Wednesday, September 16, 2020

நம் தோல்விக்கான காரணம்

 


                 (குடியுரிமை மசோதா பிரச்சனையின் போது பேசிய உரை)

120 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நாடு இந்தியா. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நாடு இந்தியா. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக பலநூறு உலமாக்கள் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரை கொடுத்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் ரத்தத்தினால் தான் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடிந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.

இந்த தேசத்தின்  உயர்வுக்கும்,  விடுதலைக்கும் உடலாலும்உயிராலும், உணர்வுகளாலும்   மாபெரும் அர்ப்பணிப்பை  அளித்த  ஓர்  ஒப்பற்ற சமூகமான முஸ்லிம்  சமூகம்,  சுதந்திர இந்தியாவில் இன்று பல்வேறு பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து வருகின்றது. இஸ்லாத்திற்கு எதிரான பலவகையான அடக்கு முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் பாசிச அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. முத்தலாக் தடை சட்டம், பசுவதை தடை சட்டம், பொது சிவில் சட்டம், இப்படி இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சுதந்திரத்தை பெற்றுத்தந்த நமக்கு இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கும் சுதந்திரமாக இஸ்லாமிய கடமைகளை செய்வதற்கும் கூட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு காரியங்களும் சிறிய சிறிய இடைவெளிக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஃபாஸிச பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகின்றோம். ஒரு விஷயம் நடந்து அது பூகம்பமாக வெடித்து அதற்காக ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் விவாதங்களும் நடந்து முடிவதற்குள் அடுத்த விஷயம். அதைப்பற்றி பேசி முடிப்பதற்குள் அடுத்த விஷயம். பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினோம். அது முடிந்து கொஞ்ச நாட்களுக்குள் மியான்மர் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்சனை.அநியாயமாக கொல்லப்படுகிற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக போராட்டம் நடந்தது. அதுமுடிந்து கொஞ்ச நாளில் முத்தலாக் தடைச்சட்டம் வந்தது. அதை எதிர்த்து போராடினோம். அதிலிருந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்சனை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அது முடிவதற்குள் சர்ச்சைக்குறிய பாபர் மசூதி தீர்ப்பு. அதன் வேகம் அடங்குவதற்குள் இப்போது குடியுரிமை பிரச்சனை. இப்படி போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் விவாதங்களிலுமே நம் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருகிக் கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் வருடத்திற்கு வருடம் முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருகுவதும் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தா விட்டால், இந்தியாவில் இருந்து மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாகி விடும் என்று ஃபாசிச கட்சியின் எம்.பி ஒருவர் கடந்த வருடம் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதன் பின்னனியில் தான் இந்த குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறி இருக்கிறது.

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப் படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். 1955ல் ஒரு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டப்பட்டது. அந்த சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே indian citizenchip  இந்திய குடியுரிமை பெற முடியும்.

ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற சட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் எந்த விதமான உரிய ஆவணங்கள் இல்லை யென்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று சட்ட திருத்தம் செய்திருக்கிறார்கள்.இதனை நியாயப்படுத்தக் கூடியவர்கள் சொல்லக்கூடிய காரணம், மேல் சொன்ன நாடுகளில் அவர்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள்.மதத்தின் பெயரால் அவர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள்.அவர்கள் வாழ்வுரிமையை இழக்கிறார்கள். அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அவர்கள் சொல்வது உண்மை தான்.அண்டை நாடுகளில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நம் நாட்டில் இடம் கொடுக்க வேண்டும்.அவர்களை அரவணைக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் செய்த மிகப்பெரிய அநீதம் என்ன வென்றால் அந்த குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்களை விட்டு விட்டார்கள்.இலங்கை தமிழர்களை விட்டு விட்டார்கள். இதனால் அண்டை நாடுகளிலிருந்து  நம் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற லட்சக்கான இஸ்லாமியர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது.குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் முஸ்லிம்களின் வாழ்வு நிற்கதியாகி இருக்கிறது.நம் நாட்டில் வாழ்கின்ற சுமார் பத்து லட்சம் இலங்கை தமிழர்கள் குடியுரிமையை இழக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

நம் நாட்டில் வாழ்கின்ற இலங்கையைச் சார்ந்த வயதான பெண்கள், இத்தனை காலம் வாழ்ந்தும் எங்களுக்கு குடியுரிமை இல்லையென்றால் எங்களை ஒட்டு மொத்தமாக கப்பலில் ஏற்றி கடலில் போட்டு விடுங்கள். எங்களுக்கு இதைத்தவிர வேறு வழி தெரிய வில்லை என்று சொல்கிறார்கள்.

பொதுவாக நம் நாடு மதச்சார்பற்ற நாடு. நம்  நாட்டில் மதத்தின் பெயரால் பிறப்பின் பெயரால் பாரபட்சம் பார்க்கக்கூடாது.பிரிவினை பார்க்கக்கூடாது.சட்டத்தின் முன் அனைவரும் சமம்.அப்படி பிரிவினை பார்ப்பது தண்டனைக் குரிய குற்றம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த தண்டனைக்குறிய குற்றம் தான் மசோதா என்ற பெயரில் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது.

யாருக்கும் குடியுரிமை வழங்கங்கூடாது என்று நாம் சொல்ல வில்லை.குடியுரிமை வழங்குவதை நாம் ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம். வெளியூரிலிருந்து எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்தவர்களுக்கு இல்லத்தில் இடம் கொடுத்து, சொத்தில் பங்கு கொடுத்து, வியாபாரத்தில் இணைத்துக் கொண்டு, கட்டிய மனைவியைக் கூட விட்டுக் கொடுத்து எல்லா வகையான தியாகங்களையும் செய்த பரம்பரையில் வந்தவர்கள் தான் நாம். எனவே குடியுரிமையை நாம் எதிர்க்க வில்லை.இஸ்லாமியர்களை ஏன் விட வேண்டும்? இஸ்லாமியர்கள் என்ன தவறு செய்தார்கள்? என்பது தான் நம் கேள்வியும் ஆதங்கமும். எல்லோரையும் ஆதிரித்து இஸ்லாமியர்கள் விடப்படுகிறார்கள் என்றால் இது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டம்.இந்திய மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைக்கின்ற சட்டம். அமைதியாக சகோதர உணர்வோடு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு மத்தியில் பிரிவினை உணர்வை ஏற்படுத்துகின்ற சட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இதுவெல்லாம் நாம் அறிந்த விஷயம். இந்த ஜும்ஆவின் வாயிலாக நான் உங்களுக்கு நினைவுபடுத்தும் செய்தி என்னவென்றால், அல்லாஹ்  முஸ்லிம்களுக்கு  வெற்றியையும் நிம்மதியான வாழ்க்கையையும்  தருவதாக  அல்குர்ஆனில்  பல இடங்களில்  வாக்களிக்கின்றான்.

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

நீங்கள் தைரியத்தை இழந்து விடாதீர்கள்.கவலை கொள்ளாதீர்கள். ஈமான் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் தான் உ.யர்ந்தவர்கள். (அல்குர்ஆன் : 3 ; 139)

ஆனால் இன்று  உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கும்,  இஸ்லாத்திற்கும்  எதிரான நிலைப்பாடு  கொண்டவர்கள் தான் எல்லா விஷயங்களிலும் அமோக  வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.  இஸ்லாமியர்கள் தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியத்தில் இருந்தும், வெற்றி பெறும் சமூகம் என்று இறைவனால் அடையாளம் காட்டப்பட்ட சமூகமாக இருந்தும், தோல்விக்கு மேல் தோல்வியை சந்திப்பதற்கு என்ன காரணம்? என்று யோசித்துப் பார்த்தால் நபி அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸ் அதற்கான பதிலாக அமைகின்றது. என்றைக்கும் பொய் சொல்லாத, எதிர்காலத்தை சரியாக கணித்துச் சொல்கிற நபியின் நாவு இன்றைக்கு நடக்கிற சூழ்நிலையையும் சரியாக கணித்துச் சொல்லியிருக்கிறது.

يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها . فقال قائل : ومن قلة نحن يومئذ ؟ قال : بل أنتم يومئذ كثير ، ولكنكم غثاء كغثاء السيل ، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم ، وليقذفن الله في قلوبكم الوهن . فقال قائل : يا رسول اللهِ ! وما الوهن ؟ قال : حب الدنيا وكراهية الموت .

الراوي: ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم المحدث: أبو داود - المصدر: سنن أبي داود - الصفحة أو الرقم: 4297

உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் (மற்றவர்களை) அழைப்பது போல் ஒவ்வொரு திசையிலிருந்தும் பிற சமுதாயங்கள் உங்களை அழிக்க  (மற்றவர்களுக்கு) அழைப்பு விடுக்கும் கட்டம் வரும் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் நாங்கள் சிறு கூட்டமாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி அவர்கள், அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்; எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று (மதிப்பிழந்தவர்களாக) ஆகிவிடுவீர்கள்.

உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) பயம் இல்லாமல் போகும். உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் வஹ்னைஏற்படுத்திவிடுவான் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பதுஎன்று பதிலளித்தார்கள். (அபூதாவூது :4297)

நபி அவர்கள்  சொன்னதைப் போன்றே இன்றைக்கு 120 கோடிக்கும் மேலாக வாழக்கூடிய பெரும்பான்மை சமூகமாக இருக்கிறோம்.இருந்தாலும் எந்த பலமும் இல்லாமல் அச்சுறுத்தப்படுகின்ற, அடக்கப்படுகின்ற, ஒடுக்கப்படுகின்ற, பலவீனமான சமூகமாக இருக்கிறோம். ஒரு நேரம் இருந்தது. இஸ்லாமியர்களைப் பார்த்து பிற சமூகம் நடுங்கியது.ஆனால் இன்றைக்கு நாம் அவர்களைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறோம்.ஒரு நேரம் இருந்தது. மரணத்தை நினைத்து பயப்படாத, எதற்கும் துணிந்த ஒரு சமூகமாக இஸ்லாமியர்கள் இருந்தார்கள்.

 أن خالداً رضي الله عنه كتب إلى ملك فارس: بسم الله الرحمن الرحيم، من خالد بن الوليد إلى ملوك فارس، فالحمد لله الذي حل نظامكم ووهن كيدكم، وفرق كلمتكم... فأسلموا وإلا فأدوا الجزية وإلا فقد جئتكم بقوم يحبون الموت كما تحبون الحياة 

காலித் ரலி அவர்கள் பாரசீக மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் ; உங்கள் கட்டமைப்பை உடைத்து உங்கள் சூழ்ச்சியை பலவீனமாக்கி உங்கள் கருத்தை சிதரடித்த  அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஜிஸ்யாவை நிறைவேற்றுங்கள். அதுவும் இல்லையெனில் நீங்கள் வாழ்க்கையை விரும்புவதைப் போன்று மரணத்தை விரும்புகிற ஒரு கூட்டத்துடன் நான் உங்களிடம் வந்துள்ளேன். (அல்பிதாயா வன் நிஹாயா : 6/384)

இன்றைக்கு நாம் மவ்த்தை நினைத்துப் பயந்து கொண்டிருக்கிறோம்.காரணம் மவ்த்திற்கான எந்த தயாரிப்பும் நம்மிடத்தில் இல்லை.

அதேபோன்று ஒரு நேரம் இருந்தது. உலகத்தின் மீது மோகம் கொள்ளாத உலகத்தை வெறுத்த சமூகமாக இஸ்லாமியர்கள் இருந்தார்கள்.ஆனால் இன்றைக்கு பொருளாசை கூடி பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருவதை பார்க்கிறோம். இதுபோன்ற நம்மிடம் ஏற்பட்ட மாற்றங்கள் தான் நாம் பலவீனமாக் கப்படுவதற்கும் நாம் அச்சுறுத்தப்படுவதற்கும் தீண்டப்படுவதற்கும் காரணம்.


No comments:

Post a Comment