Monday, March 7, 2022

ஈமானிய உறுதி

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அனவற்ற அருளாளன் நிதரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

தாருல் உலூம் ஸஈதிய்யாவின் கண்ணியத்திற்குரிய நாஜிர் முஃப்திஸாப் ஹள்ரத் அவர்களே எங்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கும் எங்கள் ஹள்ரத் மார்களே மற்றும் எங்களோடு கல்வி பயிலும் எங்கள் சக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் ஸலாம் கூறி என் உரையைத் தொடங்குகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

ஈமானில் உறுதி கொள்வோம் என்ற தலைப்பில் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன்.

நமக்கு அல்லாஹ் ஈமானைத் தந்திருக்கிறான்.ஈமான் என்பது பெரும் பாக்கியம்.அதை அல்லாஹ் எல்லோருக்கும் கொடுப்பதில்லை. எல்லாருக்கும் ஈமான் கிடைப்பதுமில்லை.அந்த ஈமானுக்காக அல்லாஹ் தான் மக்களை தேர்வு செய்கிறான்.அப்படி ஈமானுக்காக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தான் நாம். ஈமான் கொடுக்கப்பட்ட பெரும் பாக்கியசாளிகளாக நாம் இருந்தாலும் நம் ஈமானின் தரமென்ன நம் ஈமானின் வலிமையென்ன என்பதை நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

கண்ணியமானவர்களே ஈமான் என்றால் என்ன ? அல்லாஹ்வைப் பார்க்க வில்லை.ஆனால் அந்த அல்லாஹ்வை நம்பியிருக்கிறோம். நபியைப் பார்க்க வில்லை.ஆனால் அந்த நபியை நம்பியிருக்கிறோம்.இப்படியே மலக்குகள், நபிமார்கள், சொர்க்கம்,நரகம் என எதையும் பார்க்க வில்லை.ஆனால் அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.இதற்குப் பெயர் தான் ஈமான்.

கண்ணியமானவர்களே நாம் ஈமான் கொண்டதைப் போலத்தான் ஸஹாபாக்களும் ஸஹாபியப் பெண்களும் ஈமான் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் ஈமானிய உறுதி எப்படி இருந்தது தெரியுமா ? அவர்கள் தங்கள் குடும்பத்தை இழந்தார்கள், தங்கள் சொத்துக்களை இழந்தார்கள், தங்கள் வீடுகளை இழந்தார்கள்,தங்கள் நாட்டை துறந்தார்கள், இறுதியில் தங்கள் உயிரையே கொடுத்தார்கள்.ஆனாலும் அவர்கள் ஈமானை விட வில்லை.அத்தனையையும் இழந்த பிறகும் கூட ஈமானில் உறுதியாக நின்றவர்கள் தான் ஸஹாபாக்களும் ஸஹாபியப் பெண்களும்.

அன்பானவர்களே நபி ஸல் அவர்களின் அன்புத் தோழர்களில் ஒருவரான ஹள்ரத் குபைப் ரலி அவர்கள் ஈமானை ஏற்றுக் கொண்டதின் காரணமாக எத்தனையோ துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தார்கள். எல்லாவற்றையும் பொறுமையோடு தாங்கிக் கொண்டார்கள். கடைசியாக அவர்களை தூக்கு மேடையில் ஏற்றப்பட்டது, அந்த நேரத்தில் கூட நான் இரண்டு ரக்கஅத் தொழ வேண்டும் என்று கூறி, தொழுது, நாயகத்தின் சுன்னத்தை சமூகத்தின் பார்வையில் நிலைநாட்டினார்களே தவிர தன்னுடைய ஈமானை விட வில்லை.கொடுக்கப்பட்ட துன்பங்களும் சோதனைகளும் அடங்கிப் போனதே தவிர, கொடுத்தவர்கள் கலங்கிப் போனார்களே தவிர ஹள்ரத் குபைப் ரலி அவர்களிடம் இருந்த ஈமானும் ஈமானிய உறுதியும் கொஞ்சம் கூட குறைய வில்லை.

அதுமட்டுமா ஹள்ரத் அம்மார் ரலி அவர்களின் தாயாரான ஹள்ரத் சுமைய்யா ரலி அவர்களை நாம் மறக்க முடியாது.இஸ்லாத்திற்காக ஈமானிற்காக தன் உயிரைக் கொடுத்த முதல் பெண்மனி அவர்கள் தான்.  அந்த அம்மையார் மிக வயோதிகராகவும் மிக மிக பலவீனமானவராகவும் இருந்தும் கூட கொடியவன் அபூஜஹ்ல் விட வில்லை.அந்த அம்மையாரும் தங்கள் ஈமானை விட வில்லை. 

எண்ணற்ற துன்பங்களும் வேதனைகளும் கொடுமைகளும் கொடுக்கப்பட்டும் அவை அனைத்தையும் தாங்கி பொறுமை கொண்டு தங்கள் உயிரை விட்டார்களே தவிர ஈமானை விட்டுக் கொடுக்க வில்லை. 

ஸஹாபாக்கள் ஈமானுக்காக எத்தனையோ துன்பங்களை தாங்கினார்கள். நம்மால் ஒரு துன்பத்தை தாங்க முடிகிறதா ஒரு சோதனையை தாங்க முடிகிறதா ? ஒரு சின்ன சோதனை வந்தால் கூட ஒரு சிலர், நாம் தொழுது என்ன பயன் நாம் துஆ கேட்டு என்ன பயன் என்றெல்லாம் புழம்புவதை நாம் பார்க்கிறோம்.

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஈமானை ஒரு தட்டிலும் உலகத்தில் உள்ள அனைவரின் ஈமானை மறு தட்டிலும் வைத்து நிறுக்கப்பட்டால் ஹள்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஈமான் தான் கனத்தால் மிகைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நம்முடைய ஈமானை தராசில் வைத்து நிறுத்தால் ஒரு 100 கிராம் கூட தேறுமா என்பது சந்தேகம் தான்.அந்தளவு பலகீனமாக இருக்கிறது.

இப்படி ஈமானுக்காக தங்கள் இன்னுயிரை விட்ட ஸஹாபாக்களை வரலாறுகளில் பார்க்கலாம்.உதாரணத்திற்காக ஹள்ரத் பிலால் ரலி அவர்கள் ஹள்ரத் கப்பாப் ரலி அவர்கள் ஹள்ரத் அம்மார் ரலி அவர்கள் ஹள்ரத் ஸுஹைப் ரலி அவர்கள் போன்ற எல்லோரும் ஈமானுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்களே தவிர தங்கள் ஈமானில் சிறிது கூட பலவீனமாக வில்லை.

எனவே அன்பானவர்களே அவர்களைப் போல் நாமும் ஈமான் கொண்டு அந்த ஈமானில் உறுதியாக நின்று அல்லாஹ்வின் அருளைப் பெற வல்லோன் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.        


No comments:

Post a Comment