Thursday, December 1, 2022

இஸ்லாம் கூறும் அடிமை ஒழிப்பு திட்டம்

 

நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் வாழ்க்கை நெறியாக தீனுல் இஸ்லாத்தை நமக்களித்திருக்கிறான். தீனுல் இஸ்லாம் உலகிற்கு சொன்ன கருத்துக்களும் இவ்வையகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும், நிகழ்த்திய சாதனைகளும், செய்த புரட்சிகளும் அசாதாரணமானவை. இஸ்லாம் ஏற்படுத்திய மாபெரும் புரட்சிகளில் ஒன்று உலகில் மனிதனாய் பிறந்த அனைவரும் சமம், யாரும் யாருக்கும் அடிமையல்ல, சுதந்திரமாக வாழுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பது.ஒரு மனிதன் சட்டம், நீதி போன்றவற்றுக்கு முரண்படாத வகையிலும், இறைவனுக்கு மாற்றம் செய்யாத வகையிலும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத அமைப்பிலும், தான், நினைத்ததை பேசுவதற்கும் செயற்படுவதற்குமான உரிமைக்கு சுதந்திரம் எனறு கூறப்படும். அந்த சுதந்திரத்தை மனிதனுக்கு இஸ்லாம் முழுமையாக வழங்கியுள்ளது.

மனித இனம் மண்ணில் மலர்ந்த போது வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் பொது நிலையில் இருந்ததால் அது பொதுவுடைமைச் சமூகம் என்று கூறப்பட்டது. அது சாதி, மத, இன வேறுபாடுகளற்ற, வர்க்க பேதமற்ற, தன்னலம் தலை தூக்காத சமூக அமைப்பாக இருந்தது. பொதுவுடைமைச் சமூகம் என்று தனியுடைமைச் சமூகமாக மாறி தனக்கெனச் சொந்தம் கொண்டாடத் தொடங்கியதோ அன்று முதல் மனிதர்களிடையே போட்டிகளும் போராட்டங்களும் உருவாயது.

இதனால் ஒருவர் மற்றொருவர் மீதும், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீதும், ஒரு சாதியினர் மாற்றுச் சாதியினர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் மனநிலையும் சூழலும் உருவானது. இதன் பின்னனியில் தான் அடிமைச் சமூகம்உருவானது.

தொன்மை நாகரீக நாடுகளான கிரேக்கம், எகிப்து, ரோம், அரேபியா, சீனாவிலும் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூகத் தகுதியாகக் கருதப்பட்டது. பிற நாடுகள் அல்லது இனங்களின் மீது தங்கள் கலாசாரத்தைத் திணித்தல், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளில் பூர்வகுடி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கொன்று குவித்தார்கள். தப்பித்தவர்களை அடிமைகளாக்கினார்கள். அதிகார ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அடிமைகள் உருவாக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் நிறம் மற்றும் கலாசார அடிப்படையில் மனித இனத்தைப் பாகுபடுத்தி பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அடிமை முறையை வளர்த்து உலகமெங்கும் வீரியம் பெறச் செய்தனர். இதனடிப்படையில் கருப்பின மக்கள் தாழ்வானவர்களாக, விலங்குகளை விடக் கேவலமான வர்களாக நடத்தப்பட்டனர். வசதி படைத்தவர்கள் அடிமைகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டனர். அடிமை வர்த்தகம் உலக அளவில் பிரபலமான தொழிலாக உருவானது. அடிமைகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.

இவற்றில் மனிதனை மனிதனேவிற்கும் மாபெரும் அவலம் அரங்கேறியது.அடிமை வியாபாரம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளால் பிடிக்கப்பட்ட மனிதர்களின் மொத்த எண்ணிக்கை பத்து கோடி என்று கூறப்படுகிறது.உலக நாடுகள் அனைத்திலும் அடிமை முறை அல்லது அடிமைத் தனம் ஏதோ ஒரு வகையில் இன்றும் இருக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தற்போதைய புள்ளி விவரப்படி இந்தியாவில் 1.8 கோடிப் பேர் எந்தவொரு சிறு கேள்வியும் கேட்க முடியாமல் நவீன அடிமைகளாக வாழ்ந்து வருவதை உலக அடிமைத்தன அறிக்கை தெரிவிக்கிறது. உலகளவில் வெளியிடப்படும் அடிமைத்தனக் குறியீட்டு நாடுகளில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. நவீன அடிமைத்தனம் கொத்தடிமை, கட்டாயம் பிச்சையெடுக்க வைக்கப்படுபவர்கள், வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தப்படுபவர்கள், பாலியல் தொழிலில் தள்ளப் படுபவர்கள் எனப் பலவாறாக இன்று அடிமைத்தனம் இந்தியாவில் காணப்படுகிறது.

இன்று டிசம்பர் 2 ம் தேதி. சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்.உலகில் முதன் முதலாக அடிமை முறையை ஒழித்து, யாரும் யாருக்கும் அடிமையல்ல, யாரும் யாரை விட தாழ்ந்தவரல்ல, அனைவரும் சமம் என்று சூளுரைத்தது இஸ்லாம் தான். தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே போர் கைதிகளை மட்டும் அடிமைகளாக்கிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்தது.

போரில் சிறைப் பிடித்தக் கைதிகளை அடிமைகளாக்கிக் கொள்வது அன்றைய சமூகங்களின் வழக்கமாகவும் இருந்தது. போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பினைத்தொகையைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்வார்கள்.

2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொள்வார்கள்.

3. போர் கைதிகளை அடிமைகளாக அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.

4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொள்வார்கள்.

இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது.இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிகளை, "யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்" என்று சொல்லி எதிரிகளை விட்டு விடுவது முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை நீயும் நானும் சமம்என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ”நீயும் நானும் சமம்என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்து போடவும் முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதித்தது. அதுவும் போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்ளவோ, பிணைத் தொகை பெறவோ ஒப்பந்தம் ஏற்படும் வரையில் தான். பகை நாட்டுடன் இத்தகைய சமாதான உடன் படிக்கை ஏற்பட்டு விட்டால் போர்க் கைதிகள் விடுதலையாகி விடுவார்கள்; அடிமைகளாக நீடிக்க மாட்டார்கள்.

 

 

பிணைத் தொகை பெற்றுக்கொண்டு விடுவிப்பதை விடக் கருணை அடிப்படையில் போர்க் கைதிகளை விடுதலை செய்வதையே இஸ்லாம் மேலாகக் கருதுகிறது.

அதன் பின்னர் கருணை அடிப்படையில், அல்லது ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை விட்டு விடுங்கள் (47:4)

மற்றபடி சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்க வில்லை. அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

قالَ اللَّهُ: ثَلاثَةٌ أنا خَصْمُهُمْ يَومَ القِيامَةِ: رَجُلٌ أعْطَى بي ثُمَّ غَدَرَ، ورَجُلٌ باعَ حُرًّا فأكَلَ ثَمَنَهُ، ورَجُلٌ اسْتَأْجَرَ أجِيرًا فاسْتَوْفَى منه ولم يُعطِه أجرَه

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளியிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (புகாரி 2227)

நபி அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய காலத்தில் அந்த மக்களிடையே அடிமை வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அரபகத்தில் பலவகை அடிமைகள் இருந்தார்கள். போர்க் கைதிகள், அரபுக் குலங்களுக்கிடையே நடந்த சண்டைகளில் பிடிபட்டவர்கள், சந்தையில் வாங்கப்பட்ட அடிமைகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அடிமையானவர்கள் எனப் பலதரப்பட்ட அடிமைகள் இருந்து வந்தார்கள். இந்நிலையில் தான் அடிமைகளை விடுதலை செய்வதை வலியுறுத்தி அம்முறையைப் படிப்படியாக குறைக்கத் தூண்டியது இஸ்லாம்.

سهل بن حنيف أن النبي صلى الله عليه وسلم قال: "من أعان مجاهداً في سبيل الله أو غارماً في عسرته أو مكاتباً في رقبته أظله الله في ظله يوم لا ظل إلا ظله"

அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவருக்கு அல்லது கடனாளிக்கு அவரின் கஷ்டத்தில் அல்லது எழுதித் தரப்பட்ட அடிமைக்கு அவர் உரிமையாகுவதில் யார் உதவி செய்கிறாரோ அவனுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத அந்நாளில் அல்லாஹ் அவருக்கு தன் நிழலில் நிழலளிப்பான். )அல்ஜாமிவு ; 5447(

இஸ்லாத்தின் முதல் போரான பத்ரில் கைதிகளாக பிடிபட்டவர்களை பிணைத்தொகை வாங்கி நபி அவர்கள் விடுவித்தார்கள்.வேறு சில போர்களில் பிணைத்தொகை எதுவும் வாங்காமலும் விடுவித்திருக் கிறார்கள். மக்கா வெற்றியின் போது அம்மக்களைப் பார்த்து இன்று உங்கள் விஷயத்தில் நான் என்ன செய்வதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் நல்லதையே கருதுகிறோம் என்றார்கள். அப்போது நபி அவர்கள் அவர்கள் இன்றைய நாளில் உங்கள் மீது எந்தப் பழிவாங்குதலும் இல்லை என்று யூசுஃப் அலை அவர்கள் தங்களின் சகோதரர்களைப் பார்த்து கூறியதையே நானும் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் விடுதலை பெற்றவர்கள், சுதந்திர மானவர்கள் என்று கூறினார்கள்.

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: " لَمَّا قَسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَايَا بَنِي الْمُصْطَلِقِ وَقَعَتْ جُوَيْرِيَةُ بِنْتُ الْحَارِثِ فِي السَّهْمِ لِثَابِتِ بْنِ قَيْسِ بْنِ الشَّمَّاسِ - أَوْ لِابْنِ عَمٍّ لَهُ - وَكَاتَبَتْهُ عَلَى نَفْسِهَا، وَكَانَتْ امْرَأَةً حُلْوَةً مُلَاحَةً لَا يَرَاهَا أَحَدٌ إِلَّا أَخَذَتْ بِنَفْسِهِ، فَأَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْتَعِينُهُ فِي كِتَابَتِهَا، قَالَتْ: فَوَاللهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُهَا عَلَى بَابِ حُجْرَتِي فَكَرِهْتُهَا، وَعَرَفْتُ أَنَّهُ سَيَرَى مِنْهَا مَا رَأَيْتُ، فَدَخَلَتْ عَلَيْهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَنَا جُوَيْرِيَةُ بِنْتُ الْحَارِثِ بْنِ أَبِي ضِرَارٍ سَيِّدِ قَوْمِهِ، وَقَدْ أَصَابَنِي مِنَ الْبَلَاءِ مَا لَمْ يَخْفَ عَلَيْكَ، فَوَقَعْتُ فِي السَّهْمِ لِثَابِتِ بْنِ قَيْسِ بْنِ الشَّمَّاسِ - أَوْ لِابْنِ عَمٍّ لَهُ - فَكَاتَبْتُهُ عَلَى نَفْسِي، فَجِئْتُكَ أَسْتَعِينُكَ عَلَى كِتَابَتِي

قَالَ:  فَهَلْ لَكِ فِي خَيْرٍ مِنْ ذَلِكَ؟  قَالَتْ: وَمَا هُوَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ:  أَقْضِي كِتَابَتَكِ وَأَتَزَوَّجُكِ ، قَالَتْ: نَعَمْ يَا رَسُولَ اللهِ، قَالَ:  قَدْ فَعَلْتُ قَالَتْ: وَخَرَجَ الْخَبَرُ إِلَى النَّاسِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ جُوَيْرِيَةَ بِنْتَ الْحَارِثِ، فَقَالَ النَّاسُ: أَصْهَارُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلُوا مَا بِأَيْدِيهِمْ، قَالَتْ: فَلَقَدْ أُعْتِقَ بِتَزْوِيجِهِ إِيَّاهَا مِائَةُ أَهْلِ بَيْتٍ مِنْ بَنِي الْمُصْطَلِقِ

முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத் தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி ரலி அவர்களை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி செய்தியைக் கூறினார். செய்தி உண்மை தான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2 ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவரின் மனைவியும் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராவார்.

அன்றைய போர் தர்மத்தின்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்டனர். ஜுவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் ரலி என்ற நபித் தோழருக்குக் கொடுக்கப்பட்டார். இதன் பின்னர் ஜுவைரியா அவர்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து நான் பனூ முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார். இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெண்றால் நபிகள் நாயகம் அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதுவெல்லாம் அடிமைகள் விஷயத்தில் பெருமானார் அவர்கள் வெளிப்படுத்திய கரிசனத்திற்கும் அவர்களை உரிமை விடுவதில் அவர்கள் மேற்கொண்ட அக்கரைக்கும் உதாரணங்கள்.

 مَن أعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً، أعْتَقَ اللَّهُ بكُلِّ عُضْوٍ منه عُضْوًا مِنَ النَّارِ، حتَّى يُعْتِقَ فَرْجَهُ بفَرْجِهِ.

ஒருவர் ஒரு முஃமினான அடிமையை உரிமை விட்டால் அவரின் ஒவ்வொரு உறுப்புக்குப் பகரமாக இவரின் உறுப்புக்களை நரகிலிருந்து அல்லாஹ் பாதுகாத்து விடுவான். (முஸ்லிம் ; 1509)

அடிமைகள் உரிமை பெறுவதற்கும் மனிதர்களை சுதந்திரமானவர்களாக மாற்றுவதற்கும் பல்வேறு திட்டங்களை இஸ்லாம் கொண்டு வந்தது. அதில் ஒன்று தான் பாவங்களுக்குப் பரிகாரம். கொலைக்குற்றம், ளிஹார் என்ற சட்டம், சத்தியத்தை முறித்தல், நோன்பிருந்த நிலையில் மனைவியுடன் உறவு கொள்ளுதல், அடிமையை அடித்து துன்புறுத்துதல் போன்ற விஷயங்களுக்கு பரிகாரமாக அடிமையை உரிமை விட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.  

கொலைக் குற்றத்திற்குப் பரிகாரம் ;

وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌  وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌  فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌  وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏

தவறுதலாகவே தவிர, யாதொரு இறைநம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் யாதொரு இறைநம்பிக்கை யாளரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறைநம்பிக்கையாளரயாகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்தவேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:92)

ளிஹார் சட்டத்தில் பரிகாரம் ;

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا‌  ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ‌  وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:3)

சத்தியத்தை முறித்தலுக்குப்  பரிகாரம் ;

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌  فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌  فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌  ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌  وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌  كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக் கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான். (அல்குர்ஆன் : 5:89)

நோன்பிருந்த நிலையில் மனைவியுடன் உறவு கொண்டதற்குப் பரிகாரம் ;

 روى أبو هريرة رضي الله عنه  قال: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لاَ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا». قَالَ: لاَ، قَالَ: فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالعَرَقُ المِكْتَلُ - قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» فَقَالَ: أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ

ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றார். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோருங்கள் என்றார்கள், அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றார், அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளியுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றார், உட்காரு என்றார்கள் அவரும் உட்கார்ந்து விட்டார். அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்கும் போதே அரக் என்று அழைக்கப்படும் (பேரீத்தம்பழ) கூடை கொண்டு வரப்பட்டது, இதைக் கொண்டு தர்மம் செய்யுங்கள் என நபி அவர்கள் அவருக்கு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை உண்மையை கொண்டு அனுப்பியவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக, மதீனாவின் இரு மலைகளுக்கு மத்தியில் எங்களை விட மிகத் தேவையுள்ளவர்கள் இல்லை என்றார். இக்கூடையை எடுத்துக் கொண்டு உமது குடுப்பத்துக்கு உணவளியும் என்றார்கள் நபி அவர்கள். (இப்னு மாஜா)

அடிமையை அடித்து துன்புறுத்தியதற்குப் பரிகாரம் ;

أَتَيْتُ ابْنَ عُمَرَ وَقَدْ أَعْتَقَ مَمْلُوكًا، قالَ: فأخَذَ مِنَ الأرْضِ عُودًا، أَوْ شيئًا، فَقالَ: ما فيه مِنَ الأجْرِ ما يَسْوَى هذا، إلَّا أَنِّي سَمِعْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يقولُ: مَن لَطَمَ مَمْلُوكَهُ، أَوْ ضَرَبَهُ، فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ.

அபூ அம்ர் ஜாதான் அவர்கள் கூறுகிறார்கள் ; நான் இப்னு உமர் ரலி அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு அடிமையை உரிமையை உரிமை விட்டார்கள். பின்பு தரையிலிருந்து ஒரு குச்சியை எடுத்து இந்த குச்சிக்கு சமமான கூலி கூட நான் உரிமை விட்டதற்கு எனக்கு கிடைக்காது. (ஏனென்றால் நான் அவரை அடித்ததற்குப் பரிகாரமாகத் தான் அவரை உரிமை விட்டேன்) ஒருவர் ஒரு அடிமையை கன்னத்தில் அறைந்து விட்டால் அவரை உரிமை விடுவது தான் அதற்கு பரிகாரமாகும் என்று நபி அவர்கள் சொன்னார்கள். (முஸ்லிம் ; 1657)

وروى أبو مسعود الأنصاري رضي الله عنه  قال: كنت أضرب غلاما لي، فسمعت من خلفي صوتا: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»، فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ، فَقَالَ: «أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ»، أَوْ «لَمَسَّتْكَ النَّارُ 

அபூமஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நான் எனது அடிமையை அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூமஸ்வூதே அறிந்து கொள்! உனக்கு அவன் மீது இருப்பதை விட அல்லாஹ்விற்கு உன் மீது ஆற்றல் அதிகம் உள்ளது என்ற சப்தம் என் பின்னாலிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி அவர்கள் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்விற்காக அவர் சுதந்திரம் பெற்று விட்டார் என்று கூறினேன். அதை நீ செய்ய வில்லையென்றால் வேதனை உன்னைத் தொடும் என்றார்கள். (முஸ்லிம் ; 1659)

இதனால் அடிமைகளை உரிமை விடுவதில் ஸஹாபாக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

قال نافع رحمه الله تعالى : ما مات ابن عمر رضي الله عنهما حتى أعتق ألف إنسان أو زاد  وروى عروة أن حكيم بن حزام رضي الله عنه  أعتق في الجاهلية مائة رقبة، وفي الإسلام مائة رقبة، وحمل على مائة بعير  صفة الصفوة لابن الجوزي

ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு 100 அடிமைகளையும் இஸ்லாத்திற்கு வந்ததற்குப் பிறகு 100 அடிமைகளையும் வாங்கி உரிமை விட்டார்கள்.ஹள்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் 1000 அடிமைகளை உரிமை விட்டிருக்கிறார்கள். (ஸிஃபதுஸ் ஸப்வா)

இஸ்லாம் அடிமைத்துவத்தை ஆதரிக்கிறது, மக்களைச் சிறைப்பிடிக்கத் தூண்டுகிறது.அதனால் தான் அடிமைகளுக்கும் சிறைக் கைதிகளுக்கும் தனிச் சட்டங்களையும் ஒழுக்க நடைமுறைகளையும் இஸ்லாம் வகுத்திருக்கிறது என்று இஸ்லாத்தின் மீது மேலை நாட்டினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நேரத்தில் அடிமைகள் விஷயத்தில் இஸ்லாம் நடந்து கொண்ட அழகிய நடைமுறைகளையும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு இஸ்லாம் மேற்கொண்ட முயற்சிகளையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அதேபோன்று அடிமைகளை வைத்திருந்த அந்த நேரத்தில் அவர்களை இரக்கத்தோடும் பரிவோடும் நடத்த வேண்டும் என்று உணர்த்தினார்கள் பெருமானார் அவர்கள். இன்றைக்கு மனிதர்கள் கூட அடிமைகள் போன்று நடத்தப்படுகிறார்கள். கூலிக்கு அமர்த்தியிருக்கிற வேலையாட்கள் மீது இன்றைக்கு இரக்கம் காட்டப்படுகிறதா அவர்களை பரிவுடன் நடத்தப்படுகிறதா அவர்களுக்கு தகுந்த ஊதியங்கள் வழங்கப்படுகிறதா என்பது இன்றைக்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி. அடிமைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிற இந்த நாளில் நமக்குக் கீழே வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ

مَرَرْنَا بِأَبِى ذَرٍّ بِالرَّبَذَةِ وَعَلَيْهِ بُرْدٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهُ فَقُلْنَا يَا أَبَا ذَرٍّ لَوْ جَمَعْتَ بَيْنَهُمَا كَانَتْ حُلَّةً. فَقَالَ إِنَّهُ كَانَ بَيْنِى وَبَيْنَ رَجُلٍ مِنْ إِخْوَانِى كَلاَمٌ وَكَانَتْ أَمُّهُ أَعْجَمِيَّةً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ فَشَكَانِى إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَلَقِيتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ « يَا أَبَا ذَرٍّ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ سَبَّ الرِّجَالَ سَبُّوا أَبَاهُ وَأُمُّهُ. قَالَ « يَا أَبَا ذَرٍّ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ هُمْ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَأَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ரபதாஎனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள் மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்: எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி அவர்களைச் சந்தித்த போது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 3417

இந்த ஹதீஸில் பெருமானார்  அவர்கள் தொழிலாளர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஆடை அளிக்க வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ள வில்லை. நீங்கள் உண்ணக்கூடிய உணவை அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள். நீங்கள் அணியக்கூடிய ஆடையை அவர்களுக்கும் அணியத் தாருங்கள் என்று கூறுகிறார்கள். நாம் சாப்பிடுவதைப் போன்று அவன் சாப்பிட வேண்டும். நாம் அணியக்கூடிய ஆடையைப் போன்று அவனும் ஆடை அணிய வேண்டும் என்றால் அவனுக்கு கண்ணியமான, தகுந்த ஊதியத்தை வழங்கினால் மட்டும் தான் அது சாத்தியப்படும். இல்லையென்றால் அது சாத்தியப்படாது. எனவே நமக்கு கீழ் வேலை செய்யக்கூடிய வேலையாட்களுகளுக்கு தகுந்த ஊதியத்தை கண்ணியமான சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்களின் சக்திக்கு மீறி சுமையை அவர்களுக்கு தரக்கூடாது. முடிந்தவரை அவர்களின் வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும்.

ما خفَّفْتَ عن خادمك مِن عملِه كان لك أجراً في موازينِك

உனது பணியாளரின் வேலை நீ லேசாக்கினால் நாளை மறுமையில் உனது நன்மையின் தட்டில் அது நன்மையாக இருக்கும். (அத்தர்கீப் வத்தர்ஹீப்)

நம்மில் எத்தனை பேர் இந்த ஹதீஸின் படி தொழிலாளர்களிடத்தில் நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு தகுந்த ஊதியத்தை வழங்குகிறோமா அவர்களைக் கண்ணியத்தோடு நடத்துகிறோமா அவர்களின் வேலைப்பளுவை குறைத்திருக்கிறோமா. இன்றைக்கு நிறைய இடங்களில் வேலையாட்கள் அமர்வதற்கு சேர் கூட கிடையாது. நம்மால் ஒரு இரண்டு மணி நேரம் கூட நிற்க முடியாது. ஆனால் 12 மணி நேரம் எப்படி நிற்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.அவர்கள் நமக்காக உழைக்கிறார்கள். நமக்காக பாடுபடுகிறார்கள். நம் வளர்ச்சிக்காகத் தான் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. நம் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு. எனவே அவர்களை இரக்கத்தோடும் பரிவோடும் நடத்த வேண்டும்.

 

 

3 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் அருமையான ஆக்கப்பூர்வமான பயான் பதிவு.

    ReplyDelete