Monday, February 24, 2014

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?

                                                                                                                                                 

               பெண்களே!...1

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
      
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் இங்கே சிறப்பான பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.


இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டிருக்கிற எங்கள் ஊர் ஆலிம் அவர்களே! நகைச்சுவையும், சிந்தனையும் கலந்த கருத்துக்களை அள்ளித் தெளித்து , எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிற தகுதி மிக்க நடுவர் உஸ்தாத் பெருந்தகை அவர்களே! உண்மையை உரக்கச் சொல்ல வந்திருக்கின்ற எனது அணி வீராங்கனைகளே! பொய்,பித்தலாட்டங்களை அவிழ்த்து விடுவதற்காக வந்து அமர்ந்திருக்கிற எதிரணியினரே! இந்த பட்டி மன்றத்தை ஆவலாடும் உற்சாகத்தோடும் கண்டு கழித்துக் கொண்டிருக்கிற கேம்பல் வாழ் இளைஞிகளே! இளைஞர்களே! மற்றும் தாய்மார்களே! பெரியோர்களே! உங்கள் அனைவருக்கும் ஸலாம் கூறி என் வாததைத் தொடங்குகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

 குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பது பெண்களே! என்று நான் பேச வந்திருக்கிறேன்.

அன்பான நடுவர் அவர்களே! பெண்கள் சமூகத்தின் கண்கள் என்று சொல்வார்கள். மனித உடம்புக்கு கண் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியும். கண் இல்லாம எதையும் பாக்க முடியாது – எந்த வேளையும் செய்ய முடியாது – உலகத்த ரசிக்க முடியாது – ஆக மொத்த சந்தோஷமா வாழவே முடியாது. அந்த மாதிரி ஒரு குடும்பத்தோட மகிழ்ச்சிக்கு ஒரு பெண் தாங்க காரணமா இருக்க முடியும். பெண் இல்லாம ஒரு குடும்பத்துல மகிழ்ச்சி இருக்காது - சந்தோஷம் இருக்காது - குதூகலம் இருக்காது – எதுவுமே இருக்காது.

நடுவர் அவர்களே! இப்படி...... ஒரு குடும்பத்துக்கு கண்ணப்போல முக்கிய அம்சமா இருக்குற எங்களப்போய் இவங்க கொற சொல்ல வந்துறுக்காங்களே...... அப்ப இவங்க குருடைங்க தான? சொல்லுங்க நடுவர் அவர்களே! தைரியமா உண்மையச் சொல்லுங்க.பயப்டாதீங்க. நாங்க பாத்துக்குறோம்.
      
நடுவர் அவர்களே! ஆண்கள் தான் பெஸ்ட் - பெண்கள்ளாம் வேஸ்டுன்னு  பெருசா ..... பேச வந்துட்டாங்களே ...... இவங்க சரியா குர்ஆன்,ஹதீஸ படிக்கலைன்னு நினைக்குறேன். ஆமா ஒழுங்கா மதரஸாவுக்கு  வந்தாதான தெரியும்.ஆடிக்கொருக்க அமாவாசைக் கொருக்க வர்ரது. பின்ன எப்டி குர்ஆன், ஹதீஸப்பத்தி தெரியும்
            
சரி பரவா இல்ல.... நான் சொல்றேன் கேளுங்க. அல்லாஹுத்தஆலா குர்ஆன்ல குழந்தைச் செல்வத்தப்பத்தி சொல்லும்போது, நாம் நாடியவருக்கு பெண் குழந்தைகளையும், நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளையும் கொடுக்கிறோம் என்று பெண் குழந்தைகளத்தான் முதலாவதா சொல்றான். இதுலயிருந்தே தெரிய வேண்டாமா? ஒரு குடும்பத்துக்கு பெண் குழந்தைங்க தான் ரொம்ப அவசியம்னு.
                
அது மட்டுமா நடுவர் அவர்களே! நபிகள் நாயகம் [ஸல்] அவங்க கூட, அல் பின்து பரக்கத்துன்பெண் பிள்ளைங்க தான் பரக்கத் என்று சொல்லியிருக்காங்க. எனவே பரக்கத்தான எங்களைக் கொண்டு மகிழ்ச்சி இருக்குமா ? இல்ல முஸீபத்தான இவங்களக் கொண்டு மகிழ்ச்சி இகுக்குமா ? நீங்களே முடிவு பன்னிக்கோங்க.
      
 “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா அப்டின்னு சொல்வாங்க. அந்தளவுக்கு உயர்ந்த பெண் சமூகத்தப் போய் இழித்துப் பேச வந்துருக்காங்களே இவங்களப்போல மர கழண்டவங்க உலகத்துல யாராவது இருக்க முடியுமா?
        
மர கழண்ட முட்டாப் பசங்களா ! என்னமோ நாங்க தான் ஒஸ்தின்னு பேச வந்துருக்கீங்களே! உங்களோட HISTORY ய முழுசா எடுத்து வுட்டேன்......அப்புறம் நாறிப்போயிடும் பாத்துக் கோங்க. ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேட்டுட்டு இங்கிருந்து எறங்கி ஓடிடுங்க. இல்ல.... உங்க வண்டவாளம் தண்ட வாளத்துல ஏறிடும் பாத்துங்கோங்க.
      
நடுவர் அவர்களே ! இவங்க ஓடுற மாதிரி தெரியல......இவங்க லட்சணத்த எடுத்து விடுறேன்.அதுக்கு பிறகும் இவங்க இங்க இருக்காங்களான்னு பாப்போம்.

இன்னைக்கி செய்திப் பேப்பர தொரந்தாலே ஒரே கொடூரனமான செய்தியா தான் இருக்குது.மனைவியை வெட்டி கொன்ற கணவன், தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன், சொத்துக்காக தம்பியை ஓட ஓட விரட்டிக் கொன்ற அண்ணன். கோபத்தில் குழந்தைகளை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய தந்தை. இப்படி கொடூரமான கொலைகளை செய்றது நாங்களா ? இல்ல இவங்களா ? இந்த மாதிரி வேளைகள செய்யுற இவங்க மூலம் எப்டி குடும்பத்துல மகிழ்ச்சி ஏற்படும் ?
                
அது மட்டுமில்லாம நடுவர் அவர்களே ! ஒரு பொம்பளப் புள்ள வெளிய போனா நல்ல படியா ஒழுக்கமா திரும்பி வருவா. உங்களுக்கே நல்லா தெரியும். ஆனா ஆம்பளப் பசங்க அப்டியா ? அவன் வெளிய போனாலே.....என்ன பிரச்சனைய கொண்டு வருவானோ, எந்த வம்ப வெல கொடுத்து வாங்குவானோ,யாரு தாலிய அறுப்பானோன்னு ஒரே வயித்துல புளிய கரைச்சிட்டுலோ இருக்கனும்.வேணும்னா எங்க தாய்மாருட்ட கேட்டுப்பாருங்க.வயித்துல புளிய கரைக்குற கதைய கரைக்டா சொல்லுவாங்க.இப்படிப்பட்ட பசங்களால குடும்பத்துல எப்டி மகிழ்ச்சி இருக்கும் ?

முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்வாங்க. உலகத்துல முதன் முதலா கொலைய செஞ்சதே இவங்க தான.ஆதம் [அலை] அவங்களோட மகன் காபீல் தான முதன் முதலா தன் சகோதரன் ஹாபீலை கொன்னான்.இப்படி தவறுக்கெல்லாம் அடிப்படையா இவங்க இருந்து கிட்டு எங்கள குத்தச் சொல்ல வந்துட்டாங்க!
      
நூஹ் [அலை] அவங்க காலத்துல வெள்ளப்பிரளயம் வந்தப்போ நீயும் கப்பல்ல ஏறுப்பான்னு நூஹ் [அலை] அவங்க தன் மகன்ட சொன்னாங்க. அதுக்கு அவன் ; நான் ஏதாவது மலைக்கு மேல ஏறி என்ன காப்பாத்திக்குவேன் அப்படின்னு சொன்னான். கடைசியில வெள்ளத்துல மூழ்கி இறந்து போனான். அவன் இறந்த பிறகு நூஹ் [அலை] அவங்க ; யாஅல்லாஹ் என் மகன மன்னிச்சிடுன்னு துஆ செஞ்சாங்க.அப்ப அல்லாஹ் ;அவன் உங்க குடும்பமே இல்ல, அவனுக்காக மன்னிப்பு கேக்குறது தப்புன்னு கண்டிச்சான். கடைசியா நூஹ் [அலை] அவங்க அல்லாட்ட மன்னிப்பு கேட்டாங்க.
                
நடுவர் அவர்களே ! இப்ப சொல்லுங்க. இங்க நூஹ் [அலை] அவங்களோட தலைகுனிவுக்கு காரணமா இருந்தது யாரு ? இவங்கள மாதிரி உருப்படாத ஒரு மகன் தான.....
      
எனவே ஆம்பளப் பசங்களால இந்த மாதிரி தலைகுனிவு தான் ஏற்படுமே தவிர கவுரவம் ஏற்படாது.
      
அதுமட்டுமா யூசுப் [அலை] அவங்க மேல பொறாம பட்டு தந்தைட்ட இருந்து பிரிக்கிறதுக்காக இறக்கமில்லாம அவங்கள கிணத்துல தூக்கி போட்டது யாரு ?  இவங்கள மாதிரி ஆம்பளைங்க தான.அதனால யூசுப் [அலை] அவங்களோட தந்தைக்கு நிம்மதி போச்சு.கண் பார்வ போச்சு. பெரிய சங்கடங்கள அனுபவிச்சாங்க.
      
இப்டி ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் நிகழ்ச்சிகள் உண்டு ஆண்கள் தரம் கெட்டவர்கள் என்பதற்கு.
      
எனவே நடுவர் அவர்களே ஆண்களின் மூலம் ஒரு குடும்பத்தில் என்றைக்கும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கவே முடியாது.கஷ்டங்களையும், துன்பங்களையும் தான் அனுபவிக்க வேண்டும்.பெண்களின் மூலம் தான் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகும்.
      
எனவே ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே பெண்களே பெண்களே என்று கூறி விடைபெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்



                 

     

                

3 comments:

  1. assalamu alaikum(varah).....
    naduvarin munnurai enge? theerppu enge?

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கான விஷயங்கள் மட்டும் தான் தொகுக்கப்பட்டது.

    ReplyDelete
  3. நடுவர் தீர்ப்பு எங்கே

    ReplyDelete