Thursday, July 8, 2021

இறை இல்லங்களின் திறப்பும் நம் உணர்வும்

அல்லாஹுத்தஆலா உலகத்திலே மனிதனைப் படைத்து, அவன் ஒவ்வொரு நேரத்திலும் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு மற்றவர்கள் அவனிடத்திலே நடந்து கொள்வதற்கும் அவன் தன்னை சரி செய்து கொண்டு அடுத்த நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கும் எண்ணற்ற உணர்வுகளை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.


சந்தோசம் துக்கம் பயம் கோபம் இறக்கம் இப்படி மனிதனுக்கு 40க்கும் மேற்பட்ட முக்கிய உணர்வுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதனுக்கு மனிதன் உணர்வுகளில் சற்று வித்தியாசங்களும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாமே தவிர, அந்த உணர்வுகள் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.  


ஒருவருடைய பேச்சு, அவனுடைய செயல்பாடுகள், அவனுடைய நடை முறைகள், அவனைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகள் இவைகளை வைத்து அவன் எந்த உணர்வில் இருக்கிறான் ? மகிழ்ச்சியாக இருக்கிறானா ? சோகமாக இருக்கிறானா ? கோபமாக இருக்கிறானா ? அன்பாக இருக்கிறானா ? இறக்கமாக இருக்கிறானா ?என்பதை புரிந்து கொள்ள முடியும்.ஒரு மனிதனை சார்ந்து அல்லது அவனைச் சுற்றி நடக்கக்கூடிய நிகழ்வுகள் தான் அவனுடைய உள்ளுணர்வுகளுக்கான சான்றுகள். 


எல்லாம் நவீன மயமாகி இருக்கிற,  நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற இக்காலத்தில், உணர்வுகளையும் துல்லியமாகக் கணக்கிட  app  ஒன்றை  அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


ஹெடோனோமீட்டர்' என்ற அந்த app டுவிட்டர் சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்து,  அந்த வலைதளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துகளில் உள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்கள் சோகமாக இருக்கிறார்கள், அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்கள் கடுமையான அச்சத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களின் மனநிலையை அந்த app  கணக்கிடுகிறது. 


ஆக இறைவன் மனிதர்களை படைக்கின்ற பொழுதே அவர்களுக்கு தேவையான உணர்வுகளையும் கொடுத்து விட்டான். அத்தகைய உணவுகளில் ஒன்று தான் மகிழ்ச்சி யும் சந்தோசமும்.


இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் அதிகம் எதிர் பார்க்கிற விஷயம் அது தான். எப்போதுமே மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர் பார்ப்பும் ஆசையும். இதில் தவறொன்றும் இல்லை. மார்க்கம் மகிழ்ச்சிக்கு தடை  விதிக்க வில்லை. ஆனால் எதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்பதற்கான அளவுகோளையும் வரையரையையும் மார்க்கம் ஏற்படுத்தியிருக்கிறது. 


மகிழ்ச்சி நன்மைகளைக் கொண்டும் ஏற்படும் தீமைகளைக் கொண்டும் ஏற்படும். நம் மகிழ்ச்சி நன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர தீமைகளைக் கொண்டு இருக்கக்கூடாது. இரண்டையும் குர்ஆன் விவரிக்கிறது. 


காரூனைக் குறித்து குர்ஆன் பேசுகிறது. அவனுக்கு அல்லாஹ் எண்ணற்ற வளங்களையும் செல்வாக்கையும் கொடுத்திருந்தான். 


كان قارون أينما ذهب يحمل معه مفاتيح كنوزه ، وكانت من حديد ، فلما ثقلت عليه جعلها من خشب ، فثقلت فجعلها من جلود البقر على طول الأصابع ، وكانت تحمل معه إذا ركب على أربعين بغلا قرطبي 


காரூன்,  அவன் எங்கு சென்றாலும் தன்னுடைய கஜானாக்களின் சாவிகளை அவனோடு எடுத்துச் செல்வான். அவை முதலில் இரும்பாலான சாவிகளாக இருந்தது. அதற்கு பிறகு அது சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் அந்த சாவிகளை பலகையினால் செய்தான். அதுவும் சுமப்பதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் மாட்டின் தோளினால் அதை உருவாக்கினான். அந்த சாவிகள் கூட 40 கழுதைகள் சுமந்து செல்லும் அளவிற்கு அதிகமாக இருந்தது. (குர்துபி)


சாவிகளே 40 கழுதைகள் சுமக்கும் அளவுக்கு இருந்தது என்றால், அவனுடைய மொத்த கஜானாக்கள் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


இவ்வளவு தூரம் செல்வமும் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளும் பெற்ற காரணத்தினால் பெருமையிலும் கர்வத்திலும் திரிந்தான். அழிச்சாட்டியங்கள் செய்து கொண்டிருந்தான். பாவங்களில் மூழ்கிப் போயிருந்தான். தன்னிடமிருந்த பிரமாண்டமான செல்வங்களைப் பார்த்து மிதமிஞ்சிய சந்தோஷத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாட்டத்திலும் இருந்தான். அதை பார்த்து மக்களில் இருந்த சிலர் நீ அதிகமாக சந்தோஷப் படாதே! சந்தோசப் படுபவர்களை இறைவன் விரும்புவதில்லை என்றார்கள்.


إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ ۖ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ


நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 28 ; 76)


குர்ஆனில் ஒரு இடத்தில் காஃபிர்களைக் குறித்தும் அவர்களுக்குக் கிடைக்கின்ற தண்டனைகளைக் குறித்தும் இறைவன் பேசுகிறான். கழுத்தில் பிரமாண்டமான சங்கிலிகளால் கட்டப்பட்டு நரகத்திற்கு இழுத்து வரப்படுவார்கள். கொதிக்கும் நீரிலும் கடும் நெருப்பிலும் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வரும் இறைவன் அதனை தொடர்ந்து கூறும் போது ; 

 

 ﴿ ذَلِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَمْرَحُونَ ﴾ [غافر: 75].


 “இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்). (அல்குர்ஆன் 40:75)


பாவமான காரியங்களில் ஈடுபடுவதை நினைத்து பெருமைப் படுவதையும் ஷரீஅத்திற்கு மாற்றமான விதத்தில் சந்தோஷப்படுவதையும் இறைவன் விரும்புவதில்லை என்பதைத்தான் காரூன் குறித்த வசனமும் காஃபிர்கள் குறித்த வசனமும்  நமக்கு தெளிவுபடுத்துகிறது.


எனவே நமது மகிழ்ச்சியும் சந்தோசமும் எப்படி அமைய வேண்டுமென்றால் நன்மைகளைப் பார்த்து சந்தோசப்பட வேண்டும் ஷரீஅத் அனுமதித்த விதத்தில் சந்தோசங்கள் அமைய வேண்டும்.


يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ * قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ﴾ [يونس: 57- 58]، 


மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 10: 57,58)



قال الصوفية رحمهم الله: «فإن أرفع درجات القلوب فرحها التام بما جاء به الرسول صلى الله عليه وسلم، وابتهاجها وسرورها، 


இதயத்திற்கு நிறைய படித்தரங்கள் இருக்கிறது. அதில் நபி ஸல் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் ஷரீஅத்தையும் கொண்டு சந்தோசப் படுவதும் அகமகிழ்வதும் தான் அந்த இதயத்தின் படித்தரங்களிலேயே ஆக உயர்ந்ததாகும் என ஞானிகள் கூறுவார்கள்.


ஒரு முஃமினுடைய சந்தோசம் மகிழ்ச்சியும் இப்படித்தான் இருக்க வேண்டும். நன்மையான காரியங்களை நினைத்து சந்தோசப்படவேண்டும். நன்மையான காரியங்களை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததற்தாக சந்தோசப்பட வேண்டும். நன்மையான காரியங்களை செய்து முடிப்பதற்காக சந்தோசப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் வெற்றியும் உதவியும் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். மற்றவர்கள் நேர்வழியின் பக்கம் வருவதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.


நபியவர்களின் வாழ்க்கையில் இது மாதிரியான எண்ணற்ற மகிழ்வான சந்தோஷமான தருணங்களை பார்க்க முடியும்.


அபூஜஹ்லின் மகனார் இக்ரிமா ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை நினைத்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். காஃபிர்களிடத்தில் மிக முக்கிய அங்கம் வகித்த அதியுப்னு ஹாதம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்து அளவிலா ஆனந்தம் கொண்டார்கள். எதிரிகளுக்கு மிகப் பெரும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த உமர் ரலி அவர்களின் இஸ்லாத்தை பார்த்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கி போனார்கள்.


அருமை சஹாபாக்கள் வாழ்க்கையிலும் இது மாதிரியான எண்ணற்ற தருணங்களைப் பார்க்க முடியும்


وذهب ابو هريرة إلى النبي ﷺ باكيًا، وقال: "إني كنت أدعو أمي إلى الإسلام فتأبى علي فدعوتها اليوم فأسمعتني فيك ما أكره، فادع الله لأم أبي هريرة؟ فدعا النبي ﷺ لها أن يهديها الله، فرجع أبو هريرة إلى بيته، فطرق الباب، فأمرته أن ينتظر فسمع صوت الماء في المخضب وهي تغتسل، ثم خرجت إليه، تقول: أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمد عبد الله ورسوله، عند ذلك بكى أبو هريرة من شدة الفرح رواه مسلم:


ஒரு நாள் அபூஹுரைரா ரலி  அவர்கள் அழுது கொண்டே நபியிடத்தில் வந்தார்கள்.

நபி ஸல் அவர்கள் “அபூஹுரைரா ஏன் அழுகின்றீர்? என்று கேட்டார்கள்.



அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழுது கொண்டே “அல்லாஹ்வின் தூதரே! என் தாயை இஸ்லாத்தின் அழைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என் அழைப்பிற்கு பதில் தர வில்லை. 


வழமை போல் இன்றைக்கும் அவர்களை அழைத்தேன். ஆனால் 

என் தாய்  உங்களை விமர்சித்து விட்டார்கள். அவர்களின் ஹிதாயத்திற்காக நீங்கள் துஆ செய்யுங்கள் என்றார்கள்.


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் துஆ செய்தார்கள். 


அபூஹுரைரா (ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது தாயார் குளித்து , புத்தாடை அணிந்து 

கலிமா ஷஹாதத்தை மொழிந்தவாறே கதவைத் திறந்தார்கள்.அதைப் பார்த்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.  (முஸ்லிம் : 6551)


أبي بن كعب  أقرأ الأمة، أعلمهم بالقراءة، قراءة القرآن، لما قال له النبي ﷺ مرة: إن الله أمرني أن أقرأ عليك سورة كذا؟ قال: وذكرني لك؟ ذكرني باسمي؟ قال: نعم فبكى أبي من شدة الفرح رواه البخاري: (3809)، ومسلم: .


அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “உங்களுக்கு இன்ன அத்தியாயத்தை ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று கூறினார்கள். “அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று உபை (ரலி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்” என்று பதிலளிக்க, (உணர்ச்சிப் பெருக்கால்) அப்போது உபை (ரலி) அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.(முஸ்லிம் : 1901)


 روى مسلم في صحيحه من حديث أسماء بنت عميس رضي الله عنها وكانت قد قدمت على حفصة زوج النبي صلى الله عليه وسلم زائرة، وقد كانت هاجرت إلى النجاشي فيمن هاجر إليه، فدخل عمر على حفصة وأسماء عندها، فقال عمر حين رأى أسماء: من هذه؟ قالت: أسماء بنت عميس، قال عمر: الحبشية هذه؟ البحرية هذه؟ فقالت أسماء: نعم، قال عمر: سبقناكم بالهجرة، فنحن أحق برسول الله صلى الله عليه وسلم منكم، فغضبت، وقالت كلمة: كذبت يا عمر، كلا والله، كنتم مع رسول الله صلى الله عليه وسلم يطعم جائعكم، ويعظ جاهلكم، وكنا في دار - أو في أرض البعداء البغضاء في الحبشة، وذلك في الله وفي رسوله، وأيم الله لا أطعم طعامًا، ولا أشرب شرابًا حتى أذكر ما قلت لرسول الله صلى الله عليه وسلم، ونحن كنا نؤذى ونُخاف، وسأذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم وأسأله، ووالله لا أكذب ولا أزيغ، ولا أزيد على ذلك. قال: فلما جاء النبي صلى الله عليه وسلم قالت: يا نبي الله! إن عمر قال كذا وكذا، فقال رسول الله صلى الله عليه وسلم: «لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ، وَلَهُ وَلِأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ، وَلَكُمْ أَنْتُمْ أَهْلَ السَّفِينَةِ هِجْرَتَانِ»، قالت: فلقد رأيت أبا موسى وأصحاب السفينة يأتوني أرسالًا، يسألوني عن هذا الحديث، ما من الدنيا شيء هم به أفرح ولا أعظم في أنفسهم مما قال لهم رسول الله صلى الله عليه وسلم  رواه مسلم برقم 


உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்ட போது, ‘இவர் யார்?’ என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். ‘(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்” என்றார்கள். ‘இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘ஆம்” என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் ரலி அவர்கள்,  ‘உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் மிகவும் மேலானவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவும் மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்த போது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு

கூறினார்கள்” என்று கூறினார்கள். ‘அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, ‘அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்” என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களை விட அவர் எனக்கு உரியவர் இல்லை. அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு” என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் சொன்ன இந்த வார்த்தையை விட அவர்களுக்கு உலகில் மிகவும் மகிழ்ச்சியானதாக வேறு எதுவும் இருக்க வில்லை என்று கூறப்படுகிறது. (முஸ்லிம் : 2503)


وفي الصحيحين من حديث أنس رضي الله عنه أن رجلًا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة، فقال: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا؟» قَال: لَا شَيءَ، إِلَّا أَنِّي أُحبُ اللهَ وَرَسُولَهُ، فَقَال: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»[9]. قال أنس: فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»،

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.(புகாரி :  3688)


நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது இறை இல்லங்கள் திறக்கப்பட்டு அங்கு தொழுகைகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த இறை இல்லக் கதவுகள் இப்போது திறந்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்பது இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம். 


ஏன் இந்த கேள்வி எழுகிறது என்றால், உண்மையில் இறை இல்லங்கள் திறக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது என்றால், திறக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தொழுகையிலும் பள்ளி நிரம்பி வழிய வேண்டும். ஆனால் அந்த நிலையை பார்க்க முடிய வில்லை. பூட்டப்படுவதற்கு முன்பு பார்த்த அதே சொற்ப நபர்களின் முகங்களைத் தான் தற்போதும் பார்க்க முடிகிறது.


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒரு மனிதனின் உணர்வுகளை அவனிடத்திலிருந்து வெளிப்படக்கூடிய செயல்பாடுகளை வைத்து உணர்ந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் மூடப்பட்ட இல்லங்களில் கதவுகள் திறந்திருப்பது அனைவரின் உள்ளத்திற்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்பதற்கான அடையாளமே அனைவரும் பள்ளியைத் தேடி வருவது தான். மிகவும் பிரியமான தொலைந்து போன ஒரு மகன் நீண்ட நெடும் காலங்களுக்கு பிறகு திரும்பி கிடைக்கிறான் என்றால் அந்த பெற்றோர்கள் எப்படி ஆர்வத்தோடும் ஆசையோடும் ஏக்கத்தோடும் பாசப்பிணைப்போடும் அந்த மகனை கட்டித்தழுவி முத்தமிடுவார்களோ அதேபோன்று நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளியின் கதவுகள் திறக்கப்படுகின்ற பொழுது ஆவலோடும் ஆர்வத்தோடும் ஆசையோடும் ஏக்கத்தோடும் அனைவரும் வந்து  அதன் மூலம் பள்ளி நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் அந்த சூழ்நிலையை பார்க்க முடிய வில்லை. எனவே உண்மையில் நம் அனைவருக்கும் பள்ளி திறந்ததில் மகிழ்ச்சி இருக்கிறதா ? 


1 comment:

  1. அருமை மௌலானா, வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் துஆக்கள்.

    ReplyDelete