பரபரப்பும் பரிதவிப்பும் நிறைந்த இன்றைய உலகில் அனைவருமே எதிர்பார்க்கின்ற விஷயங்களில் ஒன்று அமைதி. குடும்பத்திலும் தனி மனித வாழ்விலும் ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒவ்வொரு ஊரிலும் நாட்டிலும் ஏன் உலகம் முழுக்க அமைதி ஏற்பட வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் அது வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது நிஜத்தில் எங்கும் அமைதியை பார்க்க முடியவில்லை.
இன்று
மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், சாதியின்
பெயரால் எத்தனை கொடுமைகள். எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவிரவாதம்,
அடக்குமுறை, பிறநாட்டை அபகரித்தல், பிறருடைய
இடத்தை ஆக்கிரமித்தல், தன் படை வலிமையால் அடுத்த நாட்டைத்
தாக்குதல், இன்னொரு இனத்தை அழித்தல் இன்னொரு ஊரை உருக்குலைத்தல், சமூகத்தில் குழப்பத்தை
ஏற்படுத்துதல், மதத்தின் பெயரால் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குதல் போன்ற சமூக
விரோத செயல்களால் இன்று உலகம் அமைதியை இழந்திருக்கிறது. மக்கள் அச்சத்தோடும்
பீதியோடும் வாழக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில்
மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டுவரும் தீவிர வலதுசாரி
அமைப்பை சேர்ந்தவர்கள், காலங்காலமாகத் தீபம் ஏற்றும் இடத்தை
விட்டுவிட்டு பிரச்சினை ஏற்பட வேண்டும் என நோக்கத்தோடு தர்கா அமைந்துள்ள பகுதிக்கு
அருகே புதிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்காக
நீதிமன்ற ஆணை உள்ளது எனவும் கூறி அராஜகத்தில் ஈடுபட்டு, அவர்களை காவல்துறை தடுக்க
முயன்று அந்த இடம் கலவர பூமியாக மாறியது. பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி
தேவையற்ற பதற்றத்தை உருவாக்க முயன்ற சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்களை தமிழக அரசு
அடக்கி அவர்களை ஓட விட்டது.
அந்த
கோவில் நிர்வாகம் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் அவர்களின் முறைப்படி தீபத்தை
ஏற்றி விட்டார்கள். ஆனால் 100 ஆண்டுகளில் வழக்கத்தில் இல்லாத, தர்காவுக்கு அருகில் அடையாளத்திற்காகவும் எல்லையை குறிப்பதற்காகவும் வைக்கப்பட்ட அந்த தூணில் தான் ஏற்ற வேண்டும் என்று வேண்டுமென்றே அந்த கும்பல்
கூட்டமாக வந்து கலவரத்தில் ஈடுபட்டது. வழமையாக ஏற்றும் இடத்திலேயே ஏற்றிக் கொள்கிறோம், அந்த அடையாளத்தூண் தர்காவுக்கு அருகில் இருப்பதால் அங்கே ஏற்றும் போது தேவையில்லாத
பிரச்சனைகள் வரும். அமைதி சீர்குலையும் என்று அந்த கோவில் நிர்வாகவே
சொல்லியிருந்தும் அமைதியை கெடுக்கும் நோக்கத்தில்
சங்பரிவார அமைப்புகள் செயல்பட்டது. இதில் ஆச்சரியமும் வேதனையும் தரும் செய்தி, இது
அமைதியைக் கெடுத்து விடும் என்று தெரிந்தும் அந்த அடையாளத்தூணை தீபத்தூண் என்று கூறி அதில்
தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.
சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். அவர் கொடுத்த இந்த தீர்ப்பு இத்தனை பிரச்சனைக்கு
மூலக் காரணம் என்பதை நாம் அறிவோம்..
அனைத்து
மக்களுக்கும் சமமாக நீதமாக பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு நீதிபதி தனது
தனிப்பட்ட மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதுவும் அமைதிக்கு பங்கம்
விளைவிக்கும் நோக்கில் தீர்ப்பளித்தது அனைவரின் கண்டனத்தை பெற்றுத் தந்திருக்கிறது.
ஒரு
சமூகம் அழகாக கட்டமைக்கப்படுவதற்கும் அந்த சமூகத்தின் அமைதியும் ஒழுங்கும் நிலை குறையாமல்
பாதுகாக்கப்படுவதற்கும் அடிப்படையானது சட்டங்களும் நீதிகளும் தான். சட்டங்கள்
மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
நீதியும் சரியாக நிலைநாட்டப்பட வேண்டும். சட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுமானால்
நீதி குழிதோண்டி புதைக்கப்படுமானால் சமூகத்தின் கட்டமைப்பு உடைந்து விடும். வீடு
வீடாக இருக்காது. நாடு நாடாக இருக்காது. இதற்கு சிறந்த உதாரணம் திருப்பரங்கன்றம்
விவகாரம்.
நாட்டில்
சட்டங்களும் நீதித்துறையும் சரியாக முறையாக இருக்கும் வரை நாடு அமைதியாக இருந்தது.
ஒரு காலம் இருந்தது மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டங்கள்
அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. மக்களிடையே நீதியும் நிலைநாட்டப்பட்டது.
நீதம் தவறாத
முகலாய மன்னர்
முகலாய
மன்னர்களில் நான்காவது ஜஹாங்கீரின் நீதி உலகப் புகழ் பெற்றதாகும். அவரது காலத்தில்
அரசரின் அரண்மனையின் வாசலில் ஜஞ்ஜீர் அல் அத்ல் என்ற பெயரில் ஒரு மணி
கட்டப்பட்டது. அதனுடன் ஒரு செயின் இணைக்கப்பட்டிருந்தது. குடிமக்களில்
யாருக்கேனும் நீதி தேவைப்பட்டால் அந்த
செயினை பிடித்து இழுத்து தனக்கான நீதியை பெற்று கொள்ள முடியும் என்ற ஏற்பாட்டடை
ஜஹாங்கீர் செய்திருந்தார்.
அவரது
மனைவி நூர் ஜஹான் ஒரு தடவை வேட்டையாட சென்ற இடத்தில் அம்பெய்த போது அது ஒரு
வண்ணானின் உயிரை பறித்து விட்டது.தனது மனைவியிடம் பதிலுக்கு பதிலாக உயிரை விட
தயாராகுமாறு ஜஹாங்கீர் உத்தரவிட்டார். தவறுதலாக நடந்து விட்டது அதனால் நஷ்ட
ஈட்டுக்கு வண்ணானின் குடும்பத்தோடு பேசுமாறு மந்திரிகள் கூறிய போதும் தனது அரச
செல்வாக்கை பயன்படுத்த ஜஹாங்கீர் மறுத்து விட்டார். வண்ணானின்
குடும்பத்தினரே மன்னரிடம் வந்து தாங்கள் மன்னித்து விட்டதாக கூறிய பிறகு தான்.
நஷ்ட ஈட்டுக்கு ஜஹாங்கீர் ஒப்புக் கொண்டார்.ஜஹாங்கீரின் வரலாற்றை பேசுகிற எவரும்
அவரது நீதியுணர்வின் வேகத்தை பேசாமல் போவதில்லை.இது போல இன்னும் பல சிறப்பான
வரலாறுகளை கொண்ட்து இந்திய நீதியமைப்பு.
இந்த நேரத்தில் இஸ்லாமிய நீதிபதிகள் எப்படி இருந்தார்கள். அவர்களின் தகுதி
எப்படி இருந்தது, அவர்களின் நீதியும் நேர்மையும் எப்படி இருந்தது.அவர்களின் தீர்ப்புக்கள்
எப்படி அமைந்திருந்தது என்பதையும் நாம் அறிய வேண்டும்.
நீதிபதியாக
இருப்பவர் பணத்தாசை இல்லாதவராக யாருக்கும் அஞ்சாதவராக இருக்க வேண்டும் என்று
இஸ்லாம் சொல்கிறது.
أما أمير
المؤمنين الفاروق عمر بن الخطاب رضي الله عنه، فقد حدد من ضمن شروط تولية القضاة،
أن يكون القاضي من أسرة كبيرة صاحبة وجاهة ومال، فقال في كتبه إلى بعض عماله
"لا تستقضين إلا ذا مال وذا حسب؛ فإن ذا المال لا يرغب في أموال الناس، وإن
ذا الحسب لا يخشى العواقب بين الناس"، (ادب الدنيا والدين)
பொருளாதாரமும்
உயர்ந்த குடும்ப பின்னனியும் உள்ளவரை மட்டுமே தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக ஆக்க
வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் விசாலமாக இருந்தால் அவர் பொருளுக்கு ஆசைப்பட்டு
தவறான தீர்ப்பை வழங்க மாட்டார். உயர்ந்த குடும்ப பின்னனி இருப்பவர் தான்
யாருக்கும் அஞ்சாமல் தீர்ப்பு வழங்குவார் என்று உமர் ரலி அவர்கள் தனக்கு கீழ்
இருந்த அதிகாரிகளுக்கு கடிதத்தின் வழியாக குறிப்பிட்டார்கள். (அதபுத்துன்யா வத்தீன்)
" ألا ان الاسلام حائط منيع، وباب وثيق
فحائط
الاسلام العدل.. وبابه الحق..
فاذا نقض
الحائط، وحطّم الباب، استفتح الاسلام.
ولا يزال
الاسلام منيعا ما اشتدّ السلطان
وليست
شدّة السلطان قتلا بالسيف، ولا ضربا بالسوط
ولكن قضاء
بالحق، وأخذا بالعدل
ஓ ஜனங்களே! இஸ்லாம் என்பது பலமானகோட்டையையும், உறுதியான வாயில்களையும்
கொண்டது. இஸ்லாத்தின் கோட்டை என்பது
நீதியாகும். அதன் வாயில்கள்
உரிமைகளாகும். கோட்டை தகர்க்கப் பட்டு வாயில்கள்
உடைக்கப் பட்டால் இந்த மார்க்கம் வெற்றி
கொள்ளப் பட்டு விடும். மக்களின்
பிரதி நிதிகளான அதிகாரிகள் உறுதியாக
இருக்கும் வரை இஸ்லாம் பாதுகாப்பாக
இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பதுவாளால் வெட்டுவதோ, கசையால் அடிப்பதோகிடையாது. மாறாக, நீதியை நிலைநாட்டுவதும்
மக்களின் உரிமை
களைப் பெற்று
க்கொடுப்பதிலும் தான் இருக்கின்றது உமர்
ரலி அவர்கள் கூறினார்கள்.” (நூல்: ரிஜாலுன் ஹவ்லர்
ரஸூல் ; பக்கம் : 383)
கட்டுப்பாடான
கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அங்கு இயற்றப்படுகின்ற
சட்டங்களும்,நீதிகளும் முறையாக
இருக்க வேண்டும். மனிதனின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணும் விதத்தில் அந்த
சட்டங்கள் அமையப்பெற்றிருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும்
மேலாக எந்த வேற்றுமைகளோ எந்த ஏற்றத்தாழ்வுகளோ இல்லாமல் அந்த சட்டத்தில் சமத்துவம்
பேணப்பட வேண்டும்.
كتب عمر إلى أبي موسى الأشعرى - رضى الله عنهما -: أن القضاء فريضةٌ محكمةٌ، وسنةٌ
متبعةٌ، وآسِ بين الناس في وجهك ومجلسك وقضائك؛ حتى لا يطمع شريفٌ في حيفك، ولا
ييئَس ضعيفٌ من عدلك
பஸரா
நாட்டின் பொறுப்பில் இருந்த அபூமூஸா ரலி அவர்களுக்கு உமர் ரலி அவர்கள் எழுதிய
கடிதம் ; தீர்ப்பு
என்பது உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கடமையாகும். பின்பற்றப்படும் ஒரு
வழிமுறையாகும்.உங்கள் அனுகுமுறையிலும் உங்கள் சபையிலும் உங்கள் தீர்ப்பிலும்
மக்களிடம் சமமாக நடந்து கொள்ளுங்கள். எந்த உயர்ந்தவரும் உங்கள் அநீதத்தில் ஆவல்
கொள்ளக்கூடாது. எந்த பலவீனமானவரும் உங்கள் நீதத்தை விட்டும் நிராசை அடைந்து
விடக்கூடாது. (தாரகுத்னீ : 4/132)
எல்லோருக்கும் சமமான சட்டம்,எல்லாருக்கும் சமமான தீர்ப்பு,உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாராமல் அனைவரையும் சட்டத்திற்கு முன் சமமாக பார்த்தல், நடத்துதல், நிறுத்துதல் இது தான் உண்மையான நீதிபதிக்கான அடையாளம், இலட்சணம். இதைத்தான் நபி ﷺ அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள், ஸஹாபாக்களும் பின்பற்றினார்கள்.
كان بين عمر وبين أبي بن كعب خصومة فقال عمر: اجعل بيني وبينك رجلا، فجعلا بينهما
زيد بن ثابت فأتياه فقال عمر: أتيناك لتحكم بيننا وفي بيته يؤتى الحكم فلما دخلا
عليه وسع له زيد عن صدر فراشه فقال: ها هنا يا أمير المؤمنين، فقال له عمر: هذا
أول جور جرت في حكمك ولكن أجلس مع خصمي
உமர்
ரலி அவர்களுக்கும் உபய்யிப்னு கஃப் ரலி அவர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த ஒரு
பிரச்சனைக்கு நீதி வழங்கத் தேடி அவ்விருவரும் ஜைத் பின் ஸாபித் ரலி அவர்களின்
வீட்டிற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஹள்ரத் உமர் ரலி அவர்களை தன்
விரிப்பில் வந்து அமரும் படி ஜைத் ரலி அவர்கள் சைகை செய்தார்கள். அப்போது, உங்கள்
நீதித்துறையில் நடந்த முதல் அநீதம் இது என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள். (அஸ்ஸுனனுல்
குப்ரா : 20510)
இந்த
மாதிரியான ஒரு நிகழ்வை உலக வரலாற்றில் எங்காவது பார்க்க முடியுமா ? இன்றைக்குள்ள
சூழ்நிலையில் நாட்டை ஆளக்கூடிய ஒரு ஆட்சியாளர் சட்டத்திற்கு முன் குற்றவாளியாக
நிறுத்தப்படுவதே ஒரு அபூர்வம்.சட்டத்தில் இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இலகுவாக
தப்பித்துக் கொள்வார். அப்படியே ஒருவேலை நிறுத்தப்பட்டாலும் அவருக்கென்று தனி
சலுகைகள் தனி மரியாதை. ஆனால் இங்கே
குற்றவாளிக்கூண்டில் நிற்கிற தனக்கு அவரது இருக்கையில் இடமளிப்பதற்கு அழைத்த
அவர்களைக் கண்டிக்கிறார்கள் என்றால் நீதித்துறையில் சமத்துவம் பேணுவதில்
ஸஹாபாக்கள் எந்தளவு முனைப்புக் காட்டினார்கள் என்பதற்கு இந்த வரலாறு மிகச்சிறந்த
சான்று.
இரு தரப்பையும் பாதிக்காத தீர்ப்பு
குர்ஆனில்
அல்லாஹ் ஒரு வரலாற்றை சொல்லிக் காட்டுகிறான். ஹள்ரத் தாவூது அலை அவர்களிடம் ஒரு
வழக்கு வருகிறது.
أن رجلين
دخلا على داود، أحدهما صاحب حرث والآخر صاحب غنم، فقال صاحب الحرث: إن هذا أرسل
غنمه في حرثي، فلم يُبق من حرثي شيئا، فقال له داود: اذهب فإن الغنم كلها لك، فقضى
بذلك داود، ومرّ صاحب الغنم بسليمان، فأخبره بالذي قضى به داود، فدخل سليمان على
داود فقالا يا نبيّ الله إن القضاء سوى الذي قضيت، فقال: كيف؟ قال سليمان: إن
الحرث لا يخفى على صاحبه ما يخرج منه في كل عام، فله من صاحب الغنم أن يبيع من
أولادها وأصوافها وأشعارها حتى يستوفي ثمن الحرث، فإن الغنم لها نسل في كلّ عام،
فقال داود: قد أصبت، القضاء كما قضيت، ففهَّمها الله سليمان
தாவூது
நபியிடம் இருவர் வந்தனர். ஒருவரின் நிலத்தில் மற்றொருவரின் ஆடுகள் இரவில் மேய்ந்து
பயிர்களை அழித்து விட்டதாக வழக்குரைத்தனர். தாவூது நபி வழக்கை விசாரித்து, அழிந்த
பயிர்களின் இழப்பும் பயிர்களை அழித்த ஆடுகளின் விலையும் சமமாக இருந்ததால்
நிலத்திற்குரியவர் இழப்பிற்கு ஈடாக ஆடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு
அளித்தார்கள்.
தீர்ப்பைப்
பெற்றுத் திரும்பிய இருவரும் வழியில் தாவூது நபியின் மகன் சுலைமான் நபியை
சந்தித்தனர். அவர்களின் வழக்கையும் தாவூது நபி அவர்கள் வழங்கிய தீர்ப்பையும்
சுலைமான் நபி அவர்களிடம் கூறினர். அப்பொழுது சுலைமான் நபி அவர்களுக்கு சுமார் 13
வயது. தந்தை தாவூது நபி அவர்களின் தீர்ப்பினும் தெளிவான எளிய தீர்ப்பு இருப்பதாக
சுலைமான் நபி அவர்கள் அறிவித்தார்கள். இச்செய்தியை அறிந்த தாவூது நபி மகனை அழைத்து
தக்க தீர்ப்பு என்ன வென்று வினவினார்கள்
"ஆடுகள்
பயிரை அழித்துவிட்டதாக வழக்கு. ஆடுகளுக்கு சொந்தக்காரன் அந்நிலத்தில் விவசாயம்
செய்து கதிர் அறுத்து விளைச்சலை நிலத்துக்கு உரியவரிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு
விளைச்சலை ஆடுகளுக்கு உரியவன் கொடுக்கும் வரை ஆடுகளை விவசாயி வளர்த்து ஆடுகளின்
பாலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆடுகள் ஈனும் குட்டிகளையும் திரும்ப
ஒப்படைக்கும் வரையில் நிலத்துக்குரியவன் வளர்த்து பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று
கூறினார்கள். இது தான்
சரியான தீீர்ப்பு என்று தாவூது நபி அலை அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீீர் தப்ரீ)
இந்தத்
தீர்ப்பால் வழக்குரைத்த இருவருக்கும் பாதிப்பில்லாமல் இழப்பீடு செய்யப்பட்டது.
அழிந்த பயிரின் விளைச்சலை நிலத்துக்குச் சொந்தக்காரன் பெறுகிறான். ஆட்டுக்குச் சொந்தக்காரனும்
ஆடுகளை இழந்துவிடாமல் மீண்டும் பெறுகிறான்.
எனவே
நீதிபதிகள் ஒரு பக்க சார்பாக தீர்ப்பை வழங்கி அதன் மூலம் இன்னொரு பக்கம்
முற்றிலுமாக பாதிக்கப்படுவதை இஸ்லாம் விரும்ப வில்லை. எனவே தீர்ப்புகள் ஒரு
நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும்
தாண்டி தொலை நோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும் என்பது இங்கே
குறிப்பிடத்தக்கது.அவர்கள் வழங்கிய இந்த தீர்ப்பின் காரணமாக கொஞ்ச காலத்தில்
இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்ததைப் பெற்றுக் கொண்டார்கள்.
இஸ்லாமிய
தீர்ப்பு இப்படித்தான் அமைந்திருந்தது.அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்
தொலைநோக்குச் சிந்தனையோடும் தீர்ப்புக்களை வழங்கினார்கள் இஸ்லாமிய நீதிபதிகள்.
அறிவின் வாசல் என்று அண்ணல் நபி ஸல் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட ஹள்ரத் அலி
ரலி அவர்கள் இது மாதிரி எண்ணற்ற வழக்குகளை சந்தித்திருக்கிறார்கள்.நபியின்
சொல்லுக்கிணங்க அவர்களின் அத்தனை தீர்ப்புக்களும் அறிவுப்பூர்வமாகத்தான்
அமைந்திருந்தது.
நீதிபதிகள்
இப்படித்தான் இருக்க வேண்டும்.சட்டங்களில் மிகச்சிறந்த விற்பன்னர்களாக இருப்பதோடு
சமயோஜித சிந்தனையோடு தீர்ப்பு வழங்குவதற்கும் திறன் பெற்றவர்களாக இருக்க
வேண்டும்.ஆனால் இன்றைக்குள்ள நீதிபதிகள் சட்டத்தில் கூட அறைகுறையாக இருப்பது வேதனை
தரும் செய்தி.
நீதிபதிகள்
குறித்து நபி ﷺ அவர்கள்
சொன்னார்கள் :
الْقُضَاةُ
ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي
الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ
فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ
فَهُوَ فِي النَّارِ
நீதிபதிகள்
மூன்று வகையினர். அதில் ஒரு வகையினர் சொர்க்கம் செல்வார்கள். இன்னும் இரு வகையினர்
நரகம் செல்வார்கள். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சொர்க்கம்
செல்வார். உண்மையை அறிந்து அநியாயமாக தீர்ப்பு வழங்குபவரும் அறியாமையால்
மக்களுக்கு தவறாக தீர்ப்பு வழங்குபவரும் நரகம் செல்வார்கள். (அபூதாவூது : 3573)
இந்த
ஹதீஸின் படி முதல் பிரிவில் இன்றைக்குள்ள நீதிபதிகளைப் பார்ப்பது அரிதான
விஷயம்.ஒன்று சத்தியத்தை அறிந்து கொண்டு அதற்கு மாற்றமாக தீர்ப்பு வழங்குவார்கள், அல்லது
எதுவும் தெரியாமல் தீர்ப்பு வழங்குவார்கள்.இது தான் இன்றைய நீதிபதிகளின் நிலை.
வரலாற்றில் இப்படியும்
ஒரு நீதிபதி
பல
காலங்களுக்கு முன்பு நியூயார்க் நகரில் பிரபலமான நீதிபதியாகப் பணியாற்றிய
ஃபியாரெல்லா லா கார்டியா என்பவர் வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கி மக்களைக்
கவர்ந்தவர். அவரை எல்லோரும் “லிட்டில் ஃபிளவர்’ என்று பிரியமாக அழைப்பார்கள்.
ஒருநாள் இவர் முன்னே ஓர் ஏழைக் கிழவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஒரு கடையில் ரொட்டித் துண்டு திருடியதாகப் போலீஸ் அவரைப் பிடித்து வந்திருந்தது.
“”ஐயா,
எனக்குப் பசி தாங்கவில்லை. அதனால்தான் ரொட்டி திருடினேன்…” என்றார்
அந்தக் கிழவர்.
“”நீங்கள் எதற்காகத் திருடினாலும் குற்றம் குற்றம்தான். மன்னிப்பு கிடையாது. உங்களுக்குப் பத்து டாலர் அபராதம்…” என்று தீர்ப்பளித்த நீதிபதி, “”உங்களிடம் காசு இல்லை என்பது தெரியும். ஆகவே நானே அதைக் கட்டுகிறேன்..” என்று சொல்லி தன் கோட்டுப் பையிலிருந்து பத்து டாலர் எடுத்துக் கோர்ட்டு குமாஸ்தாவிடம் கொடுத்தார்.அத்துடன் அவர் நிற்கவில்லை. “”பசிக் கொடுமை தாங்காமல் ஒருவர் ரொட்டி திருடினார் என்றால் இந்த ஊருக்கு அவமானம்.அவர் செய்த குற்றத்தில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆகவே இங்கே நீதிமன்றத்தில் கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அரை டாலர் அபராதம் விதிக்கிறேன்…” என்றார்.
அந்தத்
தீர்ப்பின்படி கோர்ட் குமாஸ்தா தன் தொப்பியை எல்லாரிடமும் நீட்ட ஒவ்வொருவரும் அரை
டாலர் போட்டார்கள். சேர்ந்த பணத்தை “”இந்தாருங்கள்…” என்று அந்தக் கிழவரிடம்
கொடுத்தார் நீதிபதி லிட்டில் ஃபிளவர்!
தண்டனையை எதிர்பார்த்துவந்த கிழவர் நாற்பத்தேழு டாலருடன் குஷியாக வெளியேறினார்.
இந்த மாதிரியான நீதம் தவறா நீதிபகளே இன்றைக்கு தேவை.
No comments:
Post a Comment