Friday, April 21, 2023

பெருநாள் தர்மம்


அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். பெரும்பாலும் ஒரு மாதத்தில் நான்கு ஜும்ஆக்கள் தான் இருக்கும். ஆனால் இவ்வருடம் ஜும்ஆ தினத்திலிருந்தே ரமலான் தொடங்கியதால் ஐந்து ஜும்ஆக்களை தொழுகும் நஸீபை இறைவன் தந்திருக்கிறான். அல்ஹம்து லில்லாஹ்! நன்மைகளை அள்ளித்தரும் ரமலான், பாவங்களை பொசுக்கும் ரமலான், மனித உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் ரமலான், இஸ்லாமியச் சமூகத்தை இறை இல்லங்களோடு இணைக்கும் ரமலான், வணக்கங்களில் இன்பம் காண வைக்கும் ரமலான் நம்மை விட்டும் விடைபெறப் போகிறது. இது ரமலானின் இறுதி நாளாக இருந்தாலும் இது நமக்கு இறுதி ரமலானாக ஆகி விடாமல் ரப்புல் ஆலமீன் பாதுகாத்து நம் வாழ்வில் எண்ணற்ற ரமலான்களை சந்திக்கின்ற வாய்ப்பினைத் தருவானாக!

ரமலான் விடைபெறும் இந்த நேரம் ஸதகத்துல் ஃபித்ர் என்று சொல்லப்படுகின்ற பெருநாளை ஒட்டி ஏழைகளுக்கு வழங்கும் தர்மம் குறித்து சிந்திக்க வேண்டும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنْ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ الصَّدَقَاتِ . " رواه أبو داود

ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எம் பெருமானார் நபி அவர்கள், பித்ரா ஜகாத்தை நோன்பாளியின் நோன்பை வீண் பேச்சுவீண் செயல்களை விட்டும் சுத்தப்படுத்துவதற் காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் (அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம்) கடமையாக்கினார்கள். எவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே அதனை நிறைவேற்றுகின்றாரோ அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாத்தாகும். எவர் தொழுகைக்குப் பின் அதனை நிறைவேற்றுகிறாரோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக ஆகும். (அபூதாவூத் : 1609)      

இந்த ஹதீஸில் ஸதகத்துல் ஃபித்ர் கடமையானதற்கான இரு நோக்கங்களை கூறப்பட்டுள்ளது.1. நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்கான பரிகாரம், 2. சமுதாயத்தில் ஏழைகளும் பெருநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது.               

பொதுவாக மனிதன் தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை சந்திக்கிற போது படைத்த இறைவனையும் மறந்து விடுவான். மற்ற படைப்பினங் களையும் மறந்து விடுவான். அவனுக்கு ஏதாவது கஷ்டம் வரும் போது தான் இறைவனையும் அழைப்பான். மற்றவர்களையும் பார்ப்பான். தன் மனைவி மக்களோடு தன் குடும்பத்தோடு தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் இறைவனும் மற்றவர்களும் நினைவுக்கு வருவதில்லை. குர்ஆனில் இந்த கருத்தை சொல்லும் வசனங்கள் நிறைய உண்டு.

 

واذا مس الانسان الضر دعانا لجنبه او قاعدا او قائما فلما كشفنا عنه ضره مر كان لم يدعنا الي ضر مسه

மனிதனை ஒரு துன்பம் தொட்டு விட்டால் படுத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு நின்று கொண்டு (அதை நீக்கும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான்.ஆனால் அவனை விட்டும் அவன் துன்பத்தை நீக்கி விட்டால் அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாக) சென்று விடுகிறான். (அல்குர்ஆன் 10;12)

 

நமக்கு வரும் மகிழ்ச்சியான நிமிடங்கள் இறைவன் நினைவை நம்மிலிருந்து தூரமாக்கி விடும். கஷ்டம் வரும் போது அல்லாஹ் அல்லாஹ் என்று அழைப்போம், கஷ்டம் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் அல்லாஹ்வை நினைப்போம், கஷ்டம் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். வியாபாரத்தில் நஷ்டம் என்றால் அல்லாஹ்வை நினைப்போம், வியாபாரம் நல்லா நடக்கும் போது அல்லாஹ்வை மறந்து விடுவோம், நோய் வரும் போது அல்லாஹ் அல்லாஹ் என்று புலம்புவோம், நோய் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம்.

 

இதேபோன்று தான் நெருக்கடிகள் வரும் போது தான் சக மனிதர்களையும் நாம் பார்ப்போம். செல்வ செழிப்புடன் இருக்கும் போது சக மனிதர்கள் படும் கஷ்டங்கள் நம் கண்களுக்கு தெரியாது. நாம் கண்டு கொள்ள மாட்டோம்.

 

செல்வத்தின் தன்மை என்னவென்றால், அது வந்து விட்டாலே பெரும்பாலும் கஞ்சத்தனமும் கூடவே வந்து விடும். ஓரளவு நடுத்தரமாக உள்ளவர் அவருடைய தகுதிக்கேற்ப அவரால் முடிந்த அளவு தாராளமாக செலவு செய்வார். ஆனால் செல்வந்தர் எண்ணி எண்ணி செலவு செய்வார்.செலவு செய்வதற்கே யோசிப்பார். பணம் அதிகமாகும் போது இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இன்னும் அதிகமாக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பிறக்கும்.

ஒரு ஏழை செல்வந்தரைப் பார்த்து அல்லாஹ் அவருக்கு எவ்வளவு பரக்கத்தைக் கொடுத்திருக்கான். நன்றாக செலவு செய்தால் என்ன ? குறைந்தா போய் விடுவாரு என்று சொல்வார். அந்த ஏழைக்கும் அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்து விட்டால் அவரும் இவரைப் போலவே மாறி விடுவார். நாம் ஒரு நேரத்தில் இப்டிலாம் சொன்னோமே என்று யோசிக்க மாட்டார். நம்மையும் சமூகம் இப்படித்தானே சொல்லும் என்று சிந்திக்க மாட்டார். இது பணத்துக்குள்ள தன்மை.

அதேபோன்று பணம் வந்து விட்டால் இன்னும் வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வந்து விடும். مال என்றாலே சாய்தல் என்று பொருள். அதன் பக்கம் மனிதன் சாய்ந்து விடுவான். கொடுக்கும் எண்ணம் வராது.

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏

மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப் பட்டுள்ளான். (அல்குர்ஆன் : 70:19)

اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏

ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். (அல்குர்ஆன் : 70:20)

وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ۙ‏

அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கின்றான். (அல்குர்ஆன் : 70:21)

 

إن ثلاثةً في بني إسرائيلَ . أبرصَ وأقرعَ وأعمَى . فأراد اللهُ أن يبتلِيَهم . فبعث إليهم ملَكًا . فأتَى الأبرصَ فقال : أيُّ شيءٍ أحبُّ إليك ؟ قال : لونٌ حسنٌ وجلدٌ حسنٌ ويذهبُ عني الذي قد قذرني الناسُ . قال فمسحه فذهب عنه قذرُه . وأُعطِيَ لونًا حسنًا وجلدًا حسنًا . قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : الإبلُ ( أو قال البقرُ . شك إسحاقُ ) - إلا أن الأبرصَ أو الأقرعَ قال أحدُهما : الإبلُ . وقال الآخرُ البقرُ - قال فأُعطِيَ ناقةً عشراءَ . فقال : بارك اللهُ لك فيها . قال فأتَى الأقرعَ فقال : أيُّ شيءٍ أحبُّ إليك ؟ قال : شعرٌ حسنٌ ويذهبُ عني هذا الذي قذرني الناسُ . قال فمسحه فذهب عنه . وأُعطِيَ شعرًا حسنًا . قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : البقرُ . فأُعطِيَ بقرةً حاملًا . فقال : بارك اللهُ لك فيها . قال فأتَى الأعمَى فقال : أيُّ شيءٍ أحبُّ إليك ؟ قال : أن يردَّ اللهُ إليَّ بصرِي فأبصرُ به الناسَ . قال فمسحه فردَّ اللهُ إليه بصرَه . قال : فأيُّ المالِ أحبُّ إليك ؟ قال : الغنمُ . فأُعطِيَ شاةً والدًا . فأُنتج هذانِ وولَّد هذا . قال : فكان لهذا وادٍ من الإبلِ . ولهذا وادٍ من البقرِ . ولهذا وادٍ من الغنمِ . قال ثم إنه أتَى الأبرصَ في صورتِه وهيئتِه فقال : رجلٌ مسكينٌ . قد انقطعت بِيَ الحبالُ في سفري . فلا بلاغَ لي اليومَ إلا باللهِ ثم بك . أسألُك ، بالذي أعطاك اللونَ الحسنَ والجلدَ الحسنَ والمالَ ، بعيرًا أتبلغُ عليه في سفرِي . فقال : الحقوقُ كثيرةٌ . فقال له : كأنِّي أعرفُك . ألم تكنْ أبرصَ يقذرُك الناسُ ؟ فقيرًا فأعطاك اللهُ ؟ فقال : إنما وَرِثت هذا المالَ كابرًا عن كابرٍ . فقال : إن كنت كاذبًا ، فصيَّرك اللهُ إلى ما كنتَ . قال وأتَى الأقرعَ في صورتِه فقال له مثل ما قال لهذا . وردَّ عليه مثل ما ردَّ على هذا . فقال : إن كنت كاذبًا فصيَّرك اللهُ إلى ما كنت . قال وأتَى الأعمَى في صورتِه وهيئتِه فقال : رجلٌ مسكينٌ وابنُ سبيلٍ . انقطعت بي الحبالُ في سفري . فلا بلاغَ لي اليومَ إلا باللهِ ثم بك . أسألُك ، بالذي ردَّ عليك بصرَك ، شاةً أتبلغُ بها في سفري . فقال : قد كنتُ أعمَى فردَّ اللهُ إلي بصري . فخذْ ما شئت . ودعْ ما شئت . فواللهِ ! لا أجهدُك اليومَ شيئًا أخذته للهِ . فقال : أمسكْ مالَك . فإنما ابتليتم . فقد رضِيَ عنك وسخِطَ على صاحبَيك 

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்று விட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடுதான்…(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார்.  கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும், இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர்அவரது தலையைத் தடவிக் கொடுக்கஅவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது.

அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகுஅவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விடஅல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.

அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். உடனேஅவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும்குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு  அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவேஎன்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையாநீ ஏழையாக இருக்கவில்லையாபிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “(இல்லையேநான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்ததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக)குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும்பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்என்னைச் செல்வந்தனாக்கினான். ஆகவேநீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார். (புகாரி ; 3464)

மகிழ்ச்சியான நேரங்களில் படைத்தவனையும் படைப்பினங்களையும் மறப்பது மனித இயல்பு. அவ்வாறு மறக்கக்கூடாது என்பது தான் இறைவனின் விருப்பம். எனவே தான் மனிதனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் அத்தனை தருணங்களிலும் பிறருக்கு உதவும் படியான நற்காரியங்களை அமைத்திருக்கிறான்.

 

நிகாஹ் என்பது மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வு. அதிலே வலிமா என்ற சுன்னத்தை ஏற்படுத்தி ஏழைகளும் அழைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறான். குழந்தை பிறப்பு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. அந்நேரத்தில் அகீகா என்ற சுன்னத்தை ஏற்படுத்தி ஏழைகளுக்கு இறைச்சியை வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். இரு பெருநாட்கள் மகிழ்ச்சி தரும் நாட்கள். அந்நாட்களில் உழ்ஹிய்யா ஃபித்ரா என்ற சுன்னத்துகளை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று சொல்கிறான். எனவே மகிழ்ச்சியான நேரங்களிலும் மற்றவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். அந்த அடிப்படையில் தான் பெருநாள் தினத்தன்று ஃபித்ரா என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சொல்லியிருக்கிறது.

 

இரண்டாவது நோக்கம் ; ரமலான் காலங்களில் நோன்பிற்கு குறைவை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் நம்மிடம் நிகழ்ந்திருக்கும். ஹராமான விஷயங்களை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். அல்லது பேசியிருப்போம். அல்லது ஹராமான உணவைக் கொண்டு நோன்பு வைத்திருப்போம். இதுபோன்ற காரியங்களால் நோன்பில் குறை ஏற்பட்டிருக்கும். அதை சரி செய்து நோன்பு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஃபித்ராவை இஸ்லாம் அவசியமாக்கியிருக்கிறது.

 

அல்லாஹ் அடியார்கள் மீது இரக்கமுள்ளவன். பேரன்புள்ளவன். வணக்கங்களை நம் மீது கடமையாக்கியதோடு திருத்தி விடாமல் அந்த கடமைகள் குறைவின்றி நிறைவாகுவதற்கான வழிகளையும் ஏற்படுத்தி யிருக்கிறான்.

 

عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ صَلَاتُهُ، فَإِنْ كَانَ أَتَمَّهَا، كُتِبَتْ لَهُ تَامَّةً، وَإِنْ لَمْ يَكُنْ أَتَمَّهَا، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : انْظُرُوا، هَلْ تَجِدُونَ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ، فَتُكْمِلُوا بِهَا فَرِيضَتَهُ ؟ ثُمَّ الزَّكَاةُ كَذَلِكَ، ثُمَّ تُؤْخَذُ الْأَعْمَالُ عَلَى حَسَبِ ذَلِكَ

மறுமையில் ஒரு மனிதன் முதன்மையாக விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைக் குறித்துத்தான். அத்தொழுகையை அவன் முழுமையாக நிறைவேற்றியிருந்தால் அது முழுமையானதாக எழுதப்படும். அவன் அதை முழுமையாக செய்யாமல் குறை வைத்திருந்தால் மலக்குமார்களிடத்தில் என் அடியானிடத்தில் உபரியான வணக்கங்கள் எதுவும் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதைக் கொண்டு அந்தக் கடமையான தொழுகையை முழுமைப்படுத்தி விடுங்கள் என்று  அல்லாஹ் கூறுவான். இவ்வோறே மற்ற அமல்களிலும் செய்யப்படும். (அல்ஜாமிவுஸ் ஸகீர் ; 2829)

وعَنْ وَكِيعٍ بْنِ الْجَرَّاحِ رحمه الله قَالَ : زَكَاةُ الْفِطْرِ لِشَهْرِ رَمَضَانَ كَسَجْدَتِي السَّهْوِ لِلصَّلاةِ ، تَجْبُرُ نُقْصَانَ الصَّوْمِ كَمَا يَجْبُرُ السُّجُودُ نُقْصَانَ الصَّلاةِ .

தொழுகையில் சிறு தவறுகள் ஏற்படும் போது ஸஜ்தா ஸஹ்வைக் கொண்டு எவ்வாறு ஈடுகட்டப்படுமோ அவ்வாறே நோன்பில் ஏற்படும் சிறு தவறுகள் ஸதகத்துல் ஃபித்ரின் மூலம் ஈடு செய்யப்படும் என்று வகீஃ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நாம் நோற்கும் நோன்புகள் குறைவின்றி நிறைவாக ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பேரன்பாளன் அல்லாஹ் ஸதகத்துல் ஃபித்ரை கடமையாக்கியிருக்கிறான்.

 

செல்வம் இறைவன் கொடுத்த அருட்கொடை. அதை ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக வழங்க வேண்டும்.அதில் நம் மறுமையின் வெற்றி அடங்கியிருக்கிறது. நாம் செய்யும் ஸதகாக்கள் நாளை மஹ்ஷரில் நமக்கு நிழலாய் வந்து நிற்கும்.

 

عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، قَالَ : كَانَ مَرْثَدُ بْنُ عَبْدِ اللَّهِ لَا يَجِيءُ إِلَى الْمَسْجِدِ إِلَّا وَمَعَهُ شَيْءٌ يَتَصَدَّقُ بِهِ، قَالَ : فَجَاءَ ذَاتَ يَوْمٍ إِلَى الْمَسْجِدِ وَمَعَهُ بَصَلٌ، فَقُلْتُ لَهُ : أَبَا الْخَيْرِ، مَا تُرِيدُ إِلَى هَذَا ؟ يُنْتِنُ عَلَيْكَ ثَوْبَكَ. قَالَ : يَا ابْنَ أَخِي، إِنَّهُ وَاللَّهِ مَا كَانَ فِي مَنْزِلِي شَيْءٌ أَتَصَدَّقُ بِهِ غَيْرُهُ، إِنَّهُ حَدَّثَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " ظِلُّ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ صَدَقَتُهُ

மர்ஸத் பின் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் எப்போது மஸ்ஜிதுக்கு வந்தாலும் தர்மம் செய்வதற்கு ஏதாவது ஒன்றை கையில் எடுத்து வருவார்கள். ஏழைகளுக்கு அதைக் கொடுப்பார்கள். ஒரு நாள் அவர்கள் கையில் சில வெங்காயங்களை எடுத்து வந்தார்கள். அப்பொழுது எதற்கு இதைக் கொண்டு வந்துள்ளீர்கள். அதனால் உங்கள் ஆடையில் கெட்ட வாடை வீசுகிறதே என்று கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்றைக்கு தர்மம் செய்வதற்கு என் வீட்டில் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே தான் இதைக் கொண்டு வந்தேன். தர்மம் என்பது நாளை மறுமையில் ஒரு மனிதனுக்கு நிழலாக இருக்கும் என்று பெருமானார் அவர்கள் சொன்னதை ஒரு நபித்தோழரிடமிருந்து நான் செவியுற்றிருக்கிறேன் என்று கூறினார்கள். (இப்னு குஸைமா ; 2432)

 

  

9 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  2. ஜுமுஆவின் தினத்தில் தொடங்கிய நோன்பு ஜுமுஆவின் தினத்திலே முடிவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் ஹழ்ரத்.அல்லாஹ் உங்களது இல்மில் அபிவிருத்தி செய்வானாக.ஆமீன்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்👌 கூறுகின்றான்

    ReplyDelete
  5. அல்லாஹ் தஃஆலா ஹஜ்ரத் அவர்களுக்கு நீண்ட ஹயாத்தை தருவானாக கல்வி ஞானத்தை மென்மேலும் கொட்டிக்கொடுப்பானாக ஆமீன்

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்.. நிறைவான கருத்துக்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

    ReplyDelete