Thursday, November 8, 2018

கல்வியே 1


                                                                கல்வியே-1 ஆஷிக்                                  
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அல்ஹம்து லில்லாஹ். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.                    
பசிக்கின்ற மனிதனுக்கு ருசிக்கின்ற உணவளித்து ரசிக்கின்ற இறைவனுக்கே புகழனைத்தும் உண்டாவதாக.சத்திய தூதர்,சன்மார்க்க போதகர் நபிகள் நாயகம் ரசூலே கரீம் ஸல் அவர்கள் மீதும்,அவர்களின் குடும்பத்தார்,தோழர்கள்,மற்றும் நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் உண்டாவதாக ஆமீன்.  
                          
உயர்வான வாழ்விற்கு உறுதுணையாக இருப்பது கல்வியே என்று நான் பேச வந்திருக்கிறேன்.                                                                                                                                               
நடுவர் அவர்களே அண்டப்புழுகுன்னா யாருன்னு தெரியுமா...நம்ம இஹ்ஸான் தான்,பொய் பெட்டின்னா யாருன்னு தெரியுமா நம்ம இஹ்ஸான் தான்.மண்ட இருக்கும் ஆனா மூள இருக்காது அவர் யாரு தெரியுமா அவரும் நம்ம இஹ்ஸான் தான்.சத்தம் இருக்கும் ஆனால் பேச்சில ஒன்னும் இருக்காது அவராச்சும் யாருன்னு தெரியுமா அவரும் நம்ம இஹ்ஸான் தான். இந்த எல்லா புகழுக்கும் சொந்தக்காரரான நம்ம இஹ்ஸான் வந்தாரு, முழு பூசணிக்காய சோத்துல மறைச்ச கதையா பணம் பணம் பணம்னு பேசுனாரு. நடுவர் அவர்களே பணம்னா பொணம் கூட வாயப்பொலக்கும் நம்ம இஹ்ஸான் வாயப் பொலக்க மாட்டாரா என்ன ?....  பொலக்கத்தான் செய்வாரு.                                   
வந்தாரு வந்து... இன்னைக்கி பணம் இல்லன்னா சொந்தக்காரன் மதிக்க மாட்டான், பெத்த புள்ள கூட மதிக்க மாட்டான் அப்டி இப்டின்னு கத்துனாரு. நான் கேக்குறேன்...அந்த புள்ளைக்கி சின்ன வயசுலயே நபி ஸல் அவங்க சொன்ன மாதிரி மார்க்க கல்வியையும்,ஒழுக்கத்தையும் முறையா கொடுத்திருந்தா எங்கள மாதிரி பெத்தவங்களுக்கு பெருமைய சேத்திருப்பான்.ஆனா நீங்க என்ன செய்றீங்க..... சின்ன வயசுலயே காசக்கொடுத்து ஊதாரித்தனமா வளக்குறீங்க, பின்ன எப்டி உங்கள மதிப்பான்.எங்கள மாதிரி மார்க்க கல்வியக் கொடுத்து வளத்துப்பாருங்க அப்றம் உங்கள தலைக்கு மேல வச்சி கொண்டாடுவான்.             
அடுத்து... இந்த மைக் பணத்தால வந்துச்சா கல்வியால வந்துச்சா, இந்த பள்ளிவாசல் பணத்தால வந்துச்சா கல்வியால வந்துச்சா, இந்த பரிசு பணத்தால வந்துச்சா கல்வியால வந்துச்சா, நாம சாப்ட பிரியாணி பணத்தால வந்துச்சா கல்வியால வந்துச்சா அப்டின்னு கொதிச்சாரு. நான் கேக்குறேன்....அன்பான தாய்மார்களே,சகோதரர்களே நாம இன்னைக்கி நம்ம எல்லா வேளையையும் விட்டுட்டு இங்க வந்து உக்காந்திருக்கிறது இந்த பள்ளிவாசலையும், பரிசையும் உத்துப்பாக்கவா, இல்ல.... பிரியாணிய சாப்டுட்டுப் போகவா...... இல்லயே எங்கள மாதிரி மதரஸா மாணவங் களோட கல்வியையும்,அறிவையும் பார்த்து பூரிப்படைவதற்காகத் தானே வந்துறுக்குறோம்.சொல்லுங்க தாய்மார்களே
அப்டின்னா என்ன அர்த்தம்..... நம்ம இஹ்ஸான் சொன்ன இந்த மைக் கல்விக்காகத்தான்,இந்த பள்ளிவாசலும் கல்விக்காகத்தான்,இந்த பரிசும் கல்விக்காகத்தான், இந்த பிரியாணியும் கல்விக்காகத்தான். இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே கல்வி சிறந்ததா? இந்தப்பொணம் ச்சீ இந்த பணம் சிறந்ததா? கல்வி தானே சிறந்தது.        
அடுத்து... இன்னைக்கு காசில்லாம பஸ்ல போக முடியாது, அப்டி போனா இறக்கி விட்டுறுவான். அப்டி இப்டின்னு அடிச்சி விட்டாரு.ஏன் போக முடியாது....இன்னைக்கி ஒருத்தர் படிச்சி கவர்மண்ட் வேளப்ப்பாத்து ரிடைர் ஆயிட்டாருன்னா கவர்மண்ட் ஒரு சலுக வழங்குது. நீங்க எங்க வேணும்னாலும் காசில்லாம போகலாம்னு.நாங்க இன்னைக்கி ஒரு பைசா இல்லாம எங்க படிப்ப வச்சி மைசூருக்கே போயிட்டு வருவோம். ஆனா உங்களால ஆஃப்ட்ரால் இந்த காந்தலுக்காவது போக முடியுமா ? கழுத்த புடிச்சி வெளில தள்ளுவான். யாருகிட்ட வந்து அளந்து விடுறீங்க ஆ.....          
இப்படி நம்ம இஹ்ஸான் வந்து புழுகு புழுகுன்னு புழுகிட்டு போயிருக்குறாரு.நடுவர் அவர்களே இப்படி நம்ம இஹ்ஸான பத்தி சொன்னா சொல்லிக்கிட்டே இருக்கலாம் அப்பறம் நைட் ஆயிடும். சரி நான் விஷயத்து வர்ரேன்.                              
அன்பான நடுவர் அவர்களே படிப்பே தேவயில்ல பணம் தான் முக்கியம்னு இன்னைக்கு இவங்க பேச வந்துறுக்காங்க. ஆனா இன்னைக்கி ஒரு அரபு நாட்டுக்கு போறதா இருந்தாலும் படிப்பு தேவ,ஒரு அரசாங்க வேளைக்கி போறதா இருந்தாலும் படிப்பு தேவ. தொட்டில் முதல் மரணக்கட்டில் வரை பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் அவசியம் பெற வேண்டியது படிப்பு.                 
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே  காசில்லயா பிச்சையெடுத்தாவது கல்வியைக் கற்றுக்கொள் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.எனவே கல்வி சிறந்ததா ? பணம் சிறந்ததா ?                                                                      
உலகத்திருமறையாம் குர்ஆனில் அல்லாஹ் சொன்ன முதல் வார்த்தை  اِقْرَأْ படி ஓது என்பது தான் எனவே கல்வி சிறந்ததா ? பணம் சிறந்ததா ?
அதுமட்டுமா குர்ஆனில் அல்லாஹ் நபியைப்பார்த்து  قُلْ رَّبِّ زِدْنِي عِلْمَا நபியே கல்வியை அதிகமாகத்தா என்று என்னிடம் கேளுங்கள் என்று கூறுகிறான். எனவே கல்வி சிறந்ததா ? பணம் சிறந்ததா ?           
அது மட்டுமா நடுவர் அவர்களே இன்னைக்கி ஒரு மனிதனுக்கு கல்வி கிடைத்து விட்டால் மற்ற எல்லாம் தானாக கிடைத்து விடும்.அதைத்தான் திருவள்ளுவர் சொன்னார்- அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார் என்னுடையரேனுமிலர்.                              
ஹஜ்ரத் சுலைமான் அலை அவங்கள்ட அல்லாஹ் என்ன கேட்டான்... நபியே உங்களுக்கு அறிவு வேண்டுமா அதிகாரம் வேண்டுமா அப்டின்னு. அதுக்கு சுலைமான் நபியவங்க எனக்கு அறிவு தான் வேணும்னு சொன்னாங்க. உடனே அல்லாஹ் நீங்க அறிவ தேர்ந்தெடுத்த காரணத்தால அறிவையும் வச்சிக்கோங்க, அதிகாரத்தையும் வச்சிக்கோங்க அப்டின்னு சொன்னான். நடுவர் அவர்களே இப்ப சொல்லுங்க நாங்க சொல்லக்கூடிய அறிவு சிறந்ததா? இல்ல  பேராச புடிச்ச இந்த பணக்காரங்களோட பணம் சிறந்ததா ?                                                              
ஏன் ஹஜ்ரத் யூசுப் அலை அவங்க கூட கல்வியின் மூலமாகத்தானே சிம்மாசனத்த அடஞ்சாங்க. ஆரம்பத்துல செய்யாத ஒரு தப்புக்காக சிறையில அடைக்கப்பட்டாங்க.அரசர் கண்ட கனவுக்கு யாரும் விளக்கம் சொல்லாத போது ஹஜ்ரத் யூசுப் அலை அவங்க தன்னோட அறிவின் மூலம் அதற்கு விளக்கம் சொன்னதுனால அவங்களுக்கு சிறையிலிருந்து விடுதலையும் கிடச்சிச்சி அத்தோடு ஆட்சிக்கட்டிலும் கிடச்சிச்சி.     
இப்படி கல்வி தான் உயர்ந்தது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள சொல்லலாம். அது போன்று பணம் மனிதனுக்கு நாசத்தை ஏற்படுத்தும் மனிதனை அழிவில் கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு நாம் காரூனப் பார்த்தாலே போதும்.அவனோட திரண்ட சொத்துக்கள் தான் அவன் அழிவுக்கு காரணமானது.                                     
எனவே நடுவர் அவர்களே இவ்வளத்தையும் கேட்ட பிறகு இனியும் அந்த டீமுலயிருந்து அடுத்து பேச வருவாங்கன்னு நினைக்கிறீங்க.... கண்டிப்பா வர மாட்டாங்க. அவங்களுக்கு மண்டையில மூளன்னு ஒன்னு இருந்தா, அந்த மூளையில அறிவுன்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிடுவாங்க.மூளை இருக்கும்னு நினைக்கிறேன்.         
நடுவர் அவர்களே உலகத்தில் சாதித்தவர்களெல்லாம் கல்வியைக் கொண்டு தான் சாதித்தார்கள்,உயர்ந்தவர்களெல்லாம் கல்வியைக் கொண்டு தான் உயர்ந்தார்கள்.வெற்றி பெற்றவர்களெல்லாம் கல்வியைக் கொண்டு தான் வெற்றி பெற்றார்கள் எனவே உயர்ந்த வாழ்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியே,கல்வியே, கல்வியே என்று கூறி, இத்தோடு எங்கள் வேகம் முடியவில்லை இன்னும் இருக்கிறது, என் தோழன் வருவான், அறிவுக்கனைகளை அள்ளி வீசுவான். காத்திருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

No comments:

Post a Comment