Monday, March 7, 2022

நன்றி

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தங்கள் வாழ்வில் செய்த மிக முக்கியமான துஆக்களில் ஒன்று ; யா அல்லாஹ் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்பதாகும்.இறைவன் நமக்கு இதுவரை செய்த இப்போதும் செய்து கொண்டிருக்கிற இனி நம் மரணம் நமக்கு செய்ய இருக்கிற உபகாரங்களுக்கு  நன்றி செலுத்துவது என்பது ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய மிகச்சிறந்த பண்புகளில் ஒன்று.

நன்றி செலுத்தியதால் உயர்வு பெற்ற வரலாறுகளும்,நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே உண்டு.இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை கூறும்போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார் என்று நஹ்ல் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதேபோன்று நன்றி மறந்த பல சமுதாயங்களை இறைவன் அழித்த வரலாறுகளையும் குர்ஆனில் அநேக இடங்களில் காணமுடியும்.இதன் மூலம் நன்றி செலுத்துவதின் அவசியத்தை நாம் உணரலாம்.

அன்பானவர்களே முதலில் நாம் எப்படி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.நன்றி என்பது மூன்று அமைப்பில் இருக்க வேண்டும்.உள்ளத்தால் நன்றி செலுத்த வேண்டும், நாவால் நன்றி செலுத்த வேண்டும்,நம் உடல் உறுப்புக்களால் நன்றி செலுத்த வேண்டும்,அல்லாஹ்வின் நிஃமத்துக்களை நிஃமத் என்று நம்ப வேண்டும்.இது உள்ளத்தால் செய்யும் நன்றி.அதற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்.இது நாவால் செய்யும் நன்றி.அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை செய்ய வேண்டும்.இது உடல் உறுப்புக்களால் செய்யும் நன்றி. இந்த மூன்றும் இருந்தால் தான் முழுமையாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக ஆக முடியும்.

அதே சமயத்தில் நன்றி உணர்வு நமக்கு வரவேண்டுமென்றால் முதலில் நாம் அல்லாஹ்வின் நிஃமத்துகளை  விளங்க வேண்டும்.

அல்லாஹ் தன் வேதத்தில் ; நான் உங்களுக்கு செய்திருக்கிற நிஃமத்துகளை நீங்கள் எண்ண ஆரம்பித்தால் உங்களால் எண்ணி முடிக்க முடியாது என்று கூறுகிறான். நமக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் உடனே படைத்த அல்லாஹ்வை திட்ட ஆரம்பித்து விடுகிறோம்.ஆனால் நோயில் கூட அல்லாஹ்வின் நிஃமத்தை பார்ப்பது தான் சிறந்த முஸ்லிமின் அடையாளம். 

 எனக்கு வரும் ஒவ்வொரு நோயிலும் நான்கு நிஃமத்துகளை உணருவேன் என்று கூறுகிறார்கள் இப்னு உமர் {ரலி}அவர்கள். 1,என்னை விட மோசமானவனைப் பார்த்து அவனை விட அல்லாஹ் நம்மை ராஹத்தாக்கி இருக்கிறானே என்று அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 2,எந்த நோய் வந்தாலும் பொருமையை மேற்கொள்வேன்.எனவே அந்த பொருமையை கொடுத்த அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 3,எனக்கு எந்த நோய் வந்தாலும் அது என் தீனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அதற்காக அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன். 4,எந்த நோய் வந்தாலும் அதற்கான நன்மையை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பேன். எனவே அந்த எண்ணத்தைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்வேன் என்று கூறுகிறார்கள்.

இப்னு சம்மாக் ரஹ் அவர்களை உபதேசம் செய்வதற்காக ஹாரூன் ரஷீது அவர்கள் தங்கள் அரசபைக்கு அழைப்பார்கள்.அந்த இப்னு சம்மாகும் வருவார்கள்.அந்த நேரம் ஹாரூன் ரஷீது அவர்கள் ஒரு சொம்பில் தண்ணீர் அருந்திக் கொண்டிருப்பார்கள்.அப்போது இப்னு சம்மாக் அவர்கள் : ஹாரூன் ரஷீதே இந்த தண்ணீர் உங்கள் உடம்புக்குள் செல்ல மறுத்தால் அதற்காக நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்காக என் ஆட்சியின் பாதியை தருவேன் என்றார்கள்.சென்ற தண்ணீர் திரும்ப வர வில்லையென்றால் அதற்காக என்ன விலை கொடுப்பீர்கள்? என்று கேட்டபோது என் மீதி ஆட்சியையும் கொடுப்பேன் என்றார் ஹாரூன் ரஷீது அவர்கள். அப்படியானால் உங்கள் ஆட்சி இந்த சொம்பு தண்ணீரை விட மிக கேவலமானது என்று இப்னு சம்மாக் அவர்கள் கூறுவார்கள். 

அன்பானவர்களே நாம் குடிக்கும் தண்ணீரை வைத்தே அல்லாஹ்வின் நிஃமத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.எனவே நாம் அல்லாஹ்வின் நிஃமத்துகளை புரிந்து கொள்வோம்,அவனுக்கு நன்றி செலுத்துவோம்.

  


No comments:

Post a Comment