Thursday, November 8, 2018

பெண்ணுரிமை


والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
அருள் தந்து பொருள் தந்து அழியாத மாமறை தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உண்டாகட்டுமாக என்று கூறி என் உரையை ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியம் நிறைந்த எனது அருமை சமுதாய மக்களே ஆண்களையும் பெண்களையும் மிக உயர்ந்த நோக்கத்தோடு படைத்த இறைவன்   அல்லாஹுத்தஆலா, அந்த இரு சாராருக்கும் தேவையான உரிமைகள் கடமைகள் அனைத்தையும் குர்ஆனில் இடம் பெறச் செய்திருக்கிறான்.
பெண்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆண்கள் அவர்களை நடத்த வேண்டிய விதம் அவர்களுக்குத் தர வேண்டிய கண்ணியம் பாதுகாப்பு என அத்தனை விஷயங்களையும் குர்ஆனும் ஹதீஸும் சொன்னது போன்று உலக்கத்திலுள்ள வேறு எந்த மத வேதங்களிலும் உலக சட்ட நூட்களிலும் சொல்லப்பட வில்லை. போதிக்கப்படவும் இல்லை. அந்தளவிற்கு பெண்களின் உரிமைகளை எடுத்துச் சொன்னது இஸ்லாம்.
உலகில் இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியும். அன்றைக்கு  பெண்கள் துன்புறுத்துப் பட்டார்கள், இழித்துப் பேசப்பட்டார்கள், பெண்கள் விற்கப்பட்டார்கள், வாடகைக்கு விடப்பட்டார்கள், மாதர் அரசிகளாக பார்க்கப்பட வில்லை யென்றாலும் அவர்கள் மனிதர்களாக கூட மதிக்கப்பட வில்லை. இதை விடக் கொடுமை அரபு நாட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் அக்குழந்தையை உயிரோடு புதைப்பதற்கு தந்தையருக்கு உரிமையுண்டு. எத்தனை தடவை வேண்டுமானாலும் தான் விரும்பாத மனைவியரை தலாக் விட உரிமை பெற்ற கணவன்மார்களுக்கு மத்தியில், தான் விரும்பாத கணவரை பிரிந்து செல்ல எந்த உரிமையும் மனைவி மார்களுக்கு கிடையாது.
இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.அன்பான தாய்மார்களே இந்த நிலையில் தான் மண்ணிண் மாந்தர் எம்பெருமான் ஸல் அவர்கள் பெண்களின் உரிமைகள் பற்றி பேசினார்கள். மட்டுமல்ல அதை கடமையாகவும் ஆக்கினார்கள்.
ஆணுக்குப் பெண் சமமாக இருப்பதை விரும்பும் இக்காலத்தில் சரிநிகர் சமத்துவத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் போதித்தது.
கல்வி கற்பது ஆண் பெண் இருவரின் மீதும் கடமையாகும் என்றார்கள் அண்ணல் நபி ஸல் அவர்கள். கல்வி என்பதில் மார்க்க கல்வி மட்டுமல்ல, உலகியல் அறிவியல் மருத்துவம் இலக்கணம் இலக்கியம் போன்ற அனைத்திலும் ஆண்களுக்கு உரிமைகள் இருப்பதைப் போன்றே பெண்களுக்கும் உரிமைகள் உண்டு என்று கூறியது இஸ்லாம்.
அதேபோன்று திருமணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.எப்படி ஆண்கள் தாங்கள் விரும்பிய பெண்களை திருமணம் செய்து கொள்ளவும் வேண்டாம் என்றால் விட்டு விலகிக் கொள்ளவும் உரிமை உண்டோ அதே போல் பெண்களும் அவர்கள் விரும்பிய ஆடவர்களை திருமணம் முடித்துக் கொள்ளவும் வேண்டாம் என்றால் விட்டு பிரிந்து கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்று சொன்னது இஸ்லாம்.
அதேபோன்று தான் சொத்துரிமை விஷயத்திலும். சொத்துரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் உண்டு.தாய் தந்தை மற்றும் பந்துக்கள் விட்டுச்சென்ற சொத்திலும் கணவன்மார்கள் விட்டுச் சென்ற சொத்திலும் பெண்களுக்கு பங்குண்டு என்று திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.இப்படி ஏராளமான உரிமைகளை பெண்களுக்கு வழங்கி இஸ்லாம் அவர்களை கண்ணியப்படுத்துகிறது.
இஸ்லாம் சொல்லித்தந்த உரிமைகளும் நாமும் பேணி பெண்களை பெண்களாக பார்ப்போம்.நம் கண்களாக மதிப்போம்.அல்லாஹ் அத்தகைய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்.

No comments:

Post a Comment