Friday, September 15, 2023

புகழுக்குரிய பூமான் நபி ﷺ அவர்கள்

 அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை  நன்று என்று திருவள்ளுவரின் ஒரு குறள் ஒன்றை நாம் அறிவோம். ஒருவர்  குடும்பத்திலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ  அறியப்பட்டால் அவர் புகழுடன் அறியப்பட வேண்டும். அதாவது ஒருவர் அவருடைய குணத்திற்காக அறத்திற்காக தன் வேலையில் நிபுணத்துவத்திற்காக புகழுடனும் பெருமையுடனும் விளங்கவேண்டும். இல்லையென்றால் அவர் உலகிற்கு அறியப்படாதவராக இருப்பதே சிறந்தது என்பது அந்த பொருளுக்கான விளக்கம். அதாவது வாழ்ந்தால் மக்கள் புகழும் வாழ்க்கை வாழ வேண்டும். 

அந்த வகையில் நபி அவர்கள் புகழுக்குரிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். வாழும் காலத்தில் அனைவராலும் புகழப்பட்டார்கள். இன்றைக்கும் புகழப்படுகிறார்கள். அழிவு நாள் வரை அவர்களின் புகழ் உலகில் ஒலித்துக் கொண்டே இருக்கும். பெருமானார் புகழுக்குரியவர்கள் புகழப்பட வேண்டியவர்கள் உலகம் உள்ளவரை அவர்கள் புகழப்பட வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவர்களுக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டினான்.

فعن ابن عباس رضي الله عنهم قال: «لما ولد رسول الله صلى الله عليه وسلم عقّ عنه: أي يوم سابع ولادته جده بكبش وسماه محمدا؟ فقيل له: يا أبا الحرث ما حملك على أن تسميه محمدا ولم تسمه باسم آبائه. وفي لفظ: وليس من أسماء آبائك ولا قومك؟ قال: أردت أن يحمده الله في السماء وتحمده الناس في الأرض السيرة الحلبية

நபியவர்கள் பிறந்து ஏழாம் நாள் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் அவர்களுக்காக ஆட்டை அறுத்து அகீகா கொடுத்து விட்டு, அவர்களுக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டினார்கள். அப்போது மக்காவின் தலைவர்கள் நம் மூதாதையர்களின் பெயர்களைச் சூட்டாமல் நம்மிடம் அறிமுகம் இல்லாத ஒரு பெயரை உங்கள் பேரக் குழந்தைக்கு சூட்டி உள்ளீர்களே என்று கேட்டபோது இவரை வானத்தில் அல்லாஹ் புகழ வேண்டும். பூமியில் மக்கள் புகழ வேண்டும். வானத்திலும் பூமியிலும் புகழப்படுபவர் ஆக இவர் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே அவருக்கு முஹம்மத் என்று பெயரைச் சூட்டினேன் என்று கூறினார்கள். (அஸ்ஸீரதுல் ஹலபியா)

ويروى أن عبد المطلب إنما سماه محمدا لرؤيا رآها: أي في منامه، رأى كأن سلسلة خرجت من ظهره لها طرف في السماء وطرف في الأرض وطرف في المشرق وطرف في المغرب، ثم عادت كأنها شجرة على كل ورقة منها نور، وإذا أهل المشرق وأهل المغرب يتعلقون بها فقصها فعبرت له بمولود يكون من صلبه، يتبعه أهل المشرق والمغرب، ويحمده أهل السماء والأرض، فلذلك سماه محمدا: أي مع ما حدثته به أمه بما رأته على ما تقدم. السيرة الحلبية

அப்துல் முத்தலிப் அவர்கள் கனவு ஒன்றைக் கண்டார்கள். அதிலே ஒரு மரத்தை பார்த்தார்கள். பூமியில் உள்ள அனைவரும் அதை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கனவுக்கான விளக்கத்தைக் கேட்ட போது,  உங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். பூமியில் உள்ள அனைவரும் அக்குழந்தையை பின்பற்றுவார்கள். வானத்திலும் பூமியிலும் அவர் புகழப்படும் மனிதராக இருப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த கனவில் பின்னணியில் தான் அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு முஹம்மது என்று பெயர் சூட்டினார்கள். (அஸ்ஸீரதுல் ஹலபியா)

وفي الشفاء أن في هذين الاسمين محمد وأحمد من بدائع آياته: أي المصطفى وعجائب خصائصه أن الله تعالى حماهما عن أن يسمى بهما أحد قبل زمانه: أي قبل شيوع وجوده. أما أحمد الذي أتى في الكتب القديمة وبشرت به الأنبياء عليهم الصلاة والسلام، فمنع الله تعالى بحكمته أن يتسمى به أحد غيره، ولا يدعى به مدعو قبله منذ خلقت الدنيا وفي حياته.

நபி அவர்கள் இந்த உலகில் பிறப்பதற்கு முன்பு வேறு யாரும் முஹம்மத் என்று பெயர் சூட்டப்படவில்லை என்பது அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த தனித்தன்மை. 

உலகில் சிலர் புகழோடு பிறக்கிறார்கள்.சிலர் புகழோடு வாழ்கிறார்கள்! இன்னும் சிலர் புகழோடு மரணிக்கிறார்கள். புகழோடு பிறக்கிற பலர் புகழோடு  வாழ்வதில்லை. புகழோடு பிறந்து புகழோடு வாழுகிற பலர்  புகழோடு  மரணிப்பதில்லை.   புகழோடு  மரணிக்கிற பலருக்கு அவர்களின் பிறப்பும், வாழ்வும்  புகழ் வாய்ந்ததாய்  அமைவவில்லை.ஆனால், உலகத்திலேயே பூமான்  நபி {ஸல்} அவர்கள்  மட்டும் தான் புகழோடு பிறந்து    புகழோடு வாழ்ந்து புகழோடு இந்த  பூவுலகை  விட்டு பிரிந்தார்கள்! மட்டுமல்ல அவர்கள் பிறக்கும் முன்பே புகழப்பட்டவர்களும் மறைவுக்குப் பின் இன்றளவும் இனி கியாமத் வரையும் புகழப்படுபவர்களும் அவர்கள் மட்டும் தான்.

எல்லா நபிமார்களும் பிறந்த பிறகு புகழப்பட்டார்கள். அவர்கள் சிறப்பாக வாழ்ந்த பிறகு அவர்களை உலகம் புகழ்ந்தது.அல்லாஹ்வும் அவர்களின் பிறப்பிற்கு பிறகு தான் அவர்களை புகழ்கிறான்.மர்யம்  அவர்கள் ஆண் துணையில்லாமல் கற்பம் தரித்து ஊரார் முன்னிலையில் வந்து நின்ற போது அவர்களின் பரிசுத்த தன்மையை நிரூபிக்கும் வகையில் ஹள்ரத் ஈஸா அவர்கள் தொட்டிலில் பேசியதாக அல்லாஹ்  குறிப்பிடுகிறான்.قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا மூசா நபி அவர்கள் பிறந்த நேரத்தில்  அவர்களின் அன்னை அந்த குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து நைல் நதியில் விட்ட போது அதைப் பத்திரமாகப் பாதுகாத்து கரைசேர்த்த அற்புதத்தை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.இவ்வாறே ஒவ்வொரு நபிமார்களையும் அவர்களின் பிறப்பிற்கு பிறகு அவர்களை புகழ்ந்து பேசும் அல்லாஹ் நபியை மட்டும் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களின் புகழை உகலத்திற்கு சொல்லி விட்டான்.

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான்.(அல்குர்ஆன் : 3:81)

பிறப்பதற்கு முன்பே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் உலகத்தாரால் புகழப் பட்டவர்களும் நபி ஸல் அவர்கள் மட்டும் தான்.

மட்டுமல்ல வாழும் போதும் அத்தனை பேராலும் புகழப்பட்டார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.

உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள், வாழ்ந்தார்கள், போனார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சமூகத்தால் புகழப்பட்டால் இன்னொரு சமூகத்தால் இகழப்படுவார்கள். ஒரு கூட்டத்தாரால் போற்றப்பட்டால் இன்னொரு கூட்டத்தாரால் தூற்றப்படுவார்கள்.அவர்களின் சமூகம் புகழ்ந்தால் அவர்களின் குடும்பம் இகழுவார்கள்.

அவர்களின் குடும்பம் புகழ்ந்தால் அவர்களின் சமூகம் இகழுவார்கள்.அவர்கள் குடும்பத்திலேயே ஒருவரால் புகழப்படுவார்கள்.இன்னொருவரால் இகழப்படுவார்கள். எனவே அனைத்து சமூகத்தாராலும் அனைத்து சாராராலும் புகழப்படும் தலைவர்கள் உலகத்தில் என்றைக்கும் இருந்ததில்லை.

ஆனால் நபி ஸல் அவர்கள் எல்லா காலத்திலும் புகழப்பட்டார்கள்.எல்லா இனத்தாலும் புகழப்பட்டார்கள்.எல்லா சமூகத்தாலும் புகழப்பட்டார் கள்.எல்லா மொழியாலும் புகழப்பட்டார்கள்.

அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் தோழர்கள், அவர்களின் நண்பர்கள், அவர்களின் பணியாளர்கள், அவர்களின் சமூகத்து மக்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் என்று அத்தனை பேராலும் புகழப்பட்டார்கள் அருமை நாயகம் ஸல் அவர்கள்.

சமூகத்தில் நல்லவர் என்றும் வல்லவர் நம்பிக்கையாளர் என்றும் நானயமானவர் என்றும் பெயர் எடுக்கத் தெரிந்த எத்தனையோ தலைவர்களால் தன் மனைவியிடத்தில் நல்ல பெயர் வாங்க முடியாமல் போனது. ஆனால் நபி ஸல் அவர்களை அவர்களின் மனைவிமார்களும் புகழ்ந்து பேசினார்கள்.

உலகில் யாருக்குமே கிடைக்காத ஒரு அங்கீகாரம் நபிக்கு கிடைத்தது. அது அவர்களின் மனைவிமார்களிடம் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.

خَيْرُكُمْ خيركم لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي   

தன் மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியிடத்தில் சிறந்தவன். (திர்மிதி ; 3895)

உலகில் ஒருவர் எவ்வளவு தான் உச்சத்தைத் தொட்டிருந்தாலும் எல்லாரிடத்தில் புகழை சம்பாதித்திருந்தாலும் தன் மனைவியிடம் நல்ல பெயரை வாங்க முடியாது. அந்த சாதனையை உலகில் நிகழ்த்திய ஒரே மனிதப்புனிதர் நபி ﷺ அவர்கள் மட்டும் தான்.

 அவர்களின் மனைவி அன்னை கதீஜா ரலி அவர்கள் சொன்ன விஷயம் ; 

كلَّا! والله ما يخزيك الله أبدًا؛ إنك لتصل الرحم، وتصدُقُ الحديثَ، وتَحمِل الكَلَّ، وتَكسِبُ المعدومَ، وتَقري الضيف، وتعين على نوائب الحق  

நீங்கள் உறவுகளை சேர்ந்து வாழுகிறீர்கள், சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்கள், இல்லாதப்பட்டவர்களுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள், விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள்.எனவே அல்லாஹ் உங்களை நிச்சயம் இழிவுபடுத்த மாட்டான்.

ஒருவர் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதராக இருப்பார் மக்களிடத்தில் புகழை சம்பாதித்தவராக இருப்பார் ஆனால் அவரிடத்தில் வேலை செய்யக்கூடிய பணியாளர்களிடத்தில் கேட்டால் அவரை திட்டி தீர்த்து விடுவார்கள். எனவே ஒருவரின் உண்மையான குணமும் சுய ரூபமும் அவர்களிடம் வேலை செய்யும் பணியாளர்கள் மூலமே அறியப்படும். பெருமானார் இடத்தில் 10 ஆண்டு காலம் பணி செய்த அனஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; 

عن أنس رضي الله عنه قال : خدمتُ النبي صلى الله عليه وسلم عشر سنين ، والله ما قال أف قط ، ولا قال لشيء لم فعلت كذا وهلا فعلت كذا. 

நான் நபியிடத்தில் 10 ஆண்டு காலம் பணிவிடை செய்தேன். என்னைப் பார்த்து சலிப்புடன் எந்த வார்த்தையும் சொன்னதில்லை. இதை ஏன் இவ்வாறு செய்தாய். இதை எவ்வாறு செய்திருக்க வேண்டாமா என்று எந்த விஷயத்தை குறித்தும் என்னிடம் சொன்னதில்லை.

المرء على دين خليله فلينظر أحدكم من يُخَالِل

உலகத்தில் நட்புக்கும் மற்ற உறவுகளுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு. ஒருவன் எதையும் மறைக்காமல் மனம் விட்டு பேசக்கூடிய ஒரு இடம் நட்பு.யாருக்கும் சொல்லாத தன் அந்தரங்க ரகசியங்களைக் கூட பகிர்ந்து கொள்ளக்கூடிய இடம் நட்பு.எனவே ஒருவனைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அவன் நண்பனிடம் கேட்டால் தெரிந்து விடும்.அந்த அடிப்படையில் நபி ஸல் அவர்களைக் குறித்து ஸஹாபாக்கள் சொன்ன வார்த்தைகள்.

عن علي بن أبي طالب -رضي الله عنه- قال: (لم أر قبله ولا بعده مثلَه صلى الله عليه وسلم

அவர்களைப் போன்று சிறந்த மனிதரை அவர்களுக்கு முன்பும் பார்த்ததில்லை பின்பும் பார்த்ததில்லை என்று அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள். திர்மிதி

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களை எதிர்த்துக் கொண்டிருந்த அவர்களின் கொள்கை பிடிக்காமல் அவர்களுக்கு பலவகையான இன்னல்களையும் இடர்களையும் தொந்தரவுகளையும் கொடுத்து வந்த மக்கத்து காஃபிர்கள் கூட நபியை புகழ்ந்தார்கள்.

عن أبي سفيان بن حرب:] أنّ أبا سُفْيانَ بنَ حَرْبٍ أخْبَرَهُ: أنّ هِرَقْلَ أرْسَلَ إلَيْهِ في رَكْبٍ مِن قُرَيْشٍ، وكانُوا تُجّارًا بالشَّأْمِ في المُدَّةِ الَّتي كانَ رَسولُ اللهِ ﷺ مادَّ فِيها أبا سُفْيانَ وكُفّارَ قُرَيْشٍ، فأتَوْهُ وهُمْ بإيلِياءَ، فَدَعاهُمْ في مَجْلِسِهِ، وحَوْلَهُ عُظَماءُ الرُّومِ، ثُمَّ دَعاهُمْ ودَعا بتَرْجُمانِهِ، فَقالَ: أيُّكُمْ أقْرَبُ نَسَبًا بهذا الرَّجُلِ الذي يَزْعُمُ أنّه نَبِيٌّ؟ فَقالَ أبو سُفْيانَ: فَقُلتُ أنا أقْرَبُهُمْ نَسَبًا، فَقالَ: أدْنُوهُ مِنِّي، وقَرِّبُوا أصْحابَهُ فاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ، ثُمَّ قالَ لِتَرْجُمانِهِ: قُلْ لهمْ إنِّي سائِلٌ هذا عن هذا الرَّجُلِ، فإنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ. فَواللَّهِ لَوْلا الحَياءُ مِن أنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عنْه. ثُمَّ كانَ أوَّلَ ما سَأَلَنِي عنْه أنْ قالَ: كيفَ نَسَبُهُ فِيكُمْ؟ قُلتُ: هو فِينا ذُو نَسَبٍ، قالَ: فَهلْ قالَ هذا القَوْلَ مِنكُم أحَدٌ قَطُّ قَبْلَهُ؟ قُلتُ: لا. قالَ: فَهلْ كانَ مِن آبائِهِ مِن مَلِكٍ؟ قُلتُ: لا قالَ: فأشْرافُ النّاسِ يَتَّبِعُونَهُ أمْ ضُعَفاؤُهُمْ؟ فَقُلتُ بَلْ ضُعَفاؤُهُمْ. قالَ: أيَزِيدُونَ أمْ يَنْقُصُونَ؟ قُلتُ: بَلْ يَزِيدُونَ. قالَ: فَهلْ يَرْتَدُّ أحَدٌ منهمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أنْ يَدْخُلَ فِيهِ؟ قُلتُ: لا. قالَ: فَهلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بالكَذِبِ قَبْلَ أنْ يَقُولَ ما قالَ؟ قُلتُ: لا. قالَ: فَهلْ يَغْدِرُ؟ قُلتُ: لا، ونَحْنُ منه في مُدَّةٍ لا نَدْرِي ما هو فاعِلٌ فِيها، قالَ: ولَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيها شيئًا غَيْرُ هذِه الكَلِمَةِ، قالَ: فَهلْ قاتَلْتُمُوهُ؟ قُلتُ: نَعَمْ. قالَ: فَكيفَ كانَ قِتالُكُمْ إيّاهُ؟ قُلتُ: الحَرْبُ بيْنَنا وبيْنَهُ سِجالٌ، يَنالُ مِنّا ونَنالُ منه. قالَ: ماذا يَأْمُرُكُمْ؟ قُلتُ: يقولُ: اعْبُدُوا اللهَ وحْدَهُ ولا تُشْرِكُوا به شيئًا، واتْرُكُوا ما يقولُ آباؤُكُمْ، ويَأْمُرُنا بالصَّلاةِ والزَّكاةِ والصِّدْقِ والعَفافِ والصِّلَةِ. فَقالَ لِلتَّرْجُمانِ: قُلْ له: سَأَلْتُكَ عن نَسَبِهِ فَذَكَرْتَ أنّه فِيكُمْ ذُو نَسَبٍ، فَكَذلكَ الرُّسُلُ تُبْعَثُ في نَسَبِ قَوْمِها. وسَأَلْتُكَ هلْ قالَ أحَدٌ مِنكُم هذا القَوْلَ، فَذَكَرْتَ أنْ لا، فَقُلتُ: لو كانَ أحَدٌ قالَ هذا القَوْلَ قَبْلَهُ، لَقُلتُ رَجُلٌ يَأْتَسِي بقَوْلٍ قيلَ قَبْلَهُ. وسَأَلْتُكَ هلْ كانَ مِن آبائِهِ مِن مَلِكٍ، فَذَكَرْتَ أنْ لا، قُلتُ فلوْ كانَ مِن آبائِهِ مِن مَلِكٍ، قُلتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أبِيهِ، وسَأَلْتُكَ، هلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بالكَذِبِ قَبْلَ أنْ يَقُولَ ما قالَ، فَذَكَرْتَ أنْ لا، فقَدْ أعْرِفُ أنّه لَمْ يَكُنْ لِيَذَرَ الكَذِبَ على النّاسِ ويَكْذِبَ على اللهِ. وسَأَلْتُكَ أشْرافُ النّاسِ اتَّبَعُوهُ أمْ ضُعَفاؤُهُمْ، فَذَكَرْتَ أنّ ضُعَفاءَهُمُ اتَّبَعُوهُ، وهُمْ أتْباعُ الرُّسُلِ. وسَأَلْتُكَ أيَزِيدُونَ أمْ يَنْقُصُونَ، فَذَكَرْتَ أنّهُمْ يَزِيدُونَ، وكَذلكَ أمْرُ الإيمانِ حتّى يَتِمَّ. وسَأَلْتُكَ أيَرْتَدُّ أحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أنْ يَدْخُلَ فِيهِ، فَذَكَرْتَ أنْ لا، وكَذلكَ الإيمانُ حِينَ تُخالِطُ بَشاشَتُهُ القُلُوبَ. وسَأَلْتُكَ هلْ يَغْدِرُ، فَذَكَرْتَ أنْ لا، وكَذلكَ الرُّسُلُ لا تَغْدِرُ. وسَأَلْتُكَ بما يَأْمُرُكُمْ، فَذَكَرْتَ أنّه يَأْمُرُكُمْ أنْ تَعْبُدُوا اللهَ ولا تُشْرِكُوا به شيئًا، ويَنْهاكُمْ عن عِبادَةِ الأوْثانِ، ويَأْمُرُكُمْ بالصَّلاةِ والصِّدْقِ والعَفافِ، فإنْ كانَ ما تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هاتَيْنِ

ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு வாக்கில் அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல், அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார்.

அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு, குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபியின் பெரிய தந்தையின் மகனாவார்).

அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர், தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, “நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்களிடம் சொல்” என்றார்.

நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப்பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்” என்று அபூஸுஃப்யான் கூறுகிறார். அதற்கு காரணம் அந்த காலக் கட்டத்தில் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஹிர்கல் மன்னர் கேட்ட கேள்விகளும் அபூஸுஃப்யான் அவர்களின் பதில்களும் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?

அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?

பதில்: இல்லை

கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?, அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?

பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.

கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?, அல்லது குறைகின்றனரா?


பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.


கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?


பதில்: இல்லை


கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?


பதில்: இல்லை


கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?


பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது.


(இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்).


கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?


பதில்: ஆம்


கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?


பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.


கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?


பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகை, உண்மை பேசல், கற்பு நெறியுடன் வாழுதல், உறவினர்களுடன் ஒட்டி உறவாடி வாழுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.


பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:

“நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.


எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.


இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் “முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்” என்று எண்ணியிருப்பேன்.


இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.


இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது “மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.


ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.


அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.


அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து பதிந்து விடுகின்றது.


இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார்.

எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (புகாரி:7)

நபி ஸல் அவர்களின் கொள்கை பிடிக்காது என்று தான் சொன்னார்களே தவிர அவர்களின் குணம் பிடிக்காது ,அவர்களின் நடவடிக்கை பிடிக்காது என்று யாரும் சொல்ல வில்லை.

فالتقى الأخنس وأبو جهل، فخلا الأخنس بأبي جهل فقال: يا أبا الحكم! أخبرني عن محمد: أصادق هو أم كاذب؟ فإنه ليس ها هنا من قريش غيري وغيرك يسمع كلامنا، فقال أبو جهل: ويحك! والله إن محمدا لصادق، وما كذب محمد قط، ولكن إذا ذهبت بنو قصي باللواء والسقاية والحجاب والنبوة، فماذا يكون لسائر قريش

அஹ்னஸ் அபூஜஹ்லை  தனியாக சந்தித்து, இப்போது நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் சொல்வதை என்னைத் தவிர வேறு யாரும் கேட்க முடியாது. உண்மையை கூறுங்கள். முஹம்மது அவர்கள் உண்மையாளரா? இல்லையா என்று கேட்ட போது, அவர் ஒரு போதும் பொய் சொன்னதில்லை என்று அபூஜஹல் கூறினான். (இப்னுகஸீர்)

நிகழ்காலத்தில் நம்மோடு வாழ்ந்த தலைவர்களும் அறிஞர்களும் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது. நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது. இஸ்லாம் அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது என்று பெர்னாட்ஷா கூறினார்.

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது என்று வில்லியம் மூர் கூறினார்.

​நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி ﷺ அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல என்று கிப்பன் கூறினார்.

எல்லா தரப்பு மனிதர்களிடத்திலும் புகழை சம்பாதித்த, எல்லா மக்களாலும் புகழப்படுகின்ற, எல்லா காலத்திலும் புகழப்பட்டுக் கொண்டிருக்கிற புகழுக்குரிய பூமான் நபி ஸல் அவர்களை நம் உயிருள்ளவரை புகழ்வோம்.




4 comments:

  1. சப்ஹானல்லாஹ் அருமையான கட்டுரை ஹழ்ரத்

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உங்கள் சிந்தனையில் அல்லாஹ் இன்னும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  4. بارک اللہ فیک

    ReplyDelete