Wednesday, September 23, 2020

தற்காப்பு நடவடிக்கை அவசியம்

 


கடந்த வாரம் நோய்கள் சாபமல்ல, வரம். நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நம் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அல்லாஹ் கொடுக்கிற வெகுமதிகள் தான் நோய்கள். நோய்கள் குறித்த ஒரு முஸ்லிமின் பார்வை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தப்பட்டது. நோய்களை நமக்கான வெகுமதிகளாக பார்க்கும் அதே நேரம் ஆரோக்கியம் குறித்த கவனமும் நமக்கு வேண்டும்.

மார்க்கம் ஆரோக்கியத்தின் மீது மிக அதிகமாக கவனம் செலுத்துகிறது, கவனம் செலுத்த வேண்டும் என்று நமக்கும் உணர்த்துகிறது. ஆரோக்கியத்தை மையமாக வைத்து மனிதன் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் கூட தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். ரமலானில் நோன்பு வைப்பதை கடமையாக்கியிருக்கிய மார்க்கம் நோயாளிகளுக்கு நோன்பை விட்டுக் கொள்ள அனுமதியளிக்கிறது.தொழுகைக்காக ஒழு செய்வதை கடமையாக்கிய மார்க்கம் நோய் வந்து விட்டாலோ அல்லது நோய் வந்து விடும் என்றோ நோய் அதிகமாகி விட்டும் என்றோ அச்சம் இருந்தால் ஒழு செய்யாமல் தயம்மும் செய்ய அனுமதியளிக்கிறது. ஐவேளைத் தொழுகைகளில் நின்று தொழுவதை கடமையாக்கிய மார்க்கம் முடியாதவனுக்கு உட்கார்ந்து தொழுவதை அனுமதியளித்திருக்கிறது. தடை செய்யப்பட்ட ஒரு பொருளை உட்கொண்டால் தான் ஒரு மனிதனின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றால், ஹராமான பொருளைக்கூட சாப்பிடுவதற்கு மார்க்கம் அனுமதியளிக்கிறது. இதுவெல்லாம் ஆரோக்கின் மீது மார்க்கம் காட்டுகிற அக்கரைக்கான உதாரணங்கள். அதே அக்கரை நமக்கும் வேண்டும்.

இன்றைக்கு நம் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.சாதாரணமாக அவர் இறந்தார்”, இவர் இறந்தார் என்று ஒருவரின் இறப்புச் செய்தியைத்தான் சமூகம் பேசும். ஆனால் இன்றைக்கு 20 பேர் இறந்தார்கள், 50 பேர் இறந்தார்கள் 100 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தார்கள் என்று ஒவ்வொரு நாளும் மரணித்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். சமீபகாலமாக திரும்பிய பக்கமெல்லாம் மரணத்தின் ஓலங்கள். அதுவும் குளிப்பாட்டுவதற்கும் கஃபனிடுவதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஆளில்லாமல் அநாதைப் பிணங்களைப் போன்று காட்சியளிக்கும் இன்றைய சோகமான மரணங்களைப் பார்க்கின்ற போது உண்மையில் உள்ளம் பதறுகிறது. அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் திடீர் மரணங்களை விட்டு பாதுகாப்பானாக! நம் மரணங்களை அழகானதாக ஆக்குவானாக! நம்மோடு இருக்கிற  நம் சொந்தங்கள், நம்மைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும் நமக்காக தொழுது நம்  அடக்கத்தில் கலந்து கொள்கிற  கண்ணியமான மரணத்தை நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அல்லாஹ் தருவானாக! இந்த கொரோனாவின் கோரப்  பிடியில் பரிதாபமாக இறந்து போன அத்தனை பேருக்கும் அல்லாஹ் மறுமையில் மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!

நமக்கு அறிமுகமானவர்களையும் நம்  சொந்தபந்தங்களையும் நம் குடும்பத்தின் அங்கத்தினரையும் இழந்து கொண்டிருக்கிற இவ்வேளையில்  ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் ஆரோக்கியத்தை பாத்துகாக்க வேண்டிய வழிகாட்டுதலும் நமக்கு வேண்டும். ஆரோக்கியம் தான் ஒரு மனிதனின் மூலதனம். அஸ்திவாரமின்றி ஒரு கட்டிடம் எப்படி எழுந்து நிற்க முடியாதோ அதேபோல் ஆரோக்கியமின்றி ஒரு மனிதனால் எந்த காரியத்தை செய்ய முடியாது. எதையும்  சாதிக்க முடியாது. ஆரோக்கியமின்றி கல்வியில்லை. ஆரோக்கியமின்றி தொழில் இல்லை, ஆரோக்கியமின்றி பொருளாதாரம் இல்லை, ஆரோக்கியமின்றி நிம்மதி இல்லை. ஆரோக்கியமின்றி எதுவும் இல்லை. ஆரோக்கியம் தான் மனித வாழ்க்கையின் அஸ்திவாரம், ஆதாரம்.

மனித வாழ்வின் அஸ்திவாரமாக, ஆதாரமாக கருதப்படுகிற ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியாக மார்க்கம் போதிக்கிற சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு இஸ்லாம் சொல்லித்தருகிற முதல் அட்வைஸ் என்னவென்றால், முதலில் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்க வேண்டும். நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்கம் உணர்த்துகிறது.

பொதுவாக மார்க்கம் ஒரு பிரச்சனைக்கும் ஒரு இடையூறுக்கும் தீர்வை சொல்லும் அதே நேரம் அந்த பிரச்சனையும் இடையூறும் வராமல் இருப்பதற்கு வழிகாட்டு நெறிமுறை களையும் வழங்கும்.


விபச்சாரம் செய்தால் அதற்குரிய தண்டனையை சுட்டிக்காட்டும் மார்க்கம் விபச்சாரம் நிகழாமல் தடுக்கும் வழிமுறைகளை நிறைவாகவே சொல்லியிருக்கிறது. திருடினால் கையை வெட்ட வேண்டும்  என்று சொன்ன  மார்க்கம் ஒருவனை திருடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. தலாக் நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படாமல் வாழ்க்கை இனிக்கவும் வழிகாட்டுதல் இருக்கிறது.


درهم وقاية خير من قنطار علاج

நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதற்கு லட்சம் லட்சமாக செலவழிப்பதை விட நோய் வராமல் தடுக்க ஒரு ரூபாய் செலவழிப்பது மேலானது என்று கூறுவார்கள். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவத்துறையில் பயற்சி பெறுகிற இளம் வயதுடையவர்கள் ஆகியோரில் இதுவரை நாடு முழுக்க 382 பேர் இறந்திருக் கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 63 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் சிகிச்சையின் போது  கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் இறந்து போனவர்கள். இதற்கு காரணம், சிகிச்சை அளிக்கிற அவர்களுக்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து கொடுக்க வில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

எனவே நோய் வந்தால் சிகிச்சை அளிப்பது இரண்டாவது விஷயம், முதலில் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்க வேண்டும். அந்த பாதுகாப்பு நடவடிக்கையைத்தான்  இஸ்லாம் நமக்கு முதல் அட்வைஸ்ஸாகத் தருகிறது.

ان رجلا اتي الني صلَّى اللهُ عليهِ وسلَّمَ فقال يا رسولَ اللهِ أرأيتَ رُقىً نسترْقيها ودواءً نتداوى به وتقاةً نتقِيها هل تردُّ من قدرِ اللهِ شيئًا قال هي منْ قدرِ اللهِ

ஒரு மனிதர் நபியிடம் வந்து நாங்கள் ஓதிப் பார்க்கிறோம்.மருந்திட்டுக் கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். இவைகளைப் பற்றி நீங்கள் நினைப்பது என்ன ? இவைகள் அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையும் தடுக்குமா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் அவைகளும் அல்லாஹ்வின் விதியிலிருந்தும் உள்ளது தான் என்றார்கள். (திர்மிதி : 2148)

பொதுவாக நோய்கள் சம்பந்தமாக நாம் மேற்கொள்கிற நடவடிக்கைகள் இந்த மூன்றும் தான். 1 வது, குர்ஆன் ஹதீஸில் வந்திருக்கிற துஆக்களை வைத்து ஓதிப்பார்க்கிற ஆன்மீக சிகிச்சை. 2 வது, ஊசி போடுவது, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது போன்ற உலகியல் ரீதியான சிகிச்சை. 3 வது, நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிற பாதுகாப்பு வழிமுறைகள். இதுவெல்லாம் அல்லாஹ்வின் களா கத்ருக்கு எதிரானதா? அல்லாஹ் நாடினால் நோய் வரும், அல்லாஹ் நாடினால் குணமாகும். யாருடைய வீதியில் எப்போது நோய் வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அவருக்கு அப்போது நோய் வரும். எனவே எல்லாம் விதியின் படி நடக்கிற போது நோயை குணப்படுத்துவதற்கும் நோய் வராமல் நம்மை பாதுகாப்பதற்கும் நாம் மேற்கொள்கிற நடவடிக்கைகள் அல்லாஹ் விதிக்கு எதிரான விஷயமா? என்று கேட்டார். நபி - அவர்கள் அதுவும் அல்லாஹ்வின் விதியில் கட்டுப்பட்டது தான் என்று கூறினார்கள்.அதாவது நோய் வர வேண்டும் என்பது எப்படி விதியில் இருக்கிறதோ அதே போல் மருந்து சாப்பிட்டால், ஓதிப்பார்த்தால் நோய் குணமாகும் என்பதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்காண்டால் நோய் வராது என்பதும் விதியில் தான் இருக்கிறது என்று கூறினார்கள்.

எனவே நோய் வராமல் நம்மை பாதுகாப்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

كان في وفد ثقيف رجل مجذوم، فأرسل إليه النبي -صلى الله عليه وسلم-: "إنا قد بايعناك فارجع

ஸகீஃப் என்ற கோத்திரத்தில் குஷ்ட நோயுள்ள ஒருவர் இருந்தார். நபி அவர்கள் அவரிடத்தில் நிச்சயமாக நான் உன்னிடம் பைஅத் செய்து விட்டேன். நீ திரும்பிச் செல் என்று சொல்லி அனுப்பினார்கள். (முஸ்லிம் : 2231)

சாதாரணமாக யாருடனாவது நபியவர்கள் பைஅத் செய்வதாக இருந்தால் அவரை அருகில் அமர வைத்து அவரது கையைப் பிடித்து பைஅத் செய்வார்கள். ஆனால் அவர் நோயுடையவர் என்ற காரணத்தினால் அவரை அருகில் அமர வைக்காமல் அவரது கையைப் பிடிக்காமல் தூரத்திலிருந்தே பைஅத் செய்து விட்டேன் என்று கூறி விட்டார்கள். எல்லாம் இறைவன் கையில் தான் இருக்கிறது. நடப்பவை அனைத்தும் இறை நாட்டப்படி தான் நடக்கிறது. நோயைத் தருவதும் அவன் தான், நோயைக் குணமளிப்பவனும் அவன் தான் என்று உலகிற்கு உரக்கச் சொல்லியிருந்தாலும் நோய் நெருங்காமல் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலும் நபி அவர்கள் கவனம் செலுத்தினார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

اينما ما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة

பலமிக்க கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்தடையும் (4 ; 78) என்று சொன்ன அல்லாஹ் தான், 

ولا تلقوا بايديكم الي التهلكة   

உங்கள் கரங்களை அழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள்  (2 ; 195( என்றும் சொல்கிறான்.

நமக்கு நாமே அழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு இடத்தில் ஒரு ஆபத்து என்றால் அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. ஒரு காரியத்தை செய்தால் நோய் வந்து விடும் என்றால் அந்த காரியத்தை செய்யக்கூடாது. இதுவெல்லாம் அல்லாஹ்வின் விதிக்கு மாற்றமான விஷயங்களல்ல என்பதைத்தான் நபியின் செயல்கள் நமக்கு உணர்த்துகிறது.

أنَّ عُمَرَ بنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عنْه، خَرَجَ إلى الشَّأْمِ، حتَّى إذَا كانَ بسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الأجْنَادِ، أبُوعُبَيْدَةَ بنُ الجَرَّاحِ وأَصْحَابُهُ، فأخْبَرُوهُ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ بأَرْضِ الشَّأْمِ. قَالَ ابنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لي المُهَاجِرِينَ الأوَّلِينَ، فَدَعَاهُمْ فَاسْتَشَارَهُمْ، وأَخْبَرَهُمْ أنَّ الوَبَاءَ قدْ وقَعَ بالشَّأْمِ، فَاخْتَلَفُوا، فَقَالَ بَعْضُهُمْ: قدْ خَرَجْتَ لأمْرٍ، ولَا نَرَى أنْ تَرْجِعَ عنْه، وقَالَ بَعْضُهُمْ: معكَ بَقِيَّةُ النَّاسِ وأَصْحَابُ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، ولَا نَرَى أنْ تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُوا لي الأنْصَارَ، فَدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ، فَسَلَكُوا سَبِيلَ المُهَاجِرِينَ، واخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لي مَن كانَ هَا هُنَا مِن مَشْيَخَةِ قُرَيْشٍ مِن مُهَاجِرَةِ الفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ منهمْ عليه رَجُلَانِ، فَقالوا: نَرَى أنْ تَرْجِعَ بالنَّاسِ ولَا تُقْدِمَهُمْ علَى هذا الوَبَاءِ، فَنَادَى عُمَرُ في النَّاسِ: إنِّي مُصَبِّحٌ علَى ظَهْرٍ فأصْبِحُوا عليه. قَالَ أبُوعُبَيْدَةَ بنُ الجَرَّاحِ: أفِرَارًا مِن قَدَرِ اللَّهِ؟ فَقَالَ عُمَرُ: لو غَيْرُكَ قَالَهَا يا أبَا عُبَيْدَةَ؟ نَعَمْ نَفِرُّ مِن قَدَرِ اللَّهِ إلى قَدَرِ اللَّهِ، أرَأَيْتَ لو كانَ لكَ إبِلٌ هَبَطَتْ وادِيًا له عُدْوَتَانِ، إحْدَاهُما خَصِبَةٌ، والأُخْرَى جَدْبَةٌ، أليسَ إنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ، وإنْ رَعَيْتَ الجَدْبَةَ رَعَيْتَهَا بقَدَرِ اللَّهِ؟ قَالَ: فَجَاءَ عبدُ الرَّحْمَنِ بنُ عَوْفٍ - وكانَ مُتَغَيِّبًا في بَعْضِ حَاجَتِهِ - فَقَالَ: إنَّ عِندِي في هذا عِلْمًا، سَمِعْتُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ يقولُ: إذَا سَمِعْتُمْ به بأَرْضٍ فلا تَقْدَمُوا عليه، وإذَا وقَعَ بأَرْضٍ وأَنْتُمْ بهَا فلا تَخْرُجُوا فِرَارًا منه قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ

உமர் இப்னு கத்தாப் (ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக) ப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்த போது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்று விடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டு விட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களை யெல்லாம் இந்தக் கொள்ளை நோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருத வில்லை' என்று கூறினார்கள்.

அப்போது உமர்  (ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டுப் பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர் (ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.

அப்போதும் உமர் (ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டுப் பிறகு, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர்.

எனவே, உமர் (ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்பட இருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து விரண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க, உமர் (ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே விரண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி விட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் நீங்கள் மேய்க்கிறீர்கள்,  அல்லவா?' என்று கேட்டார்கள்.

அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர் அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் பரவினால் அதிலிருந்து விரண்டோடுவதற்காக (அவ்வூரை விட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி), (தம் முடிவு நபி அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (புகாரி : 5729)

இந்த ஹதீஸில், ஒரு ஊரில் நோய்த் தொற்று இருந்தால் அங்கிருப்பவர்கள் அந்த ஊரிலிருந்து வெளியேறக்கூடாது என்று சொல்லப்பட்டதற்கு காரணம், அவர்களால் அந்த தொற்று மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக. நோய் தொற்று இருக்கிற ஊருக்கு மற்றவர்கள் செல்ல வேண்டாம்  என்று சொல்லப்பட்டதற்கு காரணம் அந்த தொற்றால் அவர்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.

எனவே நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிற, நோய்கள் நம்மை நெருங்காமல் நம்மைத் தற்காத்துக் கொள்கிற நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

 


இஸ்லாம் கூறும் ஆரோக்கியத்தின் வழிகள்

 


இன்றைக்கு உலகில் மதங்களை கடந்து இனங்களை கடந்து மொழிகளை கடந்து வாழ்வின் ஏற்றுத்தாழ்வுகளைக் கடந்து அத்தனை பேரும் எதிர் பார்க்கிற தேடுகிற விரும்புகிற ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். ஏனென்றால் இந்த கொரோனாவினால் எல்லா மதத்தவர்களும் எல்லா இனத்தவர்களும் எல்லா மொழியினரும் வாழ்வின் எல்லா நிலையில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு விட்டார்கள். எனவே இன்றைய சூழலில் உலகில் வாழக்கூடிய அனைத்து தரப்பு மக்களின் ஒரே எதிர் பார்ப்பும் தேட்டமும் இந்த நோய் நம்மை விட்டும் விலகி ஆரோக்கியம் கிடைக்கும் என்பது தான்.

மனித வாழ்வின் அஸ்திவாரமாக, ஆதாரமாக கருதப்படுகிற ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியாக மார்க்கம் போதிக்கிற சில வழிகாட்டு நெறிமுறைகளை இன்றைக்கு இன்ஷா அல்லாஹ்  நாம் பார்க்க இருக்கிறோம்.

நோய் வராமல் தடுப்பதற்கும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் இஸ்லாம் சொல்லுகிற முதலாவது வழிமுறை என்னவென்றால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறையை சரி செய்ய வேண்டும். இன்று தோன்றுகின்ற அதிகமான நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் மிக முக்கியமான காரணம் உணவு முறை கெட்டுப்போனது தான் என்று இன்றைய மருத்துவம் கூறுகிறது. இஸ்லாமும் அதைத் தான் உணர்த்துகிறது.

உணவு முறையில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உணவு உட்கொள்கிற போது நன்கு மென்று விழுங்க வேண்டும். எதை சாப்பிட்டாலும் அதை அப்படியே விழுங்கி விடாமல் வாயிலேயே நல்ல அறைத்து கூழாக்கி அதற்கு பிறகு இரைப்பைக்கு அனுப்ப வேண்டும். நொருங்கத் தின்னால் நூறு வயது என்று சொல்வார்கள். அதற்கு பொருள் உணவை நல்ல மென்று சாப்பிட்டால் நோயில்லாமல் நீண்ட நாள் வாழலாம் என்பது தான். உணவின் இந்த முறை தான் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதற்கு மாற்றமான வழிமுறை நிச்சயம் நோய்களையும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். உணவை செரிமானம் ஆவதற்கு அல்லாஹுத்தஆலா இரப்பையில் ஒரு அமிலத்தை சுரக்கச் செய்கிறான்.நன்கு மென்று உணவை கூழாக்கி நாம் அனுப்புகிற பொழுது அந்த உணவை மிக இலகுவாக அந்த அமிலம் செரிமானமாகி விடுகிறது. ஆனால் இன்றைக்குள்ள அவசர காலத்தில் நாம் செய்யக்கூடிய தவறு மெல்லாமல் உணவை அப்படியே விழுங்கி விடுகிறோம். இதனால் கொஞ்ச உணவை செரிமானமாக்குவற்குள் அந்த அமிலம் கரைந்து விடுகிறது. அதன் மூலம் நாம் உண்ணக்கூடிய உணவில் அதிகமான பகுதி சரியாக செரிமானமாகி இரத்தமாக மாறி உடலுக்கு ஆற்றலைத் தருவதற்குப் பதிலாக அவை அனைத்தும் கழிவுகளாக உடலில் தங்கி நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

மக்கள் நலனில் அக்கரை செலுத்துகிற அத்தனை மருத்துவர்களும் சொல்லும் செயதி என்னவென்றால், உண்ணுகிற உணவு செரிமானம் ஆகி விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. செரிமானம் ஆக வில்லையென்றால் எல்லா பிரச்சனை களும் வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

قال كعب بن مالك رايت رسول الله ياكل بثلاث اصابع فاذا فرغ لعقها

நபி அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவதையும் சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்புவதையும் நான் பார்த்தேன் என கஃப் பின் மாலிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் : 2032)

இதுவரை சொல்லி வருகிற உணவு முறையை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். மூன்று விரல்களால் சாப்பிடுகிற போது கொஞ்ச உணவைத்தான் எடுக்க முடியும்.அந்த கொஞ்ச உணவு வாயிலேயே நல்ல அறைத்து கூழாக்கப்பட்டு இரைப்பைக்கு செல்லும். அதனால் உணவு நன்கு செரிமானம் ஆகி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இந்த உணவு முறையைத் தான் நபி அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவதின் மூலம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அடுத்து, பசித்த பிறகு சாப்பிட வேண்டும். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கிற பொழுது உணவை நிறுத்தி கொள்ள வேண்டும். வயிற்றை என்றைக்கும் நிறைக்கக் கூடாது. நமக்கு வருகின்ற அதிகமான நோய்களுக்கு இதுவும் காரணம். மார்க்கம் இதை நமக்கு தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.

மன்னர் ஹாரூன் ரஷீதைப் பற்றி நமக்கு நன்றாக தெரியும். ஐந்தாவது அப்பாஸிய கலீஃபா. ஹிஜ்ரி 140 – 190 இடையில் வாழ்ந்தவர். நேர்வழி பெற்ற, மக்களுக்கு பயனுள்ள மிகச்சிறந்த ஆட்சியைத் தந்தவர். அவருடைய சபை என்றைக்கும் அறிஞர்கள் நிறைந்த சபையாக ஆலிம்கள் நிறைந்த சபையாக இருக்கும். ஆலிம்களுக்கும் அறிஞர்களுக்கும் மரியாதை செய்வதில், அவர்களது கூற்றுக்கு வழிப்படுவதில் தன்னிகரில்லாதவராக விளங்கியவர். அவரது சபையில் நடந்த எண்ணற்ற நிகழ்வுகள் இன்றைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

 

وقد روي، تعليقاً على الآية {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} «أن الرشيد كان له طبيب نصرانيٌ حاذقٌ، فقال ذات يوم لعلي بن الحسين بن واقد: ليس في كتابكم من علم الطب شيء، والعلم علمان: علم الأديان وعلم الأبدان! فقال له علي: قد جمع الله الطب كله في نصف آية من كتابه، وهو قوله: {وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ} وجمع نبينا(ص) الطب في قوله: المعدة بيت الداء والحمية رأس كل دواء، وأعطِ كل بدن ما عوّدته، فقال الطبيب: ما ترك كتابكم ولا نبيكم لجالينوس طبّاً»[16] 

உங்கள் வேத்ததில் மருத்துவ மூல விதி எதுவும் கூறப்பட்டுள்ளதா ?  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இருந்த அறிஞர் அலி பின் ஹுஸைன் அல்வாகிதி அவர்களிடம்  கிருத்துவ மருத்துவர் ஒருவர் கேட்டார்.  அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள், ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் அல்லாஹ் குர்ஆனிலுள்ள ஒரு வரியில்  கூறியிருக்கிறான்  என்றார். "அது என்னவென்று கேட்ட போது

உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” (அல்குர்ஆன் : 7 ; 31) என்ற வசனத்தை சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று ஒட்டுமொத்த மருத்துவத்தின் அடிப்படையையும் நபி அவர்கள்,  “இரைப்பை தான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” என்ற ஹதீஸில் கூறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.  இதைக்கேட்டு அதிசயித்துப் போன அந்த மருத்துவ அறிஞர், உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவ மேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டு வைக்க வில்லை எனக் கூறி வியந்தார். (தஃப்ஸீர் குர்துபீ)

அதே ஹாரூன் ரஷீது பாதுஷாவின் சபையில் இன்னொரு நிகழ்வு  ;

حكى أن الرشيد جمع أربعة أطباء هندي ورومي وعراقي وسوادي وقال ليصف كل واحد منكم الدواء الذي لا داء فيه فقال الهندي الدواء الذي لا داء فيه عندي هو الإهليلج الأسود وقال العراقي هو حب الرشاد الأبيض وقال الرومي هو عندي الماء الحار وقال السوادي وكان أعلمهم الإهليلج يعفص المعدة وهذا داء وحب الرشاد يزلق المعدة وهذا داء والماء الحار يرخي المعدة وهذا داء قالوا فما عندك فقال الدواء الذي لا داء معه عندي أن لا تأكل الطعام حتى تشتهيه وأن ترفع يدك عنه وأنت تشتهيه فقالوا صدقت

மன்னர் ஹாரூன் ரஷீது பாதுஷா அவர்கள் தன் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரசித்தி பெற்ற மருத்துவர்களை அழைத்து நோயில்லாத மருத்துவம் எது? அதாவது எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் அது, அந்த நோயை குணப்படுத்தி விட்டு இன்னொரு நோயை உற்பத்தி செய்து விடும். இவ்வாறில்லாமல் பின்விளைவு இல்லாத மருத்துவம் எது ? என்று கேட்டார்கள். அவையில் வீற்றிருந்த மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மருந்தைச் சொன்னார்கள். அதில் ஒரு மருத்துவ அறிஞர், அவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு மருந்திலும் இன்னன்ன பாதிப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார். அப்படியென்றால் உங்களிடம் மிகச்சிறந்த மருத்துவம் எது  என்று கேட்டார்கள்.  உணவின் தேட்டம் வரும் வரை உணவை உட்கொள்ளக் கூடாது. உணவின் தேட்டம் கொஞ்சம் இருக்கும் போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும். இது தான் பின்விளைவு இல்லாத மருத்துவம் என்று சொன்ன போது அவையினர் அனைவராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. (இஹ்யாவு உலூமித்தீன்)

வயிறு தான் எல்லா நோயுக்கும் காரணம். பத்தியம் தான் எல்லா நோயுக்கும் மருந்து என்பதை மன்னர் ஹாரூன் ரஷீதின் சபையில் நடைபெற்ற இந்த நிகழ்விலும் பார்க்க முடிகிறது.

எனவே ஆரோக்கியமான உணவு முறை என்பது பசி எடுத்த பிறகு சாப்பிட வேண்டும். கொஞ்சம் பசி இருக்கிற போதே உணவிலிருந்து கையை எடுத்து விட வேண்டும. அதேபோன்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சுத்தன்மை இல்லாத உணவுகளை, கலப்படமில்லாத உணவுகளை, கெமிக்கல் இல்லாத உணவுகளை, உடலுக்கு கெடுதி இல்லாத உணவுகளை, அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் உணவு உண்ணும் முறை சீர் செய்யப்பட வேண்டும்.

ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் நாம் செய்ய வேண்டிய இரண்டாவது விஷயம் உடற்பயிற்சி. இன்றைக்கு நம்மிடமிருந்து காணாமல் போன விஷயம் இது தான். பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு செயல்படக்கூடிய இந்த நவீன யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு நமக்கு நேரமே இல்லாமல் போனது. பொருளாதாரத்தை தேடுகிற அவசரத்தில் உடல் நலத்தை நாம்  மறந்து விடுகிறோம். வாழ்க்கைக்கு பொருளாதாரம் அவசியம் தான். ஆனால் அந்த பொருளாதாரத்தை அனுபவிப் பதற்கு உடல்  நலம் மிக மிக அவசியம் என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும். நபி அவர்கள் வாழ்வில் இதற்கும் வழிகாட்டுதல் உண்டு.

خَرَجتُ مع النبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ في بَعضِ أسْفارِه وأنا جاريةٌ لم أحمِلِ اللَّحمَ ولم أبْدُنْ، فقال للناسِ: تَقَدَّموا؛ فتَقَدَّموا، ثم قال لي: تعالَيْ حتى أُسابِقَكِ، فسابَقْتُه فسَبَقْتُه، فسَكَتَ عنِّي، حتى إذا حَمَلتُ اللَّحمَ وبَدُنتُ ونَسيتُ، خَرَجتُ معه في بَعضِ أسْفارِه، فقال للناسِ: تَقَدَّموا؛ فتَقَدَّموا، ثم قال: تعالَيْ حتى أُسابِقَكِ فسابَقْتُه، فسَبَقَني، فجعَلَ يَضحَكُ، وهو يقولُ: هذه بتلك

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; நபி அவர்களோடு நான் ஒரு பயணத்தில் இருந்தேன். என்னை அழைத்து, "நம் இருவருக்கும் பந்தயம் வைக்கலாம்" என்றார்கள். அவர்களோடு ஓடினேன். பந்தயத்தில் நான் அவர்களை முந்தி விட்டேன். நபி அவர்கள் அமைதியானார்கள். பின்னர், சில காலத்தில் எனக்கு சதை போட்டு உடல் கொஞ்சம் கனத்து விட்டது.நடந்த பந்தய நிகழ்ச்சியை நான் மறந்து விட்டேன். இன்னொரு பயணத்தில் மக்கள் ஓடினர். அண்ணல் நபி என்னை அழைத்து, "உன்னோடு ஓடுகிறேன்" என்றார்கள். எனவே, நான் அவர்களோடு ஓட்டப் பந்தயத்தில் ஓடினேன். ஆனால், இந்தமுறை என்னை முந்தி விட்டு, சிரித்துக்கொண்டே "இது, இதற்கு முன்னால் உன்னிடம் தோற்றதற்குச்  பகரமாகி விட்டது" என்றார்கள். (அபூதாவூது : 2578)

அவர்கள் மட்டுமல்ல வளர்ந்து வருகிற இளம் சமூகத்தையும் அதற்கு ஊக்கப் படுத்தினார்கள்.

كان رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ يَصُفُّ عبدَ اللهِ وعبيدِ اللهِ وكُثَيَّرًا بني العباسِ ثم يقولُ : من سبقَ إليَّ فلَهُ كذا وكذا قال : فيستبقون إليهِ فيقعون على ظهرِهِ وصدرِهِ فيُقبِّلهم ويَلزمهم

நபி அவர்கள் ஒரு நாள் அப்பாஸ் ரலி அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸைய்யர் ஆகியோரை வரிசையாக நிற்க வைத்து, உங்களில் யார் என் பக்கம் முதலில் வருகிறீரோ அவருக்கு இன்ன பரிசு இருக்கிறது என்றார்கள். அவர்கள் அனைவரும் ஓடி வந்து நபியின் முதுகிலும் மார்பிலும் ஏறிக் கொண்டார்கள். நபி அவர்கள் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்கள். (முஸ்னது அஹ்மது : 3/248)

நபி  அவர்கள் வாழ்வில் எத்தனையோ பணிகள் இருந்தும்  சுமைகள் இருந்தும் பொருப்புக்கள் இருந்தும் சமூகத்திற்கான  கடமைகள் இருந்தும் தன்  குடும்பத்தோடும் சிறு பிள்ளைகளோடும் கழிப்பதற்கும், தன் உடல் நலத்தை பேணுவதற்கும் நேரம் இருந்திருக்கிறது என்பதை இந்த இரு நிகழ்வுகளின் வழியே நாம் அறிந்து கொள்கிறோம். எனவே உடல் நலத்தைப் பேணுவதிலும் நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று மிக முக்கியமாக நோய்கள் பரவிக்கொண்டிருக்கிற, நோய்களால் எண்ணற்றவர்கள் மரணித்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் நமக்கு கொஞ்சம் விழிப்புணர்வும் தேவை. விழிப்புணர்வு என்றால், ஏதாவது நோய்கள் வருகிற பொழுது, அதிலும் குறிப்பாக காய்ச்சல் வருகிற போது முடிந்த வரை நாம் வெளியே வராமல், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொண்டு அதை குணப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால்  இன்றைக்கு அதிகமான மக்கள் சொல்லக்கூடிய செய்தி என்னவென்றால், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன், விவரம் இல்லாமல் செய்து விட்டேன். மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டிலேயே வைத்திருந்தால் என் அத்தாவை காப்பாத்தியிருப்பேன், என் அம்மாவை காப்பாத்தியிருப்பேன் என்று. மருத்துவமனைகளையும் அங்கு பணி செய்யக்கூடிய மருத்துவர்களையும் குறை சொல்வதற்கு வர வில்லை. இந்த மோசமான சூழ்நிலைகளிலும் தன் உடல்நிலை பாராமல் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அவர்களை பாராட்ட வேண்டும்.நான் சொல்ல வரும் செய்தி என்னவென்றால், இன்றைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் இறந்தவர்களை விட அச்சத்தாலும் பயத்தாலும் இறந்து போனவர்கள் தான் அதிகம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நிலைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அட்டாக் ஏற்பட்டு அதனால் இறந்து போனவர்கள் தான் அதிகம். எனவே அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

இதுபோன்ற வழிமுறைகளை நாம் பின்பற்றினால் நோய்களிலிருந்து நாம் பாதுகாப்பைப் பெறலாம், நம் உடல் நலத்தைக் காக்கலாம். அல்லாஹ் அருள் புரிவானாக.