Thursday, April 13, 2023

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்

 

ﺇِﺫْ ﻳَﺘَﻠَﻘَّﻰ ﺍﻟْﻤُﺘَﻠَﻘِّﻴَﺎﻥِ ﻋَﻦِ ﺍﻟْﻴَﻤِﻴﻦِ ﻭَﻋَﻦِ ﺍﻟﺸِّﻤَﺎﻝِ ﻗَﻌِﻴﺪٌ . ﻣَﺎ ﻳَﻠْﻔِﻆُ ﻣِﻦ ﻗَﻮْﻝٍ ﺇِﻟَّﺎ ﻟَﺪَﻳْﻪِ ﺭَﻗِﻴﺐٌ ﻋَﺘِﻴﺪٌ

(மனிதனின்) வலப்பறத்திலும் இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (அல்குர்ஆன் : 50 ; 17,18)

நாம் பேசுகின்ற விஷயங்கள் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதிவு செய்யப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

அளவில் சிறியது. விளைவில் பெரியது என்று கூறுவார்கள். இன்றைக்கு உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் இந்த நாவு தான். கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும்.இரு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும்.ஒரு சமூகத்திலே அல்லது ஒரு நாட்டிலே ஏற்படும் பிரச்சனைகளாக இருக்கட்டும். இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோ வகையில் காரணமாக இருப்பது நாவு தான்.இன்றைக்கு நடக்கின்ற அதிகமான விவாகரத்துகளுக்கு காரணம் நாவு தான்.அவன் எதையாவது சொல்லியிருப்பான்.அல்லது இவள் எதையாவது சொல்லியிருப்பாள்.அல்லது மருமகள் மாமியாரைப் பார்த்து அல்லது மாமியார் மருமகளைப் பார்த்து ஏதையாவது சொல்லியிருப்பார்கள்.அது பெரிய பூதாகரமாக வெடித்து கடைசியில் தலாக்கில் வந்து நிற்கும்.

إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا (ترمدي) "

ஒரு மனிதன் காலையில் எழுந்திருந்தால் அவனுடைய உறுப்புக்கள் அனைத்தும் நாவைப் பார்த்து பணிவாக எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். நிச்சயமாக நாங்கள் அனைவரும் உன்னைக் கொண்டு தான் இருக்கிறோம்.நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம் என்று சொல்கின்றன. (திர்மிதி ; 2407)

குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய கேடே அவர்களின் வாய் தான்.எதையாவது ஒன்றை பேசி வம்பை விலை கொடுத்து வாங்கி விடுவார்கள்.

يا مَعْشَرَ النِّساءِ، تَصَدَّقْنَ وأَكْثِرْنَ الاسْتِغْفارَ، فإنِّي رَأَيْتُكُنَّ أكْثَرَ أهْلِ النَّارِ فَقالتِ امْرَأَةٌ منهنَّ جَزْلَةٌ: وما لنا يا رَسولَ اللهِ، أكْثَرُ أهْلِ النَّارِ؟ قالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وتَكْفُرْنَ العَشِيرَ

பெண்களே நீங்கள் ஸதகா செய்து கொள்ளுங்கள். அதிகமாக பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.நிச்சயமாக நான் உங்களை நரகத்தில் அதிகம் இருப்பதைப் பார்த்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அவர்களில் விபரமுள்ள ஒரு பெண்மனி நரகத்தில் அதிகமாக இருப்பதற்கு எங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் நீங்கள் அதிகம் சாபமிடுகிறீர்கள். கணவனிடம் நன்றியில்லாமல் நடக்கிறீர்கள் என்றார்கள். (முஸ்லிம் ; 79)

நாம் பேசுகின்ற விஷயங்கள் நம் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவைகளுக்கு நிறையவே ஆற்றல் உண்டு.ஒரு மனிதனுக்கு கண்ணியத்தைத் தருவதும் இழிவைத் தருவதும் இந்த நாவு தான்.ஒரு மனிதன் தன் நாவால் தன்னை எப்படியும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மனிதன் உண்மையில் நல்லவனாகவே இருந்தாலும் அவன் வெளியில் மோசமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தால் அவனை மோசமானவனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். ஒரு மனிதன் உண்மையில் கெட்டவனாக இருந்தாலும் அவன் வெளியில் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசினால் அவனை சமூகம் நல்லவனாகவே ஏற்றுக் கொள்ளும்.நீண்ட காலங்களாக நல்லவன் போல் மக்கள் நலனில் அக்கரை செலுத்துபவன் போல் நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் சமயங்களில் நாவின் மூலம் மாட்டிக் கொள்வார்கள். நாவு அவர்களின் உண்மை முகத்தைக் காட்டி விடும்.ஒரு மனிதனின் கண்ணியத்தையும் இழிவையும் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் தீர்மானிப்பதும் அவனுடைய நாவு தான்.

وَقَالَ ابْنُ جَرِيرٍ: حَدَّثَنَا ابْنُ وَكِيع، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِي الْأَشْهَبِ(٢) ، عَنْ خَالِدٍ الرَّبَعِيّ قَالَ: كَانَ لُقْمَانُ عَبْدًا حَبَشِيًّا نَجَّارًا، فَقَالَ لَهُ مَوْلَاهُ: اذْبَحْ لَنَا هَذِهِ الشَّاةِ. فَذَبَحَهَا، فَقَالَ: أخْرجْ أَطْيَبَ مُضغتين فِيهَا. فَأَخْرَجَ اللِّسَانَ وَالْقَلْبَ، فَمَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ: اذْبَحْ لَنَا هَذِهِ الشَّاةَ. فَذَبَحَهَا، فَقَالَ: أَخْرِجْ أَخْبَثَ مُضْغَتَيْنِ فِيهَا. فَأَخْرَجَ اللِّسَانَ وَالْقَلْبَ، فَقَالَ لَهُ مَوْلَاهُ: أَمَرْتُكَ أَنْ تخرج أطيب مُضْغَتَيْنِ فِيهَا فَأَخْرَجْتَهُمَا، وَأَمَرْتُكَ أَنْ تُخْرِجَ أَخْبَثَ مُضْغَتَيْنِ فِيهَا فَأَخْرَجْتَهُمَا. فَقَالَ لُقْمَانُ: إِنَّهُ لَيْسَ مِنْ شَيْءٍ أَطْيَبَ مِنْهُمَا إِذَا طَابَا، وَلَا أَخْبَثَ مِنْهُمَا إِذَا خَبُثا (طبري)

லுக்மான் அலை அடிமையாக இருந்த போது அவர்களுடைய எஜமான்  ஒரு நாள் அவர்களிடம் ஒரு ஆட்டை அறுத்து, அதிலிருந்து, சிறந்த பகுதியை எடுத்துக்கொண்டு வா என கட்டளையிட்டார், ஆட்டை அறுத்து, அதன் இருதயத்தையும், நாவையும் தன் எஜமானுக்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். மற்றொரு நாள், அவருடைய எஜமான்  அவரிடம் ஒரு ஆட்டை அறுத்து, அதிலிருந்து, கெட்ட பகுதியை எடுத்துக் கொண்டு வா என கட்டளையிட்டார், அப்போதும் லுக்மான் அலை  ஆட்டை அறுத்து, அதன் இருதயத்தையும், நாவையும் தன் எஜமானுக்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவனுடைய எஜமான் அதைப் பற்றிக் கேட்ட போது, இவ்விரண்டு உறுப்புக்களும் நன்மையை செய்தால் இவ்விரண்டை விட சிறந்த உறுப்புக்கள் இல்லை. அவ்விரண்டும் அறுவறுப்பான காரியத்தை செய்தால் அவ்விரண்டை விட மோசமான உறுப்புகள் இல்லை. அதாவது ​​எந்த அளவு இதன் மூலம் நல்லது கிடைக்குமோ... அந்த அளவு கெட்டதும் இதன் மூலம் ஏற்படுகிறது என்றார்கள். (தஃப்ஸீர் தப்ரீ)

நாவு என்பது மிகவும் ஆபத்தானது. ஒரு சிறிய வார்த்தை ஒருவனை நரகில் கொண்டு போய் தள்ளி விடும்.

كانَا رجلانِ في بني إسرائيلَ مُتواخيينِ فكانَ أحدُهما يذنِبُ والآخَرُ مجتهدٌ في العبادةِ فكانَ لا يزالُ المُجتهدُ يرى الآخرَ على الذَّنبِ فيقولُ أقصِر فوجدَهُ يومًا على ذنبٍ فقالَ لهُ أقصِر فقالَ خلِّني وربِّي أبُعِثتَ عليَّ رقيبًا فقالَ واللَّهِ لا يغفرُ اللَّهُ لكَ أو لا يدخلُكَ اللَّهُ الجنَّةَ فقبضَ أرواحَهما فاجتمعا عندَ ربِّ العالمينَ فقالَ لهذا المُجتهدِ أكنتَ بي عالِمًا أو كنتَ على ما في يدي قادِرًا وقالَ للمذنبِ اذهب فادخلِ الجنَّةَ برحمتي وقالَ للآخرِ اذهبوا بهِ إلى النَّارِ قالَ أبو هريرةَ والَّذي نفسي بيدِهِ لَتكلَّمَ بكلمةٍ أوبَقت دنياهُ آخرتَهُ

பனூ இஸ்ரவேலர்களில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். அதிலே ஒருவர் அதிகம் வணக்கங்களில் ஈடுபடுபவர். இன்னொருவர் பாவம் செய்யக்கூடியவர். அவரை பாவத்தில் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வணக்கசாலி அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பாவத்தை விட்டு விடு என்று சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு நாள் அவ்வாறு சொன்ன பொழுது என்னை விட்டு விடு. இது எனக்கும் என் இறைவனுக்கும் மத்தியில் உள்ளது. அதில் நீ தலையிட வேண்டாம். என்னை கண்காணிப்பதற்காகவா இறைவன் உன்னை அனுப்பி இருக்கிறான் என்று கூறினார். அதற்கவர் உன்னை இறைவன் மன்னிக்க மாட்டான் அல்லது சுவனத்தில் நுழைவிக்க மாட்டான் என்று கூறினார். அவ்விருவரின் உயிரும் கைப்பற்றப்பட்டது. இறைவன் மறுமையில் அவர்களை ஒன்று சேர்த்தான். அந்த வணக்கசாலியைப் பார்த்து என்னைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறாயா என் கையிலே உள்ளதின் மீது உனக்கு ஆற்றல் இருக்கிறதா என்று கூறி அவரை நரகத்திற்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டான். பிறகு அந்தப் பாவியை அழைத்து சுவனத்தில் நுழையச் செய்தான். (அஸ்ஸஹீஹுல் முஸ்னத் ; 1318)

அல்லாஹ் உருவாக்கிய ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான அர்த்தம் இருக்கும் என்று நமக்கெல்லாம் தெரியும்.அந்த அடிப்படையில் நம் உடலில் மிக முக்கியமான நமக்கு மிக மிக அவசியமான உறுப்புக்கள் நாவு, கண், காது. இதில் காதுகளையும் கண்களையும் இரண்டாகத் தந்கிருக்கிற இறைவன் ஒரே ஒரு நாவைத் தான் தந்திருக்கிறான். காரணம் அதிகம் கேட்க வேண்டும். அதிகம் பார்க்க வேண்டும், ஆனால் குறைவாகத் தான் பேச வேண்டும். மட்டுமல்ல காதுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மிக மிகக்குறைவு. அதனால் காதுகளை மூடாமல் திறந்தே வைத்திருக்கிறான், கண்களால் ஏற்படும் ஆபத்துக்கள் கொஞ்சம் அதிகம். அதனால் கண்களை இமைகளைக் கொண்டு மூடியிருக்கிறான், ஆனால் நாவால் ஏற்படும் ஆபத்துக்களும் விபரீதங்களும் ரொம்ப ரொம்ப அதிகம்.அதனால் நாவை பற்கள் உதடுகள் என்ற இரு பாதுகாப்பைக் கொடுத்து மூடியிருக்கிறான். அல்லாஹ் மனித உடல் உறுப்புக்களில் ஏற்படுத்திய இந்த அமைப்பை வைத்தே நாவு எந்தளவு ஆபத்தானது என்பதை உலகிற்கு சொல்லி விட்டான்.

وعن عقبة بن عامر رضي الله عنه قال: قلت: يا رسول الله، ما النجاة؟ قال: أمسك عليك لسانك، وليسعك بيتك، وابك على خطيئتك

உக்பா பின் ஆமிர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ; அல்லாஹ்வின் தூதர் அவர்களே வெற்றி எது என்று கேட்டேன்.அப்போது நபி அவர்கள் உன் நாவை உன் மீது தடுத்து வைத்துக் கொள்.உன் வீடு உனக்கு விசாலமாகட்டும்.நீ செய்த பாவத்தை நினைத்து அழு. (திர்மிதி ; 2406)

عن زيد بن أسلم قال: دخل على أبي دجانة وهو مريض، وكان وجهه يتهلل. فقيل: ما لوجهك يتهلل؟ فقال: ما من عملي شيء أوثق عندي من اثنتين: أما إحداهما فكنت لا أتكلم فيما لا يعنيني، وأما الأخرى: فكان قلبي للمسلمين سليمًا

ஹள்ரத் அபூதுஜானா ரலி அவர்கள் நோயுற்றிருந்தார்கள். அவர்களின் முகம் பிரகாசமாக இருந்தது. அப்போது இந்த நோயிலும் உங்கள் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு விஷயங்களை விட என்னிடத்தில் மிகச் சிறந்த அமல் வேறெதுவுமில்லை. ஒன்று எனக்கு தேவையில்லாத விஷயத்தில் நான் பேசமாட்டேன். இன்னொன்று முஸ்லிம்களைப் பொருத்த வரை அவர்கள் விஷயத்தில் என் உள்ளம் ஆரோக்கியமானதாகவே இருக்கும். (ஸிஃபதுஸ் ஸஃப்வா ;  1/485)

பூரண நிலவு அழகாய் தெரியும் பிறை 14- ஆம் இரவில் கலீஃபா  ஹாரூன் ரஷீத் தன் அறைக்கு சென்றார். அங்கு அவரின் மனைவி சுபைதா உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அவர் மனைவியின் முக அழகை ஒரு கணம் பார்த்து ரசித்தார். மறுகணம் பூரண சந்திரனை பார்த்தார். இப்படி மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சுபைதாவும் கண் விழித்துக் கொண்டார். தன் முன்னே தன் கணவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் பதறி எழுந்தார். அவரை கலீபா புன்முறுவலுடன் நோக்கி சுபைதா நான் சற்று நேரம் உன் அழகு முகத்தையும் பூரண சந்திரனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றில் எது மிகவும் அழகானது உன் அழகு முகமா அல்லது பூரண சந்திரனா என்று என்னால் கணிக்க முடியவில்லை என்று கூறினார். அதை கேட்ட ஸுபைதா பெரிதும் மகிழ்ச்சியடைந்து என் அழகு முகம் தான் அதில் என்ன சந்தேகம் என் முன் பூரண சந்திரன் எம்மாத்திரம் என்று கூறினார். அவருடைய இந்த பதில் கலீஃபாவின் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. தான் கூறியதை கேட்டு ஸுபைதாவுக்கும் கர்வம் தலைக்கேறிவிட்டது என்று அவர் எண்ணினார். ஸுபைதா நீ கூறுவது மிகைப்பட்ட வார்த்தையாகும். நீ சொன்ன வார்த்தைக்கு சரியான ஆதாரத்தை நாளை காலைக்குள் நீ காட்ட வேண்டும் இல்லையென்றால் நீ தலாக் ஆகி விடுவாய் என்று கடுகடுப்புடன் கூறிவிட்டு சென்றுவிட்டார். சுபைதாவுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. வேடிக்கையாக சொன்ன ஒரு வார்த்தை வினையாக போய்விட்டது என்று வருந்தினார். அப்பொழுது அவர் ஊரில் இருந்த ஒரு மார்க்க அறிஞரை சந்தித்து தன்னுடைய நிலையை எடுத்துரைத்து தன் பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அவர் காலை அதிகாலைத் தொழுகைக்கு கலீபாவின் பள்ளிகளுக்கு வந்து விட்டார். இது கலீபாவுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொழுது முடித்ததும் கலீஃபா அவரை நோக்கி ஸலாம் சொல்லி விட்டு இந்த வைகறை வேலையில் தொலைவில் இருந்து இங்கு வந்து தொழுகையில் கலந்து கொண்டது பற்றி தன் மகிழ்வையும் ஆச்சரியத்தையும் தெரிவித்துக் கொண்டார். அப்பொழுது அந்த மார்க்க அறிஞர் கலீஃபாவை நோக்கி இரவு எனக்கு திருக்குர்ஆனின் வசனம் ஒன்றைப் பற்றி ஒரு ஐயம் ஏற்பட்டது. அதனை தங்களிடம் எடுத்துரைத்து விளக்கம் பெற்றுக் கொள்வதற்காக அதிகாலையிலேயே இங்கு வந்து விட்டேன் என்று கூறினார். அதை கேட்ட கலீஃபா முன்னை விட பெரிதும் ஆச்சரியமடைந்தவராக எனது என்னிடமா? தாங்களோ கல்விக்கடல். தங்களுக்கு தெரியாத விளக்கத்தையா நான் கூறி விடப் போகிறேன் என்று ஆச்சரியமாக கேட்டார். அப்போது அந்த பெரியார் இறைவன் சூரா தீனில்

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏

அத்தியின் மீதும், ஜெய்தூனின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:1)89ஜ8

وَطُوْرِ سِيْنِيْنَۙ‏

ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் : 95:2)

 

وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏

அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக, (அல்குர்ஆன் : 95:3)

 

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில்  படைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 95:4)

இவ்வாறு கூறுகிறான். அப்படி என்றால் இறைவன் வேறு எதனையும் அழகாக படைத்திருப்பதாக கூற வில்லை. மனிதனை மட்டுமே மிக அழகாக படைத்திருப்பதாக கூறியதிலிருந்து மனிதன் இறைவனுடைய அனைத்து படைப்புகளை விடவும் மிக மிக அழகானவன் என்பது தெரிகிறதல்லவா என்று கேட்டார்.கலீஃபாவும்  ஆம் என்று கூறினார். அப்படியென்றால் சுபைதா தன்னை சந்திரனை விட அழகு வாய்ந்தவர் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் கூறியது சரி என்பதற்கு இந்த திருவசனமே  சரியான சான்று அல்லவா என்று கூறிய போது கலீஃபாவால் மறுவார்த்தை பேச முடியவில்லை.

No comments:

Post a Comment