலகம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவியலையும் விஞ்ஞானத்தையும் கரைத்துக்குடித்த இன்றைய அறிஞர்கள்,புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த அறிவியல் விற்பன்னர்கள் நபி ஸல் அவர்கள் கூறிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் பார்த்து வியந்து போய் நிற்கிறார்கள்.ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போய் விட்டார்கள்.

அந்தளவிற்கு 6 ம் நூற்றாண்டில் அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் சொன்ன கருத்துக்களும் செய்திகளும் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.இன்றைக்கு உலகம் முழுக்க மக்கள் இஸ்லாத்தின் அலை அலையாய் வருவதற்கும் இஸ்லாம் விண்ணைத் தொடும் அளவுக்கு வளர்ந்து ஓங்கி நிற்பதற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று விஞ்ஞானத்தின் படிக்கட்டுகளில் ஒரு படியைக் கூட தாண்டாத அன்றைய காலத்திலும் அருமை நாயகம் ஸல் அவர்கள் சொன்ன அறிவியல் செய்திகள் தான். எந்த ஸ்கூலிலோ காலேஜிலோ போய் ஒரு எழுத்து கூட படிக்காமல் உம்மி நபியாக இருந்து கொண்டு இத்தனை அறிவுப்பூர்வமான செய்திகளை சொல்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையில் நபியாகத்தான் இருக்க வேண்டும்,அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் சத்திய மார்க்கமாகத்தான் இருக்க வேண்டும்.அவர்கள் காட்டித்தந்த கொள்கை கோட்பாடுகள் கலாச்சாரங்கள் அத்தனையும்  உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பி உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு நாம் பார்க்கிற கேட்கிற கேள்விப்படுகிற அத்தனை அறிவியல் ரீதியான விஞ்ஞான ரீதியான செய்திகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையும் மூலக்கூறும் நபி ஸல் அவர்கள் சொன்ன ஹதீஸ்கள் தான்.இன்றைக்கு உலகில் உலா வந்து கொண்டிருக்கிற அத்தனை அறிஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அறிவியல் விர்ப்பண்ணர்களுக்கும் முன்னோடி அருமை நாயகம் ஸல் அவர்கள் தான்.அன்றைக்கு அவர்கள் சாதாரணமாக சொன்ன விஷயங்கள் தான் இன்றைக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்னால் பல்வேறு சிரமங்களுக்குப் பின்னால் பல வருட ஆய்வுகளுக்கு பின்னால் நிரூபணமாகி இருக்கிறது.இன்னும் எத்தனையோ விஷயங்கள் குறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஹதீஸ் நூற்களை நாம் புரட்டிப் பார்த்தால் அண்ணல் நபி அவர்களின் வாழ்வையும் வாக்கையும் நாம் ஆய்வு செய்து பார்த்தால் இன்றைய விஞ்ஞானிகள் வியந்து போகிற அவர்கள் ஆச்சரியப்படுகிற எத்தனையோ செய்திகளை நாம் பார்க்கலாம்.இன்றைய காலத்து அறிஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவால் விடுகின்ற எத்தனையோ செய்திகள் ஹதீஸில் உண்டு.

அல்லாஹ் குர்ஆனில் ஈயைப் பற்றி ஒரு இடத்தில் சொல்கிறான்.இன்றைக்கு ஈக்கள் குறித்த பல்வேறு வகையான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உண்டு. மனிதன் படைக்கப்படுவதற்கு 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே ஈக்கள் உலகில் நடமாடுகின்றன. ஈ ஒரு நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அசைக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. வரை பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. குறிப்பாக ஈ அசிங்கமான, சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப் பொருள்கள் தேங்கும் இடங்களிலும் தான் அதிகம் இருக்கும்.இந்த ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள் பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிருமிகள் நிறைந்த இடங்களில்  வசித்தாலும் அந்தக் கிருமிகளால் ஈக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.காரணம் அந்த ஈக்களின் உடலிலேயே அல்லாஹ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வைத்திருக்கிறான். ஈயின் மரபணு முழுவதையும் ஆராய்ந்து பார்த்த ஆய்வாளர்கள் மனிதர்களை நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக கூறுகிறார்கள்.அதாவது நோயைப் பரப்புவதும் அந்த ஈ தான்.நோயுக்கான மருந்தும் அந்த ஈ தான் என்பது இன்றைய கண்டுபிடிப்பு.

ஆனால் 21 ம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த ஆய்வை அண்ணல் நபி ஸல் அவர்கள் அன்றைக்கே அறிமுகப்படுத்தி விட்டார்கள்.

إذا وقع الذباب في شرابِ أحدِكم فليغمِسْه ثم لينزعه؛ فإن في أحد جناحَيْه داءً، وفي الآخر شفاءً

قي رواية فإنَّ في أحدِ جناحيهِ سَمًّا وفي الآخرِ شفاءً وأنَّهُ يقدِّمُ السَّمَّ ويؤخِّرُ الشِّفاءَ

உங்களில் ஒருவருடைய குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் அதை அந்த குடிபானத்தில் ஒரு தடவை முக்கி பின்பு அதை வெளியே எடுத்து விடுங்கள். நிச்சயமாக அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் இன்னொன்றில் நிவாரணமும் இருக்கிறது. இன்னொரு அறிவிப்பில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் விஷமும் இன்னொன்றில் விஷ முறிவும் இருக்கிறது. அது விஷம் இருக்கும் அந்தப் பகுதியைத் தான் முறைப்படுத்தி விழும். (புகாரி ; 3320)

இன்றைய ஆய்வாளர்கள் ஈயில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்பதைத்தான் கண்டு பிடித்திருக்கிறார்கள்.ஆனால் நபி ஸல் அவர்கள் நோயும் இருக்கிறது நிவாரணமும் இருக்கிறது என்று சொன்னதோடு மட்டுமின்றி அதில் எதை முற்படுத்தும் என்பதைக் கூட சொல்லி விட்டார்கள்.

لا تقتلواالضفادع ، فإن نقيقها تسبيح

தவளைகளைக் கொல்லாதீர்கள். நிச்சயமாக அதன் சப்தம் தஸ்பீஹாகும். (பைஹகீ ; 9/318)

நாம் இங்கே யோசித்துப் பார்க்க வேண்டும்.அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

 وان من شيئ الا يسبح بحمده

அவன் புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்யாத எந்த வஸ்துவும் இல்லை.

நபி ஸல் அவர்களும் பல்வேறு சமயங்களில் இதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

وقال الإمام أحمد حدثنا ابن لهيعة حدثنا زبان عن سهل بن معاذ بن أنس عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر على قوم وهم وقوف على دواب لهم ورواحل فقال لهم اركبوها سالمة ودعوها سالمة ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق فرب مركوبة خير من راكبها وأكثر ذكرا لله منه .

நபி ஸல் அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள்.அவர்கள் தங்கள் வாகனங்களின் மீது அமர்ந்திருந்தார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள்.பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திக்ர் செய்கின்றன என்றார்கள். {அஹ்மது} 

எனவே எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து கொண்டு தான் இருக்கிறது.இருந்தாலும் உலகத்தில் எத்தனையோ மிருகங்கள் பறவைகள் புழுபூச்சிக்கள் இருக்கிற போது நபி ஸல் அவர்கள் தவளையை மட்டும் குறிப்பிட்டு ஏன் கொலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள் என்று யோசிக்கின்ற போது தான் இன்றைய ஆய்வு நமக்கு அதற்கான விடையைத் தருகிறது.

இன்றைக்கு பலவிதமான கிருமிகளுக்கும் அதன் மூலம் நமக்கு ஏற்படும் நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கொசுக்கள் தான்.கொசுக்கள் மூலமாக பல்வேறு வகையான நோய்கிருமிகள் பரவி மக்களை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.இந்த கொடுக்கள் இன்றைக்கு நம்மை ரொம்பவே கதிகலங்க  வைத்திருக்கிறது.பீதியடையச் செய்திருக்கிறது.அந்த கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நாமும் திணரிக் கொண்டிருக்கிறோம்.நம் அரசாங்கமும் திண்டாடிக் கொண்டிருக்கிறது.அந்த கொசுக்களை கட்டுப்படும் ஆற்றல் அதை அழிக்கும் ஆற்றல் தவளைகளுக்குத்தான் இருக்கிறது.

2013 ம் ஆண்டு கொசுக்களால் டெங்கு மலேரியா போன்ற நோய் பரவி அதனால் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்த அந்த நேரம்  ஒரு ஆய்வறிக்கை ஒன்று வெளிடப்பட்டது. தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை. தவளையின் முட்டையில் இருந்து வெளியே வரும் குஞ்சுகளுக்கு கொசுக்கள் தான் முக்கிய உணவு. அந்த தவளைகள் நீர்நிலைகளில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களை பிடித்து தின்று விடும். ஆனால் இன்றைக்கு தவளைகள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் கொசுக்களும் அதிகமாகி அதன் மூலம் நோய்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்றைக்கு தவளை இனம் அழியாமல் பாதுகாக்கப்படுமோ அன்றைக்குத்தான் கொசுக்களின் இனப்பெருக்கம் குறைந்து அதனால் நோயும் குறையும். எனவே தவளை இனத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு ஆய்வறிக்கை வெளி வந்தது. இந்த அறிவியல் உண்மையைத்தான் அதனால் தான் தவளைகளைக் கொல்லாதீர்கள் என்ற ஹதீஸின் மூலம் நபி ஸல் அவர்கள் அன்றைக்கே சொன்னார்கள்.

இப்படி நிறைய செய்திகள் ஹதீஸிலே உண்டு.

அதே போன்று நாய் என்பது நஜீஸ் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அந்த நாயைக் குறித்து நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

إذا وَلغَ الكلبُ في الإناءِ فاغسلوهُ سبعَ مراتٍ السابعةُ بالتُّرابِ   

நாய் பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். அதில் ஏழாவது முறை மண்ணை கொண்டு கழுவுங்கள். (அபூதாவூது ; 73)

நாய் வாய் வைத்த இடத்தை தண்ணீரால் கழுவ வேண்டும் என்று சொல்வது நமக்கு புரிகிறது. ஏனென்றால் நஜீஸை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை தண்ணீருக்கு இருக்கிறது.இறுதியாக மண்ணைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி நமக்கு ஏற்படுகிறது.இந்த கேள்விக்கும் இன்றைய ஆய்வு நமக்கு பதில் தருகிறது.நாயின் எச்சிலில் ரேபிஸ் என்ற ஒரு வகையான கொடிய வைரஸ்கள் இருக்கிறது.அது உடலுக்குள் சென்று விட்டால் மூளையை பாதித்து விடும் நரம்பு மண்டலத்தையும் பாதித்து விடும்.இந்த கொடிய வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மண்ணிற்கு இருப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.இந்த மிகச்சிறந்த ஆய்வைத்தான் அருமை நாயகம் ஸல் அவர்கள் இந்த ஹதீஸின் வழியாக சமூகத்திற்கு தந்திருக்கிறார்கள்.

மட்டுமல்ல நபி ஸல் அவர்கள் நமக்கு கற்றுத்தந்த மிக முக்கியமான சுன்னத்துகளில் ஒன்று ஆனால் அதன் அருமையும் அதன் பலன்களும் விளங்காமல் அதிகமான மக்களால் புரக்கணிக்கப்படும் சுன்னத்துகளில் ஒன்று தாடி.தாடி வைப்பவதை மிகச்சிறந்த சுன்னத்தாக இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது.ஆனால் இன்றைக்கு முழுக்க சிரைத்துக் கொள்வது பேஷனாகி விட்டது.தாடி வைப்பதற்கே வெக்கப்படுகிற சமுதாயமாக நாம் மாறியிருக்கிறோம்.

நபி ஸல் அவர்கள் தாடி வைப்பதை சுன்னத்தாக்கியதிலும் அறிவியல் ஒழிந்திருக்கிறது. விஞ்ஞானம் மறைந்திருக்கிறது.சூரியனிலிருந்து 95 சதவீத புற ஊதாக்கதிர்கள்  நம் சருமத்தை நேரடியாக தாக்குகிறது.அது முழுமையாக நம் சருமத்தைத் தாக்கினால் அதன் மூலம் புற்று நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாம் வைத்திருக்கும் தாடி தான் அந்தக் கதிர்கள் நம் முகத்தைத் தாக்காமல்  பாதுகாக்கிறது. அதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாக ஒருஆய்வு அறிக்கை கூறுகிறது.

அதேபோன்று இஸ்லாம் தங்கம் அணிவதை ஆண்களுக்கு தடை விதித்திருக்கிறது. பெண்களுக்கு அனுமதித்திருக்கிறது. பொதுவாக இஸ்லாம் அனுமதித்த அனைத்தும் மனித சமூகத்திற்கு நன்மையாக இருக்கும். இஸ்லாம் தடை செய்த அனைத்தும் மனித சமூகத்திற்கு கெடுதியாகத்தான் இருக்கும்.

இங்கே நாம் ஒன்றை சிந்தித்துப் பாரக்க கடமைப்பட்டிருக்கிறோம்.ஒரே தங்கம் தான். நபி ஸல் அவர்கள் அதை அணிவதற்கு ஆண்களுக்கு தடை விதித்திருக் கிறார்கள்.ஆனால் பெண்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் தங்கம் கெடுதி என்றால் ஆபத்து என்றால் இரண்டு பேருக்கும் தடை செய்திருக்க வேண்டும்.இல்லை அதில் நன்மை என்றால் இரண்டு பேருக்கும் அனுமதி அளித்திருக்க வேண்டும்.ஆனால் பெண்களுக்கு அனுமதியளித்த அண்ணல் நபி ஸல் அவர்கள் ஏன் ஆண்களுக்கு தடை விதித்தார்கள் என்ற சந்தேகமும் ஐயமும் நமக்கு ஏற்படுகிறது.இதற்கும் இன்றைய ஆய்வில் தெளிவிருக்கிறது.

பொதுவாக ஆண்கள் வேகமானவர்கள், சுறுசுறுப்பானவர்கள், பலம் மிக்கவர்கள். அந்த வேகமும், சுறுசுறுப்பும்,பலமும் அவர்களுக்கு இருக்க வேண்டுமென்றால் அவர்களின் உடல் உஷ்ணமாக இருக்க வேண்டும்.அவர்களின் உடலில் உஷ்ணம் இல்லையென்றால் அவர்களுக்கு வேகமும் சுறுசுறுப்பும் பலமும் இருக்காது.ஆனால்  பெண்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். அவர்களின் உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பெண்களின் உடலுக்கு குளிர்ச்சி மிக அவசியம். பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்குக் கூட குளிர்ச்சி வேண்டும். இஸ்லாமிய பெண்கள் அதிகாலைத் தொழுகைக்காக தினமும் ஒழு என்ற பெயரில் உடலில் தண்ணீரை ஊற்றி உடலை குளுமைப் படுத்திக் கொள்வதால் உலக அளவில் இஸ்லாமியப் பெண்களுக்கு பெரும்பாலும் குழந்தையின்மை ஏற்படுவதில்லை என்று கூறுகிறார்கள்.

மட்டுமல்ல பெண்களிடம் தேவையான குளிர்ச்சி இருந்தால் தான் அவர்களின் அழகும் கவர்ச்சியும் பாதுகாக்கப்படும். உடம்பில் உஷ்ணத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை தங்கத்திற்கு உண்டு.அதனால் தான் தங்கம் அணிவதற்கு பெண்களுக்கு அனுமதியளித்தார்கள் நபி ஸல் அவர்கள். ஆனால் ஆண்கள் தங்கம் அணிந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உஷ்ணம் கிடைக்காமல் போய் விடும். எனவே ஆண்களுக்கு தடை விதித்தார்கள்.

இப்படி அறிவியலும் விஞ்ஞானமும் கரை புரண்டோடுகின்ற இன்றைய அத்தனை அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கிற எத்தனையோ செய்திகள் ஹதீஸ்களில் நிறைய உண்டு.அவைகளைப் பார்க்க வேண்டும்.படிக்க வேண்டும்.புரிய வேண்டும்.அதை நம்ப வேண்டும்.இன்றைக்கு அறிவியலும் விஞ்ஞானம் எல்லாம் வளர்ந்து விட்ட காலத்தில் இதுமாதிரியான ஹதீஸ்களை நாம் நம்புகிறோம். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லாத அந்த காலகட்டத்தில் ஸஹாபாக்கள் இதை நம்பினார்கள். அது தான் உண்மையான ஈமான். அந்த உறுதியான ஈமான் நம்மிடம் வர வேண்டும்.

 

No comments:

Post a Comment