Monday, March 7, 2022

மிஃராஜ்

 இன்று ரஜப் மாதம் பிறை 27. இன்று தான் நபி ஸல் அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலக பயணத்தை மேற்கொண்டார்கள்.அந்த நிகழ்வை நான் சுருக்கமாக உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

நபி [ஸல்] அவர்கள் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்முஹானி [ரலி] அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்படுகிறார்கள். அங்கே அவர்களது நெஞ்சு பிழக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்படுகிறது.அது ஜம்ஜம் நீரால் கழுகப்பட்டு ஞானத்தால் நிறப்பப்படுகிறது.பின்பு அங்கிருந்து ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு வருகிறார்கள். அங்கே கூடியிருக்கிற அனைத்து நபிமார்களுக்கும் முன்னின்று தொழுகை நடத்துகிறார்கள்.

தொழுகை முடிந்த பிறகு ஒரு பாத்திரத்தில் மதுவும்,மறு பாத்திரத்தில் பாலும் கொண்டு வரப்படுகிறது.இவற்றில் எது வேண்டும் என்று கேட்ட போது பாலைத் தேர்ந்தெடுத்தார்கள்.பின்பு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து செல்கிறார்கள்.அங்கே எட்டு நபிமார்களை காணுகிறார்கள்.அதன் பிறகு சித்ரதுல் முன்தஹாவைக் கடந்து,பைத்துல் மஃமூரைக் கடந்தார்கள். சுவனத்தையும்,நரகத்தையும் கண்டார்கள்.இறுதியாக இறைவனை சந்தித்து தொழுகையை பரிசாகப் பெற்று வந்தார்கள்.இந்நிகழ்வு அண்ணல் வாழ்வில் நடந்த பேரற்புதம்.உலகில் வேறு எவருக்கும் வழங்கப்படாத உயர்நத அந்தஸ்து.

ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 86282 மைல் ஆகும்.இந்த வேகமுள்ள ஒளி நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாளரை வருடமாகும் என்று அறிவியல் கூறுகிறது.ஆனால் நபி [ஸல்] அவர்கள் அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து யாரும் கடக்க முடியாத சித்ரத்துல் முன்தஹாவையும் கடந்து அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது ஒரு இரவின் சிறு பகுதி என்பது ஆச்சர்யத்தின் உச்சம் என்பது நாம் அறிந்த விஷயம்.

உலகத்தில் யாருக்கும் எந்த நபிக்கும் வழங்காத இந்த மிகப்பெரும் அற்புதத்தை நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்  நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் நபித்துவ வாழ்வின் தொடக்கத்தில் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகளும்,தொந்தரவுகளும் வந்த நேரத்தில் அவர்களுக்கு எல்லா வகையிலும் பெரும் உருதுணையாக இருந்தது இரண்டு பேர்.

ஒன்று ; அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள்.எதிரிகளின் சூழ்ச்சிகளும்,அவர்களின் தந்திரங்களும் நபியைத் தொடாமல் இருக்க பெரும் உதவியாக இருந்தது இவர்கள் தான்.இரண்டாவது  ;  நபிகளாரின் அன்பு மனைவி அன்னையர் திலகம் அன்னை கதீஜா [ரலி] அவர்கள்.

பெரும் செல்வச் சீமாட்டியான அன்னை அவர்கள் நபிக்காக தன் அனைத்து சொத்துக்களையும் செலவு செய்தார்கள்.நபித்துவத்திற்கு முன்பு அண்ணல் அவர்கள் ஹிரா குகையில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்ட போது தன் வயோதிக நிலையிலும் மிக கறடு முறடான பாதைகளைக் கடந்து நபியவர்களுக்கு பல நாட்களாக உணவு எடுத்துச் சென்றார்கள்.

முதன் முதலாக ஜிப்ரயீலை சந்தித்த அதிர்ச்சியில் பதட்டத்துடனும், படபடப்புடனும் வந்த நபியவர்களை அமைதிபடுத்தி பின்பு என்ன நடந்தது என்று விசாரித்தறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது அவர்கள் தான்.

இந்தளவு நெருக்கடியான நேரத்தில் ஆதரவாகவும்,பெரும் உருதுணையாகவும் இருந்து உதவிகள் புரிந்த இவ்விருவரும் அடுத்தடுத்து மரணத்தை தழுவுகிறார்கள்.

மிகப்பெரிய இழப்பையும் நெருக்கடியையும் சந்தித்த நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் அவர்களின் உள்ளத்தில் படிந்த துயரத்தை துடைப்பதற்காகவும் தான் இந்த நிகழ்வு நடந்தது.

இரண்டாவது காரணம்  தனது எல்லா அத்தாட்சிகளையும் நபியவர்களுக்கு காண்பித்து உலகத்தில் நிறைவானவர்கள் அவர்கள் தான் என்பதை உலகிற்கு சொல்வதற்காக அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தான்.

மூன்றாவது காரணம்  மக்களின் ஈமானை பரிசோதிப்பதற்காக இந்நிகழ்வு நடந்ததாகவும் கூறப்படுகிறது. சிலர் இந்நிகழ்வை மறுத்தார்கள்.சிலர் இதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபூபக்கர் [ரலி] அவர்கள் ; இது மட்டுமல்ல.இதை விட தூரமான விஷயங்கள் கூட நபி [ஸல்] அவர்களின் நாவிலிருந்து வெளிப்பட்டால் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றார்கள்.அதனால் தான் அவர்களுக்கு சித்தீக் – உண்மையாளர் என்ற பெயர் வந்தது.அந்த நிகழ்வை நாமும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிலுள்ள படிப்பினைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக


No comments:

Post a Comment