Thursday, December 19, 2013

மரம் வளர்ப்போம்




அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! படைப்புகளில் சிறந்த படைப்பாக நம்மை இறைவன் படைத்துள்ளான். சிறந்தவர்களாக இருக்கிற நாம், இறைவனின் பிரதிநிதியாக ஆக்கப்பட்டு, பிற படைப்புகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பும் வழங்கப் பட்டுள்ளோம். அவன் தான் {தன்} பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கியுள்ளான் என அல்குர்ஆன் அத்தியாயம் 6 ன் 165 வது வசனம் குறிப்பிடுகிறது.

ஆனால் நாம் நமது பேராசையின் காரணமாக நமக்கு நாமே அழிவைத் தேடிக் கொண்டு வருகிறோம். அதாவது, நமது நல் வாழ்வுக்குத் துணைபுரிவதற்காகவே மற்ற படைப்புகள் ஆக்கப் பட்டிருக்கின்றன என்பதை உணராமல், அவற்றை சிதைப்பதில் ஈடுபட்டு அழிவின் விழிம்பில் வந்து நிற்கிறோம்.

இன்றைக்கு விஞ்ஞான உதவியோடு பல தொழில் புறட்சிகளை செயலாக்கும் நாம், பொருளாதார வளம் பெருக்கும் பேராசையால், புறச்சூழலை மாசுபடுத்தி வருகிறோம்.நாம் நமது தேவைக்காக, உலகைப் பசுமையாக்கும் ஆற்றல் கொண்ட மரங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் தொகையில் 52 சதவிகிதம் பேர் எரிபொருளுக்கு காடுகளையே சார்ந்திருக்கிறார்கள்.இதனால் ஒவ்வொரு நாளும் பல ஏக்கர் நிலப்பரப்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. மரங்கள் அழிக்கப்படும் போது மழை குறைந்து,வறட்சி அதிகரித்து விடுகிறது.

இதனால் ஏற்பட்ட விளைவு, கடந்த சில ஆண்டுகளில் புறச்சூழலின் மிக உயர்ந்த வெப்ப நிலையை எட்டியுள்ளது. புறச்சூழலில் ஏற்பட்ட இந்த தட்ப வெட்ப மாற்றத்தினால் பல ஆயிரம் உயிர்ச் சேதங்கள் ஏற்பட் டுள்ளதாக ஓர் புள்ளி விபரம் கூறுகிறது.

மனித குலத்தை அச்சுறுத்தும் இன்றைய நிலை, அருள்மறை குர்ஆன் மற்றும் அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டுதல்கள் பின் பற்றப்படாததால் ஏற்பட்ட விளைவுகளாகும்.

உலக வரலாற்றில் முதன் முதலாக புறச்சூழலைப் பாதுகாக்கு மாறு வலியுறுத்தியது அண்ணல் நபி அவர்கள் தான்.போருக்காக தன் தோழர்களை அனுப்புகிறபோது அவர்கள் செய்த உபதேசங்களில், பழம் தரும் மரங்களை வெட்டக்கூடாது,விளை நிலங்களை அழிக்கக் கூடாது என்பவைகளும் அடங்கும்.

எவரொருவர், மரக்கன்று ஒன்றை நட்டு,பாதுகாத்து ,வளர்த்து மரமாக்கி விடுகிறாரோ,அவருக்கு இறைவனிடத்தில் சிறந்த வெகுமதி உண்டு” ”ஒருவர் கையில் பேரீத்தம் கன்றை வைத்திருக்கும் பொழுது, உலக அழிவு தினம் வந்து விட்டால் கூட அவர் அதை உடனே பூமியில் ஊன்றி விடட்டும் என்பவை மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து அண்ணல் நபி அவர்கள் கூறிய வார்த்தைகள்.

நடை பாதை,தேங்கி நிற்கும் தண்ணீர்,மக்கள் ஓய்வெடுக்கும் நிழல் தரும் மரம் ஆகிய இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடை செய்தது, புறத்தூய்மையை காப்பதற்காக அண்ணல் நபி அவர்கள் செய்த அரும்பணிகளில் ஒன்று.

எனவே நபிகள் நாயகம் {ஸல்} அன்றைக்கு ஏற்படுத்திய இந்த மரம் வளர்ப்புக் கொள்கையை நாமும் பின்பற்ற ஆரம்பித்து,இயற்கை வளங்களை அளவோடு பயன்படுத்தி,சுற்றுச் சூழலை பேணி நடந்தால் இந்த உலகம், தற்போது இழந்திருக்கிற பசுமையை மீண்டும் தனதாக்கிக் கொள்ளும்.


இறைவன் அல்லாஹுத்தஆலா,நாம் வாழும் பூமியை பசுமை நிறைந்ததாக மாற்றி,அதன் தட்ப வெட்ப மாற்றங்களின் பாதிப்பிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்.  

No comments:

Post a Comment