Saturday, March 16, 2024

நமது முதல் கவனம்



இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ  وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌  وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.(அல்குர்ஆன் : 6:121)

இந்த வசனத்தில் அல்லாஹ் எந்த உணவை உண்ண வேண்டும். எதை உண்ணக்கூடாது என்று கூறுகிறான். அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படும் இறைச்சியை உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத இறைச்சியை உண்ணக்கூடாது.

இன்றைக்கு உண்ணும் உணவு ஹலாலா ஹராமா என்ற உணர்வே பலருக்கு வருவதில்லை. ஆனால் அது தான் மிக முக்கியமானது. அனைத்திற்கும் அடிப்படையானது. அமல்கள் கபூலாகுவதற்கும் துஆக்கள் கபூலாகுவதற்கும் உணவு ஹலாலாக இருக்க வேண்டும்.

ஒரு முஃமினைப் பொருத்த வரை ஹலால் ஹராமில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இறையச்சம் உள்ளவர்கள் என்பதற்கு அடையாளம், ஒருவர் அல்லாஹ்வை பயந்து வாழ்கிறார் என்பதற்கு அடையாளம் ஹலால் ஹராமை பேணி வாழ்வது தான்.

عن ميمون بن مهران قال: لا يكون الرجل من المتقين، حتى يحاسب نفسه أشد من محاسبة شريكه، حتى يعلم من أين مطعمه، ومن أين ملبسة، ومن أين مشربه: أمن حلال ذلك، أم من حرام.]

உணவு எங்கிருந்து வந்தது ஆடை எங்கிருந்து வந்தது நீர் எங்கிருந்து வந்தது அது ஹலாலா ஹராமா என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளாத வரை அவர் இறையச்சமுள்ளராக ஆக முடியாது என மைமூன் பின் மிஹ்ரான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


عن أبي عبد الله الساجي قال: خمس خصال ينبغي للمؤمن أن يعرفها: إحداهن: معرفة الله تعالى، والثانية: معرفة الحق، والثالثة: إخلاص العمل لله، والرابعة: العمل بالسنة، والخامسة: أكل الحلال؛ فإن عرف الله، ولم يعرف الحق: لم ينتفع بالمعرفة؛ وإن عرف، ولم يخلص العمل لله: لم ينتفع بمعرفة الله؛ وإن عرف، ولم يكن على السنة: لم ينفعه؛ وإن عرف، ولم يكن المأكل من حلال: لم ينتفع به بالخمس؛ وإذا كان من حلال: صفا له القلب، فأبصر به أمر الدنيا والآخرة؛ وإن كان من شبهة: اشتبهت عليه الأمور بقدر المأكل؛ وإذا كان من حرام: أظلم عليه أمر الدنيا والآخرة؛ وإن وصفه الناس بالبصر: فهو أعمى، حتى يتوب٠
]

ஐந்து விஷயங்கள் ஒரு மூஃமினிடம் அவசியம் இருக்க வேண்டும். ஒன்று அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல். இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். மூன்றாவது அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் அமல் செய்தல். நான்காவது நபியின் சுன்னத்தைக் கொண்டு அமல் செய்தல். ஐந்தாவது ஹலால் ஹராமை தெரிந்திருத்தல். ஒருவன் அல்லாஹ்வை அறிந்து சத்தியத்தை அறியவில்லையென்றால் பயன் இல்லை. அல்லாஹ்வை அறிந்து அல்லாஹ்விற்காக அமல் செய்ய வில்லை என்றால் அதுவும் அவனுக்கு பயன் தராது. ஒருவன் அல்லாஹ்வை அறிந்து சுன்னத்தின் படி அமல் செய்ய வில்லை என்றால் அதுவும் அவனுக்கு பலன் அளிக்காது. ஒருவன் அல்லாஹ்வை அறிந்து அவன் உணவு ஹலாலாக இல்லை என்றால் அதுவும் அவனுக்கு பயன் படாமல் போய் விடும். உணவு ஹலாலாக ஆகி விட்டால் உள்ளம் தெளிவாகி விடும். உலகம் மற்றும் மறுமையின் காரியங்கள் அவருக்கு புலப்பட ஆரம்பித்து விடும். உண்ணும் உணவு சந்தேகத்திற்குரியதாக இருந்தால் காரியங்கள் அனைத்தும் அவருக்கு தெளிவில்லாமல் போய் விடும் என்று அபூஅப்துல்லாஹ் ஸாஜி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

துஆக்கள் கபூலாகுவதற்கும் உணவு ஹலாலாக இருக்க வேண்டும்.


فَقَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا ، وَأَيُّمَا عَبْدٍ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحْتِ وَالرِّبَا فَالنَّارُ أَوْلَى بِهِ 
"

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நபராக நான் ஆகுவதற்கு அல்லாஹ் விடத்தில் எனக்காக துஆ செய்யுங்கள் என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் கூறிய போது ஸஃதே உன் உணவை நீ ஹலாலாக ஆக்கிக் கொள். துஆ ஒப்புக் கொள்ளப்படும் நபராக நீ ஆகி விடுவாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு அடியான் ஹராமான ஒரு பிடி உணவை தன் வயிற்றுக்குள் செலுத்தி விட்டால் அவரிடம் இருந்து 40 நாட்களுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. எவருடைய உடம்பு ஹராமினாலும் வட்டியினாலும் வளர்கிறதோ அது நரகத்திற்கே உரியது என்றார்கள். (தப்ரானி ; 6495)

நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்றுமுதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார். காரணம் அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம் தான்.

இன்றைக்கு மற்ற சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் கவனம் செலுத்தும் பலர் ஹலால் ஹராமில் கவனம் செலுத்துவதில்லை.

سأل رجل سفيان الثوري ايهما أفضل أصلي في يمين الصف الأول أو في يساره؟ فقال : انظركسرة الخبزاللتي تأكلها من حرام أم من حلال ومايضرك صليت في أي صف

பள்ளிவாசலில் தொழுகைக்காக வலது பக்கத்தில் நிற்பது சிறந்ததா இடது பக்கத்தில் நிற்பது சிறந்ததா என்று சுஃப்யான் ஸவ்ரீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் நீ சாப்பிடும் ரொட்டித்துண்டு ஹலாலா ஹராமா என்பதை முதலில் பார். நீ எந்த இடத்தில் நின்று தொழுதாலும் தொழுகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முதலில்  நீ உண்ணும் உணவில் கவனம் செலுத்து. அது தான் அடிப்படையானது என்று கூறினார்கள்.

قال حبيب ابن أبي ثابت رحمه الله تعالى: «لا يُعجبْكم كثرةُ صلاة امرئ ولا صيامه، ولكن انظروا إلى وَرَعِه، فإن كان وَرِعا مع ما رزقه الله من العبادة فهو عبدٌ لله حقّا»

ஹபீப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஒருவர் அதிகம் தொழுவதோ அதிகம் நோன்பு வைப்பதோ உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அவரிடம் பேணுதல் இருக்கிறதா என்று பாருங்கள். வணக்கத்தோடு பேணுதலும் யாரிடம் இருக்கிறதோ அவரே அல்லாஹ்விடம் சிறந்த மனிதர்.

நம் வணக்கங்களுக்கும் தொழுகைகளுக்கும் அடிப்படை நம் உணவும் பொருளும் ஹலாலாக இருப்பது.ஹலால் இல்லையென்றால் நம் வணக்கங்கள் பயனில்லாமல் போய் விடும். ஹராமை சாப்பிட்டவனின் தொழுகையே ஏற்றுக் கொள்ளப்படாது என்று இருக்கின்ற போது அவன் எங்கிருந்து தொழுதால் என்ன ? என்பது தான் சுஃப்யான் ஸவ்ரீ ரஹ் அவர்களின் கேள்வி.

அடுத்தவர் பொருளை அபகரித்து, வட்டி வாங்கி, பொய் சொல்லி வியாபாரம் செய்து, இப்படி ஹராமான வழியில் சம்பாதித்து சாப்பிட்டு விட்டு முதல் வரிசையில் நின்று தொழுவதால் என்ன பயன்

شَهِدْتُ صَفْوانَ وجُنْدَبًا وأَصْحابَهُ وهو يُوصِيهِمْ، فَقالوا: هلْ سَمِعْتَ مِن رَسولِ اللَّهِ ﷺ شيئًا؟ قالَ: سَمِعْتُهُ يقولُ: مَن سَمَّعَ سَمَّعَ اللَّهُ به يَومَ القِيامَةِ، قالَ: ومَن يُشاقِقْ يَشْقُقِ اللَّهُ عليه يَومَ القِيامَةِ، فَقالوا: أوْصِنا، فَقالَ: إنَّ أوَّلَ ما يُنْتِنُ مِنَ الإنْسانِ بَطْنُهُ، فَمَنِ اسْتَطاعَ أنْ لا يَأْكُلَ إلّا طَيِّبًا فَلْيَفْعَلْ، ومَنِ اسْتَطاعَ أنْ لا يُحالَ بيْنَهُ وبيْنَ الجَنَّةِ بمِلْءِ كَفِّهِ مِن دَمٍ أهْراقَهُ فَلْيَفْعَلْ.

தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்து கொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், ‘நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?’ என்று கேட்க ஜுன்தப் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமை நாளில் விளம்பரப் படுத்துவான் (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.

அப்போது நண்பர்கள் ‘எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்று கேட்க, ஜுன்தப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல் முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறு தான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்திபடைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும். (புகாரி ; 7152)

நல்லோர்களின் பேணுதல்

عن يوسف بن أسباط، أن الثوري وابن المبارك اختلفا في رجل خلف متاعه عند غلامه، فباع ثوبًا ممن يكره مبايعته، قال: قال الثوري: يخرج قيمته، يعني قيمة الثوب. وقال ابن المبارك: يتصدق بالربح

فقال الرجل: ما أجد قلبي يسكن إلا أن أتصدق بالكيس. وقد كان ألقى الدراهم في الكيس. فقال أبو عبد الله بارك الله فيه

ஒருவர் தன் அடிமையிடம் சில பொருட்களை கொடுத்து விற்று வரச்சொன்னார்.அதில் குறையுள்ள ஆடையும் இருந்தது,அந்த ஆடையை வாங்குபவரிடம் தெளிவாகச் சொல்லாமல் விற்பனை செய்து விட்டார். இப்போது அந்த ஆடையை விற்ற பணம் இவருக்கு ஹலாலா?என்ற விஷயத்தில் இமாம் சுஃப்யான் ஸவ்ரி ரஹ் அவர்களுக்கும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த ஆடையின் விலை என்னவோ அதை தர்மம் செய்து விட வேண்டும் என்று சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.இல்லை இல்லை அதன் இலாபத்தை மட்டும் தர்மம் செய்தால் போதுமானது என்று இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு சொந்தக்காரரான அந்த மனிதர் அந்த ஆடையை இவ்வாறு விற்பனை செய்ததை கேள்விப்பட்டது முதல் என் உள்ளத்தில் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் அந்த ஆடையின் விலை,அதன் இலாபம் மட்டுமல்ல அந்த பணத்தை போட்டு வைத்திருந்த பையையும் ஸதகா செய்தால் தான் என் உள்ளத்தில் உறுத்தல் நீங்கும் என்று கூறினாராம்.


جاءت إمرأة الى الإمام أحمد بن حنبل ، فقالت : يا أباعبدالله ، إني إمرأة أغزل

  غزل الخيوط لصنع الملابس  في ضوء السراج ، فيمر بنا العسس ( رجال الشرطة ) بالليل يحملون مشاعل السلطان ،  أيحل لي أن أغزل على ضوء نارهم ؟فبكى الامام احمد ابن حنبل و قال لها : من انت ؟ ، فقالت : اخت بشر الحافي ، فقال لها : من بيتكم يخرج الورع الصادق ، لا تغزلي علي شعاعها

ஒரு பெண்மனி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்களிடம் வந்தாள். நான் துணி தைக்கக்கூடிய பெண். இரவில் என் வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து தைத்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் பாதுகாவலர்கள் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வீதியில் செல்வார்கள். அந்த வெளிச்சம் என் வீட்டுக்குள் விழும். அந்த வெளிச்சத்தில் நான் துணியைத் தைக்கலாமா என்று கேட்டாள், அதைக் கேட்ட இமாம் அவர்கள் அழுது விட்டார்கள். நீ யார் என்று கேட்டார்கள். நான் பிஷ்ருல் ஹாஃபி ரஹ் அவர்களின் சகோதரி என்று பதில் சொன்னாள். உங்கள் வீட்டிலிருந்து தான் உண்மையான பேணுதல் வெளிப்படுகிறது என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ் அவர்கள் கூறினார்கள்.

2022 நன்மைகள் யாருக்காக 

2023 வேண்டாம் அவர்களின் தொடர்பு

வாஹிதிகள் பேரவை உலகம் இறைவனின் சந்தை மடம்


4 comments:

  1. மிகமிக அருமை அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete