Thursday, April 27, 2023

ரமலான் கபூலாகி விட்டதா ?

 

அருள்மிக்க ரமலான் மாதத்தை அடைந்து பகல் காலங்களில் நோன்பு நோற்று இரவு காலங்களில் நின்று வணங்கி இன்னும் பல்வேறு அமல்களை செய்த திருப்தியிலும் பெருநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியிலும் நாம் அமர்ந்திருக்கிறோம். இது ரமலான் மாதத்தில் நாம் செய்த அமல்களைக் குறித்து சிந்திக்க வேண்டிய, கவலைப்பட வேண்டிய ஒரு நேரம். ஏனென்றால் மிகப்பெரும் சிரத்தை எடுத்து ஒரு காரியத்தை மேற்கொண்டோம், செய்து முடித்தோம். அத்தோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அது வெற்றி பெற வேண்டும். அது நல்ல முடிவைத் தர வேண்டும். அது தான் மிக முக்கியமானது. 

தன் சுக துக்கங்களையெல்லாம் தள்ளி வைத்து, மற்ற மகிழ்ச்சியான விஷயங்களைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு இரவு பகலாக கண் விழித்து சிரமப்பட்டு படித்த மாணவனுக்கு பரீட்சை எழுதியதோடு அவன் கடமை முடிந்து விடுவதில்லை. முடிந்து விட்டதாக அவன் நினைப்பதும் இல்லை. அவன் எதிர்பார்த்த ரிசல்ட் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது தான் அவனுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தரும். அவன் பட்ட கஷ்டத்திற்கு பலனாக அமையும்.  கையில் இருந்த நகைகளை விற்று கடன்களை வாங்கி மிகவும் சிரமப்பட்டு ஒரு கடையை திறந்ததோடு ஒரு வியாபாரியின் கடமை முடிந்து விடாது. அதற்குப் பிறகு அவன் எதிர்பார்த்த லாபத்தை அந்த வியாபாரம் ஈட்டித் தர வேண்டும். அது தான் அவனுக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். அதேபோன்று அமல்களை செய்து முடித்ததோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அமல்கள் செய்த பிறகு, செய்த அமல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது தான் நம்முடைய உண்மையான வெற்றி. எனவே அமல்களை செய்த பிறகு அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். யோசிக்க வேண்டும். அதற்காக கவலைப்பட வேண்டும்.

உலகத்தில் மற்ற விஷயங்களெல்லாம் அதனுடைய முடிவு விரைவில் தெரிந்து விடும். உலகத்திலேயே அதை கண்கூடாக பார்த்து விட முடியும். ஆனால் அமல்களைப் பொறுத்த வரை அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை ஒருவன் மறுமையில் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் குறைந்தபட்சம் அவன் கவலைப்பட வேண்டும். அதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

அமல் செய்த பிறகு துஆ செய்ய வேண்டும் என்ற சுன்னத்தை பெருமானார் அவர்கள் நமக்கு கற்றுத் தந்ததற்கான மிக முக்கியமான காரணமே செய்த அமலைக் குறித்து சிந்திக்க வேண்டும். அதன் கபூலியத்தைக் குறித்து கவலைப்பட வேண்டும் என்பதற்குத் தான்.

 علي رضي الله عنه يقول: (ليت شعري، من المقبول فنهنيه، ومن المحروم فنعزيه

ஏற்றுக் கொள்ளப்பட்டவர் யார் என்று தெரிந்தால் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன். நிராகரிக்கப்பட்டவர் யார் என்று தெரிந்தால் அவரிடம் நான் துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்வேன் என்று அலி ரலி அவர்கள் கூறினார்கள்.

ولقد قال عليّ رضي الله عنه: (لا تهتمّوا لقِلّة العمل، واهتمّوا للقَبول)، ألم تسمعوا الله عز وجل يقول : ) إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ

அமல்கள் குறைவாக செய்ததை நினைத்து நீங்கள் கவலைப்படாதீர்கள். அது ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பதைக் கொண்டு மட்டும் நீங்கள் கவலைப்படுங்கள் என்றார்கள் அலி ரலி அவர்கள்.

 وكان بعض السلف يظهر عليه الحزن يوم عيد الفطر، فيقال له: إنه يوم فرح وسرور. فيقول: صدقتم، ولكني عبد أمرني مولاي أن أعمل له عملاً، فلا أدري أيقبله مني أم لا؟

நம் முன்னோர்களில் சிலர் பெருநாளன்று கவலையோடு அமர்ந்திருப்பார்கள். இது மகிழ்ச்சியான ஒரு நாள். சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டிய ஒரு நாள். இந்த நாளில் கவலையோடு இருக்கிறீர்களே என்று கேட்கப்பட்ட பொழுது நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் நாங்கள் அடிமைகள். எங்களுடைய எஜமானன் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டான். அதை நாங்கள் செய்து விட்டோம். ஆனால் அதை அவன் ஏற்றுக் கொள்வானா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியாதே. எனவே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று கூறுவார்கள்.

إبراهيم وإسماعيل توجها إلى الله بالدعاء وهم يرفعان قواعد البيت الحرام "وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ"

وكان بعض السلف لما قرأ هذه الآية جعل يبكي ويقول: ما بالُ خليل الله يرفع قواعد البيت ويخاف ألا يُقبل منه

கஃபத்துல்லாஹ்வைக் கட்டி எழுப்பிய பிறகு இந்த நற்காரியத்தை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள் என்று இறைவனிடத்தில் இப்ராஹீம் அலை அவர்கள் துஆ செய்தார்கள். அல்லாஹ்வின் நேசரான இப்ராஹிம் அலை அவர்களுக்கே தன்னுடைய அமலைக் குறித்த கவலை இருக்கிற போது நம்முடைய நிலை என்னவாகுமோ என்று நினைத்து, இந்த வசனத்தை ஓதுகின்ற பொழுதெல்லாம் நம் முன்னோர்கள் அழுவார்கள்.

நம்மை விட்டும் விடைபெற்றுச் சென்ற ரமலானும் அதில் நாம் செய்த அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. அந்த கடமையைச் செய்வதின் மூலம் அந்த நோக்கம் நிறைவேறியிருந்தால் அது கபூலாகி விட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

தொழுகையின் நோக்கம் பாவங்களைத் தடுப்பது.

اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் : 29:45)

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سُئِل النَّبِيُّ عَنْ قَوْلِ اللَّهِ: ﴿إِنَّ الصَّلاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ﴾ قَالَ: "مَنْ لَمْ تَنْهَهُ صَلَاتُهُ عَنِ الفحشاء والمنكر، فلا صلاة له

இந்த வசனம் குறித்து பெருமானார் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட பொழுது யாருடைய தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் அவரை தடுக்க வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை என்றார்கள். (அதாவது அவர் சரியாக தொழ வில்லை, அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை) (இப்னு கஸீர்)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ فَقَالَ: إِنَّ فُلَانًا يُصَلِّي بِاللَّيْلِ فَإِذَا أَصْبَحَ سَرَقَ؟ فَقَالَ: "إِنَّهُ سَيَنْهَاهُ

ஒரு மனிதர் நபி அவர்களிடத்தில் வந்து இன்ன மனிதர் இரவிலே தொழுகிறார். ஆனால் பகலிலே திருடிக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றி கூறிய பொழுது, நபியவர்கள், நிச்சயமாக அவருடைய தொழுகை அந்த குற்றத்திலிருந்து அவரைத் தடுக்கும் என்றார்கள். (இப்னு கஸீர்)

தொழுகை பாவங்களைத் தடுக்கும் என்பது அல்லாஹ் ரஸூலின் வாக்குறுதி. அது பொய்யாகாது. ஒருவர் தொழுது கொண்டே பாவம் செய்கிறார் என்றால் அவர் சரியாக தொழ வில்லை. அல்லது அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்று விளங்கிக் கொள்ளலாம். ஒருவர் 100 % பாவங்கள் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை 100 % ஏற்கப்பட வில்லை. ஒருவர் 50 % பாவங்கள் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை 50 % ஏற்கப்பட வில்லை என்று பொருள்.

ஜகாத்தின் நோக்கம் பொருளைப் பாதுகாப்பது.

عن جابر بن عبد الله:] قال رجُلٌ مِن القومِ: يا رسولَ اللهِ أرأَيْتَ إذا أدّى رجُلٌ زكاةَ مالِه فقال رسولُ اللهِ مَن أدّى زكاةَ مالِه فقد ذهَب عنه شرُّه

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒருவர் தன்னுடைய பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் (அதற்காக அவருக்கு கிடைக்கும் பலன் என்ன) என்று கேட்டார். அப்போது நபி அவர்கள் ஒருவர் தன் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அந்த பொருளுடைய ஆபத்து அவரை விட்டும் நீங்கி விடும் என்றார்கள். (தப்ரானீ)

ஒரு பொருளில் அதற்குரிய ஜகாத் கொடுக்கப்பட்டு விட்டால் அந்த பொருளில் அல்லது அந்த பொருளின் மூலம் ஏற்படும் ஆபத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார்.அந்தப் பொருளும் பாதுகாக்கப்படும். அந்த பொருள் திருடப்படாது. வீண் விரயங்களில் செலவழியாது. அந்த பொருள் அழிந்து போகாது. அதன் மூலம் அவருக்கு எந்த ஆபத்தோ சோதனையோ ஏற்படாது என்பது இந்த ஹதீஸின் பொருள். ஒருவர் ஜகாத் கொடுத்தும் அவருக்கு பொருளிலோ அல்லது பொருளின் மூலமோ ஆபத்து ஏற்படுகிறது என்றால் அவர் கொடுத்த ஜகாத் ஏற்கப்பட வில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜின் நோக்கம் வாழ்க்கை பரிசுத்தமாகுவது.

قال بعض السلف: "علامة بر الحج أن يزداد بعده خيرًا، ولا يعاود المعاصي بعد رجوعه"،

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளம் என்பது ஹஜ்ஜிற்குப் பிறகு அவர் நற்காரியங்களை அதிகப்படுத்த வேண்டும். பாவத்தின் பக்கம் மீளாமல் இருக்க வேண்டும்.

 وقال الحسن البصري - رحمه الله -: "الحج المبرور أن يرجع زاهدًا في الدنيا، راغبًا في الآخرة

உலக ஆசை விலகி மறுமையின் காரியங்களில் ஆர்வம் கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளமாகும் என்று ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஜ்ஜிற்கு சென்று வந்த பிறகு ஒருவர் நன்மைகளை அதிகப்படுத்த வில்லை, பாவங்களை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய ஹஜ் ஒப்புக் கொள்ளப்பட்ட வில்லை என்று பொருள்.

நோன்பின் நோக்கம் இறையச்சம் ஏற்படுவது.

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)

நோன்பிற்கு முன்பு இருந்ததை விட நோன்பிற்குப் பிறகு இறையச்சம் அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் நோன்பு கபூலாக வில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.இறையச்சம் என்பதற்கு இமாம்கள் கூறும் விளக்கம் ; அல்லாஹ் ஏவிய காரியங்களை செய்வது. அவன் தடுத்த காரியங்களை விட்டு விடுவது. இந்த விளக்கத்தை வைத்து ஒவ்வொருவரும் தங்களது நோன்பு எந்தளவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எடை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரமலானுக்குப் பிறகும் ஒருவர் அமல் செய்கிறார் என்றால் அவரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று அர்த்தம். ஏனென்றால் அல்லாஹ் யாரைப் பொருந்திக் கொண்டானோ அவர்களுக்குத் தான் அந்த நஸீபை வழங்குகிறான்.

ஆனால் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தின் சூழ்நிலை, ரமலானில் மட்டும் தான் நற்காரியங்களை செய்வது, பாவங்களை விட்டும் விலகி இருப்பது. ரமலான் கடந்து சென்று விட்டால் மீண்டும் பழைய நிலை திரும்பி விடும். கடமைகளை விட ஆரம்பித்து விடுவார்கள். பாவங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  

ورأى وهب بن الورد قوماً يعبثون حراماً بعد رمضان فقال: "إن كان هؤلاء تقبل منهم صيامهم فما هذا فعل الشاكرين، وإن لم يتقبل منهم صيامهم فما هذا فعل الخائفين!".

வஹ்ப் பின் அல்வர்த் ரஹ் அவர்கள் ரமலானுக்குப் பிறகு ஹராமான காரியங்களை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்த பொழுது ரமலான் காலங்களில் இவர்கள் நோற்ற நோன்புகள் கபூலாகி இருந்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். கபூலாக வில்லையென்றால் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஆனால் இவர்கள் செய்யக்கூடிய இந்த காரியம் நன்றி செலுத்தக் கூடியவர்களின் செயலும் அல்ல. அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களின் செயலும் அல்ல என்று கூறினார்கள்.

قال يحي بن معاذ :" من استغفر بلسانه وقلبه على المعصية معقود , وعزمه أن يرجع إلى المعصية بعد الشهر ويعود , فصومه عليه مردود , وباب القبول في وجهه مسدود

ஒருவரின் உள்ளம் பாவத்தின் மீது தொடர்புடையதாக இருக்கும் நிலையில், பாவத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கும் நிலையில் நாவளவில் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புத் தேடி, அந்த பாவத்தின் பக்கம் திரும்பி விட்டால் அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. கபூலியத்தின் வாசல் அவருக்கு அடைக்கப்பட்டு விடும் என்று யஹ்யா பின் முஆத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قيل لبشر الحافي: إن أناساً يجتهدون في رمضان فإذا خرج تركوا، فقال: بئس القوم لا يعرفون الله إلا في رمضان.- اَلله يُعبد في كل وقت وفي كل حين، فالإنسان يداوم على الشيء ولو كان قليلاً أولى من الإكثار من العبادة في وقت ثم الإهمال بعد ذلك

மக்களில் சிலர் ரமலான் காலங்களில் மட்டும் அதிகம் முயற்சி செய்து நன்மைகளை செய்கிறார்கள். ரமலான் கடந்து சென்று விட்டால் எல்லாவற்றையும் விட்டு விடுகிறார்கள். இவர்களைப் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன என்று பிஷ்ருல் ஹாஃபி ரஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட பொழுது, ரமலானில் மட்டுமே அல்லாஹ்வை அறிந்து கொள்கிற இவர்கள் மக்களிடையே மிக மோசமானவர்கள். அல்லாஹ்வை எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் வணங்க வேண்டும். மனிதன் எந்த காரியத்தை செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு பின்பு ஒரேடியாக விட்டு விடுவதை விட சின்ன அமலை செய்தாலும் அதை தொடர்படியாக செய்வது மிக ஏற்றமானது என்றார்கள்.

عن عائشة رضي الله عنها قالت: (كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملاً أثبته

நபி அவர்கள் எந்த அமலைச் செய்தாலும் விடாமல் தொடர்ந்து செய்பவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு)

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ   அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும், (அல்குர்ஆன் : 41:30)

عن الزهري، قال: تلا عمر رضي الله عنه على المنبر: ﴿إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا﴾ قال: استقاموا ولله بطاعته، ولم يروغوا روغان الثعلب

உமர் ரலி அவர்கள் இந்த வசனத்தை மிம்பரின் மீது ஓதி விட்டு, அவர்கள் வணக்க வழிபாடுகளை விடாமல் தொடர்ந்து செய்வார்கள். குள்ளநரியைப் போன்று அங்கும் இங்கும் சொல்ல மாட்டார்கள் என்று விளக்கமளித்தார்கள். (இப்னுகஸீர்)

عن قتادة: ﴿إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا﴾ قال استقاموا على طاعة الله. وكان الحسن إذا تلاها قال: اللهمَّ فأنت ربنا فارزقنا الاستقامة.

ஹசன் ரஹ் அவர்கள் இந்த வசனத்தை ஓதும் பொழுது இரட்சகனே! நீயே எங்களின் இறைவனாக இருக்கிறாய். எல்லா காரியத்திலும் நிலைத்திருக்கும் தன்மையை எங்களுக்கு வழங்குவாயாக என்று கேட்பார்கள். (இப்னு கஸீர்)

நம் முன்னோர்கள் எந்த அமலையும் நிரந்தரமாக செய்பவர்களாக இருந்தார்கள்.

عن أم حبيبة أم المؤمنين:] مَن صَلّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً في يَومٍ ولَيْلَةٍ، بُنِيَ له بِهِنَّ بَيْتٌ في الجَنَّةِ قالَتْ أُمُّ حَبِيبَةَ: فَما تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِن رَسُولِ اللهِ . وقالَ عَنْبَسَةُ: فَما تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِن أُمِّ حَبِيبَةَ وقالَ عَمْرُو بنُ أوْسٍ: ما تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِن عَنْبَسَةَ وقالَ النُّعْمانُ بنُ سالِمٍ: ما تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِن عَمْرِو بنِ أوْسٍ

இரவு பகலில் 12 ரக்கஅத்துக்களை யார் தொழுகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும் என்று நபி அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்முஹபீபா ரலி   அவர்கள் கூறுகிறார்கள்  ; நான் இதை நபிகள் நாயகம்  அவர்களிடமிருந்து கேட்டது முதல் அத்தொழுகையை நான் விட்டதில்லை. அம்பஸா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நான் உம்மு ஹபீபா ரலி அவர்களிடமிருந்து இதை கேட்டதிலிருந்து நான் இத்தொழுகையை விட்டதில்லை. அம்ரு பின் அவ்ஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ;  இதை அம்பஸாவிடமிருந்து நான் கேட்டதிலிருந்து அத்தொழுகையை நான் விட்டதில்லை. நுஃமான் பின் ஸாலிம்  ரஹ் அவர்கள் அம்ரு பின்அவ்ஸ் ரஹ் அவர்களிடமிருந்து நான் கேட்டது முதல் அந்த தொழுகையை நான் விட்டதில்லை. (முஸ்லிம் ; 728)

 

7 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் அருமையான வரிகள்

    ReplyDelete
  2. بارك الله

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தாங்கள் உலமாக்களுக்காக எடுத்த முயற்சிகளை ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொண்டு உயர்ந்த சன்மானங்களைத் தந்தருள்வானாக.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தாங்கள் உலமாக்களுக்காக எடுத்த முயற்சிகளை ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொண்டு உயர்ந்த சன்மானங்களை தந்தருள்வானாக ஆமீன்.

    ReplyDelete
    Replies
    1. Allah ungaluku barakath saivanaga

      Delete
  5. உங்களுடைய பல்வேறு குறிப்புகளின் வழியாக நிறைய பயனடைந்திருக்கிறேன்


    புதிய கோணம் தேவையான ஆயத்து தேவையான ஹதீஸ் வரலாற்று நிகழ்வுகள் என அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள் அல்லாஹ் உங்களுடைய கல்வியில் பரக்கத் செய்வானாக

    ReplyDelete