Friday, August 23, 2024

சீரழிவை நோக்கி பயணிக்கும் நம் இளவல்கள்

 

அல்லாஹுத்தஆலா மனித வாழ்வை மூன்று பருவங்களைக் கொண்டு அமைத்திருக்கின்றான். 1.குழந்தைப் பருவம் 2.வாலிபப் பருவம் 3.முதுமைப் பருவம்.இதில் ஆற்றலும் வலிமையும் துடிப்பும் உற்சாமும் மிக்க பருவம் வாலிபப் பருவம். அனைவராலும் ஆசை கொள்ளப்படுகின்ற அனைவரும் எதிர்பார்க்கின்ற ஒரு பருவம் இளமைப் பருவம். வேகமாக வளர்ந்து வாலிபர்களாக ஆகி விட மாட்டோமா என்று சிறுவர்களும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு அந்த பருவம் வழங்கப்பட மாட்டாதா என்று முதியோர்களும் ஏங்கும் பருவமாக இந்த இளமை பருவம் இருக்கிறது.

فَيا لَيتَ الشَبابَ يَعودُ يَوماً فَأُخبِرُهُ بِما صَنَعَ المَشيبُ

வாலிபம் ஒரு நாள் திரும்ப வேண்டுமே அப்படி திரும்பினால் முதுமை என்னை என்ன பாடுபடுத்தியது என்பதை அதற்கு நான் அறிவிப்பேன்.

சொல்ல முடியாத துன்பங்களை முதுமையில் அனுபவித்த ஒரு கவிஞனின் புலம்பல் இது. இழந்த இளமை மீண்டும் வந்து விடாதா என்ற ஏக்கம் இது. இளமை திரும்பி வருதல் என்பது ஒரு போதும் நடக்காத காரியம். என்றாலும், திரும்ப வந்து விடாதா என்ற நப்பாசையை கவிதையாக பாடுகிறார் இந்த கவிஞர்.

எனவே எல்லாரும் ஆசைப்படுகின்ற வாலிபம்.

வாலிபம் என்பது பலம் மிக்க பருவமாக இருப்பதால் அல்லாஹ் அனைவருக்கும் முதுமையைத் தராமல் வாலிபத்தை மட்டுமே கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி நமக்கு வரலாம். அல்லாஹ்வின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும். அந்த அடிப்படையில் முதுமையைத் தந்த காரணம் படிப்பினை பெறுவதற்காக. வாலிபம் என்பது ஆட்டம் போடுகின்ற பருவம்.அல்லாஹ்வை மறந்து வாழும் பருவம்.பாவங்கள் மிகைத்திருக்கின்ற பருவம். அத்தகைய மனிதனைப் பார்த்து உனக்கும் முதுமை வரும். இப்போது ஆட்டம் போடுகிறாய். ஆட்டம் போட முடியாத ஒரு நிலை வரும். இப்போது நிமிர்ந்து நிற்கின்றாய். ஒரு காலம் வரும். அப்போது நீ குணிய வேண்டியது வரும். இப்போது யாரையும் சாராமல் நின்கின்றாய்.ஒரு காலம் வரும். பிறரைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று மனிதனைப் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான். முதியவர்களைப் பார்க்கின்ற போது அந்த எண்ணம் வரும். வர வேண்டும். எனவே படிப்பினை பெறவே அல்லாஹ் முதுமையைத் தருகிறான். முதியவர்களைப் பார்க்கின்ற போது இந்த எண்ணம் வந்தால் அவன் திருந்தி விடுவான்.

ஆக துடிப்பும், உற்சாகமும் நிறைந்த, உத்வேகமாக செயற்படுகின்ற எதிர்காலத்தைப் பற்றி இலட்சியக் கனவுகள் காணுகின்ற முக்கியமான பருவமாக இளமைப் பருவம் உள்ளது. அதனால் தான் இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படுகின்றார்கள்.

வாழ்வின் அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கும் ஆக்கபூர்வமான பணிகளை செய்வதற்கும் இந்த பருவமே இன்றி அமையாதது. எனவே தான் இஸ்லாம் இளமைக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறது.

குகைவாசிகளின் வரலாற்றை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

அந்தக் குகைக்கு சென்ற வாலிபர்கள் விஷயத்தில் ஒரு அத்தியாயத்தை இறக்கி அவர்கள் யார்? அவர்கள் அங்கு எத்தனை நாட்கள் தங்கினார்கள்? அங்கே என்னென்ன நடந்தது? என்பதை குறித்து  அல்லாஹுத்தஆலா அந்த அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகின்றான். இது குகைவாசிகளுக்கு கிடைத்த உச்சபட்ச மரியாதையாகும். அவர்கள் நபிமார்களும் அல்ல வீர தீர சாகசங்கள் புரிந்த தியாகிகளும் அல்ல.‌ வரலாற்றின் ஏதோ ஒரு காலத்தில் எங்கோ ஒரு இடத்தில் யாராலும் நினைவு கூறப்படாமல் வாழ்ந்து மறைந்த சில இளைஞர்களின் சரித்திரத்தை அகிலத்தின் அதிபதியான அல்லாஹ் அகில உலகத்திற்கு வழிகாட்டியாக கொடுத்தருளிய அல்குர்ஆனில் பதிவு செய்திருக்கிறான் என்றால், அது அந்த இளைஞர்களின் சிறப்பை பறைசாற்றுவதோடு இளைஞர்களுக்கு இஸ்லாம் வழங்கிய தனிச்சிறப்பையும் எடுத்தியம்புகிறது.

இளைஞர்களுக்கு இஸ்லாம் வழங்கிய அங்கீகாரத்திற்கும் முக்கியத்துவத்திற்கும் இதைவிட பெரிய சான்று எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

பெருமானார் ஸல் அவர்களை ஆரம்பமாக ஈமான் கொண்டவர்களில் அதிகம் பேர் வாலிபர்கள்.ஏனென்றால் பொதுவாகவே வயதானவர் களுக்கு வரட்டு பிடிவாதம் இருக்கும். அவர்கள் பழமையை விட்டும் வெளியே வர மாட்டார்கள். ஆனால் வாலிபர்கள் புதுமையை விரும்பக் கூடியவர்கள்.பழமையின் மீது அவர்களுக்கு அந்தளவு பிடிவாதம் இருக்காது. எனவே வாலிபர்கள் அதிகமாக ஈமான் கொண்டார்கள். அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாகவும் உருதுணையாகவும் வாலிபர்களே இருந்தார்கள்.வாலிபர்களுக்கு பெருமானார் ஸல் அவர்கள் அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள்.நபி ஸல் அவர்களோடு அதிக நேரங்கள் வாலிபர்கள் தான் இருந்தார்கள்.

يقول جندب بن عبد الله - رضي الله عنه -: (كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حَزَاورة، فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن، ثم تعلمنا القرآن فازدانا به إيماناً).

ஜுன்துப் பின் அப்துல்லாஹ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; இளம் வாலிபர்களான நாங்கள் பெருமானாரோடு இருந்து ஆரம்பத்தில் ஈமானைக் கற்றுக் கொண்டோம். பின்பு குர்ஆனைக் கற்றுக் கொண்டோம். அது எங்களுக்கு ஈமானை அதிகப்படுத்தியது. (இப்னுமாஜா)

أَتَيْنا إلى النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ ونَحْنُ شَبَبَةٌ مُتَقارِبُونَ، فأقَمْنا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا ولَيْلَةً، وكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أنَّا قَدِ اشْتَهَيْنا أهْلَنا - أوْ قَدِ اشْتَقْنا - سَأَلَنا عَمَّنْ تَرَكْنا بَعْدَنا، فأخْبَرْناهُ، قالَ: ارْجِعُوا إلى أهْلِيكُمْ، فأقِيمُوا فيهم وعَلِّمُوهُمْ ومُرُوهُمْ - وذَكَرَ أشْياءَ أحْفَظُها أوْ لا أحْفَظُها - وصَلُّوا كما رَأَيْتُمُونِي أُصَلِّي، فإذا حَضَرَتِ الصَّلاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أحَدُكُمْ، ولْيَؤُمَّكُمْ أكْبَرُكُمْ.

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) கூறுகிறார்கள் ;

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள்.நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று கூறினார்கள். (புகாரி ; 631)

பெருமானாரைப் பின்பற்றி அவர்களின் தோழர்களும் வாலிபர்களுக்கு முதல் இடத்தை வழங்கி அவர்களை கண்ணியப்படுத்தினார்கள்.

عن أبي سعيدٍ الخُدريِّ ، أنَّه كان إذا رأَى الشَّبابَ قال : مرحبًا بوصيَّةِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم ، أمرنا أن نحفظَكم الحديثَ ونُوسِعَ لكم في المجالسِ رواه البيهقي في ((شعب الإيمان)) (1741)

அபூ ஸஈத் அல்குத்ரீ ரலி அவர்கள் வாலிபர்களை பார்க்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் யாரைக் குறித்து எங்களுக்கு உபதேசித்தார்களோ அந்த இளவல்களே! வாருங்கள் வாருங்கள். சபைகளில் உங்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் ஹதீஸ்களை உங்களுக்கு புரிய வைத்து மனனமிட வைக்க வேண்டும் என்றும் பெருமானார் ஸல் அவர்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு உபதேசம் செய்து உள்ளார்கள் என்று கூறுவார்கள்.

ஹஸன் பின் அலி ரலி அவர்கள் கூறுவார்கள் ; உங்களில் வயதில் குறைந்தவர்களை சபையில் முற்படுத்துங்கள். ஏனெனில் அவர்கள் தான் தூய்மையான இதயத்துடன் இருக்கின்றார்கள். கேட்பவற்றை விரைவாக மனனம் செய்வதிலும் வேகமானவர்களாக இருக்கிறார்கள்.

நபி ஸல் அவர்களின் காலத்திலும் சரி அவர்களை அடுத்து வந்த கலீஃபாக்கள் காலத்திலும் சரி எண்ணற்ற சீர்திருத்தங்களுக்கும் சிறந்த சமூக மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் வாலிபர்கள் தான் காரணமாக இருந்தார்கள்.

 

குர்ஆனை ஒன்று சேர்க்கும் மாபெரும் பணியை சிறப்பாக செய்த ஜைது பின் ஸாபித் ரலி அவர்கள்.

عن زيد بن ثابت رضي الله عنه قال: أَرْسَلَ إلَيَّ أبو بَكْرٍ مَقْتَلَ أهْلِ اليَمَامَةِ وعِنْدَهُ عُمَرُ، فَقالَ أبو بَكْرٍ: إنَّ عُمَرَ أتَانِي، فَقالَ: إنَّ القَتْلَ قَدِ اسْتَحَرَّ يَومَ اليَمَامَةِ بالنَّاسِ، وإنِّي أخْشَى أنْ يَسْتَحِرَّ القَتْلُ بالقُرَّاءِ في المَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ القُرْآنِ إلَّا أنْ تَجْمَعُوهُ، وإنِّي لَأَرَى أنْ تَجْمَعَ القُرْآنَ، قالَ أبو بَكْرٍ: قُلتُ لِعُمَرَ: كيفَ أفْعَلُ شَيئًا لَمْ يَفْعَلْهُ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم؟ فَقالَ عُمَرُ: هو واللَّهِ خَيْرٌ، فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فيه حتَّى شَرَحَ اللَّهُ لِذلكَ صَدْرِي، ورَأَيْتُ الذي رَأَى عُمَرُ، قالَ زَيْدُ بنُ ثَابِتٍ: وعُمَرُ عِنْدَهُ جَالِسٌ لا يَتَكَلَّمُ، فَقالَ أبو بَكْرٍ: إنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ، ولَا نَتَّهِمُكَ، كُنْتَ تَكْتُبُ الوَحْيَ لِرَسولِ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم، فَتَتَبَّعِ القُرْآنَ فَاجْمَعْهُ. فَوَاللَّهِ لو كَلَّفَنِي نَقْلَ جَبَلٍ مِنَ الجِبَالِ ما كانَ أثْقَلَ عَلَيَّ ممَّا أمَرَنِي به مِن جَمْعِ القُرْآنِ، قُلتُ: كيفَ تَفْعَلَانِ شيئًا لَمْ يَفْعَلْهُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم؟ فَقالَ أبو بَكْرٍ: هو واللَّهِ خَيْرٌ، فَلَمْ أزَلْ أُرَاجِعُهُ حتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ اللَّهُ له صَدْرَ أبِي بَكْرٍ وعُمَرَ، فَقُمْتُ فَتَتَبَّعْتُ القُرْآنَ أجْمَعُهُ مِنَ الرِّقَاعِ والأكْتَافِ، والعُسُبِ وصُدُورِ الرِّجَالِ، حتَّى وجَدْتُ مِن سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مع خُزَيْمَةَ الأنْصَارِيِّ لَمْ أجِدْهُما مع أحَدٍ غيرِهِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ} [التوبة: 128] إلى آخِرِهِمَا، وكَانَتِ الصُّحُفُ الَّتي جُمِعَ فِيهَا القُرْآنُ عِنْدَ أبِي بَكْرٍ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ عُمَرَ حتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ عِنْدَ حَفْصَةَ بنْتِ عُمَرَ.

ஜைத் பின் ஜாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ; யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடலை ஸஜத் (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்].

ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் ரலி அவர்கள் தொடர்ந்து என்னைப் பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர். நபி (ஸல்) அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள். உங்களை நாங்கள் சந்தேகிக்க வில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் ரலி இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல் தான் என்று கூறி அபூபக்ர் ரலி அவர்கள் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ரலி ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.

அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டை களிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரி ரலி அவர்களிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்க வில்லை(ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் ரலி அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமர் ரலி அவர்களிடமும் அதன் பின் அவர்களின் மகள் ஹஃப்ஸா ரலி அவர்களிடமும் இருந்தது. (புகாரி ; 4986)

இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; இங்கே அபூபக்கர் ரலி அவர்கள் ஜைது பின் ஸாபித் ரலி அவர்களைக் குறித்து நான்கு விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று அவர் இளைஞராக இருக்கிறார். இரண்டு அவர் புத்திசாலியாக இருக்கிறார். மூன்றாவது எந்த விதத்திலும் சந்தேகத்திற்குரியவராக இல்லை. நான்காவது வேத அறிவிப்புகளை எழுதக் கூடியவராக இருந்தார்.

முழு குர்ஆனையும் ஒன்று திரட்டுவது என்பது சாதாரணமான ஒரு பணியல்ல. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு மலையை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்த்து கொண்டு செல்லுமாறு என்னிடம் கூறப்பட்டிருந்தால் கூட அது இலகுவான பணியாக இருந்திருக்கும் ஆனால் குர்ஆனை ஒன்று சேர்க்குமாறு எனக்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட போது அது இதைவிட சிரமமானதாக இருந்தது என்ற ஜைது பின் ஸாபித் ரலி அவர்களின் கூற்றிலிருந்து அதன் கடினத்தை விளங்கிக் கொள்ளலாம்.

ஏனெனில் நபிகளாரின் காலத்தில் இறக்கி அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் யாவும் ஒரே இடத்தில் ஒரே நிலையில் இருக்க வில்லை. சில வசனங்கள் நபித்தோழர்களின் உள்ளங்களில் மட்டுமே மனப்பாடமாக இருந்தது. அவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டு இருந்த குர்ஆன் வசனங்கள் இறைவாக்குதானா என்பதற்கு நீதிமிக்க இரண்டு நபர்களை சாட்சியாளராக வைத்துத்தான் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் சில வசனங்களோ எலும்பிலும் தோலிலும் பேரிச்ச ஓலைகளிலும் எழுதப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து நூல் வடிவில் தொகுப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல. இளம் வாலிபராக இருந்ததால் தான் அபூபக்கர் ரலி அவர்கள் இந்த மகத்தான பணிக்கு அவர்களை தேர்வு செய்தார்கள். அல்லாஹ்வின் பெரும் கருணையால் அந்தப் பணியை மிகவும் செம்மையாக செய்து ஜைது பின் ஸாபித் ரலி என்ற இளைஞர் செய்து முடித்தார்கள்.

ஜைது பின் ஸாபித் ரலி அவர்களின் 14 ம் வயதில் நபியவர்கள் யூத மொழியை கற்று வாருங்கள் என்று அவர்களிடம் கூறினார்கள். 18 வது நாளில் நபிகளாரின் சமூகத்திற்கு திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே யூத மொழியைக் கற்றுக் கொண்டேன் என்று கூறினார்கள். எழுதுவதற்கு தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்க, வாசிக்கவும் தெரியும் அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்றார்கள்.

10 வது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். 12 வது வயதில் எழுத படிக்க கற்றுக் கொண்டார்கள். 14 வது வயதில் பிற மொழிகளைக் கற்றார்கள். 16 வது வயதில் நபி ஸல் அவர்களின் மொழி பெயர்ப்பாளராக மாறுகிறார்கள். 18 வயதில் இறைவனிடமிருந்து வரும் வஹியை எழுதும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.19 வது வயதில் வாரிசு உரிமை சட்டங்களை இயற்றும் பெரும் பொறுப்பு அவர்களுக்கு தரப்பட்டது. 21 வது வயதில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெரும் பொறுப்பு தான் குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கும் மகத்தான பணி.

செயற்கரிய செயல்களையும் உலகம் வியக்கும் சாதனைகளையும் ஒவ்வொரு இளைஞர்களும் செய்ய முடியும் என்பதற்கு ஸைது பின் ஸாபித் ரலி அவர்களே சிறந்த முன் உதாரணம். ஒரு இஸ்லாமிய வாலிபன் எவ்வாறு தீனுக்கும் சமூகத்திற்கும் பலன் தருபவனாக இருக்க வேண்டும் என்பதற்கும் அவர்களே சிறந்த உதாரணம்.

நான்கு கலீபாக்களுடைய ஆட்சிக்குப் பின்னால் அன்றைய நாட்களில் உலகின் மிகப்பெரிய ஆட்சி உமையாக்களுடைய ஆட்சி தான். குறிப்பாக கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களுடைய ஆட்சி காலத்தில் இஸ்லாத்தின் எல்லை உலகின் பெரும்பாலான பாகங்களில் பரவி இருந்தது. இந்தியாவின் சிந்து பகுதி, துர்கிஸ்தான், சீனாவின் எல்லையில் இருந்து மறுபுறம் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் கடைகோடி வரை இஸ்லாமிய அரசின் எல்லை பரந்து விரிந்து நின்றது.

ஒருமுறை கலீஃபா ஹாரூன் ரஷீத் தனது உப்பரிகையில் நின்று கொண்டு தனது ஆட்சியின் பறந்து விரிந்த பகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கார்முகில் மேகம் திரண்டு வருவதைக் கண்டார்கள். ஆனாலும் அவர் நின்ற இடத்தில் அது மழையைப் பொழிய வில்லை. அப்போது மழை பொழியாமல் கடந்து செல்லும் மேகத்திடம் மேகமே! நீ எங்கு வேண்டுமானாலும் சென்று மழையைப் பொழி. நீ எங்கு பொழிந்தாலும் அது என் ஆளுமைக்குட்பட்ட பகுதியாகத் தான் இருக்கும் என்று கூறினார்கள். அந்தளவு அன்றைய இஸ்லாமிய ஆட்சி மேற்கத்திய நாட்டின் எல்லை வரை நீண்டு இருந்தது.

இந்த வார்த்தைகள் ஒரு இஸ்லாமிய கலீஃபாவிடமிருந்து வெளி வர வேண்டும் என்றால், அது இளைஞர்களின் உழைப்பால் ஏற்பட்ட வெற்றி என்றே கூற வேண்டும். அந்த வகையில் அன்றைக்கு இஸ்லாமியப் படைக்கு தளபதியாக செயல்பட்டு பெரும் வெற்றிகளைத் தேடித் தந்த இளைஞர் தான் உக்பா பின் நாஃபி ரலி அவர்கள்.

அன்றைய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மேற்கத்திய நாட்டின் எல்லை வரை நீண்டிருந்ததற்கு அவர் பெற்றுத் தந்த வெற்றிகளும் ஒரு காரணம். அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளில் நின்று கொண்டு பெரும் வீரமும் இளமை துடிப்பும் கொண்ட உக்பா ரலி அவர்கள் முஹம்மதின் ஸல் இறைவன் மீது ஆணையிட்டு கூறுகின்றேன். இந்த கடல் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒட்டு மொத்த உலகத்திலும் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நான் நட்டியிருப்பேன். யா அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி என்று கூறினார்கள்.

ஆம் அட்லாண்டிக் கடலின் மறுபக்கம் ஒரு நாடு இருக்கத்தான் செய்தது. ஆனால் அன்று அவருக்கு அது தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அவ்வாறு தெரிந்திருந்தால் அந்த நாடும் அன்றைய இஸ்லாத்தை ஏற்றிருக்கும். அது தான் அமெரிக்கா.

வரலாறு நெடுக புரட்டிப் பார்த்தால் இஸ்லாம் அடைந்திருக்கும் இந்த பெரும் வெற்றிகள், நாகரீக வளர்ச்சிகள், கல்வி புரட்சிகள், மகத்தான மருத்துவ மாற்றங்கள், இவை அனைத்திற்கும் பின்னால் இறைவன் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்களின் கடுமையான உழைப்பும் வேர்வையும் தியாகம் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு வாலிபன் எப்படி இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தின் உயர்வுக்கும் பாடுபட வேண்டும். சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். அத்தோடு உயர்ந்த லட்சியம் உடையவனாகவும் இருக்க வேண்டும். வாலிபனிடமிருந்து அல்லாஹ் அதைத்தான் எதிர் பார்க்கிறான்.கடந்த காலத்து வாலிபர்கள் சமூக சீர்திருத்தவாதிகளாக இருந்தார்கள். தங்கள் நேரங்களையும் காலங்களையும் சமூக சீர்திருத்தத்திற்காக செலவிட்டார்கள். சிறந்த சமூக மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணமாக இருந்தார்கள்.

ஆனால் இன்றைக்குள்ள வாலிபர்கள் சமூகத்திற்கும் பயனில்லாமல் குடும்பத்திற்கும் பயனில்லாமல் வாழ்வை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் வாலிபம் தீனுக்கும் பயன்படுவ தில்லை. துன்யாவுக்கும் பயன்படுவதில்லை.

இன்றைய வாலிபன் வீட்டிலும் இல்லை. பள்ளியிலும் இல்லை. எங்கோ போய்க் கொண்டிருக்கிறான் எதையோ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். மூளையை எங்கேயோ அடகு வைத்திருக்கிறான். ஆற்றல் மிக்க, சாதனைகளுக்கு சொந்தமான வாலிபத்தை எதற்கும் பயனில்லாமல் ஹராமான விஷயங்களிலும் கேளிக் கூத்துகளிலும் தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.



நான்கு தினங்களுக்கு முன்னால் தன் பெண் தோழிகளோடு சேர்ந்து சென்னையின் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில் நடனம் ஆடிக்கொண்டிருந்த சிவகங்கையைச் சார்ந்த ஒரு இஸ்லாமிய வாலிபன் நடனம் ஆடிக் கொண்டிருந்த அந்த நிலையில் மயங்கி விழுந்து மரணித்த செய்தியை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். இன்றைக்கு நம் சமூகத்தின் 90 % வாலிபர்களின் நிலை   இது தான். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய சரியான பாதையைக் காட்ட வேண்டிய இந்த மாதிரியான மோசமான காரியங்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்து மார்க்க ஈடுபாடு மிக்கவர்களாக அவர்களை வார்த்தெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குண்டு. அல்லாஹ் நம் சமூகத்து வாலிபர்களைப் பாதுகாப்பானாக!  

No comments:

Post a Comment