Thursday, December 19, 2013

ஆறுதல் தரும் பிரார்த்தனை




அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே ! நவீங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரங் களைப் போல் மாறிவிட்டது.மனிதர்களிடம் இருந்த சகோதர பாசம் குறைந்து விட்டது, மனிதாபிமானம் கரைந்து விட்டது, நட்பும் உருகி விட்டது, சுற்றத்தாரின் ஆதரவும் காணல் நீராய் போய் விட்டது.இதனால் மனிதன் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக மாறி, தான்என்ற வட்டத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான்.
      
      தன் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள வழியில்லை,தன் கஷ்டங் களைக் கூறி அழ ஆளில்லை.தன் குறைகளைத் தீர்த்து வைக்க யாருமில்லை.இந்நிலையில் ; இதை சாதிக்க வேண்டும்,அதை சாதிக்க வேண்டும் என்ற வெறி வேறு.
      
      எனவே மனிதன் எந்நேரமும் கவலையும்,மன இருக்கமும் கண்டு அவதிப் படுகிறான்.இரத்த அழுத்த நோயுக்கும் ஆளாகிறான்,சில சமயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விடுகிறான், சில சமயம் தற்கொலை செய்து கொள்கிறான்,சில வேளை மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறான்.
      
      இப்படி ஆதரவின்றி,ஆறுதல் கூற ஆளின்றி,வெறுட்சி கண்டு, நிம்மதியைத் தொலைத்தவர்கள் அதிலத்தில் நிறையவே உண்டு. இத்தகையோருக்கு இஸ்லாம், பிரார்த்தனையின் வழியே ஓர் ஆதரவைத் தருகிறது.ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் பிரார்த்தனை செய்வது இஸ்லாம் காட்டித்தந்த அழகிய வழிமுறைகளில் ஒன்று.

பிரார்த்தனை என்பது மனித சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம். காரணம், இதன் மூலம் மனதை வறுத்தும் பாவச் சுமைகளை இறக்கி வைக்கலாம்,உற்ற நண்பனிடம் கூறுவதைப் போல மனக்கஷ்டங்களை எல்லாம் தடையின்றி கூறலாம்,பரிகாரம் காணலாம்,எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறலாம்.ஆயுளைக் கேட்கலாம்,அதிகாரத்தைக் கேட்கலாம்,ஆரோக்கியத்தைக் கேட்கலாம், பொருளாதாரத்தைக் கேட்கலாம்,ஏன் காரும்,பங்கலாவும் கூட கேட்கலாம்.

மனிதனுக்கும் மனிதனைப் படைத்த இறைவனான அல்லாஹ் வுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசத்தை இந்த பிரார்த்தனையின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். காரணம் , கேட்டால் கோபம் கொள்பவன் மனிதன். கேட்காத மனிதர்களைப் பார்த்து கோபம் கொள்பவன் இறைவன் என்பது நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மொழிந்த வார்த்தைகளில் ஒன்று.

என்னையே பிரார்த்தியுங்கள். நான் உங்களது பிரார்த்தனை களுக்கு பதிலளிக்கிறேன் என இறைவன் அல்குர்ஆனில் அத்தியாயம் 40,வசனம் 60 ல் குறிப்பிடுகிறான். எவனுக்கு பிராத்தனையின் வாயில் திறக்கப்பட்டு விட்டதோ அவனுக்கு அருள் வளத்தின் அத்தனை வாயில்களும் திறக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறார்கள் நபிகள் நாயகம் ]ஸல்] அவர்கள். [திர்மிதி]

பிராத்தனை என்பது மனிதனுக்குக் கிடைத்த ஓர் ஆயுதம் என்ற வார்த்தைகளும் நபிமொழியில் காணக் கிடைக்கிறது. நாம் பிரார்த்தனை யின் மூலம் எதையும் சாதித்து விடலாம்,எந்த இலட்சியத்தையும் எட்டி விடலாம். எல்லா மனக்குறைகளையும் அகற்றி, எல்லா சஞ்சலங்களை யும் நீக்கி, நம் வாழ்வில் புத்துணர்வைத்தரும் ஓர் ஆயுதமாக பிரார்த்தனை அமைந்திருக்கிறது.

எனவே பிரார்த்தனை என்ற சிறந்த ஆயுதத்தை தனதாக்கிக் கொண்டவனுக்கு இனி தனிமை இல்லை, கவலை இல்லை, வெறுட்சி இல்லை, மன இருக்கம் இல்லை.


வாழ்க்கையில் அமைதியையும்,தைரியத்தையும், துணிச்சலையும், சிறந்த ஆறுதலையும் பெற்றுக் கொள்ள இஸ்லாம் வழிகாட்டிய பிராத்தையில், நாம் கவனம் செலுத்துவோம். வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெறுவோம். வஸ்ஸலாம் 

No comments:

Post a Comment