Thursday, February 26, 2015

உம்மத்தை மறவாத உம்மி நபி


لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم


இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைகளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.  திருக்குர்ஆன். 9-128.)

நம்மைப் படைத்த ஏகனான அல்லாஹுத்தஆலா நம் மீது எல்லையில்லா அருளாளனாக நிகரில்லா கிருபையாளனாக எண்ணிலடங்கா அன்பாளனாக இருக்கிறான்.தாயைவிட மேலான பாசம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ், நரகத்தின் வாசல்களை ஏழாகவும், சுவனத்தின் வாயில்களை எட்டாகவும் அமைத்து தன் அருள் விசாலத்தை காட்டி யுள்ளான்.அல்லாஹ் நமக்கு செய்திருக்க அருள்கொடைகளை  சொல்லி முடிக்க நாவுகளில்லை. எழுதி முடிக்க வார்த்தைகளில்லை.


 இறைவனின் பேரருள் மற்ற படைப்புகளை விட மனிதர்கள் மீது குறிப்பாக நம் சமூகத்தின் மீது நிறைவாக சூழ்ந்திருக்கிறது.அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காருண்ய நபி ஸல் அவர்கள் தான் என்று கூறினால் மிகையாகாது.பிற சமுதாயத்தினரை விட நம்முடைய சமுதாயத்தினர் இறைவனாம் அல்லாஹ்விடம் மிக சிறப்பும் உயர்வும் பெற்றது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டுமென்பதற்காக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை செய்தி யாகும். தன் வாழ்வின் முழு நேரமும் தன்னை நினைத்தும் தன் குடும்பத்தை நினைத்தும்  கவலைப் பட்டதை விட தன் சமூகத்தை நினைத்து கவலைப்பட்டது தான் அதிகம்.

தன் சமூகத்தார் அனைவரும் இறை நம்பிக்கை கொள்ளவேண்டும். அவர்கள் அனைவரும் நரகில் இருந்து காப்பாற்றப்பட்டு சுவனம் நுழைய வேண்டும் என்பது தான் நபியவர்களின் மிக உயர்வான ஆசையாக இருந்தது. 

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வானவத்தூதர் ஜிப்ரயீல் அலை அவர்கள் ஒருநாள் வருகை தந்து  நாயகமே உங்களுடைய சமுதாயத்தில் எவர், தான் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவதாக தங்களிடம் அறிவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான் என்றார்கள். இதை செவியுற்ற அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள், ஜிப்ரயீலே எனது சமுதாயத்தினர் மறதியில் மிகைத்தவர்கள். மேலெண்ணத்தில் மாறி திளைப்பவர்கள். ஆதலால் ஒரு ஆண்டு என்பது அவர்களது விசயத்தில் மிக பாரதூரமான கால கட்டம் என்றார்கள். மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்கள் வந்து மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்  என்று அல்லாஹ் சொன்னதாக அறிவித்தார்கள். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை. அல்லாஹ் மீண்டும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒரு தினத்திற்கு முன்பு எவர் பாவ மன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை.

அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக மரணமடை வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான் இதிலும் அண்ணலாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அல்லாஹ் மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக நாயகமே உங்களது சமுதாயத்தினர் வாழ்நாள் முழுவதும் பாவமிழைத்து அதற்காக பாவமன்னிப்பு கோராமல் இருந்து விட்டு இறுதி மூச்சி தொண்டையை அடைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக தான் செய்த அனைத்து பாவங்களையும் நினைத்து அதற்காக மனம் வருந்தி பேசுவதற்கு சக்தியற்ற அந்த நேரத்தில் ஜாடையால் மனவேதனையால் மன்னிப்பு கோரினால் அதனையும் ஏற்று கொண்டு  அத்தகையவர்களை மன்னித்து விடுவேன் என்று அறிவித்தான். அப்போது தான் கருணையே உருவான அண்ணலார் திருப்தியடைந்தார்கள். நூல். ஜுப்ததுல் வாயிலீன்.

கருணை உள்ளம் கொண்ட காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் சமூகத்தின் மீது எந்தளவு பரிவும் கரிசனமும் காட்டியுள்ளார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு தெளிவான சான்றாகும்.

ஒரு சமயம் கண்மணி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது பேரர் ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு உதட்டிலும் இன்னொரு பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு கழுத்திலும் முத்த மிட்டார்கள்.ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இந்த விசயத்தை தன் தாயார் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள். உடனே பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தனது தந்தையான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே பேரர்களை முத்தமிட்ட விசயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அண்ணலார் அவர்கள் அருமை மகளே..... இவர்கள் பெரியவர் களான பின்பு ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் உதட்டில் முத்தமிட்டேன். இளையவர் ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் கழுத்தில் முத்தமிட்டேன் என்று விளக்கமளித்தார்கள்.


இச்செய்தியை கேட்ட பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கண்கலங்கினார்கள்.நாயகமே ஒவ்வொரு இறைதூதருக்கும் ஒரு விசேசமான ஒரு பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளான். உங்களுக்கும் அந்த விசேச பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே அதை பயன்படுத்தி உங்கள் பேரக்குழந்தைகளை இக்கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடாதா...? என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார் என்ன சொன்னார்கள் தெரியுமா எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேச பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்தினரின் நலனுக்காக பயன்படுத்துவேன். அதை எனது பேரக் குழந்தைக்காக இங்கு பயன்படுத்த முடியாது என்று கூறினார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ

ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விஷேச பிரார்த்தனை உண்டு.எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேச பிரார்த்தனை யை மறுமையில் என் சமூகத்திற்கு பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தி வைத்திருக்கிறேன் என்று கூறிய செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட் டுள்ளது.

தன் குடும்பத்தினர் ஏதேனும் துன்பத்திலோ ஆபத்திலோ  சிக்கிக் கொண்டால்   உடனே தன்னிடமுள்ள பணபலம், படைபலம், ஆட்சி அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு வழி தேடுவோரை தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது. ஆனால் தமக்கு கொடுக்கப்பட்ட விசேச உரிமையைக்கூட தனது சமுதாயத்தினரின் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். தனது குடும்பத்தினரின் நலனுக்காக கூட இம்மையில் பயன்படுத்த மாட்டேன் என்றுரைத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை போன்று சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை. இன்மேல் காணப்போவதுமில்லை. சிறந்த தலைவருக்கு இது மிகப்பெரும் முன் மாதிரியாகும்,

ஹஸ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாயகமே உங்களுக்கு கஷ்டங்கள் தருகிற இணைவைப் பாளர்களுக்கு எதிராக சாபமிட்டு பிரார்த்தியுங்கள் என கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் நான் சாபமிடுபவராக அனுப்பபடவில்லை.  அருளாகவே அனுப்பபட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
                                         
அன்றைய மக்கள் நபியவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் அதிகமதிகம் கஷ்டங்களும் சிரமங்களும்  செய்து வந்ததின் காரணமாகத் தான் அவ்வாறு சொல்லப்பட்டது.முன்சென்ற இறைதூதர்களில் சிலர் அவ்விதம் சபித்ததின் காரணமாக அவர்களின் சமூகத்தினர் அழிக்கப்பட்டனர். ஆனால் அண்ணலார் நபியவர்கள் அவ்விதம் சபிக்க எண்ண வில்லை. மாறாக அவர்கள் எல்லோரும் இறைநம்பிக்கை யாளர்களாக ஆக வேண்டும் என்ற கவலையில் பல நாட்கள் இரவு பகலாக அழுது தொழுது அவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார்கள்..

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آَثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا
நபியே.. குர்ஆனாகிய இந்த வார்த்தையை அவர்கள் நம்பிக்கை கொள்ளாததினால் துக்கத்தால் உம்மையே நீர் அழித்து கொள்வீர் போலும். 18-16 என்று குறிப்பிடுகிறான்

ஒருமுறை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உங்களுக்கு நன்மைதான்.உங்களை விட்டு மறைந்து விட்டாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன். இதை செவியுற்ற நபித்தோழர்கள் வியப்புற்று யாரசூலல்லாஹ் தாங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பது நன்மையிலும் நன்மைதான் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாங்கள் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.ஆனால் தாங்கள் எங்களை விட்டு மறைந்த பின்னரும் நன்மையாக இருப்பேன் என்று கூறுகிறீர்களே அதன் விளக்கமென்ன என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் மறைந்த பின்பு உங்களின் செயல்கள் சொல் செயல் உறுதியான எண்ணங்கள் எல்லாம் எனக்கு எடுத்து காட்டப்படும் உங்களின் அந்த செயல் நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நான் நன்றி பாராட்டி கொள்வேன்.. தீமையாக இருந்தால் உங்களுக்காக எனது சமுதாயத்தினர் என்பதற்காக அல்லாஹ்விடம் பிழை பொறுத்து மன்னித்தருளும்படி மன்றாடுவேன். என்று கூறினார்கள்.
                                                 
ஆக அண்ணல் நபி ஸல் அவர்களின் வாழ்வு மட்டுமல்ல அவர்களின் மரணம் கூட நமக்கு மிகப்பெரும் அருள் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

மட்டுமல்ல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் மறுமையில் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் எனும் தடாகத்திற்கு சென்று உங்களுக்கு நீர்புகட்ட காத்திருப்பேன். எவர் என்னிடம் வருகிறாரோ அவர் அத்தடாகத்தின் நீரை அருந்துவார். எவர் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. முஸ்லிம். 4598.)

மறுமை நாளில் தன் சமுதாயத்தினரின் கடுமையான தாகத்தை போக்குபவராகவும் அவர்களில் பாவிகள் சொர்க்கம் செல்வதற்காகவும்  சொர்கத்தில் அவர்களின் தகுதி உயர்வதற்காகவும் பரிந்துரை செய்பவராக இருக்கிறார்கள்.எனவே இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்காக பாடுபட உள்ளார்கள். இதுவெல்லாம் அண்ணலார் சமுதாயத்தினரின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை காட்டுகிறது.அத்தகைய அண்ணல் நபிகளாரை நமக்கு அருளிய அருளாளன் அல்லாஹ்விற்கு அனுதினமும் நன்றி செலுத்துவோம்.



No comments:

Post a Comment