Thursday, April 7, 2022

நன்மைகள் யாருக்காக ?

 

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. (அல்குர்ஆன் : 6:162)

நாம் நம் வாழ்க்கையில் செய்யக்கூடிய காரியங்கள் எதுவாக இருந்தாலும் எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதில் ஒரு குறிக்கோல் இருக்கும்,ஒரு நோக்கம்,ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்,ஒரு இலட்சியம் இருக்கும்.குறிக்கோல் இல்லாமல் நோக்கம் இல்லாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் இலட்சியம் இல்லாமல் நாம் எதையும் செய்வதில்லை.செய்யவும் கூடாது. ஒரு தொழில் தொடங்குகிறோம் என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்கும்.ஒரு வீடு, ஒரு இடம், இப்படி ஒவ்வொரு காரியங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஒரு நோக்கம் ஒளிந்திருக்கும்.

ஆனால் அமல்கள் என்று வருகின்ற போது, மார்க்கத்தினுடைய காரியங்கள் என்று வருகின்ற போது அங்கே பல நோக்கங்களோ பல குறிக்கோல்களோ பல எதிர்பார்ப்புகளோ இருக்கக்கூடாது. அங்கே இருக்க வேண்டிய ஒரே நோக்கமும் ஒரே குறிக்கோலும் அல்லாஹ்வாகத் தான் இருக்க வேண்டும். செய்கின்ற அனைத்துக் காரியங்களும் நல்லமல்களும் அல்லாஹ்வுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.

அமல்களைப் பொறுத்த வரை, அது நமக்குப் பயன் தர வேண்டுமென்றால், இஸ்லாம் அதற்கு சில கன்டிஷன்களை முன் வைக்கிறது.முதல் விஷயம், ஈமான் இருக்க வேண்டும். ஈமான் இல்லாமல் எத்தனை அமல்களைச் செய்தாலும் அது பயனற்றுப் போய் விடும்.இரண்டாவது, அந்த அமல்களுக்கு ஷரீஅத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அல்லது ஷரீஅத்தின் அனுமதி இருக்க வேண்டும்.ஷரீஅத் வழிகாட்டாத ஷரீஅத்தின் அனுமதியில்லாத ஒரு அமல், அது பித்அத்தாக ஆகி விடும்.அதுவும் பயனற்றுப் போய் விடும். மூன்றாவது, மார்க்கம் வகுத்துத் தந்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அந்த அமல் இருக்க வேண்டும். ஃபர்ளுகள் வாஜிபுகள், சுன்னத்துக்கள், முஸ்தஹப்புகள் மக்ரூஹுகள், ஹராம்கள் போன்ற அமல்களின் அத்தனை ஒழுங்கு முறைகளையும் பேணப்பட வேண்டும்.இந்த ஒழுங்குகள் பேணப்பட வில்லையென்றால் அது பயனில்லாமல் போய் விடும்.

 

நான்காவது மிக முக்கியமான விஷயம், அது தான் இக்லாஸ். செய்கின்ற காரியம் எதுவாக இருந்தாலும் அதில் இக்லாஸ் இருக்க வேண்டும்.வேறு எந்த உலகியல் ரீதியான நோக்கங்களோ பெருமைகளோ இல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டும் அந்த காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

قال الفضيل بن عياض في هذه الآية: "أخلصه وأصوبه". قيل: "يا أبا علي ما أخلصه وأصوبه؟" قال: أن العمل إذا كان خالصا ولم يكن صوابا لم تقبل وإذا صوابا ولم يكن خالصا لم يقبل، حتى يكون خالصاً صواباً؛ والخالص أن يكون لله، والصواب أن يكون على السنة".

ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள், இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் போது, அக்லஸ், அஸ்வப் என்று கூறினார்கள். அக்லஸ், அஸ்வப் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அக்லஸ் என்பது, அந்தக் காரியத்தை அல்லாஹ்விற்காக செய்வது. அஸ்வப் என்பது, நபி  அவர்களின் வழிமுறையின் படி அமைவது. ஒரு அமலில் மனத்தூய்மை இருந்து சரியாக இல்லை என்றாலும், சரியாக இருந்து மனத்தூய்மை இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே எந்த அமலாக இருந்தாலும் சரியாகவும் இருக்க வேண்டும். மனத்தூய்மையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

 

இன்றைக்கு நம்மில் அதிகம் இல்லாமல் போன விஷயம் இது தான், நம்மிடம் ஈமான் இருக்கிறது. ஷரீஅத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.அமல்களின் ஒழுங்குகள் ஓரளவுக்கு இருக்கிறது. மனத்தூய்மை தான் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு வகையில் நம் அமல்களில் முகஸ்துதி நுழைந்து விடுகிறது. அவர் பார்க்க வேண்டும், அவர் பாராட்ட வேண்டும், அவர் நம்மை நல்ல விதமாக நினைக்க வேண்டும்,நாம் செய்கின்ற அமல் நான்கு பேருக்குத் தெரிய வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும் நம்மில் அதிகரித்து விட்டது. இந்த எண்ணம், நம் அமல்கள் அனைத்தையும் பாழாக்கி விடும்.

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இத்தகையவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்திற்கு (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 2:264) 

அந்த மழை எப்படி மண்ணை ஒன்றுமில்லாமல்  துடைத்து விடுகிறதோ அதுபோல் முகஸ்துதி ஒருவரின் நன்மைகளை ஒன்று மில்லாமல் துடைத்து விடும்.


قال بعضُ الحُكماء: "مثَل مَن يعمل رياءً وسُمعة، كمثَل مَن ملأ كيسَه حصًى، ثم دخَل السوق؛ ليشتريَ به، فإذا فتَحَه بين يدي البائع افتضح، وضرَب به وجهه، فلم يحصل له به منفعةٌ سوى قولِ الناس: ما أملأَ كيسه، ولا يُعطَى به شيء، فكذلك مَن عمِل للرياء والسُّمعة، لا منفعةَ له في عمله سوى مقالة الناس، ولا ثوابَ له في الآخرة

ஞானிகள் கூறுகிறார்கள் முகஸ்துதிக்காக அமல் செய்பவன், பையில் பொடிக் கற்களை நிறப்பிக் கொண்டு கடைவீதிக்குப் பொருட்களை வாங்கச் செல்பவனைப் போல. பொருட்களை வாங்கி விட்டு வியாபாரிக்கு முன்பு அந்தப் பையைத் திறந்தால் அவனுக்கு தலைகுனிவு தான் ஏற்படும். சில நேரங்களில் அடியும் விழும்.கடைவீதியில் அவனுக்கு எந்தப் பொருளும் கிடைக்காது.அதேபோன்று தான் முகஸ்துதித்தாக அமல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பலனும் கிடைக்காது.

 

நம்மில் பலருடைய நிலை இப்படித்தான் இருக்கிறது. அமல்கள் அமல்களாக இல்லை. வெறும் விளம்பரங்களாக மட்டுமே இருக்கிறது.

 

"ترك العمل من أجل الناس رياء، والعمل من أجل الناس شرك، والإخلاص أن يعافيك الله منهما

மக்களுக்காக ஒரு காரியத்தை விடுவதற்குப் பெயர் முகஸ்துதியாகும்.மக்களுக்காக ஒரு காரியத்தை செய்வதற்குப் பெயர் இணை வைப்பாகும்.இந்த இரண்டும் இல்லை யென்றால் அதற்குப் பெயர் மனத்தூய்மையாகும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

யாருக்காக எதையும் விடவும் கூடாது.யாருக்காக எதையும் செய்யவும் கூடாது.ஒரு அமலை செய்வதாக இருந்தாலும், ஒரு பாவத்தை விடுவதாக இருந்தாலும் நம்மைப் படைத்த இறைவனுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.

 

دخل أعرابي المسجد فصلى صلاة ضيفة فقام إليه علي رضى الله عنه بالدرة وقال أعد الصلاة فأعادها مطمئناً فقال أهذه خير أم الأولى فقال الأعرابي الأولى لأني صليتها لله والثانية صليتها خوفاً من الدرة

ஒரு கிராமவாசி பள்ளிக்கு வந்து வேகமாக தொழுது முடித்தார். அதைப்பார்த்த அலி (ரலி) அவர்கள் கையில் சாட்டையையுடன் நீ சரியாகத் தொழ வில்லை. திருப்பித் தொழு என்றார்கள். அதற்குப் பிறகு அவர் நிதானமாகத் தொழுது முடித்தார். பிறகு அவரை அழைத்து, இந்த இரண்டு தொழுகைகளில் எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, முதல் தொழுகை தான் சிறந்தது என்று கூறினார். காரணம் கேட்ட போது, முதல் தொழுகையை அல்லாஹ்விற்காக இருந்தது. இரண்டாவது தொழுகை உங்கள் சாட்டைக்கு பயந்து இருந்தது என்று கூறினார்.

 

எனவே எதற்காகவும் யாருக்காகவும் நம் அமல்கள் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை அமல்கள் மறைக்கப்பட வேண்டும். மக்களுடைய பார்வையை விட்டும் அது திரை போடப்பட வேண்டும்.அந்த அமல்கள் தான் நம் வெற்றிக்குக் காரணமாக அமையும். நமக்கு சுவனத்தையும் பெற்றுத்தரும்.

ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه

ஏழு மனிதர்களுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலைத்தருவான் என்று வருகின்ற ஹதீஸில் அதில் ஒரு மனிதர், வலக்கரம் செய்த ஸதகாவை இடக்கரம் அறியாத அளவுக்கு மறைவாகச் செய்தார் என்று இடம் பெற்றுள்ளது. (புகாரி 660)

 

வலது கரம் செய்வது இடது கரத்திற்குக் கூட தெரியாது என்று நபி  சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு பூமியின் தென்பகுதியில் செய்த ஸதகாக்கள் பூமியின் வடப்பகுதி வரைக்கும் போய் விடுகிறது. அந்த அளவு நம் அமல்கள் வெட்ட வெளிச்ச மாக்கப்படுகிறது.

 

நம் முன்னோர்கள் செய்த அமல்களை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.அவர்கள் அமல்கள் செய்தார்கள் என்பதே யாருக்கும் தெரியாது.யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல. அது அவர்களின் குடும்பத்துக்கே தெரியாது.

 

وهذا داوود بن أبي هند ذُكر في ترجمته أنه صام أربعين سنة لا يعلم به أهله، كان يخرج في مهنته، ويأخذ معه غداءه، فيتوهمون أنه مُفطِر، فيتصدق به في الطريق، فيرجع آخر النهار إلى أهله فيأكل مع اهله

தாவூத் பின் அபூஹின்த் என்ற பெரியார், அவர்களின் குடும்பத்திற்குத் தெரியாமல் நோன்பு வைப்பார். ஏதாவது சாப்பிட்டு ஸஹர் வைத்து விடுவார்.பிறகு காலை உணவை கையில் எடுத்துக் கொண்டு தொழிலுக்கு கிழம்பி விடுவார். குடும்பத்தார், அதனை அவர் தான் சாப்பிடுவார் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அதை ஸதகா செய்து விட்டு மாலையில் தன் குடும்பத்தாரோடு இஃப்தார் உணவை சாப்பிடுவார்கள்.இப்படியே 40 வருடங்களாக நோன்பு நோற்றிருக் கிறார்கள்.

 

 كان علي بن الحسين زين العابدين يحمل الصدقات والطعام ليلاً على ظهره، ويوصل ذلك إلى بيوت الأرامل والفقراء في المدينة، ولا يعلمون من وضعها، وكان لا يستعين بخادم ولا عبد أو غيره .. لئلا يطلع عليه أحد .. وبقي كذلك سنوات طويلة، وما كان الفقراء والأرامل يعلمون كيف جاءهم هذا الطعام .. فلما مات وجدوا على ظهره آثاراً من السواد، فعلموا أن ذلك بسبب ما كان يحمله على ظهره ، فما انقطعت صدقة السر في المدينة حتى مات زين العابدين

ஹள்ரத் ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் இரவு நேரத்தில் தன் முதுகில் உணவுப் பொருட்களை சுமந்து கொண்டு கிளம்பி விடுவார்கள்.ஊரில் இருக்கிற ஏழைகள், அனாதைகளின் இல்லங்களில் அதை வைத்து விட்டு வந்து விடுவார்கள். செல்கிற பொழுது பணியாளர்களையோ அடிமை களையோ உதவிக்கு அழைத்துக் கொள்வதில்லை. காலையில் அந்தந்த வீடுகளில் உணவு மூட்டைகள் இருக்கும். ஆனால் வைத்தது யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இப்படியே பல காலங்களாக பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்களது முதுகிலே கருப்புத் தழும்புகள் தென்படுகிறது. அது என்னத் தழும்புகள் என்று மக்களுக்கு அப்போது புரிய வில்லை. ஆனால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அதுவரை வந்து கொண்டிருந்த ரகசியமான இரவு நேர உதவிகள் தடைபட்ட பொழுது தான், அவர்களின் அந்தத் தழும்புக்கான காரணம் புரிந்தது. அதுவரை இரவு நேரங்களில் தங்கள் வீடுகளில் உணவுப் பொருட்களை வைத்துச் சென்றது ஜெய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் தான் என்பதை விளங்கிக் கொண்டார்கள்.

 

இது ரமலான் மாதம். நன்மைகளை அள்ளும் மாதம். இந்த மாதத்தில் நாம் செய்கின்ற அமல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும். இல்லையென்றால் பயனற்றுப் போய் விடும்.

إنَّ الرَّجلَ لينصرِفُ ، وما كُتِبَ لَه إلَّا عُشرُ صلاتِهِ تُسعُها ثُمنُها سُبعُها سُدسُها خُمسُها رُبعُها ثُلثُها ، نِصفُها

ஒரு அடியான் தொழுது விட்டு திரும்புவான். ஆனால் அவனுக்கு அதில் பாதி நன்மை மட்டுமே எழுதப்படும். அல்லது மூன்றில் ஒரு பகுதி, அல்லது நான்கில் ஒரு பகுதி, அல்லது ஐந்தில் ஒரு பகுதி, அல்லது ஆறில் ஒரு பகுதி, அல்லது ஏழில் ஒரு பகுதி, அல்லது எட்டில் ஒரு பகுதி, அல்லது ஒன்பதில் ஒரு பகுதி, அல்லது பத்தில் ஒரு பகுதி நன்மை மட்டுமே எழுதப்படும். (அபூதாவூது ; 796)

No comments:

Post a Comment