Sunday, March 28, 2021

பராஅத் பித்அத்தா ?

 


அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஒரு இரவில் அல்லாஹ்வின் இறை இல்லத்தில் ஒன்று கூடக்கூடிய பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பாக்கியத்தைக் கொடுத்த வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

காரணம், கடந்த  ஆண்டு இதே நாட்களில்  கொரோனா தொற்றின் பெரும் தாக்கத்தால் உலகம் முழுக்க  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  அதனால் கடந்த வருடத்தின் எண்ணற்ற பாக்கியங்களை இழந்து விட்டோம். கடந்த வருடத்தில் மிஃராஜ் இரவு,  பராஅத் இரவு,  மகத்துவமிக்க ரமலானின்  30  நாட்கள், அதில் குறிப்பாக  லைலத்துல் கத்ர் இரவு ஈதுல் ஃபித்ர், ஹஜ்ஜின் வணக்கங்கள்,  பாக்கியம் நிறைந்த  துல்ஹஜ்ஜுடைய பத்து நாட்களின் அமல்கள்,  ஈதுல் அள்ஹா, இதுபோன்ற மகத்துவம் நிறைந்த பாக்கியம் மிகுந்த நன்மைகளை அள்ளித்தருகின்ற பல முக்கியமான அமல்களை கூட்டாக,  மஸ்ஜிதுகளில்  நிறைவேற்ற முடியாத துற்பாக்கிய சூழ்நிலையை நம்மில் பலரும் சந்தித்தோம்.அல்ஹம்து லில்லாஹ் இவ்வருடம் புனிதமான பராஅத் இரவில் ஒன்று சேரும் பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்விற்கு அதிகமதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். புனிதமான பராஅத்தைக் கொடுத்தது போல் மகத்துவம் மிக்க ரமலானையும் முழுமையாக அடைந்து கொள்வதற்கும் அதன் அத்தனை அமல்களையும் இறை இல்லத்திற்கு வந்து நிறைவாக செய்வதற்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக 

நிஸ்ஃபு ஷஃபான் என்று சொல்லப்படுகின்ற புனிதமான பராஅத் இரவில் நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம். இன்றைக்கு சிலர் பராஅத்தே கிடையாது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ அதற்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை, ஆதரங்களும் இல்லை, இதுவெல்லாம் பித்அத், மார்க்கத்தில் இல்லாத காரியங்கள்,மார்க்கம் இதை வழிகேடு என்று சொல்கிறது. இமாம்கள் மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள் என்றெல்லாம் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பித்அத்தைக் குறித்த தெளிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த இரவில் இதைப் பற்றி ஏன் பேச வேண்டும். இப்போது இதை பேச வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். இதைப்பற்றி இப்போது தான் பேச முடியும். ஏனென்றால், இன்றைக்கு பராஅத் என்ற வார்த்தையே பல பேருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அவர்கள் சொல்லக்கூடிய முதல் வார்த்தை பித்அத். 2 வது பராஅத் இரவை கண்ணியப்படுத்துகின்ற மக்களில் பலருக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. பராஅத் பித்அத், பித்அத் என்று சொல்கிறார்கள். நாம் செய்வது சரியா, கூடுமா, பாவமாக அகி விடுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இங்கே உட்கார்ந்திருக்கிற உங்களில் பலருக்கும் கூட இந்த சந்தேகம்  இருக்கலாம். அதனால் இந்த நேரத்தில் அதைப்பற்றி பேசுவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிற அனைத்து அமல்களும் ஈமானோடு சம்பந்தப்பட்டது. நம்பிக்கையுடன் தொடர்புடையது. ஈமானும் நம்பிக்கையும் இல்லையென்றால் எதுவுமே இல்லை, நாம் செய்யக்கூடிய அமல்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். குர்ஆனில் நன்மைகளைப் பற்றி சொல்லக்கூடிய எல்லா இடங்களிலும் அதோடு ஈமானை அல்லாஹ் இணைத்து பேசுகிறான்.

ان الذين امنوا وعملوا اللصالحات

ஈமான் இல்லை என்றால் அமல் இல்லை. எத்தனையோ மாற்று மத சகோதரர்களும் நன்மை செய்கிறார்கள். நற்காரியங்கள் செய்கிறார்கள்.ஸதகா செய்கிறார்கள். சிலர் நோன்பு கூட வைக்கிரார்கள். ஆனால் அது அவர்களுக்கு பயன் தருமா மறுமையின் வெற்றிக்கு காரணமாக இருக்குமா என்றால் இருக்காது. ஏனென்றால் நன்மைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய ஈமான் அவர்களிடம் இல்லை. ஈமான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. எனவே இறைவனுடைய முழு நன்மைகளையும் இந்த இரவின் எல்லா பாக்கியங்களையும் முழுமையாய் பெறவேண்டுமென்றால் இந்த இரவு நன்மையைத் தரக்கூடிய இரவு தான். பாக்கியமான இரவு தான் என்கின்ற உறுதியான நம்பிக்கையை உள்ளத்தில் புகுத்திக் கொள்ள வேண்டும்.அந்த ஈமானோடு இங்கே அமர வேண்டும். இல்லையென்றால் அமல் செய்தும் பயனில்லாமல் போய் விடும்.

சுன்னத் என்றால் என்ன பித்அத் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோளாறு தான் இது மாதிரியான குழப்பங்களுக்கு காரணம்.

பித்அத் என்பதற்கு வஹாபிகள்  புரிந்திருக்கிற விளக்கம் என்னவென்றால்

ما لم يكن في عهد رسول  الله

நபியின் காலத்தில் இல்லாதது பித்அத்தாகும்.

இந்த பராஅத்தைப் பற்றி அவர்கள் கேட்கக்கூடிய கேள்வி இது தான். பராஅத் இரவு அன்று நபி அவர்கள் இந்த மாதிரி 3 யாஸீன்கள் ஓதினார்களா இந்த மாதிரி பயான் செய்தார்களா இப்படி மக்களை கூட்டி வைத்து அமல் செய்தார்களா துஆ செய்தார்களா அல்லது ஸஹாபாக்களாவது செய்தார்களா? இல்லை., அப்படியென்றால் நீங்கள் எப்படி செய்கிறீர்கள். நபி அவர்களும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரியம் எப்படி மாரக்கமாகும்? அவர்களின் இந்த  கேள்வியைப் பார்த்தால் நியாயமாகத்தான் தெரியிது. நமக்கு மார்க்கத்தை காட்டியவர்களே  அவர்கள் தான். அவர்கள்  சொல்லித்தான் நாம் எல்லாத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பராஅத்தென்று ஒன்று மார்க்கத்தில் இருந்திருந்தால்  அவர்கள் அதை செய்திருப்பார்கள். இது தான் அவர்கள் வைக்கும் வாதம். பார்க்கும் போது இந்த கேள்வி நியாயமாகத்தான் தெரியுது..

ஆனால் பித்அத் என்பதற்கு  இந்த விளக்கத்தை நாம் கொடுத்தால் நிறைய பெரும் பெரும் ஸஹாபாக்களை பித்அத் செய்தார்கள். அவர்கள் நரகவாதி என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக. ஏனென்றால்  நிறைய ஸஹாபாக்கள் நபி அவர்கள் செய்யாத காரியத்தை செய்திருக்கிறார்கள்.

عن زيد بن ثابت - رضي الله عنه - قال : "أرسل إلى أبوبكر مقتل أهل اليمامة وعنده عمر فقال أبوبكر: إن عمر أتاني فقال إن القتل استحر يوم اليمامة بالناس وإني أخشى أن يستحر القتل بالقراء في المواطن فيذهب كثير من القرآن إلا أن تجمعوه وإني لأرى أن تجمع القرآن قال أبوبكر: فقلت لعمر كيف أفعل شيئا لم يفعله رسول الله فقال هو والله خير فلم يزل يراجعني حتى شرح الله لذلك صدري ورأيت الذي رأى عمر".قال زيد: "وعنده عمر جالس لا يتكلم فقال لي أبوبكر: إنك رجل شاب عاقل ولا نتهمك كنت تكتب الوحي لرسول الله فتتبع القرآن فأجمعه فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان أثقل علي مما أمرني به من جمع القرآن قلت: كيف تفعلان شيئا لم يفعله رسول الله فقال أبوبكر: هو والله خير فلم أزل أراجعه حتى شرح الله صدري للذي شرح له صدر أبي بكر وعمر فقمت فتتبعت القرآن أجمعه من الرقاع والأكتاف والعسب وصدور الرجال حتى وجدت من سورة التوبة آيتين مع خزيمة الأنصاري لم أجدهما مع غيره {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} إلى آخرها. فكانت الصحف التي جمع فيها القرآن ثم أبي بكر حتى توفاه الله ثم عمر حتى توفاه الله ثم عند حفصة بنت عمر".

:யமாமா போர் நடைபெற்ற பின் அபூபக்கர் ரலி அவர்கள்  எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்ரலி அவர்கள் அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்: உமர்ரலி அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டுஅதனால் குர்ஆனின் பெரும்பகுதி போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தர விட வேண்டுமெனக் கூறினார்கள். நான், 'இறைத்தூதர்() அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய் வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது  நன்மை தான்என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்கர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்ரலி அவர்கள் ஏதும் பேசாமல் அபூபக்கர்ரலி அவர்கள் அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) (பிறகு) அபூபக்கர்ரலி அவர்கள் (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்உங்களை நாங்கள் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்() அவர்களுக் காக 'வஹீஎழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவேநீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்() அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்ரலி அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மைதான்'  என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியு றுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்கர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரி வாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். எனவேகுர்ஆனைத் தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள்,  ஓடுகள் மற்றும் மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட் டியபோது) 'அத்தவ்பாஎனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூகுஸைமா அல் அன்சாரி ரலி அவர்கள் அவர்களிடமிருந்து பெற்றேன்;  அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும்,  உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும்,  நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும்கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும்அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் அபூபக்கர்ரலி அவர்கள் அவர்க ளிடம்அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் உமர்ரலி அவர்கள் அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்ரலி அவர்கள் அவர்களின் புதல்வி ஹஃப்ஸாரலி அவர்கள் அவர்களிடம் இருந்தது. ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரிரலி அவர்கள். (புஹாரி: 4986).

ஜைத் ரலி அவர்கள் வஹியை எழுதுவதற்காக நபி   அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்ந்த ஸஹாபி. அபூபக்கர் ரலி அவர்கள் நபிமார்களுக்கு அடுத்து மனிதர்களில் மிக உயர்ந்த  அந்தஸ்தைப் பெற்றவர், சுவனத்தின் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுபவர்.

مَن أنفَق زوجينِ في سبيلِ اللهِ دُعي مِن أبوابِ الجنَّةِ وللجنَّةِ أبوابٌ فمَن كان مِن أهلِ الصَّلاةِ دُعي مِن أبوابِ الصَّلاةِ ومَن كان مِن أهلِ الصَّدقةِ دُعي مِن أبوابِ الصَّدقةِ ومَن كان مِن أهلِ الجهادِ دُعي مِن أبوابِ الجهادِ ومَن كان مِن أهلِ الصِّيامِ دُعي مِن بابِ الرَّيَّانِ ) فقال أبو بكرٍ: يا رسولَ اللهِ ما على أحدٍ مِن ضرورةٍ مِن أيِّها دُعي فهل يُدعى أحدٌ منها كلِّها يا رسولَ اللهِ ؟ قال: نَعم وأرجو أنْ تكونَ منهم

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளியாக இருந்தவர்கள் ரய்யான் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர் சதகா என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே எனவே அனைத்து வாசல்கள் வழியாகவும் ஒருவர் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள். (புகாரி ; 3666)

لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பின் நபி இல்லை. அப்படி  இருந்தால் அது உமர் ரலி அவர்கள் தான். (திர்மிதி ; 3686)

ان الله جعل الحق علي لسان عمر وقلبه

உமர் ரலி அவர்களுடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்திருக்கிறான். (இப்னு ஹிப்பான் ; 6889)

مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّحَ سُبْحَةَ الضُّحَى وَإِنِّي لأُسَبِّحُهَا ( أي أصليها

நபி அவர்கள் லுஹா தொழுகையை வழமையாக தொழுது நான் பார்த்ததில்லை. ஆனால் நான் வழமையாக தொழுவேன் என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 1177)

قال الشافعي : رأيت بباب مالك من أفراس خراسان ، وبغال مصر فقلت : ما أحسنها!

فقال هي هبة مني إليك .

فقلت دع لنفسك منها دابة تركبها .

قال أنا أستحي من الله أن أطأ تربة نبي الله بحافر دابة

 அல்லாமா ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நான் இமாம் மாலிக் ரஹ் அவர்களின் வீட்டின் முன்பு அழகான குதிரைகளையும் கழுதைகளையும் நான் பார்த்தேன். அவர்கள் இதை நீ அன்பளிப்பாக வைத்துக் கொள் என்றார்கள். நீங்கள் வாகனிப்பதற்கு ஒரு குதிரையையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்ன போது, நபியின் பாதங்கள் பட்ட மண்ணை என் குதிரையின் கால் குழம்பைக் கொண்டு மிதிப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்றார்கள்.

அபூபக்கர், உமர், ஜைத் ஆகிய மூவரும் நபி ஸல் அவர்கள் செய்யாத ஒரு காரியத்தை செய்தார்கள். ஆயிஷா ரலி அவர்கள் நபி வழமையாக செய்யா விட்டாலும் நான் செய்வேன் என்றார்கள். இமாம் மாலிக் ரஹ் அவர்கள் எந்த ஸஹாபியும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார்கள். நபியின் காலத்தில் இல்லாதவை அனைத்தும் பித்அத் என்று சொன்னால் இதுபோன்ற பெரும் உத்தமர்களை பித்அத்வாதிகள் என்று சொல்ல வேண்டிய நிலை வரும்.

அவர்கள் இந்த மாதிரியான காரியங்களை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பல காரணங்களும் பல நோக்கங்களும் இருக்கலாம். அதில் ஒன்று.

قالت : " وإن كان ليدع العمل وهو يحب أن يعمله خشية أن يعمل به الناس فيفرض عليهم

மக்கள் அதை செய்து அதனால் அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி செய்வதற்கு விருப்பம் இருக்கும் பல காரியங்களை நபி ஸல் அவர்கள் விட்டு விடுபவர்களாக இருந்தார்கள்.  (இப்னு ஹிப்பான் ; 313)

எனவே அவர்கள்  விட்டதற்கு  இதுபோன்ற பல  காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்கள் செய்யாத, அவர்கள் காலத்தில் இல்லாத அனைத்தும் பித்அத் என்று  கூறினால் பெரும் பெரும் ஸஹாபாக் களையும்  இமாம்களையும் நரகவாதி என்று சொல்ல வேண்டிய நிலை வரும். நவூது பில்லாஹ்

எனவே பித்அத் என்றால் என்ன ?

قال ابن رجب الحنبلي: «والمراد بالبدعة ما أحدث مما ليس له أصل في الشريعة يدل عليه، وأما ما كان له أصل في الشرع يدلّ عليه فليس ببدعة، وإن كان بدعة لغة». (جامع العلوم والحكم، تأليف: ابن رجب الحنبلي، ص223)

மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு காரியம் புதிதாக உருவாக்கப்படும் என்றால் அது பித்அத்தாகும். எதற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இருக்கிறதோ அது பித்அத் இல்லை என இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஜாமிவுல் உலூம் வல்ஹிகம் ; 223)

قال التفتزاني: «ومن الجهل من يجعل كل أمر لم يكن في عهد الصحابة بدعة مذمومة، وإن لم يقم دليل على قبحه، تمسكاً بقوله عليه الصلاة والسلام: "إياكم ومحدثات الأمور" ولا يعلمون أن المراد بذلك هو أن يجعل من الدين ما ليس منه  (شرح المقاصد، تأليف: التفتزاني، ج5، ص232) 

ஒரு காரியம் அருவருப்பானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பொழுது, சஹாபாக்கள் காலத்தில் இல்லை என்கிற காரணத்தினால் அதை பித்அத் என்று சொல்வது அறியாமையாகும். மார்க்கத்தில் எதற்கு அடிப்படை இல்லையோ அதுவே பித்அத்தாகும் என தஃப்தாஜானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஷரஹுல் மகாஸித் ; 5/232)

நபி அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

أن رجلاً أتى النبي صلى الله عليه وسلم فقال: (يا رسول الله، إني إذا أصبت اللحم انتشرت للنساء وأخذتني شهوتي. فحرمت عليَّ اللحم فأنزل الله: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تُحَرِّمُواْ طَيِّبَاتِ مَا أَحَلَّ اللّهُ لَكُمْ وَلاَ تَعْتَدُواْ إِنَّ اللّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ اللّهُ حَلاَلاً طَيِّبًا

இறைச்சி சாப்பிட்டால் எனக்கு மனோ இச்சைகள் அதிகமாகிறது. எனவே நான் அதை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன் என்று ஒரு ஸஹாபி சொன்ன போது அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்காதீர்கள் என்ற 5;87 வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். (திர்மிதி ; 3054)

وعن ابن عباس رضي الله عنهما قال: ((بينما النبي صلى الله عليه وسلم يخطب إذا هو برجل قائم فسأل عنه: (فقالوا: أبو إسرائيل نذر أن يقوم ولا يقعد, ولا يستظل, ولا يتكلم, ويصوم، فقال النبي صلى الله عليه وسلم: مروه فليتكلم, وليستظل, وليقعد, وليتم صومه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்என்று கூறினார்கள். (புகாரி ; 6704)

இதற்குப் பெயர் தான் பித்அத்தாகும். எனவே எதற்கு மார்க்கத்தில் அடிப்படை இல்லையே அது பித்அத் என்ற விளக்கத்தை நாம் கொடுப்பது தான் சரியான நிலைபாடாகும். நல்ல ஈமான் உள்ளவர்களும் ஸஹாபாக்களை மதிப்பவர்களும் கொடுக்கும் விளக்கம் இது தான்.அது தான் பேனுதலாகும். அல்லாஹ் உண்மையை புரிந்து கொள்ளும் பாக்கியத்தைத் தருவானாக.

 

No comments:

Post a Comment