Thursday, July 2, 2020

இஸ்லாத்தின் பார்வையில் நிவ் இயர்





உலகம் 2021 ம் வருடத்தை நிறைவு செய்து 2022 ல் அடியெடுத்து வைக்க இருக்கிறது.  ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கிற கூத்துக்களையெல்லாம் நாம் பார்த்திருப்போம். அல்லது அறிந்திருப்போம்.


புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகில் எப்படி அறிமுகமானது. எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை சற்று யோசித்துப் பார்க்கலாம். பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

பாபிலோன் நாட்டில் கி.மு 2000 வது ஆண்டில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இலையுதிர்காலம் முடிந்து பூமியில் புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை வரவேற்கும் விதமாக பாபிலோனிய மக்கள் புத்தாண்டு கொண்டாடினர். 11 நாட்கள் அவர்களின் கொண்டாட்டம் களை கட்டும்.

சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரில் ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. அந்த காலண்டரில் 7 வது மாதமாக செப்டம்பரும், 8 வது மாதமாக அக்டோபரும், 9 வது மாதமாக நவம்பரும், 10 வது மாதமாக டிசம்பரும் இருந்தது. அதில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது.அந்த அடிப்படையில் மார்ச் 1 ம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர்.

ஏசு கிருஸ்து பிறந்த தினம் என்று சொல்லப்படும் டிசம்பர்-25க்கு பிறகு தான் கி.பி. துவங்குகின்றது. அன்றைய தினத்தை புத்தாண்டு என கிறித்துவர்கள் ஆரம்பத்தில் கொண்டாடி வந்தார்கள். பிரான்சின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மார்ச்-25 முதல் ஏப்ரல்-1" வரை” உள்ள தினத்தினை புத்தாண்டு தினமாக கொண்டாடியுள்ளனர். கடைசி நாளான ஏப்ரல்-1ல் புத்தாண்டு பிறப்பதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பே புத்தாண்டினை வரவேற்க மக்கள் தயாராக இருக்க விடுமுறை விடப்பட்ட வரலாறும் உண்டு. பிரான்சின் (Edit of Roussillion) ரோசோலியன் என்பவர் தான் இந்த புத்தாண்டு குழப்பத்திற்கு தீர்வு கண்டவர். மக்கள் அனைவரும் புத்தாண்டினை பொதுவாக ஒரே தினத்தில் தான் கொண்டாட வேண்டும் என , “ஆகஸ்ட் 91564ல் ஒரு முடிவினை தெரிவிக்கின்றார். அந்த முடிவு தான் புது ஆங்கில புத்தாண்டு தினமாக இன்று வரை பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் ஜனவரி 1”.

அதன் பிறகு கிறித்தவர்கள் டிசம்பர்-25னை கிருஸ்து பிறந்த தினமாகவும் ஜனவரி 1னை கிருஸ்துவுக்கு பெயரிடப்பட்ட தினமாகவும் கொண்டாடி ஆறுதல் அடைகின்றனர்.உலகில் குறிப்பாக கிறிஸ்தவர்கள் புத்தாண்டிற்கு அதிக முக்கியத்துவத்தை தருவார்கள். கிருஸ்துமஸ்புனித வெள்ளிஈஸ்டர் என வரிசையாக விழாக்கள் வருவதை ஒட்டி கிருஸ்துவர்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளும்,திருவிழாக்களும் ஏராளம். தக்காளிகளை டன் கணக்கில் வாங்கி ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வீதியெங்கும் தக்காளி மயமாக காட்சி தரும் தக்காளித் திருவிழா, கலர்ப்பொடிகளை ஒருவருக்கொருவர் தூவி அழகான முகத்தை அலங்கோலமாக்கும் ஹோலிப்பண்டிகை, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் வீர விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு காளை மாடுகளுடன் மோதி பரிசு பெற நினைக்கும் ஜல்லிக்கட்டுத் திருவிழா, காசைக் கரியாக்கும்  தீபாவளி,பொங்கள் போன்ற திருவிழாக்கள். எதற்காக கொண்டாடுகிறோம் ஏன் கொண்டாடுகிறோம் என்று காரணம் தெரியாமலேயே பல்வேறு பண்டிகைகள் நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த வரிசையில் ஒன்று தான்  இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ம் தேதி இரவு 12 மணி ஆகி விட்டால் happy new year sms  கள் greeting card கள் வானவேடிக்கைகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அன்றைக்கு இரவு நாட்டில் நடக்கிற அவலங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் அளவே கிடையாது. இதில் வேடிக்கையான விஷயமும் வேதனையான விஷயமும் என்ன வென்றால் உறுதியான ஈமானுக்கும் பலமான இறை நம்பிக்கைக்கும் அடையாளமாக இருக்க வேண்டிய முஸ்லிம்களும் அதை கொண்டாடுகிறார்கள் என்பது தான். புத்தாண்டு இரவு அதிகம் happy new year மெஸேஜ்களை பகிர்வது நம் இஸ்லாமிய சொந்தங்கள் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

முஸ்லிம் சமூகம் அதை கொண்டாடலாமா? கொண்டாடக் கூடாதா? அது நம் சமூகத்திற்கு அவசியமா? இல்லையா? என்று பார்ப்பதற்கு முன்பு இந்த புத்தாண்டு தினம் என்பது கொண்டாடப்படும் நாள் தானா என்பதை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட தவனை என்று நமக்கெல்லாம் தெரியும்.ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறுகின்ற ரிஸ்க் எவ்வளவு? இந்த உலகில் வாழும் நாட்கள் எவ்வளவு? அவன்  செய்யும் செயல்கள், என்ன அவன் நல்லவனா? கெட்டவனா? என்ற இந்த நான்கு விஷயங்களையும் மனிதன், அவன் தாயின் வயிற்றில் இருக்கிற பொழுதே அல்லாஹ் எழுதி விடுகிறான்.எனவே நாம் ஒரு குறிப்பிட்ட தவனையை நோக்கித் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு புத்தாண்டு துவங்கும் போதும் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. நாம் அனுதினமும் காலண்டரில் ஒரு தாளைக் கிழிக்கும் போதெல்லாம் நம் வாழ்நாளில் ஒரு நாளை கிழிக்கிறோம் என்று பொருள். நாம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும் போது நம் வாழ்நாளில் ஒரு நாள் போய் விட்டது என்று பொருள்.அது போன்று தான் ஒரு வருடம் பிறக்கும் போது நம் வாழ்நாளில் ஒரு வருடம் மைனஸ் ஆகி விட்டது என்று பொருள். நிவ் இயர் என்று ஆண்டின் தொடக்கத்தில் புத்தாண்டை கொண்டாடக் கூடிய அறிவுஜீவிகள் கடந்த ஆண்டின் முடிவை நினைத்து வருத்தப் படுவதில்லை.எனவே அந்த வகையில் பார்க்கிற போது வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ வேண்டிய நாளல்ல,கவலைப்பட வேண்டிய நாள். ஆனால் இந்த சமூகம் இந்த உண்மையை உணராமல் அதை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்றால் இது எவ்வளவு பெரிய முட்டாள் தனமான ஒரு செயல் என்பதை நாம் ஆரம்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முட்டாள் தனமான காரியங்களில் முஸ்லிம்களும் ஈடுபடுவது தான் கவலை தரும் செய்தி. இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். அறிவையும் சிந்தனையையும் ஊக்கப்படுத்துகிற மார்க்கம், அறிவியல் ரீதியான செய்திகளை உலகத்திற்கு தந்த மார்க்கம்.பல அறிவியல் விர்ப்பன்னர்களை சமூகத்தின் வெளிச்சத்திற்கு கொண்ட வந்த மார்க்கம்.இஸ்லாம் கூறுகிற அறிவியல் உண்மைகளைப் பார்த்து இன்றைக்கு உலகம் வியந்து கொண்டிருக்கிறது.ஆனால் இத்தகைய மார்க்கத்தில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அறிவுக்கு பொருந்தாத காரியத்தை செய்து கொண்டிருக்கிற இஸ்லாமியச் சமூகம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய நிகழ்வு ஹிஜ்ரத். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மையமாக வைத்துத் தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த இஸ்லாமியப் புத்தாண்டின் துவக்கத்தில் கூட ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் கிறிஸ்துவர்கள் கடைபிடிக்கிற இந்த ஆங்கிலப் புத்தாண்டின் போது ஏற்படுகின்றது என்றால் நம் சமூகம் எங்கே போய் கொண்டிக்கிறது? எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது? என்பதை யோசிக்க வேண்டும்.

இஸ்லாம் ஈகைத்திருநாள்,தியாகத்திருநாள் இந்த இரண்டு நாட்களை மட்டும் தான் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள் என்று கூறுகிறது.

عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ (رواه أبو داود)

நபி  அவர்கள் மதீனா சென்ற போது அங்கிருந்த மக்கள் வருடத்தின் இரண்டு நாட்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தார்கள். இவ்விரண்டு நாட்கள் என்ன? என்று கேட்டார்கள்.ஜாஹிலிய்யா காலத்திலிருந்து இவ்விரு நாட்களிலும் நாங்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அப்போது நபி அவர்கள் இவ்விரு நாட்களை விட சிறந்த வேறு இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துள்ளான். ஒன்று தியாகத்திருநாள். இன்னொன்று ஈகைத்திருநாள் என்று சொன்னார்கள். (அபூதாவூது ; 1134)

இது தான் பண்டிகை. இது தான் திருநாள் என்று நமக்கு தெளிவாக வரையறுத்துச் சொல்லப்பட்ட பிறகு நாமாக ஒரு நாளை பண்டிகை நாளாக, கொண்டாடப்படும் நாளாக ஆக்கிக் கொள்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமையை யார் வழங்கியது?

இஸ்லாம் என்பது கட்டுப்பாடான மார்க்கம்.இப்படித்தான் செய்ய வேண்டும்,இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களுக்கும் ஒரு வரையரையை ஏற்படுத்திக் கொடுத்த மார்க்கம். இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிற அந்த வரையரைக்குள் நிற்பவர்கள் தான் உண்மையான முஸ்லிம்களாக முஃமின்களாக இருக்க முடியும்.அந்த வரையரை களைத் தாண்டுகிற போது அந்த ஈமான் கேள்விக்குரியது.

والذين لا يشهدون الزور
அவர்கள் வீணான காரியங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் : 25 ; 72)

وفي رواية عن ابن عباس أنه أعياد المشركين . عكرمة : لعب كان في الجاهلية يسمى بالزور

மேற்கூறப்பட்ட வசனத்தில் ஜூர் என்ற வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் இணைவைப்பாளர்களின் பண்டிகைகள் என்று விளக்கம் கூறுகிறார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் இருந்த கேளிக்கைகளுக்கு ஜூர் என்று சொல்லப்படும் என்று இக்ரிமா ரலி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)

அதில் கலந்து கொள்ளாதவர்கள் தான் உண்மையான முஃமின் என்றால் அதில் கலந்து கொள்பவர்களின் ஈமான் சந்தேகத்திற்குரியது என்று தானே பொருள்.

மாற்றார்களின் செயல்பாடுகள்  மட்டுமல்ல அதன் வாடை கூட நம்மிடம் வந்து விடக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

من تشبه بقوم فهو منهم
ஒரு சமூகத்திற்கு யார் ஒப்பாகி விட்டாரோ அவர் அந்த சமூகத்தைச் சார்ந்தவர். (அபூதாவூத் ; 4031)

மாற்றார்களோடு எந்த வகையிலும் ஒரு முஸ்லிம் ஒப்பாகி விடக்கூடாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகளைக் கூட முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقُولُواْ رَاعِنَا وَقُولُواْ انظُرْنَا وَاسْمَعُوا
ஈமான் கொண்டோர்களே! நீங்கள் ராஇனா என்று சொல்லாதீர்கள். உன்ளுர்னா என்று சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 2 ; 104)

عن عطية: (لا تقولوا راعنا)، قال: كان أناس من اليهود يقولون أرعنا سمعك! حتى قالها أناس من المسلمين: فكره الله لهم ما قالت اليهود فقال: (يا أيها الذين آمنوا لا تقولوا راعنا
யூதர்கள் கேளி செய்யும் நோக்கத்தோடு இரு அர்த்தங்களை தரும் வார்த்தைகளை பயன் படுத்துவார்கள். அதில் ஒன்று ராஇனா. இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள ராஇனா உன்ளுர்னா இவ்விரு வார்த்தைகளுக்கும் பாருங்கள், கவனியுங்கள்என்ற பொதுவான அர்த்தம் இருந்தாலும் ராஇனா என்ற வார்த்தை அப்ரானி மற்றும் சுர்யானி மொழிகளில் வேறு பொருள் இருக்கிறது. அதாவது ஒருவர் இன்னொருவரை திட்டுவதாக இருந்தால் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அந்த வார்த்தையைத் தான் யூதர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த முஸ்லிம்களில் சிலரும் இந்த வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போது இந்த வசனத்தை இறக்கி அவர்கள் சொல்கின்ற வார்த்தையை நீங்கள் சொல்ல வேண்டாம் என்று இறைவன் அறிவுறுத்தி னான்.வாழ்க்கையில் மட்டுமல்ல பயன்படுத்தும் வார்த்தையில் கூட பிற சமூகத்திற்கு ஒப்பாகி விடக்கூடாது என்பது தான் இந்த வசனம் தரும் செய்தி.

புத்தாண்டு பிறந்து விட்டால் அன்றைக்கு முழுக்க HAPPY NEW YEAR என்று செய்திகள் பறக்கும். அப்படி சொல்பவர்கள் இந்த வசனத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லா விஷயத்திலும் யூதர்களுக்கும் கிருத்தவர்களுக்கும் மாற்றம் செய்யும் படி நபி அவர்கள் வலியுறுத்தினார்கள். 

أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتْ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا ، وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ ، فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : ( وَيَسْأَلُونَكَ عَنْ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ).. إِلَى آخِرِ الْآيَةِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ ، فَبَلَغَ ذَلِكَ الْيَهُودَ ، فَقَالُوا : مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ ) رواه مسلم (302) .
ஒரு பெண்ணுக்கு மாதத்தீட்டு வந்து விட்டால் யூதர்கள் அந்த பெண்ணோடு அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். அவளை ஒதுக்கி விடுவார்கள். இது குறித்து ஸஹாபாக்கள் விளக்கம் கேட்ட போது மாதத்தீட்டைப் பற்றி கேட்கிறார்கள் (2 ; 222) என்ற வசனம் அருளப்பட்டது. நபி அவர்கள் தீட்டு வந்த பெண்ணுடன் வீடுகூடுவதைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள் என்றார்கள். இதை அறிந்த யூதர்கள், நம்முடைய எந்த விஷத்திலும் மாறு செய்யாமல் இவர் விடுவதில்லை என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 302)

صَلِّ صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حتَّى تَطْلُعَ الشَّمْسُ حتَّى تَرْتَفِعَ، فإنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بيْنَ قَرْنَيْ شيطَانٍ، وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الكُفَّارُ، ثُمَّ صَلِّ فإنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بالرُّمْحِ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ، فإنَّ حِينَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ، فَإِذَا أَقْبَلَ الفَيْءُ فَصَلِّ، فإنَّ الصَّلَاةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حتَّى تُصَلِّيَ العَصْرَ، ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حتَّى تَغْرُبَ الشَّمْسُ، فإنَّهَا تَغْرُبُ بيْنَ قَرْنَيْ شيطَانٍ، وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الكُفَّارُ
صحيح مسلم - الصفحة أو الرقم: 832
சூரியன் உதித்து மேலே உயரும் வரை தொழாதே! நிச்சயமாக சூரியன் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு மத்தியில் உதிக்கிறது. அப்போது காஃபிர்கள் சூரியனுக்கு சிரம் சாய்க்கிறார்கள். அஸருக்குப் பிறகு சூரியன் நன்கு மறையும் வரை தொழாதே! நிச்சயமாக சூரியன் ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு மத்தியில் மறைகிறது. அப்போது காஃபிர்கள் சூரியனுக்கு சிரம் சாய்க்கிறார்கள். (முஸ்லிம் ; 832) 

இன்றைக்கு தொழுகை மக்ரூஹான நேரங்கள் நமக்குத் தெரியும்.இந்த ஹதீஸில் நபி அவர்கள் وحينئذ يسجد لها الكفار என்று சொல்கிறார்கள். நாம் எப்போது தொழுதாலும் அல்லாஹ்வுக்காகத்தான் தொழப்போகிறோம். அல்லாஹ்வுக்குத்தான் ஸுஜூது செய்யப் போறோம், இருந்தாலும் ஏன் கூடாது என்றால், அந்த நேரம் அவர்கள் ஸுஜூது செய்யும் நேரம். எனவே அல்லாஹ்வுக்காக செய்யும் வணக்கம் கூட அவர்களுக்கு ஒப்பாகி விடும் என்றால் அதுவும் கூடாது என்று மார்க்கம் சொல்லியிருகிறது.

எனவே நாம் பேசுகிற பேச்சு முதல் நம் செயல்பாடுகள் வரை எதிலும் பிற மதங்களுக்கு பிற சமூகங்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்று அல்லாஹ் எச்சரித்த காரணத்தால் தான் ஸஹாபாக்கள் அது விஷயத்தில் ரொம்ப ரொம்ப கவனமாக இருந்தார்கள்.

قال أبو نعيم في الحلية حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ، ثنا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ، ثنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، أَنَّ زِيَادَ بْنَ حدير الْأَسَدِيَّ، قَالَ: "قَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَعَلَيَّ طَيْلَسَانُ وَشَارِبِي عَافٍ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ [ص:198] إِلَيَّ وَلَمْ يَرُدَّ السَّلَامَ، فَانْصَرَفْتُ عَنْهُ، فَأَتَيْتُ ابْنَهُ عَاصِمًا، فَقُلْتُ لَهُ: لَقَدْ رَمَيْتَ مِنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ فِي الرَّأْسِ، فَقَالَ: سَأَكْفِيكَ ذَلِكَ. فَلَقِيَ أَبَاهُ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَخُوكَ زِيَادُ بْنُ جَرِيرٍ يُسَلِّمُ عَلَيْكَ فَلَمْ تَرُدَّ عَلَيْهِ السَّلَامَ. فَقَالَ: "إِنِّي قَدْ رَأَيْتُ عَلَيْهِ طَيْلَسَانًا، وَرَأَيْتُ شَارِبَهُ عَافِيًا قَالَ: فَرَجَعَ إِلَيَّ فَأَخْبَرَنِي، فَانْطَلَقْتُ فَقَصَصْتُ شَارِبِي، وَكَانَ مَعِي بُرْدٌ شَقَقْتُهُ فَجَعَلْتُهُ إِزَارًا وَرِدَاءً، ثُمَّ أَقْبَلْتُ إِلَى عُمَرَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: وَعَلَيْكَ السَّلَامُ، هَذَا أَحْسَنُ مِمَّا كُنْتَ فِيهِ يَا زِيَاد
ஜியாத் என்பவர் ஹள்ரத் உமர் ரலி அவர்களை சந்தித்து ஸலாம் சொன்னார்கள். உமர் ரலி அவர்கள் அவரைப் பார்த்தார்கள். ஆனால் ஸலாமுக்கு பதில் கூற வில்லை. உடனே அவர், உமர் ரலி அவர்களின் மகன் ஆஸிம் ரலி அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறி, நீங்கள் தான் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆஸிம், உமர் ரலி அவர்களை சந்தித்து அதற்கு விளக்கம் கேட்ட போது, அவரின் மீது தைலஸான் இருந்தது. (தைலஸான் என்பது யூதர்கள் அணியும் ஒரு ஆடை) மேலும் மீசையை பெரிதாக வளர்த்திருந்தார். அதனால் நான் அவருக்கு பதில் கூற வில்லை என்று உமர் ரலி பதிலளித்தார்கள். அதைக் கேட்ட பின்பு ஜியாத், ஆடையை மாற்றி மீசையை குறைத்துக் கொண்டு உமர் ரலி அவர்களை சந்தித்து ஸலாம் சொன்னார்கள். அவர்களும் பதில் கூறி விட்டு இதற்கு முன்பு நீ இருந்ததை விட இது மிகச் சிறந்ததாக இருக்கிறது என்றார்கள். (ஹுல்யா)

நபித்தோழர்கள் மாற்றார் கலாச்சாரத்தை பின்பற்ற வில்லை என்பது மட்டுமல்ல, அவ்வாறு நடப்பவர்களைப் பார்ப்பதைக்கூட வெறுத்தார்கள் என்பது, அவர்கள் இஸ்லாத்தின் மீது எந்தளவு பிடிப்புடன் இருந்தார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

புத்தாண்டு என்பது நம் பண்டிக்கையல்ல.அது பண்டிகையே அல்ல.அதைக் கொண்டாடுவதோ அது குறித்து வாழ்த்து சொல்வதோ அதை கொண்டாட்டமாக கருதுவதோ கூடாது. இனி வரக்கூடிய காலங்களில் நம் இஸ்லாமிய சொந்தங்கள், தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக


5 comments: