Monday, March 7, 2022

சமூக சேவை

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றத்தில் சமூக சேவை நமக்குத் தேவை என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதப் புனிதனமாக மாறுவதற்கும் அல்லாஹுத்தஆலா நபிமார்களை உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.அந்த நபிமார்களில் முத்தாய்ப்பாக அந்த நபிமார்களுக் கெல்லாம் தலைவராக அண்ணல் நபி ஸல் அவர்களை அல்லாஹ் உலகத்திற்குத் தந்தான். அவர்களது வாழ்வின் அத்தனை விஷயங்களும் மனித சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

மனித வாழ்வில் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கிறதோ அந்த அத்தனை துறைகளிலும் நபி ஸல் அவர்களின் முன்மாதிரி இடம் பெற்றிருக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் அங்கே நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதல் அடங்கியிருக்கும்.

அல்லாஹ்வை எந்த இடத்தில் வைக்க வேண்டும், மாநபி ஸல் அவர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்,மனிதர்களோடு எப்படி பழக வேண்டும், மற்ற படைப்புகளோடு எப்படி பழக வேண்டும்,குடும்பத்தை எப்படி கவனிக்க வேண்டும், சொந்தங்களை எப்படி அரவணைக்க வேண்டும், அண்டை வீட்டாரை எப்படி ஆதரிக்க வேண்டும், தனி மனித வாழ்கை,குடும்ப வாழ்கை, சமூக வாழ்க்கை, அரசியல், ஆண்மீகம், அறிவியல், விஞ்ஞானம், வியாபாரம்,விளையாட்டு என அத்தனைக்கும் வழிகாட்டுதலும் முன்மாதிரியும் சத்திய நபி ஸல் அவர்களில் சரித்திரத்தில் உண்டு.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அண்ணல் நபி ஸல் அவர்களின் வழிகாட்டுதலை ஒதுக்கி வைத்து விட்டு நபி ஸல் அவர்களின் போதனைகளை புறம் தள்ளி விட்டு நாம் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதை நாம் முழுமை படுத்த முடியாது.அப்படியே ஒரு வேளை முழுமை படுத்தினாலும் அதில் நாம் எண்ணுகிற இலக்கை அடைய முடியாது.

மனித வாழ்வின் எல்லா சந்துகளிலும் நபி ஸல் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். மனித வாழ்வின் எல்லா பாதைகளிலும் நபி ஸல் அவர்கள் பயணித்திருக்கிறார்கள்.மனித வாழ்வின் எல்லா மூளை முடுக்குகளிலும் நபி ஸல் அவர்கள் தடம் பதித்திருக்கிறார்கள். 

இன்றைக்கு உலகில் எந்தத் தலைவர்களாக இருக்கட்டும் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கட்டும் சமூகத்தில் தன் பெயர் நிலைப்பதற்காகவும், சமூகத்தில் தனக்கொரு இடம் கிடைப்பதற்காகவும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபட நினைப்பது சமூக சேவைகளிலும் களப்பணியிலும் தான்.

ஆனால் இந்த சமூக சேவைகளிலும், களப்பணிகளிலும் முன்னுதாரணமாகவும், அதில் முத்திரை பதிப்பவர்களாகவும் இருந்ததோடு மட்டுமின்றி மற்ற தலைவர்களைப் போன்றும் மற்ற இயக்க வாதிகளைப் போன்றும் இல்லாமல் அதை தூய எண்ணத்தோடு செய்தவர்கள் அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் மட்டும் தான்.

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நாயகம் ஸல் அவர்கள் செய்த சமூக சேவைகளும் களப்பணிகளும் என்றைக்கும் பெயருக்காகவோ,புகழுக்காகவோ, எதோ கடமைக்காகவோ இருந்ததே இல்லை. மாறாக எந்த நேரத்தில் எந்த சமூகத்திற்கு எந்த மனிதருக்கு எது தேவையோ, எது அவசியமோ அதில் கவனம் செலுத்தினார்கள், 

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் சமூக சேவைகள் செய்ய வேண்டும் என்றும் சமூகத்திற்காக பாடுபட வேண்டும் என்றும் தன் தோழர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தன் சகோதரனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரின் தேவைகளை பூர்த்தி செய்தால் அவர் என்னை சந்தோஷப்படுத்தியவராக ஆவார்.எவர் என்னை சந்தோஷப் படுத்தி விட்டாரோ அவர் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தியவராக ஆவார்.எவர் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்தி விட்டாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கொடுத்து விடுவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். 

சொன்னதோடு மட்டுமின்றி இந்த சமூகத்திற்காக எண்ணற்ற சமூக சேவைகளையும் களப்பணிகளையும் செய்திருக்கிறார்கள். 

ஒரு முறை வெளி ஊரிலிருந்து ஒருவர் மக்காவிற்கு வந்து, அபூஜஹ்ல் எனக்கு அநீதம் செய்து விட்டான்.நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்,எனக்கு தர வேண்டிய பொருளை அவனிடமிருந்து வாங்கித் தர வேண்டும் என்று மக்காவாசிகளிடம் வந்து சொன்னார்கள்.உடனே மக்கா வாசிகள் இந்த ஊரில் முஹம்மது என்று ஒரு மனிதர் இருக்கிறார். அவரிடம் சென்று உன் விஷயத்தை சொல்.உனக்கு அவர் உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பினார்கள்.அவரும் நபி ஸல் அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்.அபூஜஹ்ல் எப்படிப்பட்டவன் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.மிக மிக மோசமானவன்.நபி ஸல் அவர்களை கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன்.அந்தளவு மோசமானவனாக இருந்தும் கூட அந்த மனிதர் உதவி என்று வந்தவுடன் எதையும் யோசிக்காமல் அவரை அழைத்துக் கொண்டு அபூஜஹ்லின் வீட்டிற்கு போய் அவருக்கு தர வேண்டிய பொருளை வாங்கிக் கொடுத்தார்கள்.

சமூகத்திற்காக சேவை செய்வதில் பிறருக்கு உதவி செய்வதில் நபி ஸல் அவர்கள் எந்தளவு ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம். 

அண்ணலம் பெருமானார் ஸல் அவர்களை முதன் முதலாக வானவர் கோமான் ஜிப்ரயீல் அலை அவர்களைப் பார்த்து பெரும் திடுக்கத்திலும் அச்சத்திலும் வந்த போது அவர்களை அருகில் அமர வைத்து அரவணைத்து  அண்ணை கதீஜா ரலி அவர்கள் கூறிய வார்த்தை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.

والله لا يخزيك الله ابدا انك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين علي نوائب الحق

நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகிறீர்கள், சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்கள், இல்லாதப்பட்டவர்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள், விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்.எனவே அல்லாஹ் உங்களை நிச்சயம் இழிவுபடுத்த மாட்டான் என்று அவர்கள் சொன்னார்கள்.

அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் அன்றைக்கு எந்தளவு சமூக சேவைகளையும் களப்பணிகளையும் செய்தார்கள் என்பதை அன்னை கதீஜா நாயகி சொன்ன இந்த வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே நாம் நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் அண்ணல் நபி ஸல் அவர்களைப் பார்த்து அவர்களைப் பின்பற்றி நடப்பதைப் போன்று சமூக சேவைகளிலும் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.அவர்கள் எப்படி சமூக சேவைகள் செய்தார்களோ அதே போன்று நாமும் செய்ய வேண்டும்.அவர்கள் எப்படி சமூகத்திற்காக பாடுபட்டார்களோ அதே போன்று நாமும் பாடுபட வேண்டும்.வல்லோன் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.


No comments:

Post a Comment