Thursday, November 8, 2018

வீழ்கிறதே 1



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அல்ஹம்து லில்லாஹ் ! அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா சய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மஈன்.
இன்றைய உலகில்  மனித நேயம் வாழ்கிறதாவீழ்கிறதா? என்ற அருமையான தலைப்பில் இங்கே   பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.அல்ஹம்து லில்லாஹ். மனித நேயம் வாழ வில்லை வீழ்ந்து விட்டது என்று இந்த மூவன்னா ஈனாக்களுக்கு மண்டைல உரைக்கும்படி சொல்ல வந்திருக்கிறேன்.நடுவர் அவர்களே இவங்களப் பார்த்து மூவன்னா ஈனான்னு சொன்ன உடனே மூளை இல்லாதவங்கன்னு சொல்றேன்னு நினச்சிராதீங்க.அப்டிலாம் சொல்லல. 


இந்த அவைக்கு சுவையாக  வீற்றிருந்து எங்களின் சத்திய கருத்துக்களை  கேட்டறிந்து  எதிர் அணி  மூவன்னா ஈனாக்கள் மீது தோல்வியை விட்டெறிந்து நியாயமாக, நீதியாக, மனிதநேயம் வீழ்கிறதே... வீழ்கிறதே... வீழ்கிறதே..என்று தீர்ப்பு  வழங்குறதுக்காக காத்திருக்கும் மேலப்பாளைய சிங்கம்,சொக்குவார் தங்கம் அறிவின் அங்கம் அன்பான நடுவர் அவர்களே...!

உலக நடப்பு தெரியாம ஏதோ உளர வந்திருக்கும் எதிரணி மூவன்னா ஈனாக்களே, இவங்க செய்யக்கூடிய மனித நேயமில்லாத அடாவடித் தனங்களை அடுக்க இருக்கும் எனது அணி வீராங்கனையே மற்றும் கேம்பலாபாத் இளைஞர்களே இளைஞிகளே வருங்கால ஹாஜிமார்களே ஹாஜியாக்களே உங்கள் அனைவருக்கும் என் ஸலாமைக் காணிக்கையாக்கி என் வாதத்திற்கு வருகிறேன்.

நடுவர் அவர்களே எதிரணி மூவன்னா ஈனாக்கள் ரண்டு பேரும் என்னமோ எல்லாந் தெரிஞ்ச மாதிரி பேச வந்துட்டாங்க.முன்ன பின்ன பேப்பர் படிச்சிருந்தா தானே உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியும். பேப்பர் விரிச்சி வெறும் படம் மட்டும் பார்த்தா எப்டி தெரியும்.

நடுவர் அவர்களே இன்றைக்கு மனித நேயங்குறது வெறும் எழுதுறதுக்கும், பேசுறதுக்கும் உள்ள விவாதப் பொருளா மட்டுமே இருக்குறத நாம பார்க்குறோம். எழுத்துலேயும்,பேச்சிலேயும் மட்டுந்தான் மனித நேயம் இருக்குதே தவிர செயல்ல  இல்ல.  

இந்த காலத்துல எல்லாருக்குமே குறிக்கோல் பணம் தாங்க. நிறைய பணம் சம்பாதிக்கனும், வசதியாக வாழனும் அப்டின்னு எல்லாருமே சுயநல சிந்தனையிலேயே இருக்குறதனால அடுத்தவங்களோட நலத்த பாக்குறதில்ல. அடுத்தவங்களோட உரிமைகள மதிக்கிறதில்ல. அடுத்தவங்க பாதிக்கப்படுறதைப் பத்தி யோசிக்கிறதும் இல்ல.என்னப்பா இப்படி பன்னிட்டியே ? உன்னால இத்தன பேரு பாதிக்கப்பட்டிருக் காங்களே ! அப்டின்னு கேட்டா...., இதெல்லாம் பார்த்தா வாழ முடியுமா ? இதெல்லாம் பாத்தா பொழைக்க முடியுமா ? அப்டின்னு கேக்குறவங்க தான உலகத்துல அதிகம். இதுல மனித நேயத்த எங்க போய் பாக்குறது.இப்படி எல்லாரிடத்திலேயும் சுயநலம் அதிகமாகிப் போன இந்த காலத்துல மனித நேயம் வாழுதுன்னு எப்டிங்க சொல்லுங்க முடியும்?

அதுமட்டுமில்லாம  இன்னைக்கு உலக ரீதியா வறுமக் கோட்டுக்குக் கீழ வாழக்கூடிய நாடுகளோட எண்ணிக்க அதிகரிச்சிக்கிட்டே வருது. சோமாலிய நாட்டுல உள்ள ஒரு சகோதரர் கூட ஒரு ஆலிம்ஸாட்ட ஒரு கேள்வி கேட்டார். எங்க நாட்டுல  சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. அதனால நாங்க ஸஹர் உணவு சாப்பிடாமயே நோன்பு வைக்குறோம். அதனால எங்க நோன்ப அல்லாஹ் ஏத்துக்குவானா அப்டின்னு கேட்ட உடன அந்த ஆலிம்ஸாவே அழுதுட்டாரு. இப்படி ஒரு நேர உணவுக்குக் கூட கஷ்டப்படுற பல நாடுகள் உலகத்துல இருக்கும் போது  மனிதாபிமானம்,மனித நேயம் அப்டி இப்டின்னு சும்மா குரல் கொடுக்குற எத்தனையோ நாடுகள், அவங்க நாட்டோட தரத்த உயர்த்துறதுக்கும் அவங்க நாட்ட இன்னும் அதிகமா செழிப்பாக்குறதுக்கும் தான் பல கோடிகள செலவழிக்குதே தவிர ஏழை நாடுகள கண்டுக்குறதே இல்ல அப்டின்னு பார்க்கும்போது மனித நேயம் வாழுதுன்னு எப்டி சொல்ல முடியும் ?

அதேபோல இன்னைக்கு உண்மையிலேயே பெத்தவங்கள வச்சி காப்பாத்துறதுக்கு புள்ளைங்க போட்டி போடனும் இல்லையா ! ஆனா இன்னைக்கு எத்தனை பேர் பெத்தவங்கள சரியா,முறையா கவனிக்கிறாங்க ?  சொல்லுங்க நடுவர் அவர்களே !அன்னையின் காலடியில் சொர்க்கம் என்று அண்ணல் நபிகள் நாயகம்  [ஸல்] அவங்க சொன்னாங்க.ஆனா இன்னைக்கு அதிகமான அன்னையர்கள் இருக்குறது முதியோர் இல்லத்துல தான... இந்த மாதிரி விஷயங்கள பார்த்த பிறகும் மனித நேயம் வாழுதுன்னு இவங்க பேச வந்துருக்காங்கன்னா உண்மைலேயே இவங்க மூவன்னா ஈனாக்கள் தாங்குறதுல சந்தேகமே இல்ல.

அது மட்டுமா மருத்துவர்கள் சொல்லக்கூடிய கனிவான வார்த்த தான் நோயாளியோட பாதி நோய குணப்படுத்தும்னு சொல்வாங்க. ஆனா இன்னைக்கு அப்டியா இருக்குது பாதி நோயோட போறவன் கூட அந்த டாக்டர் எழுதக்கூடிய பில்லப் பார்த்த பின்னால முழு நோயாளியா ஆயிடுறான்.நோயாளியா போனவன் பொணமா தான் வெளிய வரான். நடுவர் அவர்களே நான் சொல்றது உண்மையா இல்லயா. இன்னைக்கி விளம்பரத்துல கூட பாருங்க...டாக்டருங்க, என்ன சொல்வாங்க கவலப்படாதீங்க நாங்க இருக்கோம் கவலப்படாதீங்க நாங்க இருக்கோம் அப்டின்னு தான் விளம்பரம் செய்வாங்க.எந்த விளம்பரத்துலயாவது கவலைப்படாதீங்க நீங்க இருப்பீங்கன்னு சொல்லி இருக்காங்களா ? இல்லயே. சேவைக்காக உருவாக்கப்பட்ட மருத்துவம் இன்னைக்கி பணம் பறிக்குற தொழிலா மாறிப் போயிடுச்சி.மனித நேயம் வீழ்ந்திடுச்சிங் குறதுக்கு மருத்துவத் தொழிலும் சிறந்த எடுத்துக் காட்டு தான் நடுவர் அவர்களே.

ஒரு கவிஞன் இப்படி  பாடினான் வானத்த பார்த்தேன், பூமிய பார்த்தேன் மனுஷன இன்னும் பார்க்கலையே? நடுவர் அவர்களே மனிதனே இல்லையே,  மனித நேயம் எங்க இருக்கப்போகுது? சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும். மனிதன் இருந்தா தானே மனித நேயம் இருக்க முடியும்.

நடுவர் அவர்களே இன்னைக்கி நாம மனித நேயம் இருக்குதா இல்லையான்னு பட்டி மன்றம் நடத்திக்கிட்டு இருக்கிறோம்.ஆனா இறந்து போன ஒருவன எழுப்பி மனித நேயம் இருக்குதா இல்லயான்னு கேட்டா அவன் கூட அழகா சொல்வான்.மனித நேயம் வாழ்ந்திருந்தா நான் வீழ்ந்திருக்க மாட்டேனே அப்டின்னு.இன்னைக்கி மனித நேயம் இல்லாம போனதுனால தான் அதிகமான கொலைகளும் அநியாயங்களும் நடக்குதுங்கிறத நாம விளங்கனும்.

நடுவர் அவர்களே இன்னொரு விஷயத்தையும் கவனிக்கனும்!  இந்த உலகத்துலே மனித நேயம் வாழனுங்கிறதுக்காகத் தான் இஸ்லாமே வந்துச்சி. பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்கும் போது தான் மட்டும் சாப்பிடுறவன் உண்ம முஸ்லிம் இல்லன்னு நபி ஸல் அவங்க சொன்னாங்க. வழியில கிடக்கிற கல்லையும் முள்ளையும் அகற்றுவது கூட தருமம்னு இஸ்லாம் சொல்லுது.ஒருத்தன் கீழே விழுந்துட்டா அவன் முஸ்லிமா, ஹிந்துவா, கிறிஸ்த்தவனா, யூதனா அப்டின்லாம்  பார்க்காதே.முதல்ல அவனுக்கு கை கொடுக்கனும்கிறது இஸ்லாம் சொல்லித்தர்ர அற்புதமான விஷயம். இப்படிப் பட்ட புனிதமான மார்க்கத்தப்போய் இன்னைக்கி தீவரவாத மார்க்கம்னு சொல்றாங்களே. இதுக்கு பேருதான மனித நேயமா.

புனிதமான இஸ்லாத்துக்கு இவ்ளோ பெரிய கெட்டப்பேர ஏற்படுத்திக் கொடுத்துருக் காங்க. அவங்களுக்கு போய் இந்த மூவன்னா ஈனாக்கள் சப்போர்ட் பன்ன வந்துருக்காங்களே அப்பன்னா இவங்க யாருன்னு புரிஞ்சிடுச்சா நடுவர் அவர்களே  சும்மா தொப்பிய மட்டும் போட்டா போதுமா ஆ....தொப்பிக்குள்ள முடி இருக்குற மாதிரி கொஞ்சம் அதுவும் இருக்கனும்.

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு சொல்வாங்க கேள்விப் பட்டுருக்கீங்களா நடுவர் அவர்களே. பாவம் செய்றது ஒருத்தன்.ஆனா தண்டன அனுபவிக்கிறது இன்னொருத்தவன்.சிறகடித்து சுதந்திரமா பறக்க வேண்டிய எத்தனையோ பறவைங்க இன்னைக்கு ஜெயில்ல இருக்குறாங்க. ஜெயில்ல இருக்க வேண்டிய எத்தனையோ பேர் சிம்மாசனத்துல இருக்குறாங்க.ஒரு கத ஒன்னு சொல்வாங்க.

வயசான ஒரு தாத்தா மேல சுவர் விழுந்து அவர் இறந்து போயிட்டார்.
உடனே அந்த சுவரக் கட்டுன கொத்தனார் மேல கோர்ட்ல கேஸ் போட்டாங்க. அதுக்கு அந்த கொத்தனார், என் மேல தப்பு இல்ல. மண்ணெயும், சிமெண்டையும் கொலச்சவன் தான் தப்பு செஞ்சுட்டான் அப்டின்னு சொன்னான்.உடனே அவன் மேல கேஸ் போட்டாங்க. அதுக்கு அவன்,என் மேல் தப்பு இல்ல. தண்ணீர் ஊத்துற பானை வாய் அகலம்.அதனால தான் அப்டி ஆயிடுச்சின்னான், உடனே பானக்காரன் மேல கேஸ் போட்டாங்க.அதுக்கு அவன் , நான் பானையை ஒழுங்காகத்தான் செஞ்சி கிட்டு இருந்தேன்.அப்ப ஒரு நாட்டியக்காரி அந்த வழியா போனா.அவளப் பார்த்தேன் அதனால தான் இப்டி ஆயிடுச்சி. அதனால இதுக்கு அவ தான் காரணம்னு சொன்னான். அடுத்து அந்த  நாட்டியக்காரி மேல கேஸ் போட்டாங்க.அதுக்கு அந்த நாட்டியக்காரி நான் வண்ணான்ட துணி துவைக்க கொடுத்திருந்தேன்.அத வாங்குறதுக்காகத் தான் அந்த வழியாக போனேன் அப்டின்னு சொன்னா. அதுக்கு பிறகு அந்த வண்ணான் மேல கேஸ்  போடப்பட்டாங்க, அதுக்கு அவன், நான் சலவ போடுற கல் மேல ஒரு முனிவர் தான் தவம் செஞ்சிகிட்டு இருந்தாரு. வேணும்னா அவர் கிட்ட கேளுங்கன்னு சொன்னான். அவர்ட்ட கேட்கும் போது அவர் அமைதியா இருந்தாரு.உடனே அந்த ஆளுதான் கொன்னு ருப்பாருன்னு அவரக் கொன்னுட்டாங்க. பாத்தீங்களா நடுவர் அவர்களே தப்பு செஞ்சது யாரோ.ஆனா தண்டன கெடச்சது யாருக்கோ.  நிதியக் கொடுத்து நீதிய வாங்குற காலம் இது.இந்த காலத்துல மனித நேயத்த எங்க எதிர் பாக்க முடியும்.

Ø  அடுமட்டுமில்லாம இன்னைக்கு  நாம நம்மலோட மேலதிகாரிங்களுக்கு கொடுக்குற மரியாதையில பாதியையாவது நமக்கு கீழ வேள செய்ற வேளக்காரங்களுக்கு கொடுக்குறோமா ? 
Ø  நம்ம பிள்ளைங்களப் போல மத்த ஏழைக் குழந்தைங்களையும் அரவணைக்கிறோமா 
Ø  நம்மலோட வயிறு நிறையனும் நம்ம வீட்டுல உள்ளவங்களோட வயிறு நிறையனுன்னு நினைக்கிற நாம நம்ம வீட்டுக்கு வெளியில உள்ளவங்களோட பசி பட்டினிய என்னைக்காவது நினைச்சிப் பார்க்குறோமா 
Ø  இந்த கடையில் வாங்குவோமா அந்த கடையில் வாங்குவோமா அப்டின்னு தேடித்தேடி அலைஞ்சி,வாங்குறதுக்கு ஒரு நாளு,வாங்குன சேல புடிக்கலன்னா அத மாத்துறதுக்கு ஒரு நாளுன்னு நோன்புக்கு கூட லீவ போட்டு, விதவிதமா சொகுசா துணிகள உடுத்துற நாம, நம்ம வீட்டுக்கு வெளிய ஒரு மாத்துத் துணி கூட இல்லாம கஷ்டப்படுற ஏழைங்க மேல கவனம் செலுத்துறோமா ? 
இதுலாம் இல்லாம போன பிறகும் மனித வாழுதுன்னு யாராவது சொன்னா அவனும் இவங்கள போல மூவன்னா ஈனாக்களா தான் இருக்கும்.அதனால இன்னைக்கு மனித நேயம் வாழ வில்லை வீழ்ந்து விட்டது என்று கூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


No comments:

Post a Comment